அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 6 (2022)


பாடல்

போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே

இராமதேவர் – பூஜாவிதி

கருத்து – இராமதேவர் அன்னையை வழிபடும் முறையை தேரையருக்கு உரைத்த பாடல்.

பதவுரை

செய்த பூசைகளின் வழியில் நின்று அதை வீண் செய்யாமல் காத்த தேரையனே, பூரணத்தை தரும் ஐந்து கலைகள் ஆகிய  நிவர்த்தி கலை (பலன் தருதல்), பிரதிட்டை கலை (மந்திரம் நிலை நிறுத்துதல்), வித்தை கலை (சக்தி பெருக்குதல்), சாந்தி கலை (அமைதி அளித்தல்) சாந்தியாதீதம் கலை (ஒலி கேட்டல்) ஆகியவற்றை பெற்று, ஆனந்தவல்லியின் துணையுடன் பாதம் முதல் தலை வரை வாசியினை ஆறு ஆதாரங்களிலும் நிலை பெறச் செய்து, வாலையின் மூலத்தினை ஓதி, அதனால் தோன்றும் (தச தீட்சையில் பெறப்படும் ஒலி)  ஒலியினை மௌனமாக மனதுக்குள் உரைக்க வேண்டும். பிறவாமையைத் தருவதும், மழையினைப் போல் அருளைத் தரும் ஆனது இந்த 42 கோணங்களுடன் கூடிய தனிக்கோணமான 43வது கோணம். இதுவே அன்னை வீற்றிருக்கும் இடமாகும்.

விளக்க உரை

  • சசி – கற்பூரம், கடல், மழை
  • ‘ஐந்து கலையில் அகராதி தன்னில்’ எனும் திருமந்திரப்பாடலும், ‘தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘போகாமல் நின்றதோர் ஐயா’ என்று சில இடங்களில் காணப்படுகின்றது.

சித்தர் பாடல் என்பதாலும், உணர்ந்து உணர்த்துவதிலும் பிழை இருக்கலாம். பிழை எனில் மானிடம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #இராமதேவர் #தேரையர் #சாக்தம் #சித்தர்_பாடல்கள் #பூஜாவிதி #வாலை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 22 (2022)


பாடல்

இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே – விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்டாரும்
தாழாமே நோற்பார் தவம்

நீதிநெறி விளக்கம் – ஸ்ரீ குமரகுருபரர்

கருத்து – மரணிக்கும் நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது என்பதால் உடனே தவம் செய்து கொள்ளுதல் மக்கள் கடன் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நாம் இப்போது இளைஞராக இருக்கிறோம், இளமையில் இறத்தல் என்பது இல்லை என்றும், தமது வாழ்நாள் நீண்ட கால எல்லையினை உடையது எனும் எண்ணம் கொண்டும் முதுமையில் வருந்தி தவம் செய்வோம் என்று இப்பொழுது எவ்வித வருத்தமும் இல்லாமல் உறங்கிக் கிடப்பதும் ஒரு காலத்திலும் முறை ஆகாது. தமது ஆயுள் நாள் முடிவைக் காணும் துறவியரும் நொடிப்பொழும் தாமதிக்காமல் தவம் செய்வார்.

விளக்க உரை

  • வரம்பு – எல்லை, முடிவு, உளைவு, விளிவு
  • இளையம் – இளமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – தை – 29 (2022)


பாடல்

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
   அடுத்திடர் தொலைப்பம் என்றால்
ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
   மாட்டும் வகையல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
   தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
   தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
   தெப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
   இணை மலர்ப்பதம் அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

ஸ்ரீ மயிலை கற்பகாம்பிகை பதிகம் – திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துதுன்பங்களில் உழலும் தன்னை அதனிடத்தில் இருந்து காத்து அருள வேண்டி விண்ணப்பம் செய்யும் பாடல்.

