அமுதமொழி – குரோதி – தை – 10 (2025)


பாடல்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினைசிந்தியாமல்நூல்பலகற்றுஅடைந்தஅறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 18 (2025)


பாடல்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.

பதவுரை

வினைகள் நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.

விளக்கஉரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை 
  • ஆங்காரம் –  செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 20 (2024)


பாடல் 10

மூலம்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

பதப்பிரிப்பு

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலே இதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றி இன்ப வெள்ளமாய் துன்னி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

புறக்கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; பஞ்ச இந்திரியங்களில் ஒன்றான காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்ல;  முடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்றுகூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்பவெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் எனும் ஞானசம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்கஉரை

  • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
  • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
  • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 14 (2024)


பாடல் : 8

மூலம்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

பதப்பிரிப்பு

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்று அருளி கூட்டினான் – நாடு அறிய
ஞானப்ரகாசன் உயர் நற்கமலைமானகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினை சிந்தியாமல் நூல் பல கற்றுஅடைந்த அறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 13 (2024)


மூலம்

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்

பதப்பிரிப்பு

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆனந்தநிலையினைஅருளவேண்டும்என்பதைகூறும்பாடல்.

பதவுரை

அழியாத பூரணத்துவத்தை உடையவனும், செந்தாமறை போன்ற நிறம் உடைய பொற்பாதங்களை கொண்டு தென்கமலையில் வாழும் வேதம் போன்றவனும், அழியாமலும் குறைவுபடாமலும் என்றும் நிலைத்து இருக்கும் பேரின்பத்தில் இருப்பவனும் ஆகியவனே! உலகில் பிறவி எடுக்காது இருப்பதன் பொருட்டு நாய் போன்ற அடியவன் ஆகிய எனக்கு அருள் புரிவாயாக.

விளக்கஉரை

  • ஆரணம் – வேதம்
  • உலகில் விழியாது இருந்துவிடவே – ஞானஆசிரியன் வழிநிற்றலும், ஒருவேளை உலகியலில் இருந்து மீளவரும்படி நேருமாயின் அந்தமீட்சியும் ஆசிரியன் வழிநின்று உணர்தலால் நீங்கப்பெறும் அந்தநிலையை அடையும் பொருட்டு பிறப்பு எடுக்காது இருத்தல் என்பது பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆவணி – 15 (2024)


மூலம்

இருளுதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆசானமூர்த்தியாய் நின்று எய்தும் பயன்களில் பாசநீக்கமும், அருள்விளக்கமும் பற்றி அருளிய பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 20 (2022)


பாடல்

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே

சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்

கருத்துஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது;  அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில்  ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக  உயிறற்ற பொருள்களுக்கு  உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 18 (2021)


பாடல்

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது

திருநெறி 4 -உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பாராதியின் நிறங்களையும், அவை குறிக்கும் எழுத்துக்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பிருதிவி எனும் புவியானது பொன்னிறமாக இருக்கும்; அப்பு எனும் நீரானது வெண்மை  நிறமாக இருக்கும்; தேயு எனும் பொங்கிவரும் தீயானது சிவப்பு மிகுதியான சிவந்த நிறத்தில் இருக்கும்; வாயுவானது கருமை நிறமாயிருக்கும்; புகை மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும் என்று பெரியோர்கள் உரைப்பார்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனும் பாராதியில் பிருதிவிக்கு ல எழுத்தும் (லகாரம்),  அப்புவுக்கு வ எழுத்தும் (வகாரம்), தேயுவுக்கு ர எழுத்தும் (ரகாரம்),  வாயுக்கு ய எழுத்தும் (யகாரம்), ஆகாயத்திற்கு அ எழுத்தும் (அகாரம்)  அழுத்தமாகவும் பலம் பொருந்தியும் நிற்கும்.

விளக்க உரை

  • தூமம் – புகை, நறும்புகை , தூபகலசம், மண்கலச்சூளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 8 (2021)


பாடல்

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் !!!! மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே

சிவஞானசித்தியார் – அருணந்திசிவம்

கருத்து – எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வ வடிவில் வந்து அருளுபவன் சிவனே என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

மனத்தின் கண் நிறுத்தி எந்தத் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க அந்த தெய்வங்களால் இயலாது என்பதால் மாதொரு பாகனாகிய சிவனே வந்து அந்த தெய்வமாகி அருள்செய்வான். பிறதெய்வங்கள் யாவும் சிவனுக்கு உட்பட்டு தொழில் செய்வதால் அவைகள் வினைகள் கொண்டு வேதனைப்படும்; இன்ப துன்பம் அனுபவிக்கும்; இறக்கும்; பிறக்கும்; ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்க வல்லவன் அவனே ஆவான்.

விளக்க உரை

  • மாதொரு பாகனார் – சிவச்சக்தி ரூபம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 7 (2021)


பாடல்

ஒன்றன் றிரண்டன் றுளதன் நிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-கின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்

திருநெறி 6 – திருவுந்தியார் – திருக்களிற்றுப்படியார்

கருத்து – சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குரு உணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை  எவ்வாறு எனில் இது இரண்டானது எனவும்,  ஒன்றுமல்ல எனவும், பிரிந்து இருப்பதால் இரண்டும் அல்ல எனவும், எக்காலத்திலும் உள்ளதும் அல்ல எனவும், ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சி உண்மையால் இல்லதும் அன்று எனவும், பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டதால் நன்றும் அன்று தீதும் அன்று எனவும்,  தன்மை முன்னிலே படர்க்கை எனச் சுட்டி உணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டு இருப்பதால்  நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று எனவும், இதுவே ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையும் அல்ல எனவும், இது சிவனும் அல்ல எனவும், இது  சிவஞானமும் அல்ல எனவும், உலகின் தோற்றத்திற்கு முதன்மையாக இருப்பதால் ஆதியுமல்ல எனவும், எல்லாவற்றுக்கும் முடிவாக இருப்பதால்  அந்தமுமல்ல எனவும் எந்த வகையினிலும் உரைக்கப்பட முடியாது. சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும்.

