அமுதமொழி – விசுவாவசு – புரட்டாசி – 8 (2025)


பாடல்

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரிலும், திருஆலவாயிலும், திருவாரூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் ஒரே நேரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! கர்ப்பத்திலே சென்று பொருந்திய நாள் முதலாக உன்னுடைய திருவடிகளையே காண என்னுடைய மனம் உருகுகின்றது. நானும் பல்வேறு பிறவிக்கடலில் கிடந்து உழன்று சலித்து விட்டேன். அவ்வாறு நான் துன்புற்றதையும், எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

 விளக்கஉரை

  • ‘தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக’ எனும் விளக்கங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. முதன் முதலில் கருவினை அடைந்த காலம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
  • கிடந்து அலைந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் ‍- உன்னை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்பது வெளிப்படை.

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவொற்றியூர் #திருஆலவாய் #திருவாரூர் #திருக்கச்சியேகம்பம் #திருவடி #சைவத்திருத்தலங்கள் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆவணி– 14 (2025)


பாடல்

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

ஆறாம்_திருமுறை –  தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – எம்பெருமானின் வடிவங்களையும் குணத்தையும் உரைத்து அவனைப் பற்றி பேசதா நாள் எல்லாம் வீண் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

பால் போன்ற வெள்ளை நிறமுடைய‌ பிறைமதியைச் சூடியவனாகவும், மூன்று உலகினுக்கும் எவர் தூண்டுதலும் இல்லாமல் தானே தலைவனாகவும் இருக்கும் முதல்வனாகவும், செருக்கு கொண்ட பகைவருடைய மும்மதிலையும் அழித்தவனாகவும், விளங்கக்கூடிய‌ ஒளி வடிவமாக இருப்பவனாகவும், அன்னையினை இடப்பாகம் கொண்டதால் மரகத மணி போன்ற நிறமுடையவனாகவும், தேனும் பாலும் துய்க்கப் பெறும் போது தரும் இன்பம் போன்றவனாகவும், குற்றாலம் என்ற திருத்தலத்தில் விரும்பி அருளும் இளையவனாகவும்,  கூத்தாடுதலில் வல்லவனாகவும், யாவருக்கும் தலைவனாகவும், சிவஞானியர் ஞானத்தால் அறியப்படுபவனாகவும் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

விளக்கஉரை

  • பிரகிருதி மாயா உலகம்: மண் முதல் மூலப்பிரகிருதிவரை உள்ள 24 தத்துவங்கள்; 2 அசுத்த மாயா உலகம்: காலம் முதல் மாயை வரை உள்ள 7 தத்துவங்கள்; 3 சுத்த மாயா உலகம்: சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் எனும் 5 தத்துவங்கள் – 36 தத்துவங்களை கடந்து தலைவனாகவும் இருப்பவன் ‍ (சைவ சித்தாந்த கருத்துப்படி)
  • செற்றார்கள் – பகைத்தவர்கள்
  • செற்றான் – அழித்தான்
  • மரகதம் – மரகதம்போல்பவன்
  • குற்றாலம் – பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று
  • கூத்தாட வல்லானை  –  எல்லா வகை ஆடலும் அறிந்தவன் (காளியொடு ஆடியதை கருத்தில் கொள்க)

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருஆலவாய் #மதுரை #பாண்டியநாடு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆடி – 21 (2025)


பாடல்

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே

தேவாரம் ‍- ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துசிவனின் திருமேனி வடிவங்களை உரைத்து அவரை அன்றி எவரிடத்தும் அடிமை தொழில் செய்ய மாட்டோம் என உறுதிபடக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்ட சடையினை உடையவனும், ஒருகாதில் விளங்கும் சங்கினை காதணியாக அணிந்து இருப்பவனும்திரு நீற்றுச்சாம்பல் பூசிய மேனியில் பாம்பை அணிந்தவனும், விடை எனும் காளையினை வாகனமாக உடையவனும்புலித்தோலினை மேலாடையாக அணிந்தவனும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த ஆடையினை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறி எறியும் நிலையினை கொண்டவர்கள் ஆனோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களை உடைய அரசனின் ஆணையினை கேட்கும் தொழில் உடையவர்களாக ஆகமாட்டோம்.

