அமுதமொழி – விசுவாவசு – புரட்டாசி – 8 (2025)


பாடல்

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரிலும், திருஆலவாயிலும், திருவாரூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் ஒரே நேரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! கர்ப்பத்திலே சென்று பொருந்திய நாள் முதலாக உன்னுடைய திருவடிகளையே காண என்னுடைய மனம் உருகுகின்றது. நானும் பல்வேறு பிறவிக்கடலில் கிடந்து உழன்று சலித்து விட்டேன். அவ்வாறு நான் துன்புற்றதையும், எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

 விளக்கஉரை

  • ‘தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக’ எனும் விளக்கங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. முதன் முதலில் கருவினை அடைந்த காலம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
  • கிடந்து அலைந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் ‍- உன்னை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்பது வெளிப்படை.

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவொற்றியூர் #திருஆலவாய் #திருவாரூர் #திருக்கச்சியேகம்பம் #திருவடி #சைவத்திருத்தலங்கள் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 30 (2024)


கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை ‍ – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – புகலூர் உறையும் பெருமானின் திருவடிவ அழகினையும் செயற்கரிய செயல்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

திரண்டு சுருண்ட சடையினை உடையவரான புகலூர் பெருமான் ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்தவர்; கடினமானதும் காவல் பொருந்தியதும் ஆன மூன்று மதில்களையும் தனது அம்பினில் சிவந்ததான நெருப்பு கொண்டு அக்னி, திருமால் வாயு ஆகியோர் முனையாகவும் தண்டாகவும் இறகாகவும் செயல்படுமாறு செய்து அவை அழியுமாறு செய்தவர்; விரிந்ததும் பரந்ததும் ஆன சடையின் மேல் எப்பொழுதும் நீரினை உடைய‌ கங்கையினை விரும்பி ஏற்றவர் ஆவார்.

விளக்கஉரை

  • கரிந்தார் – இறந்தவர்கள்;
  • தலையர் – தலைகளை மாலையாக உடையவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி # சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள் #திருப்புகலூர் #நான்காம்_திருமுறை ‍ #தேவாரம் ‍ # திருநாவுக்கரசர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 29 (2023)


பாடல்

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – இறைவன் திருமேனியினை விளக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று உரைக்கும் பாடல்

பதவுரை

திருமுடி ஆகிய சடையை உடையவனே! சடையில் தவழும் திங்களைப் பிறையையாகச் சூடியவனே! காளையினை ஊர்தியாகக் கொண்டவனே! காளை மீது ஏறி ஊர்வலமாக சென்று முப்புரங்களையும் எரியச்செய்தவனே! சகல சீவன்களுக்கும் முதல்வனாக இருப்பதால் அவர்களுக்கு அருள தலைவனாக இருந்து  ஆள்பவனே!  வைரவர் வடிவம் கொண்டு பிரம்மனது மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உலக உயிர்களைக் காப்பவனே! ஐயாறு ஆகிய திருவையாறு தளத்தில் உறைபவனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேன்.

விளக்க உரை:

  • விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன்
  • அடையான் – எவ்வுயிர்க்கும் தானே காவலன்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #நான்காம்_திருமுறை  #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவையாறு #சோழநாடு #காவிரி_ வடகரை _தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 20 (2023)


பாடல்

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்

பதவுரை

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை  ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும்,  நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும்,  பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும்,  பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #ஏழாம்_திருமுறை  #தேவாரம்  #சுந்தரர் #திருநன்னிலத்துப்_பெருங்கோயில் #சோழநாடு #காவிரித்_தென்கரை_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 18 (2023)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சூலை நோய் தீர்க்கவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அதிகைக் கெடில வீரட்டானத்துறையில் இருக்கும் அம்மானே, மனம், மொழி காயத்தால் உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே, உலகங்களைப் படைத்து அனுபவித்தவனாகிய பிரம்மனின்  மண்டையோட்டில் யாசகம் ஏற்றுத் திரிபவரே, உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை வினை நீக்கம் பொருட்டு அவர்களின் எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை விரும்பி அதனை வாகனமாக் கொண்டவரே, இறந்த பிரம்மாக்களின் தலையை வெண்தலைமாலையாக  அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாக எண்ணி உமக்கு அடிமை செய்து  வாழக்கருதுகின்ற அடியேனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • பாற்றம் , பாத்தம் –  விஷயம், தரம்
  • படு – கிட, இளைப்பாறு, அனுபவி, சகி
  • பெற்றம் – ஆடு, மாடுகள், கால்நடைகள்

#அந்தக்கரணம் #அமுதமொழி #நான்காம்_திருமுறை #திருமுறை #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவதிகை_வீரட்டானம் #நடுநாட்டுத்_தலங்கள் #நடுநாடு #வெண்ணீறு #பலி #நீறுபூசியமேனி #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 30 (2022)


பாடல்

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவனின் திருமேனிக் கோலத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

இறந்த பிரம்ம தேவர்ளை தலைமாலையாக கையில் எடுத்து தலையில் சூடியவனும், சிவந்த நிற மேனியில் பெரிய தலையை உடைய யானை உரித்து அதன் தோலைப் போர்த்தியவனும், பார்வதி தேவினையை பாகமாக உடையவனும், மானை தன் கையில் ஏந்தியவனும், ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்தவனும், புலித்தோலை இடையில் கட்டியவனும், கையில் புத்தகம் ஒன்றினை ஏற்று குருக் கோலத்தில் எம்பெருமான் புறம்பயம் நம் ஊர் என்று போயினார் .

