அமுதமொழி – சார்வரி – ஆவணி- 18 (2020)


பாடல்

சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாச னுண்மை
தருநாத னங்குருநா தன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருளாசிரியனே இறைவன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நம்முடைய குரு நாதன் எப்படிப்பட்டவர் எனில் நினைவு எனும் எண்ணத்தை எண்ணியவாறு நிகழ்த்தித் தரவல்லவன்; தெற்கு பகுதியாகிய கமலை எனும் திருவாரூர் தலத்தில் வாழ்கின்ற நாதன்; பக்தியை தருகின்ற நாதன்; பரவிந்து எனும் `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளதான வாக்கிற்கு நாதனாக இருக்கக் கூடியவன்; முக்தியினை அருளக்கூடிய பெரிய நாதனாகவு இருக்கக் கூடியவன்; ஞானத்தின் வடிவமாகி பிரகாசமாக இருப்பவன்; மெய் எனும் உண்மையினை தரக் கூடியவன்.

விளக்க உரை

  • கமலை – திருமகள், திருவாரூர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனம்
  • சித்தி – காமியப்பயன்களை அருளுவது, பக்தி – வினை முற்றுப்பெறா நல்ல தவம் உடைய உயிர்கள் எய்துவது; முக்தி – சரியை, கிரியை மற்றும் யோகங்களில் ஈடுபட்டப் பின் உயிர்கள் முக்தி அடைய இறைவன் அருளுவது; உண்மை – மெய் ஞானம்.
  • வினையுடைய உயிர்களுக்கு முக்தியே பெரிதானது என்பதால் அதனைத் தருபவன் பெரு நாதன்
  • பிரகாசம் கதிரவனுக்கானது; அஞ்ஞான இருளை நீக்குதல் பற்றி ஞானப் பிரகாசன்
  • நம் – தம் மாணக்கர்களையும் உலக உயிர்களையும் குறித்தது

 

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *