அமுதமொழி – குரோதி – தை – 23 (2025)


பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

தேவாரம் ‍ – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை  காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் ‍ மறை பொருள்)

 விளக்கஉரை

  • பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
  • நாக்கைக்கொண்டு – நாவைக் கொண்டு
  • நாமம் – இறைவன் திருப்பெயர்
  • நவில்கிலார் – கூறாதவர்கள்
  • அலமந்து – வருந்தி
  • கழிவர் – அழிந்தொழிவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் ‍ #ஐந்தாம்_திருமுறை  #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 19 (2025)


பாடல்

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
   மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்
“தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
   செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
   நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
   கடுமையொடு களவு அற்றோமே

தேவாரம் ‍ – ஆறாம் திருமுறை ‍ – திருநாவுக்கரசர்

கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அயன், ஹ‌ரி, ஹ‌ரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆன‌வனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.

விளக்கஉரை

  • மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடுமை – கடிதாய செயல், பிறரை நலிதல்

#அந்தக்கரணம்  #அமுதமொழி #சைவம் #தேவாரம் ‍ #திருமுறை #ஆறாம்_திருமுறை ‍ #திருநாவுக்கரசர் #பொது #மறுமாற்றத் திருத்தாண்டகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 30 (2024)


கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை ‍ – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – புகலூர் உறையும் பெருமானின் திருவடிவ அழகினையும் செயற்கரிய செயல்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

திரண்டு சுருண்ட சடையினை உடையவரான புகலூர் பெருமான் ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்தவர்; கடினமானதும் காவல் பொருந்தியதும் ஆன மூன்று மதில்களையும் தனது அம்பினில் சிவந்ததான நெருப்பு கொண்டு அக்னி, திருமால் வாயு ஆகியோர் முனையாகவும் தண்டாகவும் இறகாகவும் செயல்படுமாறு செய்து அவை அழியுமாறு செய்தவர்; விரிந்ததும் பரந்ததும் ஆன சடையின் மேல் எப்பொழுதும் நீரினை உடைய‌ கங்கையினை விரும்பி ஏற்றவர் ஆவார்.

விளக்கஉரை

  • கரிந்தார் – இறந்தவர்கள்;
  • தலையர் – தலைகளை மாலையாக உடையவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி # சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள் #திருப்புகலூர் #நான்காம்_திருமுறை ‍ #தேவாரம் ‍ # திருநாவுக்கரசர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 22 (2024)

பாடல்

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

தேவாரம் – நான்காம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்துகாட்சிப் பொருளை சிவசக்தி ரூபமாகக் காணுதல் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

ஒளிர்தல் கொண்ட‌ பிறை நிலவினை அணிந்தவனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதி தேவியோடு இணைத்துப்பாடியும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு கூத்து தாளங்களை இட்டுக் கொண்டும், முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரையில் இருக்கும் திருவையாற்றை அடையும் நேரத்தில் ஆண்குயில் பெண்குயிலோடு கலந்து காதல் கீதங்களைப் பாடியும் பின் இணைந்தும் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் கண்டறியாத திருப்பாதங்களாக‌க் கண்டேன்.

விளக்க உரை

  • எரி – நிலவு
  • ஏந்து இழையாள் – அம்பிகை
  • இலயம் – கூத்துக்கு ஒத்த தாளலயம்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை # நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – பங்குனி – 2 (2024)

பாடல்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்து – முக்தி வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

நிலைத்த பேரின்ப வடிவாக இருப்பவனே, அழகியதான‌ புகலூர் தலத்தில் மேவி இருக்கும் புண்ணியனே, நினையும் தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பதை அல்லாது வேறு எதனை விரும்புவேன்? நினது கழலினை அணிந்த திருவடியை கைதொழுது காணும் காட்சி அல்லாது வேறு ஒன்றையும் விரும்ப மாட்டேன்; உன்னை விடுத்து வேறு எந்த பற்றுக்கோடும் இல்லாதவனாக இருக்கிறேன்; யான் வாழ்வதற்குப் பொருந்தி இருப்பதானதும் உறை போன்றதுமான இந்த உடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய்; உடலின் தன்மையால் அவையாவும் ஒன்று சேர்ந்து அடைக்கப்படும் காலத்தில் உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன்; ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – ஐப்பசி – 24 (2023)


பாடல்

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
   தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
   உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
   அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
   பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

