மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப் பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே
ஸ்ரீ வாராஹி மாலை – வீரை கவிராச பண்டிதர்
கருத்து – வராஹி அன்னையானவள் பகைவர்கள் என்று கருதுபவர்களை நாசம் செய்வது குறித்து எழுதப்பட்டப் பாடல்.
பதவுரை
வராஹி அன்னையானவள், மனம், வாக்கு காயம் ஆகியவற்றால் ஒன்றி முத்தி நிலையை அடுத்து நிற்கும் மெய்யில் சிறந்த அடியவர்களை பணியாதவர்களை பகைவர்கள் என்று கருதி மனதாலும், உடலாலும் கடும் கோபம் கொண்டு, அவர்களது தலை கரத்தில் ஏந்தும்படி செய்து, பகைவர்களது கொழுப்பு மிகுந்த உடலினை கடித்து குதறி, துர்நாற்றம் வீசும்படி செய்து, வச்சிரம் போன்ற முகத்தால் குத்தி, வாயால் கடித்து அதில் இருந்து வரும் இரத்ததினை குடிப்பாள்.
தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு தன்னுரவுயில்லாத சமயத்தோரை உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை நாதாந்த வேதமதைக் காணார் தன்னை சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம் சோதிமய மானசிவ ஞானம் பாரே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.
பதவுரை
முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும், நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.
விளக்கஉரை
மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்
ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம் பஞ்சு எனவும் மனது அலையும் காலம் மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ தேசு பழுத்தருள் பராபரமே நிராசை இன்றேல் தெய்வமுண்டோ
தாயுமானவர் பாடல்கள்
கருத்து – ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம் எனவும் அதனால் மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த மாயையிலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே! ஆசை என்று உருவமாக சொல்லப்படுகிற பெரிய காற்றினில் அலையும் இலவம் பஞ்சைப் போல மனமானது அலையும் காலத்தில் மோசம் நேரிடும்; இதனால் முக்தியினை அளிப்பதற்காக கற்கப்பட்ட கல்விகளும், ஞானம் பெறுவதற்காக கேட்ட கேள்விகளும் வீணாகி, முக்தி எனும் மோட்சம் அடைவதற்கான விருப்பமும் அதன் பொருட்டான சிறந்த வாசமும் நீங்கி, ஐம்புலன்கள் பற்றி நின்று அது ஏற்படுத்தும் கொடுமையான துன்பங்கள் பற்றி கொண்டு நிற்பர்; நிறைவேராத ஆசை இருப்போர் முன்னர் எவ்வாறு தெய்வம் தோன்றும்?(தோன்றாது என்பது துணிபு)
விளக்கஉரை
கற்றதும் கேட்டதும் – இதனை இருவிதமாக மாற்றி வாசிக்கலாம், ஒன்று ஞான வழி பற்றி நிற்க கேட்ட கேள்விகளும் அதற்கான பதில் பெற்று கற்றதும் என்று கொள்ளலாம். இரண்டாவது கற்ற வித்தையின் வழி நின்று வைகரி எனும் செவியோசை, மத்திமை எனும் கருத்தோசை, பைசந்தி எனும் நினைவோசை, பரை எனும் நுண்ணோசை ஆகியவற்றை கேட்டல் என்றும் கொள்ளலாம்.
திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்
கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.
பதவுரை
இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும் இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.
கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும் பாடல்.
பதவுரை
வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.
கருத்து – திருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும்பாடல்.
