அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 23 (2021)


பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்

தாயுமானவர்

கருத்து – இறைவனின் மகிமையை அறிந்தவரின் அக அனுபவங்களை விளக்கும் பாடல்

பதவுரை

பிள்ளை பெறுவது வலி தரும் காரியம் என்பது பெற்றவளுக்கு மட்டுமே தெரியும், பிள்ளை பெறாதவளுக்கு அந்த பிரசவ வலி எப்படித் தெரியும்; அது போல இறைவனின் பெருமையை உணர்ந்து பேரானந்தம் கண்டவர்களின் கண்களில் இருந்து எவ்வித முனைப்பும் இன்றி தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக்கும்; இறைவனின் பெருமையை உணராதவர் நெஞ்சம் கல்லினை ஒத்து இருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 19 (2021)


பாடல்

ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
   யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
   தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
   புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
   வாயிலோ தீயினுங் கொடிதே

தாயுமானவர்

கருத்து – பெருமானின் போற்றத்தக்க இயல்புகளைச் சொல்லி தன்னைக் கைவிடாமல் காத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தொடக்கம், நடு, முடிவு ஆகிய வகையில் இருந்தும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லாமல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து பேரின்ப சுகவடிவாகியும் பேரொளி சுடராகியும் நிற்கும் பெருமானே! உன்னுடைய அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தி அருளாமல் அடியேனைக் கைவிட்டு ஒதுக்குவது முறை ஆகுமோ?  இந்த எண்ணங்களால் எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாக தீயினைப் போன்று உள்ளன. தாழ்ச்சி உடையனாகிய யான் நீ கைவிட்டு விட்டால் என்ன செய்வேன்?  அதனால் எளியேனைக் கைவிடாதே.

விளக்க உரை

  • புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 21 (2020)


பாடல்

ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற்
கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்தருள் பராபரமே நிராசை
இன்றேல் தெய்வமுண்டோ

தாயுமானவர் பாடல்கள்

கருத்து – ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம் எனவும் அதனால்  மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த மாயையிலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே! ஆசை என்று உருவமாக சொல்லப்படுகிற பெரிய காற்றினில் அலையும் இலவம் பஞ்சைப் போல மனமானது அலையும் காலத்தில் மோசம் நேரிடும்; இதனால் முக்தியினை அளிப்பதற்காக கற்கப்பட்ட கல்விகளும், ஞானம் பெறுவதற்காக கேட்ட கேள்விகளும் வீணாகி, முக்தி எனும் மோட்சம் அடைவதற்கான விருப்பமும் அதன் பொருட்டான சிறந்த வாசமும் நீங்கி, ஐம்புலன்கள் பற்றி நின்று அது ஏற்படுத்தும் கொடுமையான துன்பங்கள்  பற்றி கொண்டு நிற்பர்; நிறைவேராத ஆசை இருப்போர் முன்னர் எவ்வாறு தெய்வம் தோன்றும்?(தோன்றாது என்பது துணிபு)

விளக்க உரை

  • கற்றதும் கேட்டதும் – இதனை இருவிதமாக மாற்றி வாசிக்கலாம், ஒன்று ஞான வழி பற்றி நிற்க கேட்ட கேள்விகளும் அதற்கான பதில் பெற்று கற்றதும் என்று கொள்ளலாம். இரண்டாவது கற்ற வித்தையின் வழி நின்று வைகரி எனும் செவியோசை, மத்திமை எனும் கருத்தோசை, பைசந்தி எனும் நினைவோசை, பரை எனும் நுண்ணோசை ஆகியவற்றை கேட்டல் என்றும் கொள்ளலாம்.
  • தூர்ந்து – வீணாகி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 21 (2020)


பாடல்

செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே

தாயுமானவர்

கருத்து – புறப்பூசைகளையும், அவ்வாறு தான்  செய்யாத புறப்பூசைகளையும் குறிப்பிட்டு தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தாயுமானவர் வேண்டும் பாடல்.

பதவுரை

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருந்து அருளும் தந்தையே, நின் திருவடிக்கு ஆளாகும்படி அதற்கு உரித்தான நல்ல தவம் சிறிதும் புரிந்திலேன்; நின்னுடைய திருவடிக்கு புதியதானதும், அன்றைய தினத்தில் தோன்றியதும் ஆன நாண்மலர் கொய்து, செந்தமிழால் போற்றி பாடி பாடும் மெய்யன்பர்களுடன் கூடிப் பூத்தூவி, கையினை உச்சந்தலை மேல வருமாறு கும்பிட்டு,  ஆடுதல் செய்து, கசிந்து உருகி உய்வதற்கு வேண்டுவனவும் செய்யவில்லை.  இவையெல்லாம் நின் திருவருளால் செய்து உய்யும்படிக்கு நீ அடியேனுக்கு அருள்புரிவது எந்நாளிலோ?