விளக்கஉரை 

  • விடை – இடபம்
  • வேங்கை அதள் – புலித்தோல்
  • உழை – மான்களுக்குள் ஓர் இனம்
  • படை – படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும்
  • படியோம் – நிலையினை உடையோம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர் #06.98

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – ஆனி – 8 (2025)


பாடல்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே

தேவாரம் ‍- ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எம்பெருமானுக்கும், எம் பெருமானின் அடியவர்களுக்கும் கட்டுப்பட்டவர் அன்றி புவியினில் வாழும் அரசர்களுக்கும் மனிதர்களுக்கும் இல்லை என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

‘அயன், அரி, அரன்’  என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாயவனே ! அட்டமூர்த்தியே ! 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய முப்பத்து மூவர் தேவர்களாலும், அவர்களின் மிக்க முனிவர்களாலும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் ‘செம்பவளம் போன்ற சிவந்த‌த் திருமேனியுடைய சிவனே’ என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் அழித்தல் ஆகிய‌ செயலை விலக்கியும் களவும் அற்றவர்களாக இருக்கின்ற யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாலும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டிற்கு உரியவர் ஆனவர் இல்லை.

விளக்கஉரை

  • கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்
  • ‘மூவுருவின் முதல் உரு’ – ‘மூவுருவினுள் முதலாய உரு’ என்றும் ‘மூவுருவிற்கும் முதலாய உரு’ என இருவகையாகவும் பொருள் கொள்ளலாம்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் (எட்டு திசைகளிலும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்)

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை  #தேவாரம் #திருநாவுக்கரசர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விசுவாவசு – சித்திரை– 25 (2025)


பாடல்

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரன் தானே

திருமந்திரம் – திருமூலர் (திருவம்பலச் சக்கரம்)

கருத்து : சிவனின் போற்றுதலுக்கு உரிய திருப்பெயரின் பெருமைகளை உரைக்கும் பாடல்

பதவுரை

இருபத்தைந்து அறைகளிலும் நடுவாகத் தோன்றும் எழுத்தாகவும், சிறப்பென்னும் செம்பொருளாகியும் நிற்கும் சிவனுக்கு உரிய எழுத்து ‘சி’காரமாகும். மற்றைய ‘வ, ய, ந, ம’ என்னும் நான்கெழுத்துக்களும் சேர்ந்து சிவனின் போற்றுதலுக்கு உரிய புகழ்சேர்க்கும் திருப்பெயராகும். நான்கு பெருந்திசைகளிலும் சிவம் பொருந்தி உள்ள நாற்கோணம் திருவைந்தெழுத்தாகும். எங்கும் இருக்கும் பரசிவம் ஒரு மனையிலே ஒன்றி இருக்கும். இந்த நான்கு எழுத்திலும் சிகரம் எப்பொழுதும் உடனாய் நிற்கும்.

விளக்கஉரை

தன்னெழுத்து 

  • சி (எனும் எழுத்து)
  • நாயோட்டும் மந்திரம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #திருவம்பலச் சக்கரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 26 (2025)


பாடல்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே

பத்தாம் திருமுறை ‍ – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.

 விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #பிறன்மனை_நயவாமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – தை – 23 (2025)


பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே

தேவாரம் ‍ – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை  காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் ‍ மறை பொருள்)

 விளக்கஉரை

  • பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
  • நாக்கைக்கொண்டு – நாவைக் கொண்டு
  • நாமம் – இறைவன் திருப்பெயர்
  • நவில்கிலார் – கூறாதவர்கள்
  • அலமந்து – வருந்தி
  • கழிவர் – அழிந்தொழிவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் ‍ #ஐந்தாம்_திருமுறை  #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 19 (2025)


பாடல்

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
   மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்
“தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
   செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
   நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
   கடுமையொடு களவு அற்றோமே

தேவாரம் ‍ – ஆறாம் திருமுறை ‍ – திருநாவுக்கரசர்

கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அயன், ஹ‌ரி, ஹ‌ரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆன‌வனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.