பதவுரை
ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னி லம்மா, இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் இனிஜெனன மெடுத்திடாமல், முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான் முக்காலும் நம்பினேனே, முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ முழித்திருக்காதே யம்மா, வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும் விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை விமலனாரேசப் போறார், அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென் அருங்குறை யைத் தீருமம்மா, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – பல ஜென்மங்கள் எடுத்து அன்னைத் தொழுது வந்ததால் முக்தி அருளவேண்டும் என விளிக்கும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்தப் புவிதனில் அண்டஜம் எனப்படும் முட்டையில் தோன்றியும், சுவேதஜம் எனும் வியர்வையில் தோன்றியும், உற்பீஜம் எனும் விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றியும், சராயுஜம் எனும் கருப்பையில் தோன்றியும் எத்தனை லட்சக்கணக்காண பிறவிகள் எடுத்து இருப்பேனோ தெரியாது; இத்தனை பிறவியிலும் உன் அருளை நினைந்து உருகி வந்தபோதிலும் உன் அருளை பெற இயலவில்லை; உன்னை முக்காலத்திலும் தொழுது நீயே முக்தி அளிக்கத் தக்கவள் என்பதால் இனி எந்தவிதமான ஜெனமும் கொள்ளாதிருக்கும்படி கிருபை செய்துஎன்னை ரட்சித்து முக்தி தரவேண்டும்; அவ்வாறு இல்லாமல் வாழ்வினில் நாம் முதல் முறையாக சந்திக்கும் மனிதர்கள் போல் நீ என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? ; பாகம் பிரியாமல் இருப்பதால் வாழ்வினில் வெற்றி பெறுவதற்காக நான் பக்தியுடன் உரைத்துச் சொன்னதான விருத்தங்கள் பதினொன்றையும் கேட்டு அதுபற்றி நீ அளிக்கும் செல்வம் கண்டு விமலர் உன்னிடத்தில் கோபம் கொள்ளப் போகிறார், ஆகவே மூத்தோர், முனி எனப்பல்வாறு அழைக்கப்படும் அத்தனின் பாகத்தினை விட்டு வந்து என்னுடைய குறைகளை தீர்த்து வைப்பாயாக.
நம்முடைய குரு நாதன் எப்படிப்பட்டவர் எனில் நினைவு எனும் எண்ணத்தை எண்ணியவாறு நிகழ்த்தித் தரவல்லவன்; தெற்கு பகுதியாகிய கமலை எனும் திருவாரூர் தலத்தில் வாழ்கின்ற நாதன்; பக்தியை தருகின்ற நாதன்; பரவிந்து எனும் `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளதான வாக்கிற்கு நாதனாக இருக்கக் கூடியவன்; முக்தியினை அருளக்கூடிய பெரிய நாதனாகவு இருக்கக் கூடியவன்; ஞானத்தின் வடிவமாகி பிரகாசமாக இருப்பவன்; மெய் எனும் உண்மையினை தரக் கூடியவன்.
விளக்கஉரை
கமலை – திருமகள், திருவாரூர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனம்
சித்தி – காமியப்பயன்களை அருளுவது, பக்தி – வினை முற்றுப்பெறா நல்ல தவம் உடைய உயிர்கள் எய்துவது; முக்தி – சரியை, கிரியை மற்றும் யோகங்களில் ஈடுபட்டப் பின் உயிர்கள் முக்தி அடைய இறைவன் அருளுவது; உண்மை – மெய் ஞானம்.
வினையுடைய உயிர்களுக்கு முக்தியே பெரிதானது என்பதால் அதனைத் தருபவன் பெரு நாதன்
பிரகாசம் கதிரவனுக்கானது; அஞ்ஞான இருளை நீக்குதல் பற்றி ஞானப் பிரகாசன்
நம் – தம் மாணக்கர்களையும் உலக உயிர்களையும் குறித்தது
புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்
குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.
எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்.
ஒரு முறை குருநாதர் திருபரங்குன்றத்தின் உச்சியில் இருந்த ரங்கூன் சுவாமிகளை சந்திக்க குருநாதர் சென்று இருந்தார். (அப்பொழுது குரு நாதருக்கு வயது தோராயமாக 22) சுவாமிகளுக்கும் குரு நாதருக்கும் ஆன்மீக ரீதியில் நெருங்கிய தொடர்பு உண்டு. ரங்கூன் சுவாமிகள் பெரும்பாலும் பேசமாட்டார், சில நேரங்களில் மட்டும் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசுவார்
ரங்கூன் சுவாமிகள் : என்னடா செய்யிற தம்பி ?(குழந்தையின் வேறு பெயர், இன்றும் தன் குழந்தைகளை தம்பி என்று அழைக்கும் இல்லங்கள் உண்டு) குருநாதர் : சொல்லுங்க ஐயா.
ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா. குருநாதர் : சரிங்க ஐயா.
குரு நாதர் வந்த போது சுவாமிகள் நிட்டையில் ஆழ்ந்து இருந்தார். கூட்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.கண்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் உடனே கை நீட்டப்பட்டது. கைகளில் தொடமுடியா நிலையில் சூடாக இருந்த டீயினை வாங்கி கணிக்க இயலா நேரத்தில் குடித்துவிட்டார் சுவாமிகள்.
