கருத்து – உடல் தன்மைகள் குறித்தும், அதில் இறைவன் உறைவதை குறித்தும் கூறும் பாடல்.
பதவுரை
இந்த உடலானது எட்டு சாண் உயரம் கொண்டது; காற்று சென்று வர ஏதுவாக 9 (ஏழு+இரண்டு) வாயில்களைக் கொண்டது; கட்டுப்படுத்த ஐவர் (பஞ்ச பூதங்கள்) உள்ளார்கள்; அதில் சிவசக்தி ரூபமாக இறைவன் இருக்கின்றான். இதை அறியாமல் பேசுகின்றாய் (மனமே!). இறைவனின் கட்டளைக்கு பயந்து அவர் என்ன உரைப்பாரோ என்று பயந்து நெஞ்சமே நிலை கொள்ளாமல் வாடி தவிக்கின்றேன்.
விளக்கஉரை
பட்டணமுந் தானிரண்டு – கற்றவர்கள் உறையும் இடம் என்பதை முன் காலங்களில் குறிக்க பட்டணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருமை குறித்ததாலும், சித்தர்கள் அம்மை வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் சிவசக்தி என்று விளக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
வடிவு பத்ம ஆசனத்திருத்தி மூல அனலையே மாருதத்தினலேழுப்பி வாசலைந்து நாலையும் முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால் முளரி ஆலயங் கடந்து மூல நாடி யூடுபோம்
சிவவாக்கியர்
கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்
பதவுரை
பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை அனலாக்கி வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒன்றாக அடைத்து யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றுங்கள். மூன்று மண்டலங்களைக் கடந்து மூலநாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை சேருங்கள்.
மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங் குணமான அக்கோட்டை நடுவிலேதான் உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி உத்தமனே வங் கிலி யங்கென்று போடே
அகத்தியர் சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – விசுத்தி பற்றிக் கூறும் பாடல்.
பதவுரை
அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த விசுத்தி சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும். அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும். அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும். கரியநிறத்தில் இருக்கும் இந்த சக்கரத்தை குருவின் கோட்டை என்று அழைக்கிறார். சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.
விளக்கஉரை
ஆறு ஆதாரங்களில் ஒன்றான விசுத்தியை குறிப்பது.. இதன் வடிவம் அறுகோணம் பஞ்சாட்ஷரத்தில் “வ” என்ற எழுத்து.
சிவ சக்தி சொரூப ஐக்கியம். நடுவில் பிந்து. சிவன்(3), சக்தி(3). இரண்டும் சேர்ந்து ஷட்கோணம்(அறுகோணம்)
திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய 6 கோவில்களுக்கு மத்தியில் இருப்பதால் அறுகோணம் (தற்போது அரக்கோணம்)
எல்லாப் பயனையும் தருவது எந்திரங்களில் தலைமையகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும். அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.
கருத்து – அனைத்துமாகி நிற்கும் சிவத்தை காணுதலை கூறும் பாடல்.
பதவுரை
மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும் அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. அந்த இதழ்கள் ஒவ்வொன்றும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணத்தால் குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’ இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை (குரு உபதேசம் செய்தபடி) கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து எட்டு இதழ்களிலும் வெவ்வேறு விதமாய் ஜபம் செய்ய குளிர்ச்சி உடையதும், நிலையானதுமான சோதிவடிவமாக சிவம் இருக்கின்றது என்பதை அறியலாம். இதை விடுத்து வேறு ஒன்றையும் காணவில்லை.
விளக்கஉரை
எட்டு இதழ்கள் – எண் சாண் உடல் எனவும், நாலுவாசல் என்பதை அண்டஜம் (முட்டையில் இருந்து பிறப்பவை), ஜராயுதம் (கருப்பையில் பிறப்பவை), உத்பிஜம் (வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை), சுவேதஜம் (வேர்வையில் இருந்து கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை) எனக் கொண்டு அனைத்து பிறப்புகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்றும் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
கணபதியும் சிவமும் வேறு வேறு அல்ல எனவும் கொள்ளலாம்.
சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.
