
பாடல்
காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே
திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்
கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.
பதவுரை
இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும் இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.