மற்றொருமுறை
ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா குருநாதர் : சரிங்க ஐயா.
குரு நாதர் டீ வாங்கிகொண்டு வந்த போது சுவாமிகளுக்கு இடது புறத்தில் ஒரு குரங்கும், வலதுபுறத்தில் ஒரு குரங்கும் எதிரே ஒரு நாகம் ஒன்றும் நிட்டையில் அமர்ந்து இருந்தது.
குரு நாதருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அடுத்த வினாடி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருந்த குரங்கு வலது புறத்தில் இருந்த குரங்குடன் சேர்ந்து நின்று கொண்டு கண்களை மூடி தவத்திற்கு சென்றுவிட்டது.
குரங்குகள் இத்தனை அழகாக தவம் செய்கின்றனவே, நாமும் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருக்கும் காலியாக இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தார். சுவாமிகளின் அருளாற்றால் குரு நாதரை வசீகரம் செய்து விட்டது.
இரவு 7 மணி ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி குருநாதர் : ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி எழுந்திரிடா குருநாதர் : சுவாமி
ரங்கூன் சுவாமிகள் : ஏண்டா, நான் தவம் செய்யும் போது இடைஞ்சல் இல்லாம இருக்கணும் அப்டீன்னு ஒன்னைய காவலுக்கு வச்சா, நீ என்னை காவல் காக்க வச்சிட்டியே.
இருவரும் சிரித்துக் கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்தார்கள்.
புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்
குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.
எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன் வசதிக்காக
குருநாதர் : என் குரு நாதர் அவர் குருநாதர் : மூலகுருநாதர்
ஒரு நாள் காசிக்கரையில் குருநாதரும் மூலகுரு நாதரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அவ்வழியே ஒரு வண்ணான், பிறரது அழுக்குத்துணிகளை துவைத்து வெண்மையாக அல்லது தூயதாக மாற்றிக் கொடுப்பவன் தனது நம்பிக்கைக்குரிய கழுதையுடன் ஓர் நாள் ஆற்றிற்கு சென்றான்.
அங்கே நீர் குறைவாக இருந்ததால் வேறோர் பகுதிக்கு செல்லும் வழியில் மரத்தினடியில் மூலகுரு நாதர் அமர்ந்திருந்தார் அவரிடம் பலர் ஆசிகள் வாங்கிச் செல்வதைக் கண்டு தானும் சென்று வணங்கினான். அவரோ எழுந்து கழுதையை வணங்கினார்.
மூலகுரு நாதர் : இதில் இருந்து என்ன தெரிகிறது?
குருநாதர் : ஒன்றும் தெரியவில்லை.
மூலகுரு நாதர் : அந்த கழுதை யான் என்று தெரியவில்லையா?
குருநாதர் : பதறிப்போய், சுவாமி, என்ன இந்த விளையாட்டு?
மூலகுரு நாதர் : இல்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.
குருநாதர் :…
மூலகுரு நாதர் : இந்த கழுதை என்னச் செய்கிறது?
குருநாதர் : அழுக்குத் துணிகளை எடுத்துச் சென்று அவைகளை துவைத்தப்பின் வெளித்து புதியதாக எடுத்து வருகிறது.
மூலகுரு நாதர் : மனிதர்கள் தூயதாக துவைத்து வழங்கும் தனது ஆடைகளை மறுபடி அழுக்காக மாற்றி விடுகின்றனர். அவர்களின் ஆணவம், கன்மம், மாயை எனும் அழுக்குகளால் கலங்கமடைவதை இறைவன் குரு எனும் வண்ணானாக புதுப்பித்துக் கொடுக்கிறான். இந்தக் கழுதையோ அவர்களின் தூய்மையற்ற மும்மலங்கலை சுமக்கும் மஹா குருவாக மௌனமாக ஆற்றுக்கும் வீட்டுக்குமாக சென்று வருவதாக உணர்ந்து கழுதையை வணங்கினேன்.
கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.
விளக்கஉரை
இடித்தல் – அழித்தல்
முடித்தல் – வகுத்தமைத்தல்
ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
பகவானே! மரணகாலம் வந்தபோது எந்த வகையால் உயிர்விட்டமனிதர்கள் மறுமையில் இதம்பெறுவார்கள்?
