வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 39


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

ஆசைக்கு ஈடான துன்பமும் இல்லை. விடுவதைப் போல் இன்பமும் இல்லை. ஒருவன் விருப்பங்களை எல்லாம் விட்டப்பின் பிரம்ம பிராப்தத்திற்கு உரியவனாகிறான். நல்லறிவு இல்லாதவர்களால் விட முடியாததும், தேகம் தளர்ந்தாலும் தளராரதும், உயிருள்ள வரை துன்பம் தரத் தக்கதான ஆசை விடுபவனுக்கே சுகம் அதிகம் என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.

விருப்பம் விரும்பியதை அனுபவிப்பதால் தணிவதில்லை. அது நெய்யினால் தீயானது அதிகமாக ஆவது போல் இன்னும் அதிகரிக்கும். பற்றுதல் ஏற்படுத்தி ஜொலிப்பது போல் இருக்கும் காமமானது மெய்யறிவு இல்லா மனிதர்களை சப்தாதி விஷயங்களினால் மயக்கி எரித்து விடுகின்றது. உலகிலுள்ள காம சுகங்களும், தேவ லோக பெரிய சுகங்களும் ஆசையற்றவனின் சுகத்தில் பதினாறின் ஒரு பாகத்திற்கு சமம் ஆகாது என்பதை வைராக்கியம் கொண்டவன் அறிவான்.

ஐம்புலன்களையும் ஆறாவதான மனதினை கட்டி எப்பொழுதும் ஆத்மாவிடம் வைக்க வேண்டும். புலன்களை விஷயத்தில் செலுத்துவதால் கெடுதலே. இவ்வாறு இந்திரியங்களை ஆத்மாவிடம் சேர்த்து கட்டும் திறமை உள்ளவன் பாவங்களையும், துயரத்தையும் அடையான்.

பெரும் உபாயங்களால் தேடப்பட்டவைகளும், நிலையற்றவையும், குணமற்றவையும் துன்பத்தை முதலும் முடிவுமாக கொண்டவை ஆன காம சுகங்களினால் என்ன இன்பம் இருக்கின்றது? வியாதி கொண்டு இருக்கும் மனிதனுக்கு மரணம் வரும் போது என்ன சுகம் இருக்கிறது? காட்டில் புலியானது ஆட்டை தூக்கி செல்வது போல் காமத்தில் திளைத்து விரும்பம் நிறைவேறா மனிதனை எமன் தூக்கிச் செல்கிறான். சம்சாரத்தில் இருக்கும் மனிதர்கள் பாவத்திற்கு அஞ்சுவது இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 38


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

தேவேந்திரன் எப்பொழுதும் இன்பம் அனுபவிப்பதில்லை. அவனுக்கும் மிகப்பெரிய துன்பம் இருக்கின்றது. அவனும் நித்திய சுகத்தை அடைவதில்லை.இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவை. தனங்கள் எல்லாவற்றிற்கும் அழிவுதான் முடிவு; சேர்க்கைக்கு பிரிவு முடிவு; வாழ்வுக்கு மரணம் முடிவு; நிலை உயர்வையும், தாழ்வையும் கண்டு இவை அநித்தியம் என்று அறிந்து துன்பம் தர தக்கவை என்றும் வைராக்கியம் கொள்ள வேண்டும்.

பொருளை ஈட்டுதல், அதைக் காத்தல், அழிப்பது, செலவழித்தல் ஆகியவை துன்பம் தரத்தக்கவை. பொருள் உடைய மனிதனை அரசன், கள்வன், தாயார், பூதங்கள், செலவு ஆகிய ஐந்து பெரும் பகைவர்கள் எப்பொழுதும் சூழ்ந்து இருக்கின்றனர். பொருள் இல்லாதவனை துன்பங்கள் சேர்வதில்லை. பொருள் கிடைப்பதால் ஆசை முடிவுறுவது இல்லை என்று உணர்ந்தால் வைராக்கியம் உண்டாகும்.

பொருள் ஈட்டும் ஆசையானது விறகில் தீப்பற்றுவது போல் அதிகமாகும். நான்கு கடல்களையும் மேகலை எனும் அணிகலனாக அணிந்திருக்கும் பூமியினை ஜெயித்தப்பின்னும் அக்கரையை ஜெயிக்க எண்ணம் தோன்றும். பற்று குற்றம் உடையது என்றும் புற்று சேர்க்கும் கரையான் பற்றுதலினால் கொல்லப்படுகின்றது என்றும் உணர்வு வைராக்கியத்தினால் அடையப்பெறும்.

மிகப்பெரிய தேசத்தினை ஆண்டாலும் அவன் இருப்பிடம் மிக சிறியது. பெரிய பற்றினால் அவன் அனுபவிப்பது மிக கொஞ்சம். ‘எல்லாம் எனது பலத்தினால்எனும் எண்ணம் உடையவன் அனுபவிக்கும் பிரயோஜனம் மிகக் கொஞ்சமே. மனிதர்களின் தேகயாத்திரை ஒருபடி அரிசி அளவு என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 36


உமை

புண்ணியம் செய்யும் மனிதர்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன். அவர்களுக்கு எப்படிப்பட்ட உலகங்கள் படைக்கப்பட்டு இருக்கின்றன? அவர்கள் அந்த உலகங்களில் போகங்களை எவ்வாறு அனுபவிக்கின்றனர்?

மகேஷ்வரர்

பத்ராசுவம், கேதுமாலம், உத்திர குருஷேத்ரம், ஜம்புவனம் முதலிய ஸ்வர்கங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜனை தூரம் உடையது. அந்த உலகங்களில் எக்காலமும் பூக்களும் பழங்களும் இருக்கின்றன. அவைகள் பொன் நிறத்தில் இருக்கின்றன. பழங்கள் பொன்றமானவை. தடாகங்கள் தாமரை மலர்களால் மூடப்பட்டு இருக்கின்றன.

*யோஜனை தூரம் – தோராயமாக 6 – 15 கி.மீ. பொதுவில் 150 கி.மீ மேல்

அந்த தேசம் அழகாகவும், பூக்கள் நிரம்பியதாகவும் இருக்கின்றது.புண்ணியம் செய்தவர்கள் புண்ணிய பலன் எது வரையில் இருக்கின்றதோ அதுவரையில் அங்கே எல்லோரோடும் சேர்ந்து இருப்பார்கள்.அவ்விடத்தில் பிறந்தவர்கள் புண்ணியமுள்ள வரையில் போகங்களை அனுபவித்து புண்ணியம் கழிந்தவுடன் தேகம் விடுகின்றனர்.முந்திய புண்ணிய கர்மத்தின் பலனாக சிறந்த மனிதர்களாக பிறப்பு எடுக்கின்றனர். இது வரையில் ஸ்வர்க்க கதியைச் சொன்னேன்.

எட்டு புண்ணிய உலகங்களைச் சொல்கிறேன் கேள். அவைகள் ஒன்றுக் கொன்று மேலானவைகள்; போகங்கள் நிறைந்தவை; சுகங்கள் தருபவை. வித்தியாதரலோகம், கிம்புருஷலோகம், யஷலோகம், கந்தர்வலோகம், கின்னரலோகம், அப்ஸ்ரஸுகளின் லோகம், தானவ லோகம், தேவ லோகம் என சொல்லப்பட்டு இருக்கின்றன.புண்ணிய கர்மங்களைச் செய்து அங்கு வசிப்பவர்களாகிய அவர்கள் மனிதர்களுக்கு மேம்பட்ட செல்வம் படைத்தவர்களாக இருக்கின்றனர். அவ்விடங்களில் மூப்பும், பிறப்பும் இறப்பும் காணப்படுகின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 35


உமை

மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே ‘இந்த ஜீவன் நல்லகதிக்கு உரியவன்’ என்றும் ‘இவன் துன்பத்துக்கு உரியவன் என்றும்’ அறியக்கூடுமா. கூடாதா எனும் இதை உரையுங்கள்.

மகேஸ்வரர்

மனிதர்கள் தேவத்தன்மை, அசுரத்தன்மை எனும் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். மனம், வாக்கு செய்கையினால் தீங்கு செய்து கொண்டு இருப்பவர்கள் அசுரர் என்று அறிவாயாக. துன்பம் செய்பவரும், கள்வரும், வஞ்சகரும், பிறர்மனைவியைத் தொடுபவரும், இழிதொழிலில் விருப்பம் உள்ளவரும், சுத்தம், மங்களத்தினை விட்டவரும், ஆசாரத்தைக் கெடுப்பவரும், பாவம் செய்பவரும், உலக ஒழுக்கத்தைக் கெடுப்பவரும் அவர்களின் தீச்செயல்களால் நரகத்துக்கு உரியவர்.

