அமுதமொழி – சார்வரி – ஆவணி- 19 (2020)


பாடல்

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – பல ஜென்மங்கள் எடுத்து அன்னைத் தொழுது வந்ததால் முக்தி அருளவேண்டும் என விளிக்கும்  பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்தப் புவிதனில் அண்டஜம் எனப்படும் முட்டையில் தோன்றியும்,  சுவேதஜம் எனும்  வியர்வையில் தோன்றியும், உற்பீஜம் எனும்   விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றியும்,  சராயுஜம் எனும்    கருப்பையில் தோன்றியும் எத்தனை லட்சக்கணக்காண பிறவிகள் எடுத்து இருப்பேனோ தெரியாது; இத்தனை பிறவியிலும் உன் அருளை நினைந்து உருகி வந்தபோதிலும் உன் அருளை பெற இயலவில்லை;  உன்னை முக்காலத்திலும் தொழுது நீயே முக்தி அளிக்கத் தக்கவள் என்பதால் இனி எந்தவிதமான ஜெனமும் கொள்ளாதிருக்கும்படி கிருபை செய்து என்னை ரட்சித்து முக்தி தரவேண்டும்; அவ்வாறு இல்லாமல் வாழ்வினில் நாம் முதல் முறையாக சந்திக்கும் மனிதர்கள் போல் நீ என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? ; பாகம் பிரியாமல் இருப்பதால் வாழ்வினில் வெற்றி பெறுவதற்காக நான் பக்தியுடன் உரைத்துச் சொன்னதான விருத்தங்கள் பதினொன்றையும் கேட்டு அதுபற்றி நீ அளிக்கும் செல்வம் கண்டு விமலர் உன்னிடத்தில் கோபம் கொள்ளப் போகிறார், ஆகவே மூத்தோர், முனி  எனப்பல்வாறு அழைக்கப்படும் அத்தனின் பாகத்தினை விட்டு வந்து என்னுடைய குறைகளை தீர்த்து வைப்பாயாக.

விளக்க உரை

  • அத்தன் – தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன், உயர்ந்தோன், சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 16 (2020)


பாடல்

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
   பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
   பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
   மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
   முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
   செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
   சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
   அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் வடிவழகையும், திருமேனியில் அணிந்திருக்கும் பல்வேறு ஆபரணங்களையும், அதில் பதிக்கபெற்று இருக்கும் நவரத்தினங்களையும் குறிப்பிட்டு தன் இயல்பு நிலையினால் விளக்க முடியாமையை கூறும் பாடல் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! உன்னுடைய பத்துவிரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்கள் எத்தனை பிரகாசமானது? கால்விரல்களில் அணிந்திருக்கும் பாடகமும், தண்டையும், கொலுசும், பாதங்களில் இருக்கும் பச்சை நிற வைடூரியங்களால் இழைத்திட்ட சிலம்பின் ஓசையும், முத்துகளால் பதிக்கப்பெற்ற மூக்குத்தியும், ரத்தினங்களால் பதிக்கப்பெற்ற பதக்கமும், மனதினை மயக்கும்படியாக அணிந்திருக்கும் மாலை அழகும், முழுவதும்  வைடூரியம் மற்றும் புஷ்பரா கத்தினால் செய்து முடிதிருக்கும் தாலி அழகும், , செம்மை உடைய கையில் பொன்னால் ஆன கங்கணமும், இந்த புவனத்தால் விலை மதிக்க முடிக்கமுடியா ஒளி பொருந்திய முகமும், அதில் தொடர்ச்சியாக இருக்கும் சிறு காதுகளில் வேறு நகைகள் அணியாத போதும் கும்மியாட்டம் போன்று ஒலி எழுப்பி கொண்டிருக்கும் கம்மலின் அழகும், அத்திவரதன் தங்கையும் ஆகிய சக்தியின் சிவரூபத்தை அடியேனால் சொல்ல இயலுமோ?