மகேஸ்வரர்
முயற்சியினால் உண்டாகும் மரணம் தேகத்தில் சத்தி உள்ளவனுக்கும் சக்தி இல்லாதவனுக்கும் இரண்டுவகைகளாகச் சொல்லப்படுகிறது.
முயற்சியினால் உண்டாகும் மரணம் எனில் அதை உபாயங்களினால் செய்யவேண்டும்.
உலகத்தில் மரணமானது தேக வலிமை தப்பி மூப்பும் பிணியும் பற்றிய காரணங்களால் அமையப் பெற்ற அபாயமில்லாத ஸ்வபாவமரணம் எனும் இயற்கையாலும், இறந்துபோக எண்ணத்தினால் உயிரைவிடும் முயற்சியாலும் உண்டாகிறது. காசி போன்ற நகரங்களுக்கு செல்லுதல், சாகும்வரை உண்ணாவிரதம் ஆகிய வடக்கிருத்தல், நீரில் விழுந்து உயிரை மாய்ப்பது, அக்னியில் உயிரை விடுவது என நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன.
இறந்துபோகக் கருதுகிறவர்களுக்குப் பகலும் சுக்லபக்ஷமும் உத்தராயணமும் சிறந்தவை; மற்றவை இழி வானவை. சாஸ்திரத்தில் விதித்தபடி தனக்கான தர்மங்களைச் செய்து கிருகஸ்த ஆஸ்சிரமத்தை நடத்தி,தேவ மனுஷ்ய பித்ருரிஷி ஆகியோர் கடன்களைத் தீர்த்து தனது முதுமை கண்டு நோய் அடைந்து இருக்கும்போது தன் சக்தியின்மையை தன் உறவினர்களுக்குத் அவர்களிடம் கேட்டுக்கொண்டு தன் குடும்ப உறவுகளுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, தன்னுடைய புண்ணியத்திற்காகத் தானங்களைச் செய்து, எல்லாரிடத்தும் கனிவாகப் பேசி பொருள் பெற்றுக் கொண்டு புதுவஸ்திரம்தரித்து அதைத் தர்ப்பக் கயிற்றினால் கட்டிக் கொண்டு ஆசமனம் செய்து ஸங்கல்பத்தோடு நிச்சயம்செய்து உலக நடையை எல்லாம் விட்டுத் தனக்கு இஷ்டமான தர்மத்தைச்செய்ய வேண்டும். உயிர்விடும் வரையிலும் ஆகாரமில்லாமல் இருந்துகொண்டு வடதிசையை நோக்கிச் செல்ல வேண்டும். நடையற்றுப் போகும்போது மனவுறுதியுடன் படுத்து உயிரை விடவேண்டும்.
அக்நிப்பிரவேசத்தில் விருப்பமிருந்தாம் முன்சொன்ன விதிப்படியே புண்ணிய தங்களில் அல்லது நதிக்கரைகளில் கட்டைகளினால் சிதையைச் செய்து பரிசுத்தனாகிச் சங்கல்பம் செய்து கொண்டு தேவதைகளுக்கு நமஸ்காரம்செய்து அக்னியை வலம் வந்து அதில் முழுகவேண்டும்.
நீரில் விழநினைத்தாலும் அதேமுறையில் மிகப்புண்ணியமான பிரஸித்தி பெற்ற தீர்த்தத்தில் தர்மத்தை நினைத்து அமிழவேண்டும்.
இது எக்காலமும் உள்ள தர்மம் என்பதால் இவ்வாறு செய்பவன் பற்றின்மை காரணமாக பரிசுத்தமான புண்ணிய லோகங்களை அடைந்து ஸ்வர்க்க லோகத்தில் பூஜிக்கப்படுவான்.