விளக்க உரை

  • அத் தவத்த தேவர் – அந்தத் தவம் உடைய தேவர்
  • தேவர் அறுபதின்மருக்கும் – ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.
  • புத்தகம் கைக்கொள்ளல் – ஆசிரியக்கோலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 22 (2022)


பாடல்

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – திருக்கோவையார் – திருத்தெள்ளேணம் – மாணிக்க வாசகர்

கருத்துசிவன் தனக்கு அருளிய முறையினை உரைக்கும்  பாடல்.

பதவுரை

திருப்பெருந்துறையில் எழுந்து அருளும் சிவ பெருமான் என் பிறவியையும், அதற்கு காரணமான பாசத்தினையும் வேரறுத்தபின் யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை. அருவ வடிவமாகவும் உருவ வடிவமாகவும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி நாம் கை தட்டி பாடும் விளையாட்டாகிய தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்க உரை

  • ஓர் இடத்திருந்து பாடும்போது, முன்பு தாம் கண்டு வணங்கிய இடத்திலும், வணங்க நினைக்கும் இடத்திலும் உள்ள பெருமானது கோலத்தை நினைந்து பாடுதல் அடியவர்க்கு உண்டான இயல்பு. ‘திருவாரூர் பாடி’ ‘திருக்கோவையுள்ளும்’ என்பது அவ்வாறே குறிக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 21 (2022)

பாடல்

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஎம்பெருமான் ஈசனின் திருமேனியினையும், அவன் ஆயுதங்களையும், குணங்களையும் கூறும்  பாடல்.

பதவுரை

அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலத்தினை உடையவனும், போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபத்தினை ஊர்தியாக கொண்டவனும், இரு வினைகளை இயல்பாகவே நீங்கப் பெற்றவனும், நாகத்தைப் பூண்டவனும், வெண்மையான மழுவினை ஆயுதமாக  உடையவனும், நினைப்பதற்கு உரிய அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், வினையை நீங்கியவர்கள் ஆகிய மேலோர்களால் தொழப்படும் இறைவன் இருக்கும் இடம் வீழிமிழலை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மாசி – 11 (2022)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்

டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவனை பைரவ ரூபமாக கண்டு அவரை வணங்கி தன் சூலை நோய் எனும் வயிற்று வலியை நீங்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

திருவதிகைக் கெடிலநதிக்கு வடபால் விளங்கும் திருத்தலமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, உலகில் புறப்பற்றுகளோடு இருந்து பின் இறந்தவர்களை  எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய பெருமானே! விடை ஆகிய காளையை விரும்பி ஊர்தல் செய்பவரே, திருத்தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தவரே, உம்மை வழிபாடு செய்பவர்களின் பாவங்களைப் போக்க வல்லவரே! இறந்தவருடைய மண்டை ஒட்டில்(பிரம்ம கபாலம்) பிச்சை ஏற்றுத் திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால், எம்மைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • படுவெண்தலை – பட்டதலை
  • படுதல் – அழிதல்
  • பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
  • பெற்றம் – விடை, ரிஷபம், காளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 22 (2022)


பாடல்

இந்திரன் மால்பிரமன் னெழி
   லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
   யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
  ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
   தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துசுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை  ஊர்தியாக அளித்து அருளச் செய்தான்.  அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’  என்னும் பெயரினை உடையவன் என்றும்  திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.

விளக்க உரை

  • மத்தம் – பெரியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மார்கழி – 13 (2021)


பாடல்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும்,  மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால்  அறியப்பட வேண்டியவற்றை  உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?

விளக்க உரை

  • கபாலம் – பிரமனது மண்டையோடு
  • மறி – கன்று
  • இட்டம் – விருப்பம் .
  • எரி – பிரளயகாலத் தீ
  • தனை – அளவு .
  • எள் – அளவின் சிறுமையினை காட்டுவது

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 19 (2021)


பாடல்

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
   புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
   புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
   செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
   தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
   ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
   அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துஅன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே,  விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ?  வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ?  மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக

விளக்க உரை

  • தீனம் – வறுமை, கொடுமை, குரூரம், நோய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 17 (2021)


பாடல்

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துசிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை.  சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.

விளக்க உரை

  • பாடிலர் – பாடலாகவுடையவர்.
  • காடு அலால் – புறங்காடு அல்லாமல்
  • பாரிடம் – பூதம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 25 (2021)


பாடல்

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமீயச்சூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகியும்,  பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டு வேறு வேறு  வேடத்தராகியும் அன்னையை தன்னுடை உடலின் பாகத்தில் கொண்டவனும் ஆனவன் அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலில் பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 23 (2021)



பாடல்

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
     படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
     இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
     பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில்  உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும்  அழகி கோலம் கொண்டவராகவும்  காட்சி வழங்குகின்றார்.

விளக்க உரை

  • பசைந்த – விரும்பிய
  • பிசைந்த – வடித்த
  • அசைந்த – தங்கிய

Loading

சமூக ஊடகங்கள்