பிறர் துன்பத்தினைக் கண்டு அதை தன் துன்பம் போல் கொள்பவர்கள், ஏழையாக இருந்தாலும் யாசிப்பவர்களுக்கு அன்புடன் எதையாவது கொடுப்பவர்கள், குருவுக்கு பணிவிடை செய்பவர்கள் நன்றி மறவாதவர்கள், புலன் அடக்கம் கொண்டவர்கள், கோபம், தற்புகழ்சி, கர்வம்,பொருளாசை, பகை இவற்றை விட்டவர்கள் ஸ்வர்கம் செல்பவர்கள்.

இம்மையின் ஒழுக்கத்தினால் மறுமையின் பயன் தெரியும்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 34


உமை : 
தர்மம் செய்யப்பட்ட அளவையும் அதன் பலன்களையும் உரைக்க வேண்டும்.

மகேஸ்வரர் : 
ஒரு கோடி தனமுள்ளவன் அதனைக் கொடுப்பதாலும், ஒரு படி தானியம் உள்ளவன் அதைக் கொடுப்பதாலும் பெரும் பலன்களை அடைகிறார்கள். இரண்டுக்கான பலனும் சமமானதே. தன் சக்திக்கு குறைவாகக் கொடுப்பது மத்தியம். மிகக் குறைவாகக் கொடுக்கப்படுவது அதமம் என்று உரைக்கப்படுகின்றது.

தான பலன் 5 வகைப்படும்

  • ஆனந்த்யம் – கொடுக்க மனம் வராததை உத்தமருக்கு கொடுப்பது. இதனால் நீண்ட காலம் தேவலோகத்தில் வசித்தல் பலனாகும்.
  • மகத்து – கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குபவன், கொடுக்கும் வகை, இடம், காலம் ஆகிய ஆறு குணங்களும் பொருந்திய தானம். ஸ்வர்க்க லோகத்தில் வசித்தல் பலனாகும்.
  • சமம் – வாங்குபவன் தகுதிக்கு தகுந்தபடி சிரத்தையுடன் செய்யப்படும் தானம். மானிட லோகத்தில் போகம் பெறுதல் பலனாகும்.
  • ஹீனம் – ஆறு குணங்களில் சில குறைந்திருக்கும் தானம். மிலேச்ச தேசத்தில் பிறத்தல் பலனாகும்.
  • பாதகம் – ஆறு குணங்களும் இல்லாத தானம். நரகம் அடைதல் பலனாகும்.

உமை :
பாதகமான தர்மத்திற்கும் நல்ல பலன் கிடைப்பது எப்படி?

மகேஷ்வரர் :
மன உண்மையோடும் தயையோடும் செய்யப்படும் தர்மம் சுத்தமான தர்மம் ஆகும். எந்த தானங்களையும் அன்புடன் கொடுப்பதால் அதன் பலன்களை அடையலாம். எல்லா தானங்களுக்கும் இதுவே சாரம் என்று அறிவாயாக.

தோட்டங்கள், தேவாலயங்கள் அமைத்தல் , தீர்த்தங்களில் துறைகள் அமைத்தல், கிணறு வெட்டுதல், பசுமடம் அமைத்தல், தடாகம் அமைத்தல், சபைகள் அமைத்தல், சன்னியாசிகள் தங்க இடம் அமைத்தல், நோயாளிக்கும் மருத்துவம் பார்த்தல், அநாதைகளைக் காப்பது, அநாதைப் பிணங்களை எரிப்பது, தன்னால் இயன்றவரை பிறரை துன்பத்தில் இருந்து காப்பது ஆகியவை சாதுக்களால் செய்யப்படும் மற்ற தர்ம காரியங்கள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 37


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

துன்பம், நோய் மூப்பு இளைப்பினால் இந்த சம்சாகார சாகரத்தில் மனம் வெறுக்காதவனுக்கு முக்தி வருவதில்லை. எனவே இதுபற்றிய ஞானத்தினை உனக்குச் சொல்வேன். ஞானத்தின் வழியே அமிர்தம் எனப்படும் முக்தி கிட்டும். மூடனிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான துன்பங்களும் பயங்களும் தோன்றுகின்றன. கற்று அறிந்தவனிடம் அவைகள் இருப்பதில்லை. மூடன் பொருள் நட்டம் வந்த போது அதை நினைத்து துயரம் அடைகிறான். கடந்து போனதை நினைக்கக்கூடாது. அவ்வாறு நினையாதவனுக்கு துயரம் இல்லாமல் அழிந்து போகும்.

அற்ப புத்தியுள்ள மனிதர்கள் வேண்டாதது வருவதாலும், வேண்டியது போவதாலும் மனத்துயரம் அடைகின்றனர். இறந்தவனையும், கெட்டுப்போன பொருளையும் சிந்திப்பவன் துயரத்தையே அடைவான். மானிடர்களின் கர்ப்ப காலம் தொடங்கி இயற்கை அவ்வாறு உருவாக்கி இருக்கின்றது. இன்ப துன்பங்கள் பல வகையில் வந்தாலும், மனிதன் அதற்கு உட்படாமல் இருக்க வேண்டும்.

வைராக்கியவத்தை விரும்புவன் இன்பத்தைக் கண்டு மகிழாமலும், துன்பத்தைக் கண்டு துவளாமலும் இருக்க வேண்டும். எந்த பொருளிடத்தில் அன்பு உண்டாகின்றதோ அதில் இருக்கும் குற்றங்களை ஆராய்ந்து அதில் துன்பம் கலந்திருப்பதை உணரவேண்டும். இதனால் வைராக்கியத்தினை சீக்கிரம் பெறலாம்.

பெரும் கடலில் ஒரு கட்டையும், மற்றொரு கட்டையும் சேர்வது போன்றதே சுற்றங்கள் சேர்வதும். முன்பின் அறிமுகம் இல்லாமல் வந்து மீண்டும் காணாமல் போகும் மனிதர்களிடத்தில் ஸ்நேகம் கொள்ளக் கூடாது. பிள்ளை, பெண்டிர், உடல், சொத்து, அதிகாரம், நலம் ஆகியவை குடும்பம் போன்றவை. வைராக்கியம் கொண்டவன் அதில் மயங்கக் கூடாது.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 33


உமை

பித்ரு யாகம் பற்றியும், அது செய்யத்தக்க காலம் பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதைச் சொல்லக்கடவீர்.

மகேஸ்வரர்

பித்ருக்கள் புண்ணியர்களாகவும், தேவர்களுக்கும் மேலானவர்களாகவும், அனைவரும் பூஜிக்கத் தக்கவர்களாகவும், எப்பொழுதும் பிரகாசம் உடையவர்களாகவும்,  தென் திசையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

புவியில் உள்ள உயிர்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் பித்ருக்கள் உலகில் நடக்கும் சிராத்தத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.  குரு ஷேத்திரம், கயை, கங்கை, சரஸ்வதி நதிக்கரைகள் சிராத்தத்திற்கு உரியவை. இங்கு செய்யும் சிராத்தம் பெரும் பயன் தரும். புண்ணியதிருத்தலங்களும், புண்ணிய நதிக்கரைகளும், மனிதர்கள் அற்ற வனங்களும், ஆற்று மணல் நிறைந்த இடங்களும் சிராத்தத்திற்கு உரித்தான இடங்களாகும். மாசி புரட்டாசி மாதங்கள், தேய்பிறை ஆகிய கிருஷ்ணபட்சம், அமாவாசை, திரயோதசி, நவமி ஆகிய திதிகளில் சிராத்தம் செய்யத்தக்க காலங்கள் ஆகும். முற்பகல், வளர்பிறை, இரவுப்பொழுது, ஜன்ம நட்சத்திரம், இரட்டித்த திதிகள் போன்றவற்றை சிராத்தம் செய்ய விலக்க வேண்டும்.

பித்ருயாகத்தின் குற்றங்கள் திலத்தினால் விலகும். பச்சைபயறு, உளுந்து போன்ற தானியங்களால் பித்ருக்குகள் திருப்தி அடைவர். பசுவின் நெய், பாயசத்தினால் ஒருவருடமும், எள்ளோடு சேந்த பாயசம், தேன் போன்றவற்றால் பன்னிரெண்டு வருட காலமும் திருப்தி அடைவார்கள். சிராத்தம் செய்யப்படும் இடத்தில் வெளிப்படையாகவும், ரகசியாகவும் பேசுதல் கூடாது.

புத்திரனை விரும்புவன் ‘பித்ருக்களே, தாமரை மாலை அணிந்த குமாரனை கர்பத்தில் அருளுங்கள்‘ என்று செபித்து நடு பிண்டத்தை மனைவியை உண்ணச் செய்ய வேண்டும்.

இவைகளை தினம், ஒவ்வொரு மாதம், வருடத்திற்கு நான்குமுறை, வருடத்திற்கு இருமுறை என்ற வகையில் தன் சக்திக்கு தகுந்த அளவில் செய்யலாம்.

