மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங் குணமான அக்கோட்டை நடுவிலேதான் உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி உத்தமனே வங் கிலி யங்கென்று போடே
அகத்தியர் சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – விசுத்தி பற்றிக் கூறும் பாடல்.
பதவுரை
அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த விசுத்தி சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும். அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும். அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும். கரியநிறத்தில் இருக்கும் இந்த சக்கரத்தை குருவின் கோட்டை என்று அழைக்கிறார். சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.
விளக்கஉரை
ஆறு ஆதாரங்களில் ஒன்றான விசுத்தியை குறிப்பது.. இதன் வடிவம் அறுகோணம் பஞ்சாட்ஷரத்தில் “வ” என்ற எழுத்து.
சிவ சக்தி சொரூப ஐக்கியம். நடுவில் பிந்து. சிவன்(3), சக்தி(3). இரண்டும் சேர்ந்து ஷட்கோணம்(அறுகோணம்)
திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய 6 கோவில்களுக்கு மத்தியில் இருப்பதால் அறுகோணம் (தற்போது அரக்கோணம்)
எல்லாப் பயனையும் தருவது எந்திரங்களில் தலைமையகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும். அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.
பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார் கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து தீய வழிதனைத் தேடி போவார் மாடே
அருளியச் சித்தர் : அகத்தியர்
கருத்து – உயிரின் தன்மையை அறியாது பலவாறு பேசும் மனிதர்களைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிரின் தோற்றம் அறியா மானிடர்களின் கூட்டம் இந்த உடலைவிட்டு சீவன் நீங்கும் போது உயிர் நீங்கிவிட்டது, என்றும் அழியக்கூடியதான பிணம் மட்டும் இங்கு இருக்கிறது, இதை அறிந்தவர்கள் யாரும் இல்லை, உலகை விட்டு நீங்கிய சீவன் ஆகாயத்தில் இருக்கும் சிவத்துடன் சேரும், உடலானது தீயினைச் சேரும் என்று பலவாறு உரைப்பார்கள். புண்ணிய பாவங்களை அறிந்து அதனை செய்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீய வழியினை மாட்டைப் போன்று தேடிப் போவார்கள்
திறம் சொல்வர் சகல கலை சேதி எல்லாம் தீர்க்கமுள்ள மவுனமதின் திறமும் சொல்வார் பரம் சொல்வார் பரபரத்தின் பதிவும் சொல்வார் பதிவாக மவுனமதின் திறமும் சொல்வார் நிறம் சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார் நெஞ்சங்கள் தான் வலுக்க நிதியும் சொல்வார் கரம் சொல்வார் காயாதி கற்பம் சொல்வார் கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே!
அகஸ்தியர்
கருத்து – ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் கிடைக்கும் பேறுகள் எவை உரைக்கும் பாடல்.
பதவுரை
ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் அவர்கள் புலமை மிக்க உரைகளை உரைப்பார்கள்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூச்சின் வகைகளையும், அவை ஒவ்வொரு திதியில் செய்யப்பட வேண்டிய முறையினையும் உரைப்பார்கள்; முடிவான மௌனத்தின் பெருமைகளை உரைப்பார்கள்; பிறவி நீக்கம், மோட்சம் போன்றவற்றை உரைத்து மேலான கடவுளின் தன்மைகளை உரைப்பார்கள்; பராபரம் ஆகிய இறைவனின் பெருமைகளை உரைப்பார்கள்; இறையின் அருள் நிலை குறித்தும் உரைப்பார்கள்; எழுத்துக்கள், அவற்றின் தன்மைகள், மந்திரங்கள் மற்றும் அதை அடையும் முறைகள் ஆகியவற்றை தன் குரு உபதேசம் செய்த வகையில் உரைப்பார்கள்; வறுமையால் துன்பம் கொண்டவர்களின் வறுமை நீங்க அதற்கான வழிமுறைகளையும் உரைப்பார்கள்; உடல் கெடாமல் இருக்கும் கற்ப மூலிகைகளை உரைத்து அதை கொள்ளும் முறைகளையும் உரைப்பார்கள். ஆகவே இதனை மனதினை நிலைப்படுத்தி கேட்பாயாக.
விளக்க உரை
ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.
அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம் ஆதிமணிச் சோதிநிற மான வாலை விரிவான ராஜலிங்க சுரூப மாகி வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச் சரியான நடுவணையிற் பருவ மாகி சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம் குறியான பதியறிந்து குறியைக் கண்டு கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும் பாடல்
பதவுரை
மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து அம்பலத்தில் ஆடினேன்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.
ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய் வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது என்றும், தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் அகத்தியர் உரைக்கும் அகத்தியர் மெய்ஞானப் பாடல்.
பதவுரை
குருவுக்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்தும், கால் கடுக்க நின்றும், அவரிடத்தில் எந்த விதத்திலும்(மனம், மொழி, வாக்கு) பொய்யினை பேசாமல் மெய்ஞானத்தில் கூறியுள்ளவற்றை குரு உரைக்க அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை எனில் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும்; அந்த சீடன் எப்பொழுதும் மெய் தேடலில் விருப்பம் கொண்டு தனது குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த மெய்யறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்; யாசித்து பெற்ற பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும்.