பதவுரை

திருமயிலையில் வீற்றிருந்து மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! சித்தமானது  மாறுபாடு இல்லாமல்  இருக்கும் பரிசுத்தர்களை அடைந்து அவர்கள் மூலமாக துயரத்தை தொலைக்க எண்ணும் போது ஆசை, மாயை, கன்மம் எனும் மூவகைப் பேய்கள் பிடித்து ஆவேசமாக ஆட்டுகின்றது; குதிரையினை ஒத்த மனமானது எத்தனை நல்விஷயங்களை  உரைத்தாலும் அதனைக் கேளாமல் தன்னுடைய வழியிலே இழுத்து தள்ளுகிறது; அத்துடன் தீமை தரத் தக்கதான கோபமும் அடங்காது எவருடைய வார்த்தையும் கேளாமல் தானே ஆட்சி செய்கிறது; இவ்வாறு அனைத்தும் துன்பம் தருமாறு  இருக்கும் நிலையில் எவ்வாறு வழிபாடு செய்து வினைகளைக் குறைத்து பிழைக்கமுடியும்? எனவே நீ இனியாவது உன்னுடைய கடைக்கண் பார்வை தந்து என்னுடைய வினைகளைத் தீர்த்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் மலர் போன்ற பாதங்களை அருளுவாய்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 23 (2021)


பாடல்

அறிவான தைம்பத்தோ ரெழுத்துக் கெல்லாம்
     ஆதிமணிச் சோதிநிற மான வாலை
விரிவான ராஜலிங்க சுரூப மாகி
     வின்னினொளி சித்தருக்குத் தெய்வ மாகிச்
சரியான நடுவணையிற் பருவ மாகி
     சடாட்சரத்தின் கோவையதாய் நின்ற மூலம்
குறியான பதியறிந்து குறியைக் கண்டு
     கூடினேன் சிதம்பரத்தி லாடி னேனே

அருளிய சித்தர் : அகத்தியர்

கருத்து – அகத்தியர் அம்பலத்தில் ஆடியதை குறிப்பிட்டு உரைக்கும்  பாடல்

பதவுரை

மெய்யறிவைத் தரத்தக்கதான ஐம்பத்தோரு எழுத்துகளுக்கு மேலானதானதும், எல்லாவற்றுக்கும் மேலானதும், சோதி வடிவமாகவும் இருக்கும் வாலையையும், பிரபஞ்சமாக பரந்து விரியும் ராஜலிங்க சொருபமாகவும், விண்ணில் ஒளிரும் சித்தர்களுக்கு தெய்வமாகவும் (ஸ்தூலத்தில் உள்ளும் எனவும் கொள்ளலாம்), இரு கண்களின் நடுவில் உள்ளதான அக்னி கலையின் இருப்பிடமான நடுவணையில் தோன்றி ஆறு ஆதாரங்களுக்கும் இணைப்பதான மூலமாக நின்றதான பதியாகிய இறைவன் இருப்பிடத்தைக் கண்டு அவருடன் இணைந்து  அம்பலத்தில் ஆடினேன்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 19 (2021)


பாடல்

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
   புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
   புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
   செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
   தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
   ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
   அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
   விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
   விமலி கற்பகவல்லியே

திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்

கருத்துஅன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே,  விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ?  வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ?  மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு  துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக

விளக்க உரை

  • தீனம் – வறுமை, கொடுமை, குரூரம், நோய்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 24 (2021)


பாடல்

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே – என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

திருநீற்றையும், வெண்மதி எனும் சந்திரனையும் சூடி ஆனந்த பேரொளி வடிவமாக இருப்பதே சக்தி சிவன் எனும் நிலையே. இவ்வாறான பூரண நிலையை முழுமையா அறியாவிட்டாலும்  சிறுமைகண்டும் எனக்கு அன்னை அருள் செய்தாள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Jan-2021


பாடல்

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

சிவசக்தி ரூபத்தில் காலசம்ஹார மூர்த்தி ஆகி இடது காலை உயர்த்தி காலன் எனும் எமனை உதைத்தவளும், நீல கண்ட வடிவத்தில் இருந்து ஈசன் அருந்திய விஷத்தினை தாங்கியவளும், எண்ணில்லாத இந்த புவனங்களை எல்லாம் படைத்தவளும், மானிட வாழ்வு நீக்கம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு முக்தி அளிப்பவளுமாய் இருப்பவள் வாலை.