விளக்க உரை

  • நன்றன்று தீதன்று – வினைகள் அறுபட்ட நிலை
  • தலையன் றடியன்று – தோற்ற ஒடுக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 31 (2021)


பாடல்

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனுங் காணா அரன்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

கருத்து – தற்போதங்கெட இறைவன்பால் அன்பு செய்வதற்கு உரிய நெறிகள் மூன்று என்பதும், இந்நெறிகளில் நிற்பவர்களுக்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

சிவநெறி வழிகளாகிய நல்லனவற்றை அருளும் சிவ தன்மையான  சரியையை உடையவன், கிரியையையுடையவன், நல்லனவற்றை அருளும் சிவ யோக தன்மை உடையவன்,  நல்ல சிவஞானத்தை உடையவன் ஆகிய இவர்களில் எவராக இருப்பினும் ‘நான்’ எனும் அகங்காரம் கெடும் தன்மை கெட்டு அன்பு செய்வார்கள் எனில் ஆன்ம போதம் உடைய அவர்கள் இடத்தில் எவராலும் காணுதலுக்கு அரிதான சிவன் அப்பொழுதே வந்து தோன்றுவான் என்று அறிவாயாக.

விளக்க உரை

  • சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகை நெறிகளை மேற்கொண்டு அதன்படி நிற்பதால் வரும் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே என்பது பெறப்படும்.
  • சிவதன்மம் – சரியை கிரிகை இரண்டும் அடங்கப் பெற்றது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 19 (2021)


பாடல்

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று திருவம்பலத்தான் திருநடனம் காண்பவர்கள் சனனம், மரணம் அற்றவர்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பிரணவம் ஆகிய ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று, அதில் பொருந்தி, அந்த பிரணவத்தை விட்டு என்றும் நீங்காமல் அதில் பொருந்தி இருக்கும் பஞ்சாக்கரத்தினை நிறைந்த உள்ளொளியாக அமையப் பெற்று, யான் எனது என்னும் மும்மலங்களின் ஒன்றான அகங்காரம் அற்றவர்கள் அறிவார்கள்; இவ்வாறான அழகிய திருவம்பலத்தான் செய்யும் திருநடனத்தினை தரிசித்தவர்களே சனன மரண மற்றவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • நடராஜர் திருமேனி வடிவங்களில் காணப்படும் திருவாசியே ஓங்காரமாக உணரப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 8 (2020)


பாடல்

ஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த
தேனாய் உளமறைந்த சிற்பரத்தை – வானாய்
ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார்
தெளியாய் தமையென்னத் தேர்

சன்மார்க்க சித்தியார் – பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர்

கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • உரையிறந்த – மவுனநிலை எய்திய மெய்யடியார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 7 (2020)


பாடல்

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்

திருநெறி 8 – திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்

கருத்துஉயிர் பாசத்தோடு இருந்து வந்துப் பின் விலகி அசுத்தம் நீங்கப் பெற்றப்பின் தெளிவு பெறுதல் குறித்து விளக்கும்  பாடல்.

பதவுரை

சூரியன் வந்த காலத்தில் அதன் கடுமையால் துயர் உற்றவனுக்கு தூயதும், குளிர்ந்ததும் ஆன நிழல் எதிர்ப்பட்டால் அதில் சென்று தங்கி வெம்மையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று எவரும் சொல்வதில்லை; இந்த முறைமையைப் போல இருவினை ஒப்புக்குப்பின் ஆன்மாவிடத்தில் திருவருள் வந்து சேர்ந்தப்பின் உலகினை நோக்காது உயர்ந்ததான் திருவருளில் அடங்கி ஒற்றுமை கொண்டு நிற்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 15 (2020)


பாடல்

காயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப்
போயோர் தனுவிற் புகுகையால் – ஆயகலைய்
தந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை
மந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து

சிவாச்சிரமத் தெளிவு – அம்பலவாண தேசிகர் 

கருத்துஉடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய  பாடல்.

பதவுரை

உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய்  வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 1 (2020)


பாடல்

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்துசிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.

பதவுரை

நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.

விளக்கஉரை

  • அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
  • சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
  • நிகளம்-விலங்கு
  • சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 19 (2020)


பாடல்

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்துசிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.

விளக்க உரை

  • சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி- 7 (2020)


பாடல்

காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்

கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.

பதவுரை

இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும்  இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 23 (2020)


பாடல்

சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா வோதுநீ சென்று

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பக்குவப்பட்ட உயிர்களுக்கு அருள் பொருந்தும் விதத்தை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவன் சிவனருள் ஆவி ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறையச் செய்யும் திரோதம், ஆணவமலம் நீங்கி தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகிய மலபரிபாகம் ஆகிய ஐந்தும் ஈஸ்வரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள் முறை ஆகும். இப்படி பஞ்சாட்சர வடிவமான இவன் பக்குவப்பட்ட ஆன்மாவிடத்தில் நின்று, நகாரம் முதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது என்று சிகாரம் முதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும் என்று அருளுவான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

  • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்