ஆறாம் திருமுறை -‍ தேவாரம் -‍ திருநாவுக்கரசர்

கருத்துபிறவி நீங்கப் பெறும் வகைகளை உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் உரையாதவர்களாகவும், அன்னையின் வண்ணம் ஒத்து இருக்கும் தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர்களாகவும், இறைவன் உறைவிடம் ஆகிய திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராதவர்களாகவும், உணவு உண்பதற்குமுன் வண்ணமும் வாசனையும் உடைய பல மலர்களை அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களாகவும்,வினை பற்றி வரும் கொடுநோய்கள் கெடுவதன் பொருட்டு வெண்ணீற்றை அணியாதவர்களாகவும் இருப்பவர்கள் இறைவனது திருவருளை இழந்தவராவார். அவர்கள் தீராத கொடுநோய்களால் மிகத் துன்புறுத்தபட்டு பின் இறந்து மீளவும் பிறப்பதற்கு வழியில்லாமல் அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள்.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 29 (2023)


பாடல்

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – இறைவன் திருமேனியினை விளக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று உரைக்கும் பாடல்

பதவுரை

திருமுடி ஆகிய சடையை உடையவனே! சடையில் தவழும் திங்களைப் பிறையையாகச் சூடியவனே! காளையினை ஊர்தியாகக் கொண்டவனே! காளை மீது ஏறி ஊர்வலமாக சென்று முப்புரங்களையும் எரியச்செய்தவனே! சகல சீவன்களுக்கும் முதல்வனாக இருப்பதால் அவர்களுக்கு அருள தலைவனாக இருந்து  ஆள்பவனே!  வைரவர் வடிவம் கொண்டு பிரம்மனது மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உலக உயிர்களைக் காப்பவனே! ஐயாறு ஆகிய திருவையாறு தளத்தில் உறைபவனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேன்.

விளக்க உரை:

  • விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன்
  • அடையான் – எவ்வுயிர்க்கும் தானே காவலன்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #நான்காம்_திருமுறை  #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவையாறு #சோழநாடு #காவிரி_ வடகரை _தலங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 20 (2023)


பாடல்

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்

பதவுரை

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை  ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும்,  நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும்,  பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும்,  பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #ஏழாம்_திருமுறை  #தேவாரம்  #சுந்தரர் #திருநன்னிலத்துப்_பெருங்கோயில் #சோழநாடு #காவிரித்_தென்கரை_தலங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 18 (2023)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சூலை நோய் தீர்க்கவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அதிகைக் கெடில வீரட்டானத்துறையில் இருக்கும் அம்மானே, மனம், மொழி காயத்தால் உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே, உலகங்களைப் படைத்து அனுபவித்தவனாகிய பிரம்மனின்  மண்டையோட்டில் யாசகம் ஏற்றுத் திரிபவரே, உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை வினை நீக்கம் பொருட்டு அவர்களின் எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை விரும்பி அதனை வாகனமாக் கொண்டவரே, இறந்த பிரம்மாக்களின் தலையை வெண்தலைமாலையாக  அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாக எண்ணி உமக்கு அடிமை செய்து  வாழக்கருதுகின்ற அடியேனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • பாற்றம் , பாத்தம் –  விஷயம், தரம்
  • படு – கிட, இளைப்பாறு, அனுபவி, சகி
  • பெற்றம் – ஆடு, மாடுகள், கால்நடைகள்

#அந்தக்கரணம் #அமுதமொழி #நான்காம்_திருமுறை #திருமுறை #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவதிகை_வீரட்டானம் #நடுநாட்டுத்_தலங்கள் #நடுநாடு #வெண்ணீறு #பலி #நீறுபூசியமேனி #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 30 (2022)


பாடல்

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவனின் திருமேனிக் கோலத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

இறந்த பிரம்ம தேவர்ளை தலைமாலையாக கையில் எடுத்து தலையில் சூடியவனும், சிவந்த நிற மேனியில் பெரிய தலையை உடைய யானை உரித்து அதன் தோலைப் போர்த்தியவனும், பார்வதி தேவினையை பாகமாக உடையவனும், மானை தன் கையில் ஏந்தியவனும், ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்தவனும், புலித்தோலை இடையில் கட்டியவனும், கையில் புத்தகம் ஒன்றினை ஏற்று குருக் கோலத்தில் எம்பெருமான் புறம்பயம் நம் ஊர் என்று போயினார் .

விளக்க உரை

  • அத் தவத்த தேவர் – அந்தத் தவம் உடைய தேவர்
  • தேவர் அறுபதின்மருக்கும் – ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.
  • புத்தகம் கைக்கொள்ளல் – ஆசிரியக்கோலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 21 (2022)

பாடல்

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஎம்பெருமான் ஈசனின் திருமேனியினையும், அவன் ஆயுதங்களையும், குணங்களையும் கூறும்  பாடல்.