தேகவன்மையுள்ளவன் உயிர்விடும்வகையை சரியாகச் சொல்லுகிறேன்; கேள். நாட்டை ஆளும் அரசன் தன்னுடை ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும், படைச்சேவகர்கள் அரசனுக்கு கடமைப் பட்டதற்காவும், பிரம்மசாரிகள் குருவுக்காகவும் மற்றவர்கள் எல்லோரும் பசுக்களைக் காப்பதன் பொருட்டு உயிரை விடுவது சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது. தன்னுடை ராஜ்யத்தைக் காப்பதற்காகவும், கெட்ட தன்மை உடைய மனிதர்களால் பிடிபட்ட மக்களை விடுவிப்பதற்காகவும் விதிப்படி யுத்த ஒலி எழுப்பி மன உறுதியுடன் யுத்தத்தில் சென்று பின்வாங்காமல் உயிரைவிடவேண்டும். இவ்வாறு இறந்த அரசன் அப்போதே ஸ்வர்க்கலோகத்தில் பூஜிக்கப் படுவான். அப்படிப்பட்டநல்லகதி வேறில்லை. க்ஷத்திரியனுக்கு அது சிறந்தது. இவ்வாறு, உயிரைவிடுவதற்கு உள்ள நல்வழிகளை உனக்குச் சொன்னேன்.
காமம், கோபம், பயம் ஆகிய ஏதாவது காரணத்தினால் தேகத்தை ஒருவன் விடுவானாயின் அவன் தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால் முடிவில்லாத நரகத்தை அடைவான். அவ்வாறு இறந்துபோனவர்களுக்குச் சாஸ்திரப்படி செய்யவேண்டிய காரியத்தையும் சொல்லுகிறேன்; கேள். மனிதன் இறந்துபோகும் தருணத்தில் தேகத்தைப் பூமியில் படுக்கவைக்கவேண்டும்; உயிர் விட்டவுடன் அந்தத்தேகத்தை வஸ்திரத்தினால் மூடவேண்டும்; பிரேத தேகத்தைப் பூமாலைகளினாலும் சந்தனத்தினாலும் பொன்னினாலும் அலங்கரித்து மயானத்தின் தென்புறத்தில் சிதை கொண்டு அக்கினியில் எரிக்கவேண்டும். உயிரில்லாத தேகத்தைப் பூமியில் புதைக்கவும்செய்யலாம். ஜலதர்ப்பணமும் அஷ்டகையென்னும் சிராத்தமும் அநேகரால் செய்யப்படுமானால் இறந்துபோனவர்களுக்கு பரலோகத்தில் புண்ணியம் கிட்டும்.
தேகநாம் என்றென்றூ செப்புவீர் ஈதில்வரும் போகநாம் என்று புலம்புவீர் – நோக வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம் பொருந்துவீர் எப்படிநீர் போய்
சிவபோகசாரம்
கருத்து – இன்பதுன்பங்களின்காரணம்முந்தையவினைகள்என்பதைஅறியாமல்மாயைகொண்டுமயங்கிஇருத்தலைகூறிஅதில்இருந்துவிலகாமல்இருப்பதைப்பழித்துக்கூறும் பாடல்.
பதவுரை
தூலமும் சூட்சமும் ஆகிய இந்த உடலை முன்வைத்து தேகம் நாம் எனும் ஆணவம் கொண்டு உரைப்பீர்; இதனால் வரக்கூடியதும் மகிழ்வினைத் தருவதுமான இன்பமும் செல்வமும் என்னுடையது என்று அகங்காரம் கொண்டு புலம்புவீர்; இவ்வாறு முன்னர் செய்ய வினையின் காரணமாக வரும் தீவினையின் காரணமாக இவ்வாறான துன்பம் வாய்க்கப்பெற்றது என்று எண்ணாமல் இதை இன்பம் என்று எண்ணி அதில் பொருந்துவீர்; எப்படி நீர் (மாயை விலக்கி – மறை பொருள்) முக்தி அடையப்போகிறீர்?
சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள் சிம்முதலா வோதுநீ சென்று
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – பக்குவப்பட்ட உயிர்களுக்கு அருள் பொருந்தும் விதத்தை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவன் சிவனருள் ஆவி ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறையச் செய்யும் திரோதம், ஆணவமலம் நீங்கி தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகிய மலபரிபாகம் ஆகிய ஐந்தும் ஈஸ்வரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள் முறை ஆகும். இப்படி பஞ்சாட்சர வடிவமான இவன் பக்குவப்பட்ட ஆன்மாவிடத்தில் நின்று, நகாரம் முதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது என்று சிகாரம் முதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும் என்று அருளுவான்.