வாலைப் பூசை கொண்டோர் பிறவி அறுப்பர் என்பதால், காலனை உதைத்தவள் என்றும், யோக முறையில் கண்டத்திற்கு மேல் பூசை செய்து அன்னையை அடைபவர்களுக்கு விஷம் தீண்டாது என்றும் பொருள் உரைப்பாரும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 4-Jan-2021


பாடல்

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர்

பதவுரை

ஆனந்த வடிவில் இருக்கும் மனோன்மணித்தாயே! தொந்த வினையின் காரணமான கொடுமை கொண்டதான பிறப்பும், இறப்பும் வாசனையின் காரணமாக நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு எவ்விதமான மன மாறுபாடும் இல்லாமல் பிராணாயாமம் செய்தால் எல்லாவற்றிலும் மேம்பட்டதான பரம்பொருள் ஆகலாம். (என்பதை உணர்த்துவாயாக)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 12 (2020)


பாடல்

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
     தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
  தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத்
    தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
     ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
   அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
      ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
      சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
   செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
      திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
      கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துசம்சார துக்கம் அறுபடச் செய்யும்  பாடல்.

பதவுரை

சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும்  பூசி, கந்தை ஆடையினை கோவணமாக அணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?

விளக்கஉரை

  • நைதல் – இரங்குதல்; நிலைகெடுதல்; கெடுதல்; தளர்தல்; நசுங்குதல்; சுருங்குதல்; மாத்திரையிற்குறைதல்; வாடுதல்; மனம்வருந்தல்; தன்வயப்படாமை
  • பொக்கணம் – சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை
  • கரத்தல் – மறைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 9 (2020)


பாடல்

தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே
அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று
செப்புவதல் லால்வேறென் செய்வேன் பராபரமே

தாயுமானவர்

கருத்துபோற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என்  செய்வேன்.

விளக்கஉரை

  • எய்ப்பு – இளைப்பு தளர்ச்சி , ஒடுக்கநிலை, வறுமைக்காலம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 14 (2020)


பாடல்

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

ஸ்ரீ வாராஹி மாலை

கருத்து – வாராஹி அன்னையின் உக்ர ஸ்ரூப தியானம் என்ன விஷயங்களைச் செய்யும் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

அன்னை வாராஹியானவள் கலப்பையை தன்னுடைய கரங்களில் ஆயுதமாக் கொண்டு இருப்பாள்;  என்னுடைய எதிரிகள் என்பவர்களை நெருப்பின் பொறி எழுமாறு தீயில் இட்டு தீய்த்து அவர்களை இல்லாமல் செய்து, அதன்பின் தலைகளை நெரிப்பாள்; தலை,  பின்பகுதி ஆகிய மண்டை மற்றும் மூளையினைத் தின்று பகைவர்களின் நீண்டதான உடலை உரிப்பாள்; படுக்கை போன்று கீழே வீழ்த்தி அந்த உடலை உலர்த்துவாள்.