பதவுரை

அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலத்தினை உடையவனும், போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபத்தினை ஊர்தியாக கொண்டவனும், இரு வினைகளை இயல்பாகவே நீங்கப் பெற்றவனும், நாகத்தைப் பூண்டவனும், வெண்மையான மழுவினை ஆயுதமாக  உடையவனும், நினைப்பதற்கு உரிய அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், வினையை நீங்கியவர்கள் ஆகிய மேலோர்களால் தொழப்படும் இறைவன் இருக்கும் இடம் வீழிமிழலை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 23 (2022)


பாடல்

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஈசனே அனைத்துமாகி இருப்பதை உரைத்தும், அதன் பொருட்டு அரசனிடத்தில் பயம் கொள்ளமாட்டோம் எனவும் உரைக்கும் பாடல்.

பதவுரை

நிற்பன என்றழைக்கபடும் மனிதனாகவும், நடப்பன என்றழைகப்படும் மிருகங்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும் , காற்றாகவும், நீண்ட வானமாகவும் (பஞ்ச பூதங்கள்), மிகசிறிய அளவில் இருக்கக்கூடியதாகவும், பெருமை தரதக்கவனாகவும், அருமை உடையவனாகவும், தன்னிடத்தில் அன்பு கொண்டவர்களுக்கு மிகவும் எளியவனாகவும், அளக்க இயலாததான தற்பரம் ஆனவனாகவும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானாகவும் அவன் நன்மைகளையும்  பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றவரன் ஆனோம். சிறந்த உணர்வு இல்லாமல்  அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்ப  தன்மை உடையவர்கள்  பேசுமாறுபோல யாம் பேசுவமோ?

விளக்கஉரை

  • பரம் – மேலான பொருள் 
  • தத்பரம் – உயிருக்கு மேற்பட்டது
  • சதாசிவம் – சதா சிவதத்துவம்
  • தானும்  யானும் – இறைவனது பொருள் தன்மையையும் கலப்பினையும் உணர்த்தியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மாசி – 11 (2022)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்

டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவனை பைரவ ரூபமாக கண்டு அவரை வணங்கி தன் சூலை நோய் எனும் வயிற்று வலியை நீங்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

திருவதிகைக் கெடிலநதிக்கு வடபால் விளங்கும் திருத்தலமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, உலகில் புறப்பற்றுகளோடு இருந்து பின் இறந்தவர்களை  எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்லமை உடைய பெருமானே! விடை ஆகிய காளையை விரும்பி ஊர்தல் செய்பவரே, திருத்தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தவரே, உம்மை வழிபாடு செய்பவர்களின் பாவங்களைப் போக்க வல்லவரே! இறந்தவருடைய மண்டை ஒட்டில்(பிரம்ம கபாலம்) பிச்சை ஏற்றுத் திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால், எம்மைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • படுவெண்தலை – பட்டதலை
  • படுதல் – அழிதல்
  • பொடி – இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி
  • பெற்றம் – விடை, ரிஷபம், காளை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 22 (2022)


பாடல்

இந்திரன் மால்பிரமன் னெழி
   லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
   யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
  ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
   தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துசுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை  ஊர்தியாக அளித்து அருளச் செய்தான்.  அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’  என்னும் பெயரினை உடையவன் என்றும்  திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.

விளக்க உரை

  • மத்தம் – பெரியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – மார்கழி – 13 (2021)


பாடல்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் வடிவத்தினையும், அவனின் செயற்கறிய செயல்களையும் கூறி அவனை நினைந்து வாழமுடியாது என உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினை கட்டியவனும், பிரம்ம தலையாகிய கபாலத்தினையும், மான் குட்டியினையும் கையின் கொண்டவனும்,  மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு ஆகிய சர்வசங்கார நிலையில் சுடுகாட்டினை விருப்பமுடன் உறையும் இடமாகக் கொண்டு அந்த இடுகாட்டில் ஆடுவானும், கல்வியினால்  அறியப்பட வேண்டியவற்றை  உணர்ந்தோராகிய பெரியோராகிய சிட்டர்கள் வாழும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?

விளக்க உரை

  • கபாலம் – பிரமனது மண்டையோடு
  • மறி – கன்று
  • இட்டம் – விருப்பம் .
  • எரி – பிரளயகாலத் தீ
  • தனை – அளவு .
  • எள் – அளவின் சிறுமையினை காட்டுவது

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 14 (2021)


பாடல்

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை  சிலேடையாக வினவும் பாடல்.

பதவுரை

வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?

விளக்க உரை

  • சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும்  அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும்  எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 17 (2021)


பாடல்

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துசிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை.  சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.

விளக்க உரை

  • பாடிலர் – பாடலாகவுடையவர்.
  • காடு அலால் – புறங்காடு அல்லாமல்
  • பாரிடம் – பூதம்

சமூக ஊடகங்கள்