அமுதமொழி – குரோதி – தை – 26 (2025)


பாடல்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே

பத்தாம் திருமுறை ‍ – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.

 விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #பிறன்மனை_நயவாமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 23 (2025)


பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

தேவாரம் ‍ – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை  காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் ‍ மறை பொருள்)

 விளக்கஉரை

  • பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
  • நாக்கைக்கொண்டு – நாவைக் கொண்டு
  • நாமம் – இறைவன் திருப்பெயர்
  • நவில்கிலார் – கூறாதவர்கள்
  • அலமந்து – வருந்தி
  • கழிவர் – அழிந்தொழிவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் ‍ #ஐந்தாம்_திருமுறை  #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 15 (2025)


பாடல்

வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
   விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
   வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
   சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
   ஒற்றி மேவிய உலகுடை யோனே

திரு அருட்பா –  இரண்டாம் திருமுறை – வள்ளலார்

கருத்து – பிறவி நீக்கம் வேண்டி திருவொற்றியூர் பெருமானிடன் விண்ணப்பம் செய்யும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரில் விரும்பி உறைந்து உலகினை தன்னுடையதாகக் கொண்டவனே, அச்சத்தினை உண்டாக்கும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை; ஆதலால் வினையை உடையனாகிய எனது உள்ளம் மயக்கம் க‌ண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னை அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் அருள் பெறுவேன்; அவ்வாறு உன்னுடை அருள் கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

விளக்க உரை

  • தெருட்சி – அறிவு, தெளிவு, கன்னி ருது
  • மேவுதல் – அடைதல், விரும்புதல், நேசித்தல், ஓதுதல், உண்ணுதல், நிரவிச் சமமாக்குதல், மேலிட்டுக் கொள்ளுதல், வேய்தல், அமர்தல், பொருந்துதல்
  • வெருட்சி – மருட்சி, மருளுகை, அச்சம்

#அந்தக்கரணம்  #அமுதமொழி  #இரங்கல்_விண்ணப்பம்  #திருஅருட்பா  #இரண்டாம்_திருமுறை  #வள்ளலார் #திருவொற்றியூர் #மயக்கம்  #பிறவி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 10 (2025)


பாடல்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினைசிந்தியாமல்நூல்பலகற்றுஅடைந்தஅறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 19 (2025)


பாடல்

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
   மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்
“தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
   செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
   நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
   கடுமையொடு களவு அற்றோமே

தேவாரம் ‍ – ஆறாம் திருமுறை ‍ – திருநாவுக்கரசர்

கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அயன், ஹ‌ரி, ஹ‌ரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆன‌வனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.

விளக்கஉரை

  • மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடுமை – கடிதாய செயல், பிறரை நலிதல்

#அந்தக்கரணம்  #அமுதமொழி #சைவம் #தேவாரம் ‍ #திருமுறை #ஆறாம்_திருமுறை ‍ #திருநாவுக்கரசர் #பொது #மறுமாற்றத் திருத்தாண்டகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 18 (2025)


பாடல்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.

பதவுரை

வினைகள் நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.

விளக்கஉரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை 
  • ஆங்காரம் –  செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 03 (2024)


விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்

பதவுரை

விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடலில் பொருந்துமாறு மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி செய்து, நெஞ்சத்தின் இயல்பு காரணமாக மாறும்படியாக இருக்கும் உலகியலை நோக்காது  பயிற்சிவயத்தால் இடையறாது (குருவால் உபதேசம் செய்யப்பட்ட) சிவ நாமத்தை எண்ணிக் கொண்டிருப்பச் செய்து சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும்.