விளக்க உரை

  • தன் அடியவர்கள் என்பதற்காக எதிரிகளை துவசம் செய்யும் அன்னையின் முறைகளைக் கூறுவது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 23 (2020)


பாடல்

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

ஸ்ரீ வாராஹி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவராஹி அன்னையானவள் பகைவர்கள் என்று கருதுபவர்களை நாசம் செய்வது குறித்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

வராஹி அன்னையானவள், மனம், வாக்கு காயம் ஆகியவற்றால் ஒன்றி முத்தி நிலையை அடுத்து நிற்கும் மெய்யில் சிறந்த அடியவர்களை பணியாதவர்களை பகைவர்கள் என்று கருதி மனதாலும், உடலாலும் கடும் கோபம் கொண்டு, அவர்களது தலை கரத்தில் ஏந்தும்படி செய்து, பகைவர்களது கொழுப்பு மிகுந்த உடலினை கடித்து குதறி, துர்நாற்றம் வீசும்படி செய்து, வச்சிரம் போன்ற முகத்தால் குத்தி, வாயால் கடித்து அதில் இருந்து வரும் இரத்ததினை குடிப்பாள்.

விளக்க உரை

  • பகைவர்கள் தடுப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 19 (2020)


பாடல்

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – பல ஜென்மங்கள் எடுத்து அன்னைத் தொழுது வந்ததால் முக்தி அருளவேண்டும் என விளிக்கும்  பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்தப் புவிதனில் அண்டஜம் எனப்படும் முட்டையில் தோன்றியும்,  சுவேதஜம் எனும்  வியர்வையில் தோன்றியும், உற்பீஜம் எனும்   விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றியும்,  சராயுஜம் எனும்    கருப்பையில் தோன்றியும் எத்தனை லட்சக்கணக்காண பிறவிகள் எடுத்து இருப்பேனோ தெரியாது; இத்தனை பிறவியிலும் உன் அருளை நினைந்து உருகி வந்தபோதிலும் உன் அருளை பெற இயலவில்லை;  உன்னை முக்காலத்திலும் தொழுது நீயே முக்தி அளிக்கத் தக்கவள் என்பதால் இனி எந்தவிதமான ஜெனமும் கொள்ளாதிருக்கும்படி கிருபை செய்து என்னை ரட்சித்து முக்தி தரவேண்டும்; அவ்வாறு இல்லாமல் வாழ்வினில் நாம் முதல் முறையாக சந்திக்கும் மனிதர்கள் போல் நீ என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? ; பாகம் பிரியாமல் இருப்பதால் வாழ்வினில் வெற்றி பெறுவதற்காக நான் பக்தியுடன் உரைத்துச் சொன்னதான விருத்தங்கள் பதினொன்றையும் கேட்டு அதுபற்றி நீ அளிக்கும் செல்வம் கண்டு விமலர் உன்னிடத்தில் கோபம் கொள்ளப் போகிறார், ஆகவே மூத்தோர், முனி  எனப்பல்வாறு அழைக்கப்படும் அத்தனின் பாகத்தினை விட்டு வந்து என்னுடைய குறைகளை தீர்த்து வைப்பாயாக.

விளக்க உரை

  • அத்தன் – தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன், உயர்ந்தோன், சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 2 (2020)


பாடல்

வரிசைப்பிடாரிக்குப் பொங்கல்வையாமலே மழைபெய்யவில்லையென்பார்
வந்தகொடுநோயறிந்த வுழ்த மீயாம விம்மனிதனுமிறந்ததென்பார்
சரிவரச் செய்தொழின் முயற்சியில்லாமலேதான் குடியிளைத்ததென்பார்
தன்றிறமையாலே முன்சொன்னபடி தப்பாது சபதமு முடித்தனென்பார்
ஒருவனவனெதிராளி போனபின்பதி கனகயோகம் வந் துற்றதென்பார்
உபாத்தியாயர் திறமில்லையாகையாலே மகற்குயர்கல்வி யில்லையென்பார்
சரியிவையெலாமீசர் செய்கையென்றறியாமற் றரணியின் மயங்குவார்கள்
தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே

உண்ணாமுலையம்மன் சதகம் – மகாவித்வான் சின்னகவுண்டர்

கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும்  பாடல்.

பதவுரை

விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.