விளக்கஉரை

  • மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
  • இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கடுமை – கடிதாய செயல், பிறரை நலிதல்

#அந்தக்கரணம்  #அமுதமொழி #சைவம் #தேவாரம் ‍ #திருமுறை #ஆறாம்_திருமுறை ‍ #திருநாவுக்கரசர் #பொது #மறுமாற்றத் திருத்தாண்டகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 03 (2024)


விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்

பதவுரை

விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடலில் பொருந்துமாறு மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி செய்து, நெஞ்சத்தின் இயல்பு காரணமாக மாறும்படியாக இருக்கும் உலகியலை நோக்காது  பயிற்சிவயத்தால் இடையறாது (குருவால் உபதேசம் செய்யப்பட்ட) சிவ நாமத்தை எண்ணிக் கொண்டிருப்பச் செய்து சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும்.

விளக்கஉரை

  • கனன் மூல – மூல அனல், குண்டலினி, வீணாத் தண்டம்
  • மூல அனல் தன்மைகள், சிறப்புகள், பூஜை முறைகள், வசிய முறைகள், போன்றவற்றை குருமுகமாக அறிக.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம்  #சித்த(ர்)த்_துளிப்பு, #பத்தாம்_திருமுறை – #திருமந்திரம் #திருமூலர்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 30 (2024)


கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை ‍ – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – புகலூர் உறையும் பெருமானின் திருவடிவ அழகினையும் செயற்கரிய செயல்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

திரண்டு சுருண்ட சடையினை உடையவரான புகலூர் பெருமான் ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்தவர்; கடினமானதும் காவல் பொருந்தியதும் ஆன மூன்று மதில்களையும் தனது அம்பினில் சிவந்ததான நெருப்பு கொண்டு அக்னி, திருமால் வாயு ஆகியோர் முனையாகவும் தண்டாகவும் இறகாகவும் செயல்படுமாறு செய்து அவை அழியுமாறு செய்தவர்; விரிந்ததும் பரந்ததும் ஆன சடையின் மேல் எப்பொழுதும் நீரினை உடைய‌ கங்கையினை விரும்பி ஏற்றவர் ஆவார்.

விளக்கஉரை

  • கரிந்தார் – இறந்தவர்கள்;
  • தலையர் – தலைகளை மாலையாக உடையவர்

#அந்தக்கரணம் #அமுதமொழி # சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள் #திருப்புகலூர் #நான்காம்_திருமுறை ‍ #தேவாரம் ‍ # திருநாவுக்கரசர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 22 (2024)

பாடல்

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

தேவாரம் – நான்காம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்துகாட்சிப் பொருளை சிவசக்தி ரூபமாகக் காணுதல் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

ஒளிர்தல் கொண்ட‌ பிறை நிலவினை அணிந்தவனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதி தேவியோடு இணைத்துப்பாடியும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு கூத்து தாளங்களை இட்டுக் கொண்டும், முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரையில் இருக்கும் திருவையாற்றை அடையும் நேரத்தில் ஆண்குயில் பெண்குயிலோடு கலந்து காதல் கீதங்களைப் பாடியும் பின் இணைந்தும் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் கண்டறியாத திருப்பாதங்களாக‌க் கண்டேன்.