விளக்கஉரை

  • கனன் மூல – மூல அனல், குண்டலினி, வீணாத் தண்டம்
  • மூல அனல் தன்மைகள், சிறப்புகள், பூஜை முறைகள், வசிய முறைகள், போன்றவற்றை குருமுகமாக அறிக.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம்  #சித்த(ர்)த்_துளிப்பு, #பத்தாம்_திருமுறை – #திருமந்திரம் #திருமூலர்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 30 (2024)


கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை ‍ – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – புகலூர் உறையும் பெருமானின் திருவடிவ அழகினையும் செயற்கரிய செயல்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

திரண்டு சுருண்ட சடையினை உடையவரான புகலூர் பெருமான் ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்தவர்; கடினமானதும் காவல் பொருந்தியதும் ஆன மூன்று மதில்களையும் தனது அம்பினில் சிவந்ததான நெருப்பு கொண்டு அக்னி, திருமால் வாயு ஆகியோர் முனையாகவும் தண்டாகவும் இறகாகவும் செயல்படுமாறு செய்து அவை அழியுமாறு செய்தவர்; விரிந்ததும் பரந்ததும் ஆன சடையின் மேல் எப்பொழுதும் நீரினை உடைய‌ கங்கையினை விரும்பி ஏற்றவர் ஆவார்.

விளக்கஉரை

  • கரிந்தார் – இறந்தவர்கள்;
  • தலையர் – தலைகளை மாலையாக உடையவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி # சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள் #திருப்புகலூர் #நான்காம்_திருமுறை ‍ #தேவாரம் ‍ # திருநாவுக்கரசர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 20 (2024)


பாடல் 10

மூலம்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

பதப்பிரிப்பு

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலே இதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றி இன்ப வெள்ளமாய் துன்னி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

புறக்கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; பஞ்ச இந்திரியங்களில் ஒன்றான காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்ல;  முடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்றுகூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்பவெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் எனும் ஞானசம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்கஉரை

  • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
  • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
  • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 14 (2024)


பாடல் : 8

மூலம்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

பதப்பிரிப்பு

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்று அருளி கூட்டினான் – நாடு அறிய
ஞானப்ரகாசன் உயர் நற்கமலைமானகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினை சிந்தியாமல் நூல் பல கற்றுஅடைந்த அறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 13 (2024)


மூலம்

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்

பதப்பிரிப்பு

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆனந்தநிலையினைஅருளவேண்டும்என்பதைகூறும்பாடல்.

பதவுரை

அழியாத பூரணத்துவத்தை உடையவனும், செந்தாமறை போன்ற நிறம் உடைய பொற்பாதங்களை கொண்டு தென்கமலையில் வாழும் வேதம் போன்றவனும், அழியாமலும் குறைவுபடாமலும் என்றும் நிலைத்து இருக்கும் பேரின்பத்தில் இருப்பவனும் ஆகியவனே! உலகில் பிறவி எடுக்காது இருப்பதன் பொருட்டு நாய் போன்ற அடியவன் ஆகிய எனக்கு அருள் புரிவாயாக.

விளக்கஉரை

  • ஆரணம் – வேதம்
  • உலகில் விழியாது இருந்துவிடவே – ஞானஆசிரியன் வழிநிற்றலும், ஒருவேளை உலகியலில் இருந்து மீளவரும்படி நேருமாயின் அந்தமீட்சியும் ஆசிரியன் வழிநின்று உணர்தலால் நீங்கப்பெறும் அந்தநிலையை அடையும் பொருட்டு பிறப்பு எடுக்காது இருத்தல் என்பது பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆவணி – 15 (2024)


மூலம்

இருளுதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆசானமூர்த்தியாய் நின்று எய்தும் பயன்களில் பாசநீக்கமும், அருள்விளக்கமும் பற்றி அருளிய பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 30 (2024)


பாடல் 6.

மூலம்

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

உள்ளிருந்தே என்றும் உணர்ந்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறம்பும் ஆவோம் என்று – மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள்புரி ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள்நின்று உணர்த்தும் தன்மையும், அவனே ஆசிரியனாகி வந்த தன்மையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றையும் நிகழ்த்திக்காட்ட சாட்சிபாவமாக புறத்தில் நின்று உள்ளத்தில் இருந்து உணர்த்தி இயக்குபவனாக இருந்தாலும் தன்னை உணர்வில்லை என்று எண்ணம் கொண்டு அகத்திலும் புறத்திலும் வெளிநின்று உணர்த்தும் எண்ணம்கொண்டு அதைநிச்சயம் செய்துகொண்டு ஞானப்பிரகாசன் எனும் முனிவனாகி மானிடவடிவம் கொண்டு ஆருரில் வந்துநம்மை ஆண்டு அருள்புரிந்தான்.