விளக்க உரை

  • கொப்பி – கும்மியாட்டம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 18 (2020)


பாடல்

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குடன் ரக்ஷிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
என் அன்னை ஏகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துதனது விருப்பங்களை அன்னை காமாட்சியிடம் விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் நல்வினை பற்றி நல்ல முறையில் பொருள் ஈட்டி செல்வம் பெற்றிடவும், அதை சிறந்த முறையில் பாதுகாத்திடவும், உன்னிடத்தில் மெய்யான பக்தி கொண்டு உன்னுடைய திருவடிகளை நித்தமும் காணும் பாக்கியன் உடைய பாலகனாகிய எனக்கு அருள் புரியவும், பெருமை பொருந்திய இந்த தேகத்தில் சிறு நோய்கள் வராமலும், செம்மை உடையவனாகிய கலிபுருஷன் வந்து அணுகா வண்ணமும், உன்னுடைய சேய் ஆகிய எனக்கு பாக்கியங்களைத் தந்து, விதிக்கப்பட்ட நெறி முறைகளில் வாழ்ந்து வெற்றி பெற்று வாழ்ந்து வரவும், உயிர்களிடத்தில் அன்பு,தயவு போன்றவை இல்லாமல் காலம் முடிந்த உடன் அதை நிறைவேற்ற வரும் காலன் என்னைத் தொடர்ந்து வர ஒட்டாமல் என்னை அன்புடன் காத்திடுவாய்; அதுமட்டுமின்றி உன்னிடத்தில் அன்பு மிக பூண்டு உன்னைப் பற்ரி சிறியவன் ஆகிய நான் சொன்ன கவியில் இருக்கும் பிழைகளைப் பொறுத்து காக்க வேண்டும்.

விளக்க உரை

  • பாக்கியம் – நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு, விதி, பேறு, செல்வம், கஷாயம்
  • சீர் –  உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர், செல்வம், அழகு,  நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு
  • கலியன் – படைவீரன், திருமங்கையாழ்வார், இரட்டைப் பிள்ளைகளுள் ஆண், கலிபுருஷன், சனி, பசித்தவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 17 (2020)


பாடல்

எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
   ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
   உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
   உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
   உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
   போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
   பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
   அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – வேறு எந்த தெய்வத்தையும் துணையாக கொள்ளாமல் இருப்பதால் தன்னை பிள்ளையாகக் கருதி, வறுமையைப் போக்கி காக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே!  இந்த உலகம் முழுவதாலும் புகழப்படுபவரான மார்கண்டேயன் போல் என்னை பிரியமாக காத்திட வேண்டும் தாயே; உன்னுடைய திருவடிகளையே சாட்சியாக வைத்து  நியே துணை என்று உறுதியாக நம்பினேன்; இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் துணையாகக் கொள்ளவில்லை;  என்னைப்போலவே பிறவி எடுத்தவர்கள் இங்கே செல்வம், புகழ் என்று இன்பமாக வாழ்ந்திருக்க, உன்னுடைய அடியவன் ஆகிய யான் இத்தனை வறுமையில் தவிப்பது யான் செய்த பாவமா? நீ உன்னுடைய பிள்ளை என்று என்னை எண்ணி என்னிடம் எதுவும் உரையாமல் வறுமையை போக்கி என்னை ரட்சிக்க வேண்டும். தாயானவளே இன்னமும் உன்னுடைய அடியவன் ஆகிய என்னை ரட்சிக்காமல் தாமதம் செய்யாதே.

விளக்க உரை

  • அட்டி – தாமதம், தடை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 10 (2020)


பாடல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அன்னையில் சிறப்புகளை உரைத்து தான் அன்னையின் மைந்தன் என்பதால் தன்னை காக்கும் பொறுப்பு அன்னைக்கு இருக்கிறது என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! ஈசனுக்கும் உமைக்கும் உரித்தான சிவசிவ எனும் ஒலி வடிவமாகவும், மகேஸ்வரனிடத்தில் நிலைபெறும் மகேஸ்வரியாகவும், பரமனிடத்தில் நிலை பெறும் பரமேஸ்வரியாகவும், சிரசில் அமையப் பெற்றதும், புருவ மத்தியில் ஒளிரக் கூடியதுமான சிரோன்மணியாவும், பார்வதி ஆகிய மனோன்மணி ஆகியவளும் நீயே ஆகி, வனப்புடன் கூடிய  அழகிய வடிவம் கொண்டும், என்றும் அழிவில்லாவதலாகவும், அண்டங்கள் அனைத்தும் அதன் வழியில் நடைபெற பொறுப்பினை ஏற்றுக் கொண்டும், தோல்கருவியால் இசைக்கப்படும் ஒலியானவளாகவும், அந்த ஒலிக்கு காரணாமாகவும், நிரந்தரமானவளாகவும், பரம்பரையின் ஆதியாகவும், அனாத ரட்சகியாகவும் நீயே இருக்கிறாய்; இந்த ஜகம் எல்லாம் உன்னுடைய மாயத்தோற்றம் என்பதாலும் யான் சிறியவன் என்பதாலும் புகழ என்னால் முடியாது; (ஆனாலும்) உனக்குச் சொந்தமான உன்னுடைய மைந்தன் ஆனதால் என்னை இரட்சிக்க உனக்கு கடன் உள்ளதம்மா; வெள்ளிக்கிழமை உன்னை தரிசித்தவர்களின் துன்பங்களை நீக்கி விடுவாய்; மனத்தினால்  உன்னுடைய பாதம் எனப்படுவதான திருவடிகளைத் தொழுபவர்களின் துயரத்தினை மாற்றி விடுவாய்.

