அமுதமொழி – விகாரி – வைகாசி – 3 (2019)


பாடல்

கனத்த மலையை எடுத்தணுவாய்க்
      காலால் ஊன்றிமீதுவைத்தால்
   கால்தான் தாங்க வசமாமோ
      கருணாநிதியே இனிஉனது

சினத்தை மகன்மேற்பொருத்தநின்றால்
      சிறியேன் பொறுத்து நிலைப்பேனோ
   சிவையே உனது தயவுவரச்
      செய்வாய் இனிஅஞ்சுகஇனமே

தொனித்தமறையின் முடிவிளக்கே
      சோதி வதனச் சுடரொளியே
   சுத்த வியோம் மண்டலத்தில்
      சுகமாய் வளரும் துரந்தரியே

மனத்துள் அழுக்கை அகற்றிஉன்றன்
      மலர்ப்பா தமதில் சேர்த்தருள்வாய்
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துகுற்றங்களை நீக்கி திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுதல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அஞ்சுகம் ஆகிய கிளிக்கூட்டதை ஒத்து இருப்பவளே! ஒலித்தலை உடைய வேதமாகிய மறையின் முடிவான பொருளாக இருப்பவளே! சோதி போன்ற சுடரொளியை முகத்தில் கொண்டவளே! சுத்த பரவெளி ஆகிய மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்பவளே! பெரும் கருணை உடைய தாயே! உனது திருவடி ஊன்றி கனமாகிய மலையை எடுத்து அதன் ஒரு பகுதி ஆகிய ஒரு மூலக்கூறாகியதும் அளவில் சிறியதும் ஆன அணு அளவில் ஆக்கி என் மீது வைத்தால் அந்த பேரின்ப அனுபவத்தை எனது சுவாசத்தால் தாங்க இயலுமோ? (இயலாது). இவ்வாறான பேரனுபவத்தை தருபவளாகிய நீ, சினம் கொண்டு உன் மகன் ஆகிய என் மேல் சினத்தை பொருத்தி நின்றால் சிறியவன் ஆகிய யான் அதை பொறுத்து நிலை பெற இயலுமோ?(இயலாது என்பதே முடிவு) அன்னை ஆகிய பார்வதி தேவியே! என்மனத்துள் உள்ள அழுக்குகள் ஆகிய காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களை நீக்கி,  உன்னிடத்தில் அருள், அன்பு, பக்தி ஆகியவை வரும்படி செய்து உன் திருவடித் தாமரை சேர அருள்வாய்!

விளக்க உரை

  • “கனமாகிய மலையை எடுத்துப் பேரணுக்களாக நெருக்கி என் மீது வைத்தால் என் கால்கள்தான் தாங்க முடியுமோ” என்று சில இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கால் என்பது மூச்சுக்காற்றுடன் தொடர்புடையது எனும் சித்தர் பெருமக்களின் வாக்காலும், பேரனுபவத்தை விவரிக்க இயலா நிலை ஏற்படுகிறது என்பதை முன்நிறுத்தியும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சிவை – பார்வதி, காளி, நரி, வேர், உலைமூக்கு, நெல்லிக்காய்
  • தொனித்தல் – ஒலித்தல், சொல்லுதல், குறிப்புப் பொருள் தோன்றுதல்
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 25 (2019)


பாடல்

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநிலை அற்ற உடல் குறித்து குறிப்பிட்டு நிலையானதான சிவானுபவம் வேண்டுதல்.

பதவுரை

உலகத்துக்குத் தலைவனே! பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; இழிவு தன்மை உடையவனும், கைவிடப்பட்டவனும் , குணமில்லாதவனும், நிரந்தர வடிவம் ஒன்றும் இல்லாததும்  இருந்து வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் இருக்கும் இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவானுபவத்தை அருளுவாயாக.