இந்த பித்ரு யாகங்கள் பகைவர்களை கெடுத்து, குலத்தைப் பெருக்கும் என்பதால் மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆரோக்கியம் உடையவவர்களாகவும், சந்ததி உடையவவர்களாகவும், தனதான்யம் உடையவவர்களாகவும் இருப்பார்கள்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 32

உமை

பகவானே! மரணகாலம் வந்தபோது எந்த வகையால் உயிர்விட்டமனிதர்கள் மறுமையில் இதம்பெறுவார்கள்?

மகேஸ்வரர்

முயற்சியினால் உண்டாகும் மரணம் தேகத்தில் சத்தி உள்ளவனுக்கும் சக்தி இல்லாதவனுக்கும் இரண்டுவகைகளாகச் சொல்லப்படுகிறது.

முயற்சியினால் உண்டாகும் மரணம் எனில் அதை உபாயங்களினால் செய்யவேண்டும்.

உலகத்தில் மரணமானது தேக வலிமை தப்பி மூப்பும் பிணியும் பற்றிய காரணங்களால் அமையப் பெற்ற அபாயமில்லாத ஸ்வபாவமரணம் எனும் இயற்கையாலும், இறந்துபோக எண்ணத்தினால் உயிரைவிடும் முயற்சியாலும் உண்டாகிறது. காசி போன்ற நகரங்களுக்கு செல்லுதல், சாகும்வரை உண்ணாவிரதம் ஆகிய வடக்கிருத்தல், நீரில் விழுந்து உயிரை மாய்ப்பது, அக்னியில் உயிரை விடுவது என நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன.

இறந்துபோகக் கருதுகிறவர்களுக்குப் பகலும் சுக்லபக்ஷமும் உத்தராயணமும் சிறந்தவை; மற்றவை இழி வானவை. சாஸ்திரத்தில் விதித்தபடி தனக்கான தர்மங்களைச் செய்து கிருகஸ்த ஆஸ்சிரமத்தை  நடத்தி,தேவ மனுஷ்ய பித்ருரிஷி ஆகியோர் கடன்களைத் தீர்த்து தனது முதுமை கண்டு நோய் அடைந்து இருக்கும்போது தன் சக்தியின்மையை தன் உறவினர்களுக்குத்  அவர்களிடம் கேட்டுக்கொண்டு தன் குடும்ப உறவுகளுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு,  தன்னுடைய புண்ணியத்திற்காகத் தானங்களைச் செய்து, எல்லாரிடத்தும் கனிவாகப் பேசி பொருள் பெற்றுக் கொண்டு புதுவஸ்திரம்தரித்து அதைத் தர்ப்பக் கயிற்றினால் கட்டிக் கொண்டு ஆசமனம் செய்து ஸங்கல்பத்தோடு நிச்சயம்செய்து உலக நடையை எல்லாம் விட்டுத் தனக்கு இஷ்டமான தர்மத்தைச்செய்ய வேண்டும். உயிர்விடும் வரையிலும் ஆகாரமில்லாமல் இருந்துகொண்டு வடதிசையை நோக்கிச் செல்ல வேண்டும். நடையற்றுப் போகும்போது மனவுறுதியுடன் படுத்து உயிரை விடவேண்டும். 

அக்நிப்பிரவேசத்தில் விருப்பமிருந்தாம் முன்சொன்ன விதிப்படியே புண்ணிய தங்களில் அல்லது நதிக்கரைகளில் கட்டைகளினால் சிதையைச் செய்து பரிசுத்தனாகிச் சங்கல்பம் செய்து கொண்டு தேவதைகளுக்கு நமஸ்காரம்செய்து அக்னியை வலம் வந்து அதில் முழுகவேண்டும். 

நீரில் விழநினைத்தாலும் அதேமுறையில் மிகப்புண்ணியமான பிரஸித்தி பெற்ற தீர்த்தத்தில் தர்மத்தை நினைத்து அமிழவேண்டும்.

இது எக்காலமும் உள்ள தர்மம் என்பதால் இவ்வாறு செய்பவன் பற்றின்மை காரணமாக பரிசுத்தமான புண்ணிய லோகங்களை அடைந்து ஸ்வர்க்க லோகத்தில் பூஜிக்கப்படுவான்.

தேகவன்மையுள்ளவன் உயிர்விடும்வகையை சரியாகச் சொல்லுகிறேன்; கேள். நாட்டை ஆளும் அரசன் தன்னுடை ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும், படைச்சேவகர்கள் அரசனுக்கு கடமைப் பட்டதற்காவும், பிரம்மசாரிகள் குருவுக்காகவும் மற்றவர்கள் எல்லோரும் பசுக்களைக் காப்பதன் பொருட்டு   உயிரை விடுவது சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது. தன்னுடை ராஜ்யத்தைக் காப்பதற்காகவும், கெட்ட தன்மை உடைய மனிதர்களால் பிடிபட்ட மக்களை விடுவிப்பதற்காகவும் விதிப்படி யுத்த ஒலி எழுப்பி மன உறுதியுடன் யுத்தத்தில் சென்று பின்வாங்காமல் உயிரைவிடவேண்டும்.  இவ்வாறு இறந்த அரசன் அப்போதே ஸ்வர்க்கலோகத்தில் பூஜிக்கப் படுவான். அப்படிப்பட்டநல்லகதி வேறில்லை. க்ஷத்திரியனுக்கு அது சிறந்தது. இவ்வாறு, உயிரைவிடுவதற்கு உள்ள நல்வழிகளை உனக்குச் சொன்னேன்.

காமம், கோபம், பயம் ஆகிய ஏதாவது காரணத்தினால் தேகத்தை ஒருவன் விடுவானாயின் அவன் தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால் முடிவில்லாத நரகத்தை அடைவான். அவ்வாறு இறந்துபோனவர்களுக்குச் சாஸ்திரப்படி செய்யவேண்டிய காரியத்தையும் சொல்லுகிறேன்; கேள். மனிதன் இறந்துபோகும் தருணத்தில் தேகத்தைப் பூமியில் படுக்கவைக்கவேண்டும்; உயிர் விட்டவுடன் அந்தத்தேகத்தை வஸ்திரத்தினால் மூடவேண்டும்; பிரேத தேகத்தைப் பூமாலைகளினாலும் சந்தனத்தினாலும் பொன்னினாலும் அலங்கரித்து மயானத்தின் தென்புறத்தில் சிதை கொண்டு அக்கினியில் எரிக்கவேண்டும்.  உயிரில்லாத தேகத்தைப் பூமியில் புதைக்கவும்செய்யலாம்.  ஜலதர்ப்பணமும் அஷ்டகையென்னும் சிராத்தமும் அநேகரால் செய்யப்படுமானால் இறந்துபோனவர்களுக்கு பரலோகத்தில் புண்ணியம் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 31


உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

பூமிதானம்

  • வீடுகள், நிலங்கள் சேர்ந்த பாகமாகிய பூமியை தானமாகக் கொடுக்க வேண்டும். எளிதில் பலனைக் கொடுக்கக் கூடியதும் விவாதமில்லாததுமான நிலத்தைக் குடியிருக்க இடத்தையும் அமைத்து வாங்குகிறவனுக்கு வஸ்திரத்தினாலும் புஷ்பத்தினாலும் சந்தனத்தினாலும் அலங்காரம் செய்து அவனுக்கும் அவன் வேலைக்காரருக்கும் அவன் சுற்றத்தாருக்கும் நல்ல போஜனமளித்து, ‘வாங்கிக்கொள்’ என்று மூன்றுமுறைசொல்லிப் புண்ணியகாலத்தில் தாரை வார்த்துத் பணமுடிப்போடு கொடுக்கவேண்டும்.
  • வெறுப்பில்லாமல் சிரத்தையோடு இவ்வாறு பூமிதானம் செய்தால் அந்தப்பூமி உள்ள வரையிலும் அந்தத் தானத்தின் பயன் இருக்கும் 
  • அசைவும் அழிவுமில்லாத பூமி விரும்பினவற்றை எல்லாம் தருவதால் பூமிதானம் செய்தவன் சுவர்க்கத்தில் நீண்டவருஷகாலம் மகிழ்ந்திருப்பான். 
  • ஜீவனத்திற்காகக் கஷ்டப்படும் மனிதன் ஏதாவது பாவம்செய்தால் பசுவின் காதளவாகிலும் பூமியைத்தானம் செய்தால் அந்தப் பாவத்தினின்று விடுபடுவான். பொன், வெள்ளி, வஸ்திரம், ரத்தினங்கள், முத்துக்கள், தனங்கள் இவையனைத்தும் பூமிதானத்தில் அடங்கினவை. 
  • தாய் தன் பாலினால் புத்திரனை எப்படி வளர்ப்பளோ அப்படியே பூமி எல்லாப் பலன்களினாலும் கொடுப்பவனை அபிவிருத்தி செய்யும்.

கன்னிகா தானம்

  • பரிசுத்தமான விரதமும் ஒழுக்கமுள்ளவளும், குலமும் உள்ள தன் பெண்ணை அவளிடத்தில் மிக்க விருப்பமுள்ளவனுக்கு அளிக்கவேண்டும்.  
  • வேலைக்காரிகள் வேலைக்காரர்கள் சிறப்புக்கள் வீட்டுப் பண்டங்கள் பசுக்கள் தானியங்கள் எல்லாவற்றுடனும் அவளுக்குத் தக்கவனும் அவளை விரும்புகிறவனுமானவனை, அக்னியின் முன்னிலையில் கொடுத்து விதிப்படி விவாகம் செய்விக்க வேண்டும். அவர்களுக்குரிய ஜீவனத்தை உண்டுபண்ணி அவர்களிருவரையும் நல்ல வீட்டில் வைக்கவேண்டும்.

வித்யாதானம்

  • யோக்கியனுக்கு வித்யாதானம் செய்யும் மனிதன் மறுஜன்மத்தில் புத்தி விருத்தியையும் தைரியத்தையும் ஞாபகசக்தியையும் அடைவான், தகுதியுள்ள சிஷ்யனுக்கு வித்யாதானம் செய்பவன் அந்தத் தானத்தின் பலனை அளவில்லாமல் அனுபவிப்பான்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 30

ஓவியம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

சுவர்ண தானம்

  • மிகச்சிறந்ததும் ஸ்வர்க்கத்தையும் நன்மையையும் தருவது.
  • பாவம் செய்த கொடியவனையும் சுவர்ண தானம் துலக்கி விடும்.
  • சுவர்ணமும் அக்நி என்பதாலும் எல்லா தேவர்களுக்குமாக இருப்பதாலும் சுவர்ணத்தைக் கொடுப்பதனால் எல்லாத்தேவர்களும் திருப்தி அடைந்தவராகி விரும்பினவற்றையெல்லாம் அடைவர். அவர்கள் சூரியன் அக்நி இவர்களின் சிறந்த லோகங்களை அடைவர்.
  • ஆதலால், பூமியில் மனிதர்கள் தங்களால் இயன்றவரையில் சுவர்ண தானம் செய்யவேண்டும். இதற்கு மேற்பட்டது உலகத்தில் ஒன்றுமில்லை.

கோதானம்

  • பிரம்மதேவர் உலகங்களைப் படைக்கக் கருதினபோதே எல்லாப் பிராணிகளின் ஜீவனத்திற்காகவும் கோக்களை முதலில் படைத்தால் அதனால் அவை தாய்களென்று சொல்லப்படுகின்றன.
  • வெருளாததும் நல்ல.அடக்கமுள்ளதும் நல்ல கன்றுள்ளதும் நிரம்பப் பாலுள்ளதுமான பசுவைத் தானம் செய்பவன் அதன்தேகத்தில் எத்தனை ரோமங்களிருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள் சுவர்க்க சுகங்களை அனுபவிப்பான், பொன்னால் அலங்கரிக்கப்பட்டகொம்பு.நுனிகளையுடைய கபிலைப் பசுவை வஸ்திரத்தோடும் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும் தானம் செய்பவன் தன் புத்திர பெளத்திரர்களையும் தன் குலத்தின்முன் ஏழு தலைமுறைகளையும் பரலோகத்தில் மகிழ்ச்சி அடைவான்.
  • வீட்டில் பிறந்தவை, கிரயத்திற்கு வாங்கப்பட்டவை, பந்தயமாகக் கிடைத்தவை, பராக்கிரமத்தினால் வாங்கப்பட்ட வைகள், பஞ்ச காலங்களில் இடரப்பட்டுக் காப்பாற்றுவதற்காக வந்து சேர்ந்தவையுமான பசுக்களையும் மற்றும் இவ்வகை மார்க்கங்களால் கிடைத்த பசுக்களையும்  தானம் செய்யலாம்
  • இப்படி ஒரு வருஷம் செய்வது விரும்பினவற்றை எல்லாம் கொடுக்கும் . ஒவ்வொருநாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பசுக்களுக்கு மங்களத்தைச் சொல்லவேண்டும். அவற்றிற்குத்தீங்கை எண் ணலாகாதென்று தர்மம்தெரிந்தவர்கள் நினைக்கின்றனர், பசுக்களே சிறந்த சுத்தம், உலகங்கள் பசுக்களிடம் இருக்கின்றன. பசுக்கள் உலகத்திற்குத் தாய்கள். அவற்றை எவ்வகையாலும் அவமதிக்காமல் இருக்கவேண்டும். அதனாலேதான் கோ தானம் சிறந்ததென்று சொல்லப்படுகிறது. கோக்களிடத்தில் பக்தியும் அவற்றைப் பூஜிப்பதும் மனிதனுக்குத் தீர்க்காயுளைக்கொடுக்கும்.
  • கோமயத்தை ஒருகாலும் அருவருக்கலாகாது. கோக்களின் மாமிசத்தை உண்ணலாகாது. கோக்களிடத்தில் எப்போதும் பக்தியோடு இருக்கவேண்டும்.
  • ஆகாரம் செய்வதற்கு முன்னமே தூயவனாக இருந்து பிறர் பசுவுக்கு ஒருபிடி புல் கொடுக்கவேண்டும்.
  • தயை அற்றவனுக்கும் நன்றி கெட்டவனுக்கும் பொருளாசை உள்ளவனுக்கும் பொய் சொல்லுகிறவனுக்கும் யாகத்தையும் சிராததையும் விட்டவனுக்கும் எவ்வகையிலும் கோ தானம் செய்யலாது.

தர்மங்கள் தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

மகேஸ்வரர்

தர்மகாரியங்கள் நித்தியமாகச் செய்யத்தக்கவை எனவும் காரணம் பற்றிச் செய்யத்தக்கவை என இரண்டு வகைப்படுகின்றன.

எந்தக்காலத்திலும் கொடுக்கப்படுவதினால் அது நித்தியம். இது எல்லா வர்ணங்களுக்கும் பொதுவானது.

நித்தியமான தர்மகாரியம்

அன்னம், இடம், தீபம், தண்ணீர், பசுக்களுக்குப்புல், விறகு, எண்ணெய், சந்தனம் முதலிய வாசனைகள் நிறைந்தவை, மருந்து, எள், உப்புமுதலிய திரவியங்களைக் கொடுப்பது  நித்ய தர்மம்.

அன்னதானம் 

  • மனிதர்களுக்கு அன்னமே பிராணன் ஆகையால் அன்னம் கொடுப்பவன் பிராணனைக் கொடுப்பவன் ஆகிறான். வித்வானான பிராம்மணனுக்குச் சுவையுள்ள அன்னத்தை கொடுக்க வேண்டும். வழி நடந்து களைத்து வீடு தேடி வந்த விருந்தினனை மனதில் மாறுபாடு இல்லாமல் வரவேற்க வேண்டும்.
  • மானிட ஜன்மமே அதிதிகளுக்காக உண்டாக்கப் பட்டிருப்பதால், மனைவியை வருத்தியாவது அதிதிகளை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
  • அது வரமளிக்கும் யாகத்திற்கு ஒப்பானது. பாவத்தைச் செய்தாலும் பசித்தவருக்கு அன்னமிடுகிறவன் தன்பாவத்தைப் போக்கிக் கொண்டவனாகிறான்.
  • எவ்வகைப்பட்ட மனிதர்களுக்கும் அன்னதானம் மறுக்கப்படுவதில்லை என்பதால் கோபத்தை விட்டு முழு முயற்சியோடு அன்னதானம் செய்யவேண்டும்.
  • அன்னதானம் செய்யும் மகாத்மாக்களுக்குக் தேவலோகத்தில் அநேக நூற்றுக்கணக்கான பெரியதான மாளிகைகள், உள்ளே தடாகங்கள், வனங்கள், ஒளியுள்ள வைடுரியக் கற்கள், பொன் வெள்ளியும் நிரம்பினவையும், பலவகை ரத்தின மயமானவையும், பல உருவங்களாகக் கட்டப்பட்ட கட்டங்கள் ஆகியவை இருக்கின்றன; நினைத்த பழங்களை எல்லாம் தரும் மரங்களும் அநேகருடைய கிணறுகளும் ஆயிரக்கணக்கான குளங்களும் வீடுகளும் இருக்கின்றன; ஸ்வர்க்கத்தில் பிணி துன்பங்கள் அற்றவையும் அழியாதவையும் ஆச்சரியப்படத்தக்கதுமான அனேக கிரகங்கள் இருக்கின்றன. அவர்கள் பிரம்ம லோகம் செல்கின்றனர்.
  • அதன்பிறகு மானிட லோகத்தில் எல்லாச் சிறப்புக்களும் பொருந்தினவர்களாக நல்ல உடல் பலமும், கட்டு உடையவர்களாகவும், நோயற்று நீண்டகாலம் ஜீவித்திருப்பவர்களாகவும் சிறந்த புத்தியுள்ளவர்களாகவும் பிறக்கின்றனர்.  
  • ஆதலால், நன்மையை விரும்புகிறவன் எந்தக் காலத்திலும் எவ்விடத்திலும் யாவருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்வது முக்கியம்.

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 28

உமை

மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

மகேஸ்வரர்

  • தேவர்களாலும், ரிஷிகளாலும் அடையப்பட்டதும், எல்லோராலும் பூஜிக்கப்பட்டதுமாகிய குருக்ஷேத்திரத்தினை சுற்றியுள்ள சிறந்தமலைகள் சூழ்ந்துள்ளதும், புண்ணிய தீர்த்தங்களும் தானம் செய்ய சிறப்பான இடங்கள்.
  • வசந்தகாலம், புண்ணியமான மாசம், சுக்லபக்ஷம், பூர்ணிமை, சிராத்தமும் தேவகாரியமும் செய்யதகக்க. புண்ணியதினம், சந்திர சூரிய கிரஹணம் ஆகியவை மிகச்சிறந்த புண்ணியகாலங்கள் என்று அறிவாயாக.
  • மேலே குறிக்கப்பட்ட காலங்களில் செய்யப்படும் தானம் பெரிய பலன் கொடுப்பதாகும். கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குகிறவன், கொடுக்கும்வகை, இடம், காலம் இவைகள் தானத் தின் சிறப்புக்கள் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து செய்யப்படும் தானம் பெரிதாகும். இந்த ஆறு குணங்களும் சேர்ந்த தானம் எண்ணுவதற்கு சுலபமாயிருந்தாலும் மிகப் பெரிய பாபங்களைப்போக்கும்.
  • இந்தக் குணங்களில்லாத தானம் மிகப்பெரியதாயிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும்.

உமை

இந்த ஆறு குணங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட பெருந்தானமும் எப்பொழுது பலன்படாமல் போகும்?

மகேஸ்வரர்

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டவாறு தர்மத்தைச் செய்தாலும், பின் அதற்காகத் துன்பப்பட்டாலும், தான் செய்ததை மற்றவர்கள் முன்னிலையில் வீணாகச் சபையில் புகழ்ந்து பேசினாலும், மறுஜன்மத்தில் அதன் பலன் வரவேண்டுமென்று மனத்தில் விருப்பங்கொண்டாலும், எப்போதும் பலனை விரும்பியே தர்மங்களைச் செய்தாலும் அந்தத் தர்மமும் தானமும் பலனற்றவை ஆகிவிடும். ஆகவே புண்ணியத்தைக் கருதுகின்றவன் இந்தக் குற்றங்களை விடவேண்டும்; இதுதான் நெடுங்காலமாகப் பெரியோர்களால் எக்காலத்திலும் கை கொள்ளப்படும் ஒழுக்கமென்றும், மற்றவர்களை காப்பாற்றுவது கிரகஸ்தர்களின் கடமையென்றும், எப்போதும் மனத்தில் உறுதிகொண்டு தானம் செய்யவேண்டும்.

இப்படி இடைவிடாமல் செய்யப்படும் புண்யம்தான் பெரிதாகும்.

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 27

உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

சிவன்

பஞ்ச பூதத்தினால் ஆன பொருள்கள் அனைவருக்கும் பொதுவானது. கொடுப்பவன், வாங்குபவன், கொடுக்கப்படும் பொருள், கொடுக்கும் வகை, காலம், இடம் ஆகிய எல்லாம் சேர்ந்தே தானம் எனப்படுகிறது. மனம், வாக்கு, காயம் இவற்றால் பரிசுத்தனாக இருந்து சத்தியமே கொண்டிருப்பவனும், கோபம், லோபம், பொறாமை ஆகிய இவைகள் இல்லாதவனும், சிரத்தையும், நம்பிக்கை உடையவனும் சிறப்புக்கு உரியவன் ஆகிறான், அவன் தானம் செய்யத் தக்கவன்.  பரிசுத்தமானவனும், புலன்களையும், கோபத்தையும் அடக்கியவனும், ஏழையானவனும், கல்வி, ஒழுக்கம் உள்ளவனும், பெரியதான குடும்பம் உள்ளவனும், பஞ்ச மகா யக்யங்கள் ஆகியவற்றை தவறாமல் செய்பவனும், அங்கங்களில் குறைபாடு இல்லாதவனும் ஆக இருத்தல் தானம் பெறுபவனுக்கான தர்மமாகும்.

பித்ரு காரியத்திலும், தேவ காரியத்திலும் அக்னி பூசையிலும் தானம் செய்வதில் பலன் அதிகம். எவன் எவன் எதற்கு தகுதி உடையவன் ஆகிறானோ அதற்கு அவன் பாத்திரமாகிறான். ஆபத்தில் இருப்பவனை ஆபத்தில் இருந்து விடுவிப்பதால் அவன் பாத்திரன் ஆகிறான். பசித்தவனுக்கு அன்னமிடல், தாகம் கொண்டனுக்கு நீர் அளித்தல் என ஒவ்வொருவரும் பாத்திரர்களாக ஆகின்றனர்.

கொடிய வஞ்சகத் தன்மை கொண்டவனும், திருட்டும், விபச்சாரம் செய்பவனும், ஆண் தன்மை அற்றவனும், பிற உயிர்களைக் கொல்பவனும், ஆசாரத்தை கெடுப்பவனும், உலகிற்கு கெடுதல் செய்பவனும் தானம் அளிப்பதில் இருந்து முற்றிலும் விலக்கத் தக்கவர்கள். பிறர் பொருளை திருடியும், தயை இல்லாதவன் இடத்தில் இருந்து வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும், தீய செயல்களை செய்தும், பொருள் ஆசையினால் பெரும்பாலானவர்களுக்கு தீங்கு இழைத்தும் மனிதர்கள் பெறும் தனம் மிகவும் இழிவானது. அப்படிப்பட்ட தனத்தில் செய்யப்படும் தர்மம் வீண் என்று அறிவாயாக. ஆகவே புண்ணியத்தை விருப்புகிறவன் நியாமாக ஈட்டிய பொருளை தானம் செய்ய வேண்டும். எது எக்காலத்திலும் தனக்கு பிரியமானதாக இருக்கிறதோ அதைத் தானம் செய்ய வேண்டும்.

இனி தானம் செய்யும் முறையைக் கூறுகிறேன் கேள்.

தகுதி உடையவனை நாடிச் சென்று அவனிடம் வேண்டி அவன் சந்தோஷம் கொள்ளுமாறு தானம் செய்ய வேண்டும். இதுவே சிறந்த முறை.  கேட்டப்பின் அளிப்பது என்பது இரண்டாம் தரமுடைய தானம் ஆகும். தானம் அளிக்கும் போது  அன்பு, அக்கறை, ஈடுபாடு கொண்டு செய்யவேண்டும். யாசிப்பவர்களை சரியான காலத்திலும், இடத்திலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைத்து தானம் செய்ய வேண்டும்.

தன் சக்திற்கு மேற்பட்ட தானம் மிகவும் உத்தமானது. தன் சக்திற்கு உட்பட்ட தானம் இரண்டாம் நிலை ஆகும். தன் சக்திற்கு மிக மிகக் குறைவாக செய்யப்படும் தானம் இழிவான தானம் ஆகும். வாக்கினால் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு தானம் செய்ய வேண்டும். புண்ணியத் தலங்களிலும், புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானம் மிகச்சிறந்ததானது.

உமை
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 26

 

உமை

பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

சிவன்

பிரம்மச்சாரி விரதமே பெரும் தவம் என்பதால் பரமபதம் கிடைக்கும். விஷயங்களை நினைத்தல், பார்த்தல், பேசுதல், தொடுதல் மற்றும் அனுபவித்தல் ஆகிய இவற்றினால் பிரம்மச்சாரிய விரதம் கெடாமல் காக்க வேண்டும். இது பிரம்மச்சாரிகளுக்கு எப்பொழுதும், கிரகஸ்தர்களுக்கு காலத்தை நிர்ணயித்தும் விதிக்கப்படுகிறது. கிரகஸ்தன் தனது ஜன்ம நட்சத்திரத்திலும், புண்ணிய காலங்களிலும், தேவ பூஜை செய்யும் காலங்களிலும், தர்ம காரிய காலங்களிலும் இவ் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தன் மனைவி விடுத்து வேறு மாதரிடம் செல்லாமல் இருப்பவன் பிரம்மச்சாரி விரதத்தின் பலனை அடைவான். இவ்விரதத்தால் பரிசுத்தமும், ஆயுளும் வாய்க்கப் பெறும்.

 

உமை

தர்மத்தை விரும்புவர்கள் தீர்த்த யாத்திரையை விரதமாகச் சொல்கிறார்கள். உலகில் உள்ள தீர்த்தங்களைப் பற்றி எனக்கு சொல்லக் கடவீர்.

சிவன்

உலகில் உள்ள மகா நதிகள் அனைத்தும் தீர்த்தங்கள் ஆகும். தீர்த்த யாத்திரையை என்பது ஆத்ம சுத்திக்காவும், தேக சுத்திக்காவும் பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுள் கிழ் திசை நோக்கி செல்லும் தீர்த்தங்கள் சிறந்தவைகள். நதிகள் சங்கமம் ஆகும் இடமும், கடலோடு கலக்கும் இடமும் மிகச் சிறந்தவைகள். கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள மரங்கள் தேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் அடையப் பெற்று நீராடி இருப்பதால் அவைகளும் சிறந்த தீர்த்தமாகின்றன. மகரிஷிகளால் அடைப் பெற்றதால் அருவிகளும், கிணறு மற்றும் குளங்களும் தீர்த்தங்கள் என்று அறிவாயாக. இனி இதில் ஸ்தானம் செய்யும் முறையை உரைக்கிறேன். பிறந்தது முதல் அதிக நியமங்களுடன் வாழ்ந்து, தீர்தங்களுக்குச் சென்று மூன்று வேளை அல்லது ஒரு வேளை உபவாசம் இருக்க வேண்டும். புண்ணிய மாதத்திலும், விரத காலத்திலும், பௌர்ணமியிலும் வெளியில் ஸ்தானம் செய்து சுத்தனாகிப் பின்  பக்தியோடு விதிப்படி தீர்த்தத்தில் மூன்று முறை  ஸ்தானம் செய்ய வேண்டும். கரையில் இருக்கும் ப்ராமணர்களுக்கு தட்சணை கொடுத்து, திருக்கோயிலுக்குச் சென்று பூஜை செய்து பின் திரும்பிச் செல்லவேண்டும். இது அனைவருக்கும் விதிக்கப்பட்டது. அருகில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவதைக் காட்டிலும் தொலைவில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. தீர்த்த ஸ்தானமானது தவத்திற்கும், பாவம் போக்குவதற்கும் மன சுத்தத்திற்கும் உரியது என்பதால் ஜன்ம சுத்தனாய் இருப்பவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதன் பலன்களை மனிதன் மறுமையில் அடைவான்.

உமை

உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 25

புகைப்படம் : இணையம்

உமை
தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

சிவன்

நன்றி உள்ளவர்களுக்கு சிறந்த தர்மம் என்பதாலும் குரு முன்பு உபகாரம் செய்தவர் என்பதாலும் குருவை பூசிக்க வேண்டும். கற்றுத்தரும் குரு, தந்தை மற்றும் தாய் ஆகியோர் குருவிலும் குருவாக கொள்ளவேண்டும். தந்தையின் மூத்த சகோதரரும், இளைய சகோதரரும், தந்தையின் தந்தையும்  தந்தைக்கு சமமானவர்களாகி பூஜிக்க தகுந்தவர்கள்; அது போலவே தாயாரின் மூத்த சகோதரியும், இளைய சகோதரியும், தாயின் தாயும் தாயாக நினைக்கப்பட வேண்டியவர்கள்; கற்றுத் தரும் குருவின் புத்திரனும், குருவின் குருவும் குருவாகிறார்கள்;

மூத்த சகோதரன், அரசன், தாய்மாமன், மனைவியின் தந்தை, பயத்தில் காப்பாற்றியவன்  மற்றும் உணவு இட்டுக் காத்தவன் ஆகியோர் குருவாக சொல்லப்படுகின்றனர்.

தந்தையை திருப்தி செய்பவரை பிரம்ம தேவரும், தாயை திருப்தி செய்பவரை தேவ மாதாக்களும் திருப்தி செய்கின்றனர். எவன் குருவை பூசனை செய்கிறானோ அவன் பிரம்ம தேவரை பூசனை செய்தவனாகவே ஆகிறான். அவர்கள் அதிருப்தியாக இருந்தால் மனிதன் நரகம் அடைவான்.

குருவிடத்தில் நீண்ட பகையையும், விரோதத்தையும் மனதாலும் நினைக்கக் கூடாது; அவர்களுக்கு பிடிக்காத சொல்லைச் சொல்லுதல், பிடிக்காதவற்றை செய்தல், அவர்கள் இருக்கு போது விதண்டாவாதம் செய்தல், குருவுடன் விவாதம் செய்தல், கலகம், பரிகாசம், கேளிக்கைப் பேச்சுகள், குருவிடத்தில் பொறாமை, குருவை தூஷித்தல்  இவற்றை செய்யக் கூடாது;

குருவின் கட்டளையைச் செய்பவனை விட சிறந்த புண்ணியசாலி எதுவுல் இல்லை. குரு பூஜை செய்தல் என்பது யாகம் செய்வதும், பெரும் தவம் செய்வது ஆகியவற்றை விட மேலானது. குருவை வழிபடாவிட்டால் எந்த வித ஆஸ்ரம தர்மமும் இல்லை.

மனம் வாக்கு காயங்களால் குரு, தந்தை, தாய் இவர்களுக்கு தீங்கு செய்யும் பாபம் என்பது சிசுக் கொலையை விட கொடுமையானது. அவர்களை விட பாபம் செய்தவன் உலகினில் இல்லை.

உமை
உபவாசத்தின் முறைகளைப் பற்றி எனக்கு உரைக்கவேண்டும்.

சிவன்

தேகத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கவும், இந்திரியங்களை காயவிடவும், ஒருவேளை புசிப்பதையும் உபவாசம் எனப் பகர்கின்றனர். இவ்வாறு ஆகாரத்தை குறைப்பதால் பெரிய புண்ணியத்தை அடைகின்றனர். உபவாசத்தின் போது தேகத்திற்கு தீங்கு வருமாயின் அதை நீக்குதலின் பொருட்டு பாலையோ அல்லது பழங்களையோ உண்ணலாம்.

உமை
பிரம்மச்சாரி விரதத்தை காப்பது எவ்வாறு?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24

 

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

சிவன்

  • மனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.
  • காய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.
  • பிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.
  • இவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.
  • மருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.
  • விரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.

உமை

சிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா? இதைச் சொல்லக்கடவீர்.

சிவன்

  • அக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.
  • வாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.
  • மாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.
  • மாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.
  • உடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.

உமை

தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 23

புகைப்படம் : இணையம்

உமை

பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.

சிவன்

ஆதிகாலத்தில் எல்லா மனிதர்களும் சிறந்த ஒழுக்கம் உடையவர்களாகவும், நல்ல புத்தி உடையவர்களாகவும், சிறந்தான ஆசாரத்தை அனுட்டிப்பவர்களாகவும் , உயர்ந்த எண்ணம் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறான காலத்தில் ஏவல் தொழில் செய்ய ஆட்கள் இல்லாததால்மனிதர்களுக்கு மயக்கத்தை உண்டு பண்ணுங்கள்என்ற கட்டளையை இட்டார். தேவர்கள் தமோ குணத்தின் சாரத்தை எடுத்து புத்தியை கெடுப்பதும், மனிதர்களுக்கு மயக்கத்தை தருவதும், பாவத்தை உண்டாக்குவதுமான பானத்தை மனிதர்களிடத்தில் சேர்பித்தனர். அதுமுதல் இதை அருந்துபவர்கள் செய்யத்தக்கது, செய்யத்தகாகது, சொல்லத்தக்கது, சொல்லத்தகாது, குணம், குற்றம் இவற்றை அறியாது அருந்தி மயங்கினார்கள். தகாத விஷயங்களைப் பேசுதல், கலகம் செய்தல் போன்ற தகாத செய்கைகளை செய்து பெரும் பாவங்களைச் செய்கின்றனர். மது அருந்துதல் வெட்கம், தைரியம், புத்தி ஆகியவற்றை அழித்துவிடும். நாணமும் கூச்சமும் அற்றவர்களாக செய்துவிடும்குடிப்பவர்கள் குடியை விரும்பி கொடுப்பவர்களுக்கு வேலைக்காரர்களாக ஆகிவிடுகின்றனர். இவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பசுக்களைப் போல் வேலைகளைச் செய்கின்றனர். காரண காரியம் அறியாமல் நினைவு கொண்டபடி செய்வதால் பாவத்தை பற்றுகிறான். சினேகத்தை கெடுப்பவனாகவும், அசுத்தனாகவும், அவமதிக்கப்பட்டவனாகவும், உண்ணத் தகாத உணவுகளை உண்பவனாகவும், கலகம் செய்வதில் விருப்பம் உள்ளவனாகவும், கடும் சொற்களை அனைவரிடத்திலும் சொல்பவனாகவும், பெரியோர்களை இழிவு படுத்தி பேசுபவனாகவும், பிறர் மனைவி கொள்பவனாகவும், யாரிட்டத்திலும் நல்ல வார்த்தைகளை கேளாதவனாகவும் இருப்பான். இவ்வாறு பல குற்றம் உடையதால் அவர்கள் நரகம் அடைவார்கள். ஆகவே தம் இதம் கருதும் சாதுக்களால் இப்பானம் விலக்கப்பட்டிருக்கிறது

உமை

புண்ணியத்தின் முறையைக் கூறுங்கள்.

சிவன்

ஔபரமிகம், நிருபத்ரவம், ஸோபகரணம் என புண்ணியம் மூன்று வகைப்படும்.

ஔபரமிகம்

பாப காரியங்களை செய்யாதிருப்பதாகிய ஔபரமிகம், மனோ வாக்கு காயங்களால் ஏற்படும் பாவங்களை விடுதல் மற்றொரு புண்ணியம் ஆகும். இந்த பாவங்களையும் மனதால் நினைத்து அவற்றை விலக்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுவான். (மூன்று வகையான பாவங்களையும் விடுதல் தபோவிரதம் எனப்படும்.) எல்லா பாவங்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விடவேண்டும். பாவங்களை விடுவது அசாத்தியம் எனினும் மனிதன் பாவங்களை விட்ட உடனே உயர்ந்ததாகிய ரிஷி ஆகிறான். புத்தி குறைவான மனிதர்கள் இந்த வழி அறியாமல் நரகத்தில் வதைபடுகின்றனர்.

நிருபத்ரவம்

சான்றோர்களிடம் இருந்து சாஸ்திரங்களை கேட்டல், ஐம்புலன்களை அடக்குதல், உள்ளத்தில் எப்பொழுதும் திருப்தியாக இருத்தல் ஆகியவற்றால் பாவங்களை விலக்க முடியும். இது நிருபத்ரவம் எனப்படும்.

ஸோபகரணம் (அல்லது) நிருபஸாதனம்

உலகம் முழுவதும் நன்றாக இருக்கும்படி நினைத்தல், சத்தியம், மனத்தூய்மை, உபவாசங்களில் மகிழ்வு கொள்ளுதல், காமக் குரோதங்களை விடுதல், மனதையும், இந்திரியங்களையும் அடங்குதல் மற்றும் உள்ள நற்கருமங்கள் அனைத்தும் நிருபஸாதனம் எனும் புண்ணிய வகையைச் சார்ந்தவை.

சத்யமானது சுவர்கத்திற்கு படி போலவும், துன்பக்கடலில் கப்பல் போலவும் இருக்கிறது. கண்டதையும் கேட்டதையும் உள்ளபடி உரைக்கும் சத்தியத்திற்கு மேலான தானமும் இல்லை; தவமும் இல்லை.

உயர்வு தாழ்வுகளை அறிந்ததால் சத்தியத்தை பேசுவதால் தீர்க்க ஆயுள் உண்டாகும். அவன் சந்ததியின் தொடர்ச்சியை காண்பவனும், உலகின் வரம்பை நிலை நிறுத்துபவனும் ஆகிறான்.

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 22

உமை
அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள். உயிர்களை கீழ் நிலைக்கு தள்ளும் அசுபகர்மம் பற்றியும், மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும் சுபகர்மம் பற்றியும் சொல்ல வேண்டும்.

சிவன்
மனம், வாக்கு, காயங்களால் பாப கர்மம் உண்டாகிறது.

கொலை செய்ய எண்ணுதல், பொறாமை, பிறர் பொருளில் ஆசை கொள்ளுதல், மனிதர்களின் ஜீவனமாக சம்பளத்தை கெடுப்பது, தர்ம காரியத்தில் சிரத்தை இல்லாதிருத்தல், பாப காரியம் செய்கையில் சந்தோஷம் கொள்ளுதல் இவை மானச பாவங்கள் எனப்படும்

பொய் பேசுதல், கடுமையான சொற்களைச் சொல்லுதல், யாருக்கும் அடங்காமல் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல் இவைகள் வாக்கினால் உண்டாகும் பாவங்கள் எனப்படும்

பிறர்மனை புகுதல், பிற உயிர்களை கஷ்டப்படுத்தி அவைகளை கட்டுப்பத்துதல், களவு, களவுப் பொருளை அழிப்பது, உண்ணத் தகாதவற்றை உண்ணுதல், வேட்டை ஆடுதலில் பற்றுதல், கர்வம், அலட்சியம், பிடிவாதத்தால் பிறரை நோகச் செய்தல், செய்யத் தகாதவற்றை செய்தல், குடிப்பது, அசுத்தமாக இருத்தல், தீயவர்களுடன் சேர்க்கை, கெட்ட ஒழுத்தம் உடையவராக இருத்தல், பாப காரியங்களுக்கு துணை போதல் ஆகியவை சாரீர பாவங்கள் எனப்படும்

இதில் சாரீர பாவம் மிக அதிக பாவமாகும்

கர்மவசத்திற்கு உட்பட்டு அறியாமலோ அல்லது காரணம் பற்றியோ எவ்வாறு செய்யினும் பாவம் செய்தவனை அடைந்தே தீரும்.

உமை
பாவ காரியத்தை எவ்வகையில் செய்வதால் அது பற்றுவதில்லை?

குற்றம் செய்யாத ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள தன்னை நோக்கி முதலில் ஆயுதத்தை ஓங்கிய பகைவனை திருப்பி அடித்துக் கொண்டால் பாவம் பற்றாது. ஊர் காப்பாற்றுபடுவதன் பொருட்டும், துயரப்படுபவர்களை காப்பதன் பொருட்டும் எதிர்களை துன்புறுத்துவனை பாவங்கள் பற்றாது.பஞ்சத்தில் இருக்கும் போது உயிர் வாழ்வதற்காக எவரும் அறியாமல் உணவு கொண்டவனை பாவங்கள் பற்றாது.(கிரகஸ்தர்களுக்கானது இது).

இடம், காலம் ஆகியவற்றை புத்தியினால் ஆராய்ந்து, பிரயோசனத்தை பற்றை ஆராய்ந்து பேசத் தக்காதவற்றை பேசினாலும், செய்யத் தகாதவற்றை செய்தாலும் சிறிது பாவம் பற்றும்.

உமை
பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.

 

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 21

ஓவியம் : இணையம்

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

சிவன்

கர்மவசியம், போகவசியம், துக்கவசியம் என மூன்றுவகைத் காரணதேகங்கள் உண்டு.

  • கர்மவசியம் என்பது மானிட தேகம்
  • போகவசியம் என்பது தேவலோகத்தில் உள்ள தேகம்
  • துக்கவசியம் என்றும் யாதனாவசியம் என்றும் கூறப்படும் மாயையால் உண்டாக்கப்படும் தேகம்

யாதனாவசியம் எனும் தேகம் எமலோகம் தவிர எங்கும் காணப்படவில்லை. உயிர்கள் மறித்தப்பின் யாதனாவசியம் எனும் தேகம் சேர்த்து மாயையினால் உயிர்கள் எம பட்டணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.  நிராபாதம் எனும் மார்க்கம் கொண்டு இராணுவ வீரர் வேஷத்துடன் இரண்டாவது பிரிவு உடைய உயிர்களை கொண்டு செல்கின்றனர். அதர்ம மார்கம் உடையவர்களை சண்டாள வேஷத்துடன் பாசங்களினால் கட்டி அடித்து பயமுறுத்தி துர்த்தசம் எனும் வழியில் கொண்டு செல்கின்றனர்.

இவ்வாறு மூன்று வகைகளாக எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். அங்கு சென்றப்பின்னர் தர்மாசனத்தில் தனது மந்திரிகளோடு இருக்கும் எமனிடம் அழைத்துவந்த உயிர்களை குறித்து விபரம் தெரிவிக்கின்றனர்.

எமனானவன், வந்தவர்களில் இருக்கும் உத்தமர்களை முறைப்படி பூஜித்து, அவர்களை வரவேற்று அவர்களின் கர்மத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு தகுந்த லோகங்களை குறித்து கட்டளையிட்டு அவர்களை சுவர்க்கம்  செல்ல அனுமதிக்கிறான்.

நடுத்தரமானவர்களின் கர்மங்களைக் கேட்டப்பின் சரியாக விசாரித்து அவர்களை மானிட பிறப்பில் பிறக்க கட்டளை இடுகிறான்.

அதர்மர்களை எமன் பார்ப்பதே இல்லை.யாதனா வசியம் சேர்ந்த மாயை கொண்ட உயிர்களை வெட்டியும், மோதியும், குழிகளில் தள்ளியும், ஸம்யாமினி எனும் பாறைகளில் மோதச் செய்தும் துன்புறுத்துகின்றனர். இரும்பு போன்று உறுதியான அலகு உடையதும், மிகக் கொடியதுமான கழுகுகள் அந்த உயிர்களை துன்புறுத்துகின்றன. அவர்களில் சிலர் அஸிபத்ரவனத்தின் வழியே நடந்து செல்கின்றனர். அங்கே கூரான பற்களுடன் கூடிய நாய்கள் அவர்களை கடித்து துன்புறுத்துகின்றன. மலக்கழிவுகளால் நிரம்பி பிரவாகமாக செல்வதும், அருவருக்கத் தக்கதும், முதலைகள் நிரம்பியதும், ஆழமானதும் ஆன வைதரணி நதி இருக்கிறது. எமதூதர்கள் கொண்டு சென்ற உயிர்களை அதில் குளிக்கச் செய்து அந்த நதி நீரையே குடிப்பிக்கச் செய்கின்றனர். செக்கு இயந்திரங்களில் அரைக்கப்பட்டும், தணல்களில் எரிக்கப்பட்டும், மூடி வேகவைக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். வாள் முதலிய ஆயுதங்களால் அறுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், துண்டாக்கப்பட்டும், சூலங்களாலும், சிறிய ஊசிகளால் குத்தப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தண்டிக்கும் போது இன்ன பாவத்திற்காக இன்ன தண்டனை என்றும் கூறி தண்டிக்கின்றனர். இவ்வாறு யாதனாவசியம் எனும் தேகத்தால் துன்புறும் உயிர்கள் துன்பத்தை அடைந்து இது தாங்கள் செய்த பாவத்தினால் வந்து என்று உணர்ந்து கதறி அழுது தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அங்கே துன்பங்களை அனுபவித்தப்பின் அழுக்கற்றவர்களாகி பாவத்தில் இருந்து விடுபடுகின்றனர்.

(இந்த விளக்கங்கள் மிக நீளமாக இருப்பதாலும், கருட புராணத்தில் விபரமாக விளக்கப்பட்டிருப்பதாலும் மேல் விபரம் தேவைப்படுபவர்கள் படித்து அறிந்து கொள்க)

உமை

அசுபகர்மம், சுபகர்மம்  எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள்.

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 20

 

உமை

‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?

சிவன்

வேறு ஒர் ஆத்மா கர்ப்பத்தில் சேர மனிதன் இறக்கிறான். மற்றொரு ஆத்மா கர்பத்தில் சேர பூமியில் பிறக்கிறான். இவ்வுணமை எவருக்கும் தெரியாது. தெய்வத்தினால் அது உண்டாகும். பிராணிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், பெற்றவளுக்காகவும் அவ்விரண்டு ஆத்மாக்களும் சமமான கர்மம் செய்திருப்பதாலும் அவ்வாறு நடக்கிறது என்று நீ அறிந்துகொள். சிலர் நரகம் அனுபவித்தப்பின் ஜன்மத்தை விரும்பி அடைகின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஸாம்யாமிகை எனும் மாயை இருக்கிறது. (இறந்த சரீரத்தில் இருந்த ஆத்மாவை மற்றொரு சரீரத்தில் பிறக்கச் செய்வது).

உமை

கர்மங்களை அனுபவிக்கும் ஆத்மா என்பது இல்லை. இறப்பவை பிறப்பது இல்லை; செடியில் காய் உண்டாவது போல், கடலில் அலைகள் தோன்றுவது போல் உலகில் உருவங்கள் தோன்றுகின்றன. ஆகவே தவ, தானம் முதலிய கருமங்கள் பயனற்றவைகள், எனவே மறுபிறப்பு என்பது இல்லை  என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் தாம் பார்க்காதவற்றை சொல்லக் கேட்டும், தம் கண்களால் பார்க்க இயலா காரணத்தால் இவை எல்லாம் இல்லை என்றும் தீர்மானிக்கின்றனர். இது பற்றி சொல்லக் கடவீர்

சிவன்

நாஸ்திகர்கள் எதைச் சொல்கிறார்களோ அது உலகில் இல்லை. இதுதான் சாபத்தினால் கெட்டு சாஸ்திரங்களை பழிப்பவரின் மதம். சாஸ்திரத்தில் சொல்லப்படவை அனைத்தும் கண்ணால் காணப்பட்டவையே. மனிதர்கள் சாஸ்திரங்களை  உறுதி என்று கொண்டு வைராக்கியம் எனும் கத்தியினால் விருப்பங்களை விலக்கி ஸ்வர்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே உலகில் சிரத்தையின் பலன் பரலோகத்தில் மிகவும் பெரியது. தம்முடைய நன்மையக் கருதுபவர்களுக்கு புத்தி, சிரத்தை, அடக்கம் ஆகியவை காரணங்கள். இம்மூன்று காரணங்களாலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே சொர்க்கம் செல்கின்றனர். மற்றவர்கள் இக் காரணங்கள் ஒன்று சேராமையினால் நாத்திக எண்ணம் கொண்டவராக ஆகின்றனர்.  அனுட்டானம் இல்லாமல் இருத்தல்,  பிடிவாத குணம், சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் பகைத்தல் போன்றவற்றால் அவர்களது அன்னம் யாராலும் உண்ணப்படாமல் தாழ்ந்த நிலைக்கு செல்கின்றனர். இந்த விஷயத்தில் மிக்க அறிவுள்ளவர்களும் மயங்குகின்றனர். எத்தனை வாதம் செய்தாலும் அதனை அறிய இயலாது. இது பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட மாயை. இது தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில் மனிதர்கள் எம்மாத்திரம். மனதில் சிரத்தை கொண்ட மனிதர்களால் மட்டும் சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது உள்ளது என்று அறியப்படும். அதனால் நன்மை பெறலாம். தனக்கு நன்மையை விரும்புகிறவன் நாத்திகர்களின் வாக்கினைக் கேட்கும் பொழுது தனக்கு காது கேளாதவன் போல் நடந்து கொள்ளவேண்டும்.

உமை

‘எம தண்டனைகள் எப்படிப்பட்டவை? எம தூதர்கள் எப்படிப்பட்டவர்? இறந்த பிராணிகள் எம லோகத்திற்கு போது எவ்வாறு? யமனுடைய இருப்பிடம் எப்படிப்பட்டது? அவன் எவ்வாறு தண்டிக்கிறான்’ இவைகளை நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன்

எமனது இருப்பிடம் தென் திசையில் இருக்கிறது. அது அழகானதும், நிறைய பொருட்கள் நிரம்பியதுமாகவும், பித்ரு தேவதைகள்,  பிரேத கூட்டங்கள், யம தூதர்கள், கர்மங்களினால் அகப்பட்ட பல பிராணிக் கூடங்களால் நிரம்பியதுமாக இருக்கிறது.

உலக நன்மையில் ஊக்கமுள்ள எமன் பிராணிகளின் நல்வினை, தீயவினைகளை அறிந்து எப்பொழுதும் மற்றவர்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த இடத்தில் இருந்தே பிராணிக் கூட்டங்களை கொன்று கொண்டு இருக்கிறான். அவன் மாயா ரூபங்களை தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில மனிதன் எவ்வாறு அறிவான்? கர்மம் முடிந்த உயிர்களை தூதர்கள் பிடித்துச் செல்கின்றனர். உலகினில் தாம் செய்யும் கர்மங்களால் உயிர்கள் உத்தமானவர்களாகவும், அதர்மமானவர்களாகவும், மத்தியமானவர்களாகவும் இருக்கின்றன.

தர்மத்தில் செல்பவர்கள் உத்தமர்கள். கர்மங்களால் மூன்று உலகங்களிலும் பிறப்பவர்கள் மத்தியமர். நரகம் போகிற பாதையில் சென்று பிறப்பவர்கள் அதர்மர்கள்.

  • ரமணீயம் – செடி கொடிகளால் நிரம்பி, அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தூபங்கள் காட்டப்பட்டு அப்பாதையில் செல்பவர்களின் மனதை கவர்வதாகவும், இனிமையான காற்று உள்ளதாகவும் இருக்கும்.
  • நிராபாதம் – ஒளி பொருந்தியதாக இருக்கும்.
  • துர்த்தர்சம் – இருள் நிரம்பியதாக, துர்வாசனைகளுடன், புழு பூச்சி நிறைந்ததாக கடக்க கடினமான பாதையாக இருக்கும்.

ரமணீயம் எனும் மார்கத்தில் செல்பவர்களை மட்டும் யமதூதர்கள் சிறந்த துணிகளை எடுத்து வந்து சுகமாக அழைத்துச் செல்வர்.

உமை

தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்