விளக்க உரை

  • மேவு – மேன்மை
  • மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 26 (2020)


பாடல்

சீர்கொண்ட வகிலந் தனில்வாழு மாந்தர் செய்கொடி தப்பிதத்தை
ஏர்கொண்ட வுன்றன் வாளா லறுத்து மிரட்சிக்கு முலகம்மை நீ
ஆர்கண்டு நின்சீடருரை செப்பவல்ல வனாதரட்சகி நீயலோ
வார்கொண்ட வுண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே

உண்ணாமுலையம்மன் பதிகம்

கருத்து – உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல எவரால் இயலும் என்பதை பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை ஆகியவற்றைத் தரக்கூடிய இந்த உலகத்தில், மாந்தர்கள் எனப்படும் மக்கள் செய்யக்கூடிய கொடுமையான நெறி தவறும் குற்றம் ஆகிய தவறுகளை ஏற்றுக்கொண்டு உந்தன் வாள் கூர்மையான ஒளிபொருந்திய வாளால் அறுத்து ரட்சிக்கும் உலகத்திற்கு அன்னை நீ, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் உண்ணாமுலை எனும் பெயர் கொண்டவளே, உதவி எவரும் இல்லோரை ரட்சிக்கக் கூடியவள் நீ அல்லவா! எவர் உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல இயலும் (அஃது போலவே என்னைக் காப்பதன் பொருட்டு) என்னருகே வரவேண்டும்.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 25 (2020)


பாடல்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே

அகஸ்தியர் ஞானம்

கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.

பதவுரை

அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது;  வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று  உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.

விளக்க உரை

  • அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
  • உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
  • ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி

சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 18 (2020)


பாடல்

தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
தானே குடைவேந் தனித்து

திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்

கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும்  ஒருங்கே தியானிப்போம்.

விளக்க உரை

  • இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
  • வெண்மையும் தண்மையும் கங்கைக்கு உரித்தானவை
  • குடைவேம் – ஆடுவேம் – தியானிப்போம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 16 (2020)


பாடல்

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
   திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
   தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
   துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
   தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
   மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
   வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
   காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை  ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை  உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக  திசைகளே ஆடையாக  அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.

விளக்க உரை

  • கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
  • கமுகம் – கூட்டம், திரட்சி
  • தெவிட்டல் – உமிழப்பட்டது
  • வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 12 (2020)


பாடல்

மூலம்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

பதப்பிரிப்பு

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே! சகலகலாவல்லியே

சகலகலாவல்லி மாலை  – குமரகுருபரர்

கருத்து – சகலகலாவல்லியிடம் பல்வேறு கவித் திறமை பெற்று மூலம் செல்வம் வேண்டி நிற்கும்  பாடல்.

பதவுரை

அழகிய ஆசனமான செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் அரியதானது என்றும், நமக்கு வாய்க்கப் பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாதவாறு காலத்தால் அழியாத கல்வி  என்றும் மெய் ஞானம் என்றும்  அழைக்கப் பெறுவதுமான பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! சொல்வன்மையாகிய சொற்களை கையாள்வதில் திறமையும், அட்டாவதானம் தசாவதானம் சோடசாவதானம்  சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும், சித்திரக்கவி, சக்கரக்கவி, வரகவி போன்ற சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத் தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக.

விளக்க உரை

  • அட்டாவதானம் – ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • தசாவதானம் – ஒரே சமயத்தில் பத்து காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சோடசாவதானம் – ஒரே சமயத்தில் பதினாறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சதாவதானம் – ஒரே சமயத்தில் நூறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சித்திரக் கவி வகைகள் – கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாக பந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைப்பாட்டு, சக்கர பந்தம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 23 (2020)


பாடல்

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும்  பாடல்.

பதவுரை

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல்  உரியவனாய் விளங்குவான்.

விளக்க உரை

  • அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
  • அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
  • பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்

சமூக ஊடகங்கள்