விளக்க உரை

  • சௌந்தரியம் – அழகு, எழில், கவர்ச்சி, ஈர்ப்பு, வனப்பு
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்
  • மாய்கை – பொய்த்தோற்றம்
  • துன்பத்தை நீக்கி விடுவாய், துயரத்தை மாற்றி விடுவாய் – இயலாமையால் வருவது துன்பம்; (இக லோகம் , குறுகிய கால அளவு), இல்லாமையால் வருவது துயரம்(பர லோகம், நீண்ட கால அளவு)
  • சிவசிவ — ஈசனுக்கும் உமைக்கும் உரித்தானது ஆகையால் சிவசக்தி ரூபமாக (பஞ்சாட்சரத்தின் வேறுவகையாக) ஜெபித்தல்
  • நிரந்தரி துரந்தரி என்றும் துரந்தரி நிரந்தரி என்றும் இருமுறை இப்பாடலில் இடம் பெறுகின்றன.
  1. தன்னிலை மறந்த யோகத்தில் இருப்பதால் இவ்வரிகள் என்றும்,
  2. இகம், பரம் என்பதற்காக இருமுறை என்றும்,
  3. சிவசக்தி வடிவமாக உரைத்தலில் பொருட்டு இருமுறை எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஜெகமெலா முன்மாய்கை
  1. (புற) உலகம் பொய்வடிவானது, மெய்யானவள் நீ எனவும்,
  2. நீயே மாயையின் வடிவமாகவும் இருப்பதால் (மஹாமாயா – லலிதா சகஸ்ரநாமம்) உன்னைப் புகழ சிறியவனான என்னால் ஆகாது எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 25 (2020)


பாடல்

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – பல ஜென்மாக்களில் தான் செய்த தவறுகளை உரைத்து தனக்கு கதி அளிக்கும்படி வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! மூடனாக இருந்து முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து வந்தேன்; பொய்யான ஒன்றை உண்மை என்று உரைத்து கைகளில் பொருள்களை தட்டிப்பறித்து மோசங்கள் செய்தேன்; என்னவென்று தெரியாமல் இக்கணத்தில் இத்துன்பம் வந்தது தாயே; செய்வது அறியாமல் இருக்கும் ஏழை ஆகிய நான் செய்த பிழைகளை பொறுத்து அருள் தந்து என் கவலைகளை நீக்க வேண்டும்; இத்துன்பங்கள் எல்லாம் சேர்ந்து வெற்றி எனும் ஜெயம் இல்லாமல் செய்து வெட்கப்பட வைக்கும் அளவில் தனக்கான அடையாளத்தினை பதிக்கிறது; சிவசக்தி எனும் காமாட்சி ஆகிய நீ பல உயிர்களை காப்பதன் பொருட்டு சிந்தனை கொண்டவளான நீ என்மீதும் சிந்தனை வைத்து எனக்கு நற்பாக்கியத்தினை அருள்வாயாக; உன்னை விரும்பும் உன் அடியவன் ஆகிய என்முன் அன்ன வாகனத்தின் மீது ஏறி ஆனந்தமாக வந்து நிற்பாயாக.

 

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 5 (2019)


பாடல்

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஎன் மீது வன்மங்களைக் கொண்டு அருள் புரியாமல் இருந்தாலும் உன்னைவிட்டு விலகமாட்டேன் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! தீய செயல்களில் இருந்து மாறாமல் இருக்கும் கடுமை உடைய பிள்ளை எனினும் பெற்ற தாய் புத்திகளை சொல்லி திருத்தவில்லையா? கடுமையும்  வெறித்தனம் கொண்டு உடைய பிள்ளை எனினும் தான் பெற்ற பிள்ளையை தாய் பிரியமாக வளர்க்க மாட்டாளா? உன்னைப் பற்றி அறியக்கூடியதான அறிவினை பெறாமலும் இடைவிடாமல் மூச்சு விடாமல் வாய்விட்டு கதறி நான் அழும் குரலில் கடுகினில் ஒரு நூறு பகுதி கூட உன் காதில் விழவில்லையா? எதன் பொருட்டு என் மீதினில் இல்லாத வன்மங்களைக் கொண்டு இருக்கிறாய்? நாம் இருவரும் இறந்து போகும்படி சண்டை இட்டுக் கொண்டு தெரிவினில் விழ்வதற்கான தருணம் அல்ல, இது தருமமும் அல்ல; இவ்வாறு நிகழ்வதால் எல்லோரும் உன்னையே சொல்லியே இகழ்ந்து பேசுவார்கள், இது நீதியல்ல. இனி உன்னை விட்டு விலக மாட்டேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 6 (2019)