கருத்து – குரு உபதேசம் கொண்டு மாயையினை வென்று ஈசனை அடையலாம் எனக் கூறும்பாடல்.
பதவுரை
வினைகளை நீக்க வழி அறியாமல் மீண்டும் மீண்டும் இழிவான பிறப்பினை எடுத்து பிறந்து ஈசனை துதியாமல் மெய்யறிவால் இழிந்த ஏழைகளாக இருந்த போதிலும் பிறந்து பிறவியின் நோக்கம் அறியாமல் வெந்தநீறு பூசுகிறீர்; கடல் அளவு இருக்கும் மாயா மலங்களை அறுத்து அதன் மீதான ஆசைகளை நீக்க இயலாதவராக இருக்கிறீர்கள். குருவால் உபதேசம் செய்யக் கூடிய மந்திரம் கொண்டு அதை செபித்து இவைகளை விலக்கி அதன் மூலம் ஈசனைக் காணலாம்.
பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரும் என்பார் காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார் கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து தீய வழிதனைத் தேடி போவார் மாடே
அருளியச் சித்தர் : அகத்தியர்
கருத்து – உயிரின் தன்மையை அறியாது பலவாறு பேசும் மனிதர்களைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிரின் தோற்றம் அறியா மானிடர்களின் கூட்டம் இந்த உடலைவிட்டு சீவன் நீங்கும் போது உயிர் நீங்கிவிட்டது, என்றும் அழியக்கூடியதான பிணம் மட்டும் இங்கு இருக்கிறது, இதை அறிந்தவர்கள் யாரும் இல்லை, உலகை விட்டு நீங்கிய சீவன் ஆகாயத்தில் இருக்கும் சிவத்துடன் சேரும், உடலானது தீயினைச் சேரும் என்று பலவாறு உரைப்பார்கள். புண்ணிய பாவங்களை அறிந்து அதனை செய்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீய வழியினை மாட்டைப் போன்று தேடிப் போவார்கள்
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
அருளியச் சித்தர் : சிவவாக்கியர்
கருத்து – அகம், புறம் அனைத்தும் மாயைக்கு உட்பட்டது எனவும், இதை கடந்து நிற்பது ராம எனும் நாமம் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
செல்வத்தின் மீது பற்று வைத்து இருக்கும் குலாமரே! மும்மலங்களுக்கு உட்பட்டு பேதப்பட்டு நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் எவை? புறப் பொருளுக்கும், அகப் பொருளுக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? நான், நீ மற்றும் புறப்பொருள் ஆகியவற்றுக்கு கோனாகிய தலைவன் யார்? இவற்றை காக்கும் குரு யார்? எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டு அண்டத் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றுக்கு காரணமாக இருந்து இவற்றில் இருந்து விலகி இருப்பது யார்? எல்லாவற்றையும் கடந்து கடைசியில் நிற்பது எது எனில் அது இராம இராம என்னும் நாமமே என்பதை அறிவீர்களாக.
திறம் சொல்வர் சகல கலை சேதி எல்லாம் தீர்க்கமுள்ள மவுனமதின் திறமும் சொல்வார் பரம் சொல்வார் பரபரத்தின் பதிவும் சொல்வார் பதிவாக மவுனமதின் திறமும் சொல்வார் நிறம் சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார் நெஞ்சங்கள் தான் வலுக்க நிதியும் சொல்வார் கரம் சொல்வார் காயாதி கற்பம் சொல்வார் கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே!
அகஸ்தியர்
கருத்து – ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் கிடைக்கும் பேறுகள் எவை உரைக்கும் பாடல்.