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந் தன்னால் தெரியும் எனவேதான் நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே
அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்
கருத்து – தவநிலையை அறிந்தவர்கள் நவசித்தர்கள் என்பதை உரைக்கும் பாடல்
பதவுரை
மனமாகிய ஆனந்தப் பெண்ணே! எது தவம் என்பதையும், அதன் நிலை என்ன என்பதையும் அறிந்தவர்களுக்கு மெய்ஞானம் தன்னால் தெரியும். இவ்வாறு நவசித்தர்கள் கண்டு தெளிந்தார்கள் என்பதை நன்றாக அறிவாயாக.
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி பராசக்தி மூலமிது பாரு பாரு ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார் அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன் நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல் வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே
யோக ஞானம்
கருத்து – முருகப்பெருமான், அகத்திய மாமுனிக்கு பராசக்தியின் மூலத்தை காட்டி அருளி நிர்விகல்ப சமாதியில் நின்று ஆச்சரியத்தை காணும்படி செய்தது பற்றி விளக்கும் பாடல்.
பதவுரை
பராசக்தியின் மூலத்தை உனக்காக உரைத்து வைத்தேன் பார்ப்பாயாக, அகத்திய மாமுனியே, என்னைவிடுத்து உனக்கு யார் அந்த மூலத்தின் மகிமையை சொல்லமுடியும். கனவு நிலையில் (நிலையற்றது) இல்லாமல் மனதை ஒருநிலைபடுத்தி நிர்விகல்ப சமாதி எனும் காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலையினை தாண்டி மேலே செல்வாயாக. இதனை வெறும் பேச்சாக பேசிடாமல் உச்ச நிலைஆகிய வெட்ட வெளியினை நாடி அங்கு கிடைக்கப் பெறும் விந்தையான அனுபங்களைக் காண்பாயாக.
பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக் காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக் கருவான சுழுமுனையில் உதிக்கும் போது தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே
அருளிய சித்தர் : அகத்தியர்
பதவுரை
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, எண்ணங்களைச் சிதற விடாமல் செய்து சுழுமுனையில் மனத்தை இருக்கும்படி செய்து, சூரிய கலை எனப்படும் வலது நாசி வழியாகவும், சந்திர கலை எனப்படும் இடது நாசி வழியாகவும் செல்லும் வாசியினை அண்ணாக்குள் நிலை நிறுத்தும் போது அது இயக்கம் கொள்ளாமல் சுழுமுனையில் அடங்கிவிடும், வாசிபற்றி நின்று பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்யும் போது அவைகள் சுழுமுனையில் ஒன்றாக சேர்ந்து இருக்கும்.
பாரப்பா மவுனமுடன் நின்று வாழ பரைஞான கேசரியாள் பாதம் போற்றி சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால் பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும் ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.
பதவுரை
மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக.
இந்த உலகத்தில் பிறவிகள் கோடி ஆகும்(எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும், 84 லட்சம் என்பது சைவ சித்தாந்த வரையறை); அந்த பிறவி சாந்து வரும் படைப்புகளோ கோடி கோடியாக நீட்சி கொள்ளும் ((எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும்); புழுவானது அதன் கூட்டில் இருந்து தப்பாதவாறு வலைப்பின்னல்கள் இருப்பதைப் போன்று இந்த அண்டத்திலும் பிறவிகள் கோடி ஒத்து இருக்கின்றன; அதில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறன; இதை புறக் கண்களால் கொண்டு அதை உற்று கவனிப்பாயாக; அவ்வாறு கவனிக்கும் போது இந்த அண்டத்தில் இருப்பது பிண்டம் எனப்படும் உடலில் இருக்கின்றது என்பது புலப்படும்; அதனை குருவின் அருளினால் சத்தியமாக உணர வேண்டும்.
சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கன்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.
தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு தன்னுரவுயில்லாத சமயத்தோரை உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை நாதாந்த வேதமதைக் காணார் தன்னை சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம் சோதிமய மானசிவ ஞானம் பாரே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.
பதவுரை
முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும், நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.
விளக்கஉரை
மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா! பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு; கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே
அகஸ்தியர் ஞானம்
கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.
பதவுரை
அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது; வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.
கருத்து – முருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.
பதவுரை
ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.
விளக்கஉரை
பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.
கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன் பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.
கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.
விளக்கஉரை
உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.
இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.
துக்கடா வல்லெழுத்து மிகா இடங்கள் அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின் அவை பெரியன யாவை போயின
கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.
பதவுரை
ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும் மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.
விளக்கஉரை
கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
கேசரி – விண்ணில் உலவுபவன்
கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.
கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர் திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
ஆகமம் – மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)
தலம்
திருக்குற்றாலம்
பிற பெயர்கள்
திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்
தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்
மாவட்டம்
திருநெல்வேலி
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 4 பதிக எண் 009 திருமுறை எண் 3
பாடல்
உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ
பொருள்
கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.