விளக்க உரை

  • எரி – நிலவு
  • ஏந்து இழையாள் – அம்பிகை
  • இலயம் – கூத்துக்கு ஒத்த தாளலயம்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை # நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – பங்குனி – 2 (2024)

பாடல்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்து – முக்தி வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

நிலைத்த பேரின்ப வடிவாக இருப்பவனே, அழகியதான‌ புகலூர் தலத்தில் மேவி இருக்கும் புண்ணியனே, நினையும் தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பதை அல்லாது வேறு எதனை விரும்புவேன்? நினது கழலினை அணிந்த திருவடியை கைதொழுது காணும் காட்சி அல்லாது வேறு ஒன்றையும் விரும்ப மாட்டேன்; உன்னை விடுத்து வேறு எந்த பற்றுக்கோடும் இல்லாதவனாக இருக்கிறேன்; யான் வாழ்வதற்குப் பொருந்தி இருப்பதானதும் உறை போன்றதுமான இந்த உடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய்; உடலின் தன்மையால் அவையாவும் ஒன்று சேர்ந்து அடைக்கப்படும் காலத்தில் உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன்; ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – கார்த்திகை – 1 (2023)


வார்த்தை :  முப்பாழ்

பொருள்

  • வெட்டவெளி அல்லது ஆகாயம்
  • மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ்

பாடல்

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேய முப் பாழ் எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும் முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே

எட்டாம் தந்திரம், திருமூலர்

பதவுரை

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

  1. மாயைப் பாழ் – மாயை நீங்குதல் – மாயப்பாழைக் கடந்தபின் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவைகளின் ஒடுக்கம் ) கிடைப்பது  வாத சித்தி – சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.
  2. போதப்பாழ் / சீவப்பாழ்/ ஒளிப்பாழ் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) – ஆன்ம அறிவு நீங்குதல் – (போதப்பாழ் – இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு) கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுதல்.
  3. உபசாந்தப் பாழ் – வியோமாப்பாழ்(காரிய காரணங்களைக் கடந்தது நிற்றல்) – உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது – பிராணண் /உயிர்ச்சக்தி பற்றிய அறிவு.

சிவ தத்துவத்தை விளக்கும் 96 வகைத் தத்துவங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் என்பதை மும்மலம் என்பதால் முப்பாழ் என்பதில் இருந்து விலக்கி பொருள் விளக்கப்பட்டுள்ளது.(சில இடங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் ஆகிய  மூன்றும் முப்பாழ் என்றே விளக்கப்பட்டுள்ளது)

(இந்த சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – ஐப்பசி – 24 (2023)


பாடல்

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
   தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
   உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
   அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
   பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

ஆறாம் திருமுறை -‍ தேவாரம் -‍ திருநாவுக்கரசர்

கருத்துபிறவி நீங்கப் பெறும் வகைகளை உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் உரையாதவர்களாகவும், அன்னையின் வண்ணம் ஒத்து இருக்கும் தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர்களாகவும், இறைவன் உறைவிடம் ஆகிய திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராதவர்களாகவும், உணவு உண்பதற்குமுன் வண்ணமும் வாசனையும் உடைய பல மலர்களை அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களாகவும்,வினை பற்றி வரும் கொடுநோய்கள் கெடுவதன் பொருட்டு வெண்ணீற்றை அணியாதவர்களாகவும் இருப்பவர்கள் இறைவனது திருவருளை இழந்தவராவார். அவர்கள் தீராத கொடுநோய்களால் மிகத் துன்புறுத்தபட்டு பின் இறந்து மீளவும் பிறப்பதற்கு வழியில்லாமல் அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள்.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 29 (2023)


பாடல்

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – இறைவன் திருமேனியினை விளக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று உரைக்கும் பாடல்

பதவுரை

திருமுடி ஆகிய சடையை உடையவனே! சடையில் தவழும் திங்களைப் பிறையையாகச் சூடியவனே! காளையினை ஊர்தியாகக் கொண்டவனே! காளை மீது ஏறி ஊர்வலமாக சென்று முப்புரங்களையும் எரியச்செய்தவனே! சகல சீவன்களுக்கும் முதல்வனாக இருப்பதால் அவர்களுக்கு அருள தலைவனாக இருந்து  ஆள்பவனே!  வைரவர் வடிவம் கொண்டு பிரம்மனது மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உலக உயிர்களைக் காப்பவனே! ஐயாறு ஆகிய திருவையாறு தளத்தில் உறைபவனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேன்.