விளக்கஉரை

  • நரன் – மாந்தன், அருச்சுனன், ஒருமுனிவன், ஓர்இயக்கன்
  • கண்டிலர்என்று – அநாதிகாலம் தொட்டு உயிர்களைக்காத்த போதும், மாயை பற்றி நிற்பதால் உயிர்கள் அதை உணரவில்லை என்பதை உணர்ந்து என்பது பற்றியது.
  • ஈசன் உயிர்களுக்கு விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய நிலைகளில் இருந்து அருள்செய்பவன் என்றாலும், அன்புநெறி கொண்டோருக்கே ஆசானமூர்த்தியாக அருளுவான் என்பது பெறப்படும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 29 (2024)


பாடல் 5.

மூலம்

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான்

பதப்பிரிப்பு

கண்டேன் இப் பாசம் கழிந்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் – வண்டுமிகாத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ரகாசனையே நான்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருட்குரவன் ஆகிய ஞான ஆசிரியரை அடைந்ததன் பயனை விளக்கிக் கூறும் பாடல்.

பதவுரை

வண்டுகள் தேனைப் பொழிகின்ற கமலையில் வாழும் ஞானப் பிரகாசனின்பொற்பாத திருவடிகளைப் பற்றி நான் மெய்யானதைக் கண்டேன், பற்றுதலை ஏற்படுத்துவதும், சைவ சித்தாந்தத்தால் விளக்கப்படுவதும் ஆகிய பாசம் நீங்கப் பெற்றேன்; அமுதத்தை உண்டேன்; அதனால் சுகானந்தத்தினுள் இருந்தேன்.

விளக்கஉரை

பாசம் – உலகமாய் தோன்றுதல்
வண்டுமிகாத்தேனைப்பொழிகமலை – தன்னைஅடைபவர்களை போற்றும் ஞானம்
பொற்பாதம் – அருமை, பெருமை மற்றும் தூய்மை பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 28 (2024)


பாடல் 4.

மூலம்

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று

பதப்பிரிப்பு

அரி அயற்கு முன்னாள் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள் நின்று உணர்த்திய முதல்வனே குருவடிவமாக வந்து பிறந்து தன்னை ஆட்கொண்டு அருளுகின்றான் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவாரூர் திருத்தலத்தில் தன்மயமாய் நிற்கும் உயர் நிலையில் இருப்பவனும், முன்னொருமுறை திருமாலும், பிரம்மாவும் முறையே தேடி காண முடியாத திருவடியினையும், திருமுடியினையும் கொண்டவனாகிய பிறவாத் தன்னை உடையவனாகிய பெரியவனும் ஆனவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆருர் தலத்தில் ஞானப் பிரகாசனாகி பிறந்து பரந்து விரிந்து இருந்து ஞானத்தினை அருளிக் கொண்டு இருக்கின்றான்.

விளக்கஉரை

துரியம் – நான்காவது, நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதி எருது, சுமத்தல்

பெருக்குதல் – முதிர்வித்தல்

#சைவம் #சிவபோகசாரம்  #குரு  #குருவின்_பெருமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 22 (2024)

பாடல்

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

தேவாரம் – நான்காம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்துகாட்சிப் பொருளை சிவசக்தி ரூபமாகக் காணுதல் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

ஒளிர்தல் கொண்ட‌ பிறை நிலவினை அணிந்தவனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதி தேவியோடு இணைத்துப்பாடியும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு கூத்து தாளங்களை இட்டுக் கொண்டும், முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரையில் இருக்கும் திருவையாற்றை அடையும் நேரத்தில் ஆண்குயில் பெண்குயிலோடு கலந்து காதல் கீதங்களைப் பாடியும் பின் இணைந்தும் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் கண்டறியாத திருப்பாதங்களாக‌க் கண்டேன்.