பதவுரை
ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் அவர்கள் புலமை மிக்க உரைகளை உரைப்பார்கள்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூச்சின் வகைகளையும், அவை ஒவ்வொரு திதியில் செய்யப்பட வேண்டிய முறையினையும் உரைப்பார்கள்; முடிவான மௌனத்தின் பெருமைகளை உரைப்பார்கள்; பிறவி நீக்கம், மோட்சம் போன்றவற்றை உரைத்து மேலான கடவுளின் தன்மைகளை உரைப்பார்கள்; பராபரம் ஆகிய இறைவனின் பெருமைகளை உரைப்பார்கள்; இறையின் அருள் நிலை குறித்தும் உரைப்பார்கள்; எழுத்துக்கள், அவற்றின் தன்மைகள், மந்திரங்கள் மற்றும் அதை அடையும் முறைகள் ஆகியவற்றை தன் குரு உபதேசம் செய்த வகையில் உரைப்பார்கள்; வறுமையால் துன்பம் கொண்டவர்களின் வறுமை நீங்க அதற்கான வழிமுறைகளையும் உரைப்பார்கள்; உடல் கெடாமல் இருக்கும் கற்ப மூலிகைகளை உரைத்து அதை கொள்ளும் முறைகளையும் உரைப்பார்கள். ஆகவே இதனை மனதினை நிலைப்படுத்தி கேட்பாயாக.
விளக்க உரை
ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.
கருத்து – நல்லவர்களைப் பற்றி உரைத்து அவர்களுடன் இருத்தல் நன்மையைத் தரும் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
மனம், வாக்கு காயத்தால் நற்குணம் உடையோரை கண்ணினால் காண்பதும் நல்லதே; நல்லவர்களிடம் இருந்து பயன் நிறைந்த சொல்லை கேட்டலும் நல்லதே; அவ்வாறான நல்லவருடைய நல்ல குணங்களை பேசுதலும் நல்லதே; அந்த நல்லவர்களுடன் கூடியிருத்தலும் நல்லதே.
விளக்க உரை
‘நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ’ எனும் பட்டினத்தார் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
கருத்து – இராமதேவர் அன்னையை வழிபடும் முறையை தேரையருக்கு உரைத்த பாடல்.
பதவுரை
செய்த பூசைகளின் வழியில் நின்று அதை வீண் செய்யாமல் காத்த தேரையனே, பூரணத்தை தரும் ஐந்து கலைகள் ஆகிய நிவர்த்தி கலை (பலன் தருதல்), பிரதிட்டை கலை (மந்திரம் நிலை நிறுத்துதல்), வித்தை கலை (சக்தி பெருக்குதல்), சாந்தி கலை (அமைதி அளித்தல்) சாந்தியாதீதம் கலை (ஒலி கேட்டல்) ஆகியவற்றை பெற்று, ஆனந்தவல்லியின் துணையுடன் பாதம் முதல் தலை வரை வாசியினை ஆறு ஆதாரங்களிலும் நிலை பெறச் செய்து, வாலையின் மூலத்தினை ஓதி, அதனால் தோன்றும் (தச தீட்சையில் பெறப்படும் ஒலி) ஒலியினை மௌனமாக மனதுக்குள் உரைக்க வேண்டும். பிறவாமையைத் தருவதும், மழையினைப் போல் அருளைத் தரும் ஆனது இந்த 42 கோணங்களுடன் கூடிய தனிக்கோணமான 43வது கோணம். இதுவே அன்னை வீற்றிருக்கும் இடமாகும்.
விளக்க உரை
சசி – கற்பூரம், கடல், மழை
‘ஐந்து கலையில் அகராதி தன்னில்’ எனும் திருமந்திரப்பாடலும், ‘தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘போகாமல் நின்றதோர் ஐயா’ என்று சில இடங்களில் காணப்படுகின்றது.
சித்தர் பாடல் என்பதாலும், உணர்ந்து உணர்த்துவதிலும் பிழை இருக்கலாம். பிழை எனில் மானிடம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்
நல்வழி – ஔவையார்
கருத்து – பிறவிக்கு காரணம் நல்வினைகளும், தீவினைகளும் என்று உரைத்து அதனால் நன்மையைச் செய்ய வேண்டும் என்று கூறும் பாடல்.
பதவுரை
இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் எனும் செல்வமானது முன்சென்ற பிறவிகளில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருப்பதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் (பாவ புண்ணிய கருத்தினைக் கொண்ட சமயங்கள்) கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகி பாவம் போய்விடும். இது அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.
தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும் தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத் தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே
சித்தர் பாடல்கள் – பாம்பாட்டி சித்தர் – அகப்பற்று நீக்கல்
கருத்து – உலகியலை விடுத்து சிவத்தினை நாட அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
பாம்பே! தாமரை இலையின் மேல் தண்ணீரானது இருப்பினும் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக் கூடிய தன்மையைப் போல் இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றினை நீக்கி, முத்தினைப் போல் பிரகாசிக்கும் தன்மை உடைய சோதியின் பதத்தை தொழுது தொழுது ஆடுவாயாக.