பாடல்

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
   பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
   புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
   பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
   பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
   இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
   யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
   அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் குழந்தை ஆகிய தன்னிடத்தில் அன்பு இல்லாமலும், பாரா முகம் கொண்டு இருப்பதையும்  உரைத்து தன் துக்கம் போக்க வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! நீ பெற்ற தாய் என்று உன்னை மிகவும் நம்பி அதன் காரணமாக உன்னிடத்தில் பிரியமாக இருந்தேன்; என் மீது அக்கறையும் சிரத்தையும் இல்லாமல் இருப்பதை அறியாது உன்னுடைய பதியானவனும் புருஷன் ஆனவனும் ஆன ஈசனை மறந்துவிட்டேன்;உன்னிடத்தில் பக்தி கொண்டு அதன் காரணமாக பித்தனான என்னைக் கண்டு மனமிரங்காமல் என்னைக் கண்டும் காணாமல் இருந்தும் பாராமுகமும் கொண்டு இருந்தால் குழந்தை ஆகிய யான் எவ்வாறு துக்கம் கொள்ளாமல் நன்றாக இருக்க இயலும்; நீ இந்த அளவு மோசம் செய்வது ஆகாது; இது தர்மமும் ஆகாது; என்னை காப்பதன் பொருட்டான சிந்தனைகளே உனக்கு இல்லையோ; மூத்தவன் என்பதால் அத்தி முகம் கொண்டவனான கணபதி இடத்து ஆசை வைத்து இருப்பதால் புத்திரனாகிய எனை மறந்தாயோ; அவ்வாறான அன்பினை எனக்கும் அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • மெத்தனம் – அக்கறை அல்லது சிரத்தையின்றி மெதுவாக, மந்தமாகச் செயல்படல்
  • விசனம் – துக்கம், விடாமுயற்சி, வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு, பேராசை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 22 (2019)


பாடல்

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே
மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ
அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அனைத்து வடிவங்களில் இருக்கும் அன்னை காமாட்சி அன்னையே எனவும், அவளது சில பெருமைகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே!  நீ மாயவன் ஆகிய திருமாலின் தங்கை ஆனவளாகவும், தரும தேவதை ஆன பார்வதி ஆனவளாகவும், சரீர ரக்ஷைக்கு உரித்தான மணி மந்திரம் ஆனவளாகவும், மாயையின் சொரூபமாகவும், மகேஷ்வரனின் துணையாக இருக்கூடியவளான மகேஷ்வரியும் ஆனவளாகவும், மலையத்துவஜன் எனப்படும் மலையரசன் மகளாக இருப்பவளும், அன்னையான மீனாட்சி ஆனவளாகவும், நல்ல குணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளாகவும்,  விரும்புவர்கள் விரும்பியவற்றை எல்லாம் ஒருங்கே அளிப்பவளாகவும்,  இந்த உலகில் பெரிய நாயகி என்று பெயர் பெற்றவளாகவும், மூத்தோனும், மிக உயர்ந்தனுமான சிவன் இடத்தில் இடப்பாகம் எனும் பேறு பெற்று வளர்ந்தவளாகவும், பிரணவ வடிவம் ஆனவளாகவும், அடியவர்களின் அனைத்து சிந்தனைகளுக்கும் அந்த வினாடியில் பொருள் உரைப்பவளாகவும், அன்னை ஆகிய உண்ணாமுலை ஆனவளாகவும், அன்னை ஆகிய மகமாயி ஆனவளாகவும், ஆனந்த வல்லி ஆனவளாகவும், அகிலாண்டவல்லி ஆனவளாகவும் இருக்கிறாய்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 15 (2019)


