
பாடல்
தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே
ஏழாம் திருமுறை தேவாரம் சுந்தரர்
கருத்து – திருவாலங்காட்டில் எழுந்தருளும் பெருமானின் வடிவழகை உரைத்து தன்னை அடியாருக்கு அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
பிறர் தூண்டிய பின் ஒளிரும் விளக்கைப் போல் அல்லாமல் தானே ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே, உம்மை வணங்குபவர்களின் துன்பத்தை முழுமையாக நீக்குபவனே, பிரம்மாக்களின் தலையினை அணிகலனாய் பூண்டவனே, முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்து அறவடிவாக இருப்பவனே, முன்பு செய்யப்பட்ட பழைய வினைகள் முற்றிலும் நீங்குமாறு நீக்கியருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளி இருப்பவனே! அடியேன் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
விளக்கஉரை
- இறைவன் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறியும் அறிவினன் என்பதால் ‘தூண்டா விளக்கின் நற்சோதீ’.
- தன்வயத்தனாதல் – வேறு எவர் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருத்தல்; வரம்பில்லாத ஆற்றல் உடைமை – பரந்து விரிந்த பிரபஞ்சத்தினை ஆட்டுவிக்கும் தலைவன் வரம்பில்லா ஆற்றல் கொண்டு இருத்தல் இவை எண் குணங்களில் முக்கிய குணங்கள் ஆகும். அவன் நெருப்பு வடிவமாகவும் இருக்கிறான்; இதைக் குறிக்கவே ‘தூண்டா விளக்கின் நற்சோதீ’ எனவும் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #தேவாரம் #ஏழாம்_திருமுறை #சுந்தரர் #திருவாலங்காடு #விண்ணப்பம் #சைவத்திருத்தலங்கள் #திருமுறை # தொண்டை_ நாடு #பாடல்_பெற்றத்_தலங்கள் #பைரவர்_கோலம்
![]()