விளக்க உரை
பாம்பு – மனம் எனக் கொள்ளலாம்.
தொழுது தொழுது – இருவினை ஆகிய நல்வினை தீவினை நீக்கம் பெறுதல் குறித்து இருமுறை உரைக்கப்பட்டது.
கருத்து – அகக்கண் கொண்டு கண்டவர்களுக்கு புறத்தில் கொண்டாட்டங்களும், புறத் தோற்ற அழகு செய்தலும் எதற்காக என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
குதம்பை எனும் ஆபரணத்தை காதில் அணிந்தவளே! ஞானத்தினால் மெய் உணர்வு கொண்டு நாம் காணும் போது நம்மைக் கண்டு அருளுபவரை அகக் கண் கொண்டு அதில் ஒன்றி கருத்தோடு இருப்பவர்களுக்கு புறக் கொண்டாட்டங்கள் எதற்காக? காலன் எனும் எமனை வெல்லக்கூடிய கருத்தினை கொண்டு அவனை வெல்லக்கூடியவர்களுக்கு புறத்தினால் அமையப்பெறும் கோலங்கள் எதற்காக?
கண்டாரை நோக்குதல், கருத்தோடு இருத்தல், காலனை வெல்லுதல் போன்றவை மிகவும் சூட்சமமானவை. இவைகள் குரு மூலமாக உபதேசம் செய்யப்பட்ட முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.
கருத்து – ஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
அழகிய பூமியின்மேலே, மனதில் மாறுபாடு இல்லாமல் உண்மையாக வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது போல இறத்தலுக்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஒழிவு இல்லாமல் பிச்சைக்குச் செல்வோரை, தடுக்க வல்லவர் யாவர்?
கருத்து – வாசி கொண்டு இறைவனை அடையும் வழியினைக் கூறும் பாடல்.
பதவுரை
கண்ணம்மா! (சூட்சமத்தினை குருமூலமாக அறிக) புரவி எனும் வாசியினைப் போல் நில்லாமல் 12 அங்குலம் கொண்டு சென்று கொண்டிருகும் காற்றினை சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து, அதில் நான்கு அங்குல காற்றினை சுருக்கி, ஆன்ம தேசத்தை நம் சொந்தம் ஆக்கிகொள்ள முடியாதோ?
அட்டாள தேசம் என்பதனை எட்டு அங்குலம் உடைய தேகம் என்று கொண்டு உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவருதலை உரைப்பதாவும் கொள்ளலாம்.
ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
வாசி முறைகள் குரு பரம்பரையாக வருபவை. உபதேசிகப்படும் குருவுக்கு தக்கபடி எண்ணிக்கையும், முறையும் மாறுபடலாம் என்பதால் குரு முகமாக அறிதல் நலம்.
கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும்பாடல்.
பதவுரை
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.
விளக்கஉரை
பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்
நல்வழி – ஔவையார்
கருத்து – முற்பிறவியில் செய்த வினைகளை ஒத்தே இந்தப் பிறவியில் செல்வம் சேரும் என்பதை விளக்கும்பாடல்.
பதவுரை
உலகில் இருப்பவர்களே கேளுங்கள்! பொருளை சம்பாதிப்பதற்காக கணக்கில் அடங்காத முயற்சிகள் செய்தாலும் செய்த வினையாகிய ஊழின் அளவே பொருள் ஈட்டுதல் கைகூடும்.அதற்கு மேல் நினைத்தாலும் செல்வம் சேராது. தேடிய செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்யும் உலக மக்களே! அந்தச் செல்வம் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம் ஆதிமணிச் சோதிநிற மான வாலை விரிவான ராஜலிங்க சுரூப மாகி வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச் சரியான நடுவணையிற் பருவ மாகி சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம் குறியான பதியறிந்து குறியைக் கண்டு கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே
அருளிய சித்தர் : அகத்தியர்
கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும் பாடல்
பதவுரை
மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து அம்பலத்தில் ஆடினேன்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.