விளக்க உரை

  • எரி – நிலவு
  • ஏந்து இழையாள் – அம்பிகை
  • இலயம் – கூத்துக்கு ஒத்த தாளலயம்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை # நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – பங்குனி – 2 (2024)

பாடல்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்து – முக்தி வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

நிலைத்த பேரின்ப வடிவாக இருப்பவனே, அழகியதான‌ புகலூர் தலத்தில் மேவி இருக்கும் புண்ணியனே, நினையும் தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பதை அல்லாது வேறு எதனை விரும்புவேன்? நினது கழலினை அணிந்த திருவடியை கைதொழுது காணும் காட்சி அல்லாது வேறு ஒன்றையும் விரும்ப மாட்டேன்; உன்னை விடுத்து வேறு எந்த பற்றுக்கோடும் இல்லாதவனாக இருக்கிறேன்; யான் வாழ்வதற்குப் பொருந்தி இருப்பதானதும் உறை போன்றதுமான இந்த உடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய்; உடலின் தன்மையால் அவையாவும் ஒன்று சேர்ந்து அடைக்கப்படும் காலத்தில் உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன்; ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – கார்த்திகை – 1 (2023)


வார்த்தை :  முப்பாழ்

பொருள்

  • வெட்டவெளி அல்லது ஆகாயம்
  • மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ்

பாடல்

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேய முப் பாழ் எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும் முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே

எட்டாம் தந்திரம், திருமூலர்

பதவுரை

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

  1. மாயைப் பாழ் – மாயை நீங்குதல் – மாயப்பாழைக் கடந்தபின் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவைகளின் ஒடுக்கம் ) கிடைப்பது  வாத சித்தி – சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.
  2. போதப்பாழ் / சீவப்பாழ்/ ஒளிப்பாழ் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) – ஆன்ம அறிவு நீங்குதல் – (போதப்பாழ் – இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு) கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுதல்.
  3. உபசாந்தப் பாழ் – வியோமாப்பாழ்(காரிய காரணங்களைக் கடந்தது நிற்றல்) – உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது – பிராணண் /உயிர்ச்சக்தி பற்றிய அறிவு.

சிவ தத்துவத்தை விளக்கும் 96 வகைத் தத்துவங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் என்பதை மும்மலம் என்பதால் முப்பாழ் என்பதில் இருந்து விலக்கி பொருள் விளக்கப்பட்டுள்ளது.(சில இடங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் ஆகிய  மூன்றும் முப்பாழ் என்றே விளக்கப்பட்டுள்ளது)

(இந்த சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – ஐப்பசி – 24 (2023)


பாடல்

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
   தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
   உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
   அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
   பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

ஆறாம் திருமுறை -‍ தேவாரம் -‍ திருநாவுக்கரசர்

கருத்துபிறவி நீங்கப் பெறும் வகைகளை உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் உரையாதவர்களாகவும், அன்னையின் வண்ணம் ஒத்து இருக்கும் தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர்களாகவும், இறைவன் உறைவிடம் ஆகிய திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராதவர்களாகவும், உணவு உண்பதற்குமுன் வண்ணமும் வாசனையும் உடைய பல மலர்களை அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களாகவும்,வினை பற்றி வரும் கொடுநோய்கள் கெடுவதன் பொருட்டு வெண்ணீற்றை அணியாதவர்களாகவும் இருப்பவர்கள் இறைவனது திருவருளை இழந்தவராவார். அவர்கள் தீராத கொடுநோய்களால் மிகத் துன்புறுத்தபட்டு பின் இறந்து மீளவும் பிறப்பதற்கு வழியில்லாமல் அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள்.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

சமூக ஊடகங்கள்