கருத்து – ஈசனின் எண்குணங்களின் பெருமைகளில் சிலவற்றை உரைத்தும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும் அருளிய திறம் குறித்தும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பிரமர்கள் இறந்த பிறகு அவர்களின் தலைகளை மாலையாக அணிந்து பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினை உடையவனாகவும், சிருஷ்டி எனும் உலகின் தோற்றம் நிலைபெறுதல் சங்காரம் என்றும் சம்ஹாரம் என்றும் வழங்கப்பெறும் இறுதி ஆகியவற்றை செய்பவனாகவும், கண்டத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவனாகவும், கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடும் படியான காட்சியினை வழங்குபவனாகவும், இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்கு அதன் தன்மை கொண்டு அதன் இயல்பாக உள்ளவனாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் எனும் ஐம்பெரும் பூதங்களாக ஆகி அண்டங்களுக்கு புறமும் உள்ளும் இருக்கும் பெருமை உடைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.
விளக்கஉரை
முதல் நடு முடிவு – உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை செய்பவர்களை அவர்கள் விரும்பிய வகையில் அருளுதல்
வெண் மருப்பு – திருமால் வராக அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட செருக்கினை நீங்குதல் பொருட்டு செருக்கினை அழித்து, அதன் அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டார்.(வரலாறு )
கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும் சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.
விளக்கஉரை
திருஅஞ்சைக்களம் – சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல் ஏறித் திரும்பலா மே
சிவபோகசாரம் – ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதின குரு முதல்வர்
கருத்து – பாசத்தில்அழுந்திநிற்றல்இயல்பாகவேமுக்திஅளிக்காதுஎன்பதைஉணர்ந்துஅமுததாரைவரையோகம்தொடர்வதைவிளக்கும்பாடல்.
பதவுரை
ஒவ்வொரு தினமும் பாசத்தில் அழுந்தி நிற்காதே; இது முக்தி அளிக்கத் தக்கது அல்ல என்று அதன் துயரை உணர்ந்து எழுந்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் தலையில் மேற்பகுதியில் இருந்து வருவதும், இன்பத்தை தருவதுமான அமுததாரையினை விரும்பும் காலங்களில் பருக அவ்விடத்துக்கு சென்று திரும்பி வரலாம்.
விளக்கஉரை
யோக மரபில் கண்டத்திற்கு மேல் பகுதிக்கு மேலே செல்லுதல்; கண்டம் வரை என்பது இயல்பாகவே பாசத்தில் அழித்திவிடும் என்று கூறுதல் மரபு
பாகை – தலைப்பாகை, ஊர், பாக்கம், பகுதி, வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி, ஒரு காலஅளவு, யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும் பாடல்.
பதவுரை
விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.
விளக்கஉரை
மேவு – மேன்மை
மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே
காகபுசுண்டர் உபநிடதம்
கருத்து – சுழுமுனை பற்றிக் கூறி அதைக் காணும் முறையைக் கூறும் பாடல்.
பதவுரை
நனவு நிலை எனப்படுவதும், ஆன்மாவின் விழிப்பு நிலை ஆனதும், அவத்தை ஐந்தில் ஒன்றான முதல் நிலை ஆனதும், ஆன்மா புருவ நடுவில் நிற்கும் அனுபவமானதும், கலாதி சேர்ந்த சகலம் எனப்படுவதும் ஆன சாக்கிர நிலையின் அடையாளமாக இருந்து மூன்று கோணங்களை உடைய ஒன்று சேர்வதாகிய குண்டலினியே சிவ சொருபமானதும், நீண்ட துவாரம் உடையதாகவும், குறுகிய வட்டம் உடையதாகவும், சூரிய சந்திரன் சேர்ந்து உதயமாகும் பிரகாசம் உடைய ஆகாசம் போலவும் மூன்று சுழி உடையதாக பின்னல் கொண்டதாகவும் இருக்கும் சுழுமுனை என்ற நாமம் உடைய இதனை காற்றினை கும்பகத்தில் நிறுத்தி பிடரி என்படும் அண்ணாக்கு வழியாக ஞானக் கண்ணால் காண்பாயாக.
விளக்கஉரை
கால் – மூச்சு
சித்தர் பாடல் என்பதாலும், யோக முறையில் உணரப்பட வேண்டியவை என்பதாலும், மானிடப்பிறப்பு சார்ந்ததாலும் பதவுரையில் பிழை இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.
பதவுரை
திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும் குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும், ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.
விளக்கஉரை
கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
நீசன் – அறிவில்லாதவன்
‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.