விளக்க உரை

  • அவ்வறு விரைந்து அருளவேண்டும் என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 11 (2019)


பாடல்

நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே

தாயுமானவர்

கருத்துமனதால் பற்றிய மார்க்கண்டேயருக்கு அருளுய திறம் போலவே தனக்கும் அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.

பதவுரை

எங்கும் நிறைந்தும் , செம்மை உடைய வீரம் கொண்டும் நின்றும், நன்மையை தரும் நடனம் ஆடுகின்றவரும், கருணை கொண்டவரும் ஆனவரே, மனதினால் உன்னை நினைத்து பற்றிக் கொண்டவராகிய மார்க்கண்டேயருக்கு அஞ்சேல் என்று அருளினை வழங்கிய ஐயனே! உன்னையே தஞ்சம் என்று சரண் அடைந்தேன்.

விளக்க உரை

  • சேவுகம் – ஊழியம், வீரம்
  • வாரி – மடை, நீர், நீர்நிலை, வெள்ளம், கடல், நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம், நூல், கலைமகள், வீணைவகை, இசைக்குழல், யானையகப்படுத்துமிடம், யானைக்கட்டுங்கயிறு, யானைக்கொட்டம், வாயில், கதவு, வழி, தடை, மதில், திற்சுற்று, பகுதி, வருவாய், விளைவு, தானியம், செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 20 (2019)


பாடல்

எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ
எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி
கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்
குளறி நானென்று கூத்தாட மாயையை
விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை
விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்
தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்
தாயுமான தயாபர மூர்த்தியே

தாயுமானவர் திருப்பாடல்கள்

கருத்துதன்னைக் கொடுத்த பின்னும் தொடரும் சில தருணங்களைக் குறிப்பிட்டு அவைகளை நீக்க வேண்டி விண்ணப்பித்தப் பாடல்.

பதவுரை

மலைகளுக்குள் தலையானதாக இருக்கும் திருச்சிராப்பள்ளி திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் தாயுமானத் தண்ணளிச் செல்வரே! மோன குருவாய்த் தாங்கள் எழுந்தருளி வந்துடன் உண்மையை உணர்த்தி நன்னெறி கொடுத்தபோது அடியேன் வினைகள் பற்றி எடுத்த இரவல் உடம்பும், பொருளும், ஆவியும் ஆகிய மூன்றும் நின்பால் ஒப்புவிக்கப்பட்டது அல்லவோ? அவ்வாறு உனக்கென்று கொடுத்தப் பின்னும் இன்னும் விலகாமல் இருக்கும் நானென்று உரிமையுடம் முதன்மையும் கொண்டு குளறிக் கூத்தாடுமாறும், மயக்கும் வகையிலான மாயையை கொடுத்த வண்ணமும், கட்டுக்கு அடங்காக் கண்ணீரும், ஒடுங்காத நடுக்கமும் நீக்கி, அடியேனின் வேட்கை வெள்ளத்தினைத் தடுக்குமாறு திருவாய் மலர்ந்து அருள்வாயாக.

விளக்க உரை

  • உடல் பொருள் ஆவி மூன்றையும் தாயுமானவரிடம் ஒப்புவித்த நிலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)


பாடல்

பற்றிய பற்றற உள்ளே – தன்னைப்
பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர

தாயுமானவர் திருப்பாடல்கள்

*கருத்துதாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*

பதவுரை

வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு  உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு  உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.

விளக்க உரை

  • ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
  • பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே

எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)


பாடல்

இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே

தாயுமானவர் சுவாமி பாடல்கள்

கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு  கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!

விளக்க உரை

  • நீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)

பாடல்

காலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கி பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி               

தாயுமானவர்

கருத்துசிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்;  பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?

விளக்க உரை

  • மறலியையும், எமனையும்  இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
  • நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
  • பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
  • ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க  சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)

பாடல்

சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்

தாயுமானவர்

பதவுரை

நிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய  தோன்றி ஒடுங்கும் தொழிலுடையதுஇந்த  உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்)

விளக்க உரை

  • திகபரம் – இகம் மற்றும் பரம்

Loading

சமூக ஊடகங்கள்