விளக்க உரை:

  • விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன்
  • அடையான் – எவ்வுயிர்க்கும் தானே காவலன்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #நான்காம்_திருமுறை  #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவையாறு #சோழநாடு #காவிரி_ வடகரை _தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 20 (2023)


பாடல்

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்

பதவுரை

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை  ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும்,  நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும்,  பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும்,  பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #ஏழாம்_திருமுறை  #தேவாரம்  #சுந்தரர் #திருநன்னிலத்துப்_பெருங்கோயில் #சோழநாடு #காவிரித்_தென்கரை_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 19 (2023)


பாடல்

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமெய்யறிவு அற்றவர்களின் மனப்பாங்கினை உரைக்கும்  பாடல்.

பதவுரை

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

விளக்க உரை

  • ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #பத்தாம்_திருமுறை  #திருமந்திரம் #திருமூலர் #திருமுறை  #எட்டாம்_தந்திரம் #புறங்கூறாமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 18 (2023)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சூலை நோய் தீர்க்கவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அதிகைக் கெடில வீரட்டானத்துறையில் இருக்கும் அம்மானே, மனம், மொழி காயத்தால் உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே, உலகங்களைப் படைத்து அனுபவித்தவனாகிய பிரம்மனின்  மண்டையோட்டில் யாசகம் ஏற்றுத் திரிபவரே, உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை வினை நீக்கம் பொருட்டு அவர்களின் எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை விரும்பி அதனை வாகனமாக் கொண்டவரே, இறந்த பிரம்மாக்களின் தலையை வெண்தலைமாலையாக  அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாக எண்ணி உமக்கு அடிமை செய்து  வாழக்கருதுகின்ற அடியேனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • பாற்றம் , பாத்தம் –  விஷயம், தரம்
  • படு – கிட, இளைப்பாறு, அனுபவி, சகி
  • பெற்றம் – ஆடு, மாடுகள், கால்நடைகள்

#அந்தக்கரணம் #அமுதமொழி #நான்காம்_திருமுறை #திருமுறை #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவதிகை_வீரட்டானம் #நடுநாட்டுத்_தலங்கள் #நடுநாடு #வெண்ணீறு #பலி #நீறுபூசியமேனி #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 2 (2022)


பாடல்

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனின் அடியவர்கள் தாம் பெற்ற அனுபவத்தினை அனைவருக்கும் சென்று வழங்குவார்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனும் ஐந்து கோசங்களால் ஆனது இந்த உடல். தமிழ் உச்சரிப்பே மந்திரம் ஒலிப்பதை ஒத்ததாக இருக்கும். இவ்வாறு தமிழ் வேதாகமங்களில் கூறப்பட்ட ஞானத்தினை (பஞ்சாட்சரம், தூல பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் ) பெற்று தமிழ் மொழியை அறிந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உலகம் முழுவதும் செல்லுவர். அத்தகைய நல்லோர் சிற்றறிவை நீக்கி பேரறிவை தரும் மலர்ந்த மனமும், எம்முடைய ஆதியாக இருப்பவனைப் பற்றிய திருவடியுணர்வும் மேலே உரைத்த தமிழ் மண்டலம் ஐந்தும் செம்மையுறுதலின் பொருட்டே அவ்வாறு செய்கின்றனர்.

விளக்க உரை

சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று சில இடங்களிலும், ஐந்து கண்டங்கள் என்று சில இடங்களிலும், பொருள் உரைக்கப்பட்டுள்ளது. தன்னை அறிந்தவர்களே மற்றவர்களை தலைப்படுத்த முடியும் என்பதால் இவைகள் விலக்கப்படுகின்றன.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்