பாடல்

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் பெரும் கருணைகளை சொல்லி தன்னை ரட்சிக்க ஆளும் அதிகாரம் உடையவள் என்று கூறி இன்னும் தன்னை ரட்சிக்க வரவில்லை என்பதை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே, சந்திர ஒளியினைப் போன்றதும் நீண்டதும் நெடுங்கரம் உடையதும் ஆன ஆனைமுகனை ஈன்ற அன்னையே, மாயன் எனப்படுவதாகிய திருமாலின் தங்கையே, பரமனுக்கு உரித்தானவளே, சுடுகாடு எனப்படும் மயானத்தில் நின்ற உமையே! உன்னை மட்டுமே கதியாக கொண்டு உன்னைக் கொண்டாடியதுடன் உன்முன் எனது குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமை செய்யத் தக்கதான வறுமையை எனக்கு தந்ததும் , எனக்கு அருள் புரியாமல் குழப்பம் கொண்டிருப்பது ஏனோ? அனைத்தையும் அறிந்து என் மீது கருணை காட்டாமல் இருப்பதால் நீ சதிகாரி என்பதையும் அறியாமல் உன்னை முழுமையாக நம்பினேன்; கொஞ்சம் கருணை கொண்டு என் நிலை அறிந்து என்னை ரட்சிக்க உனக்கு மனம் வரவில்லையோ? என்னை வழிநடத்தும் அதிகாரம் உடையவள் என்று ஆசை வைத்து உன்னை நம்பினேன், என்னிடத்தில் அன்பு கொண்டு என்னை ஆள்வாய்.

விளக்க உரை

  • சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே என்பதற்கு பதிலாக சில இடங்களில் விதியீது, நைந்துநான் அறியாம லுந்தனைச் சதமாக நம்பி னேனே என்று பதிக்கப்பட்டு இருக்கிறது. சதிகாரி என்பதை ஏற்காமல் இவ்வாறு மாற்றப்பட்டு இருக்கலாம். அது அன்னையிடம் உள்ள அளவற்ற அன்பினால் சதிகாரி என்று அழைத்து இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சதிக்கு பார்வதி எனவும் காரிக்கு கருப்பானவள் எனவும் பொருள் கொண்டு உரைப்பவர்களும் உளர். இத்தகைய கருமை நிறம் கொண்டவளாகிய உன்னைப் போய் நம்பினேனே! பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ என்று அதிகாரமாய் கேட்கிறார் என்று கூறுபவர்களும், உன் உடலில் பாதியாய் விளங்கும் ஈசனை மறந்து, உன்னை மட்டுமே சதமாக நம்பினேனே, என்னைச் சொல்லவேண்டும் என்றும் சில இடங்களில் கவித்துவமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 1 (2019)


பாடல்

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
   பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
   போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
   வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
   வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
   சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
   சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
   ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – மனித பிறவி எடுத்து செய்யப்பட வேண்டிய காரியங்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் தன் போல் மூடன் உண்டோ எனும் தன் நிலை கொண்டு நொந்து பேசும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்த பூமிதனில் குழந்தையாக பிறந்தும் வளர்ந்தும் இறை ஆகிய நீ உறையும் இடமாகிய பெரியதான இடத்தினை நான் அறியேன்; எண்ணங்களால் முதிர்ச்சி உடையவர்களாகி எப்பொழுதும் இறை சிந்தனையோடு இருக்கும் பெரியோர்களை தினமும் தரிசித்து அவர்களைப் போற்றிக் கொண்டாடி அறியவில்லை; நீயே உமையம்மை எனும் பார்வதி என்றும் சிவகாமி என்றும் சொல்லி உன்னை வாயினால் புகழ்ந்து பாடுதலை அறியேன்; அன்னை அவள் பாதத்தையும், தந்தை அவர் பாதத்தையும் ஒருநாளும் வணங்காதவனாக இருந்துவிட்டேன்; சாமி என்று கூறும் சாமர்த்தியமும் உபாயமும் உடையவர்களுடன் கை கூப்பி நின்று சரணங்கள் எதும் விளித்து செய்யாது இருந்தேன்; ஞான ஆசிரியர் ஆகிய சற்குருவின் பாதாரங்களைக் கண்டு தலை முதல் பாதம் வரையில்  எட்டு அங்கங்கள் தரையில்  படுமாறு வணங்குதலைச் செய்தல் அறியேன்; இந்த பூமிதனில் என்னைப் போல மூடனைக் கண்டது உண்டோ?

விளக்க உரை

  • வாமி – பார்வதி, துர்க்கை
  • ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி

சமூக ஊடகங்கள்