விளக்க உரை

  • பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்ப்பது போல் உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும்.
  • மோத்தை – வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ; முற்றுத்தேங்காய்; ஆட்டுக்கடா; வெள்ளாட்டுக்கடா; பொருந்த வாழ்வு
  • சீத்தை – குணமின்மை, கைவிடப்பட்டவன், கீழ் மகன், பதனழிவு, சீட்டுச்சீலை; சீ என்று வெறுத்தற்குரியது
  • சிதம்பு – பதனழிவு, இழிவு, தன்மையின் அழிவு

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 24 (2019)


பாடல்

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துமங்கையர்கரசியாரின் பெருமைகளை போற்றி புகழும் பாடல்.

பதவுரை

மங்கையர்கள் எல்லாருக்கும் ஒப்பில்லாத பேரரசி ஆக விளங்குபவரும், எங்கள் தெய்வம் ஆனவரும், சோழ வம்சத்தின் குலக்கொழுந்தாக விளங்குபவரும்,கைகளில் வளையல்களை  அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், தென்னாடு ஆகிய பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய உடையவரும், எங்களுக்கு தலைவனாகவும், தேவனாகவும் இருக்கும் சீகாழித் தலைவரின் அருளால் பெரியதான தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கியவரும், பொங்கி வருவது போன்று மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத் தகுந்தாகும்.

விளக்க உரை

  • மானி எனும் இயற்பெயருடன் சோழ மன்னனுக்கு மகளாகப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். திருஞானசம்பந்தரை பாண்டி நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றியவர்.
  • வளவர் – சோழர்

மங்கையர்கரசியார் குரு பூசை – சித்திரை – ரோகிணி (7-May-2019)

முக்தித் தலம் – திருஆலவாய் எனும் மதுரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 23 (2019)


பாடல்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே

ஒன்பதாம் திருமுறை –  திருவிசைப்பா – கருவூர்த் தேவர்

கருத்துஉன் திருவடி அடைந்த பிறகும் அருள் செய்யாது இருப்பாயா என்று வினவும் பாடல்.

பதவுரை

நீண்டதும், உயரமானதும் ஆன அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரவு நேரங்களில் இருளைப்போக்குவதற்காக இருப்பதும், அணையாதும்  ஆன விளக்குகள் சாளரங்களுக்கு வெளியே வந்து ஒளியை வீசுகின்றதும் ஆன கடைத் தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து, ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி, உன் திருவடிகள் இரண்டனையும் குருவால் சொல்லப்பட்ட நெறியில் நிற்கும் முறையை அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

விளக்க உரை

  • அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் – அருள் செய்வாய், அருள் செய்யாது ஒழிவாயா(நிச்சயம் மாட்டாய் என்பது மற்றொரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • அடையுமாறு அடைதல் – நூலில் சொல்லப்பட்ட நெறி வழி நின்று அந்த  முறையில் அடைதல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது. குரு காட்டிய வழியில் அடைதல் என்பது பொருத்தமான பொருளாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட விளக்கம் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐவர் கள்ளர் – ஐம்பொறிகள்
  • மெள்ள – இனிமையாக விதித்த வழியில் சென்று நீக்கினமை பற்றி; சிறிது சிறிதாக நீக்கி என்று பொருள் பகர்வாரும் உளர்
  • துரந்து – ஓட்டி.
  • நிலை விளக்கு – அணையாது உள்ள விளக்கு.
  • சாலேகப் புடை – சாளரங்களுக்கு வெளியே
  • இலங்கும் – ஒளியை வீசுகின்ற

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 22 (2019)


பாடல்

ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துவைரவர் கோலம் கொண்ட ஈசன் கறி உணவாக சமைக்கப்பட்ட சிறுதொண்டரின் மைந்தனை உணவு உண்ண அழைத்த போது கூறியது.

பதவுரை

ஆறு திங்கள் கழிந்த பிறகு நாம் ஒருமுறை உண்போம்; உண்ணும் அளவு தெரியாமல் நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! நாம் உண்பதற்கு முன் நீவிர் உணவு உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்று இருக்கிறீர். ஆதலால் அவனையும் இப்போது அழையும்!  என்று கூறினார். அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், “அவன் இப்போது இங்கு உதவான்” என்று விடையளித்தனர்.

விளக்க உரை

  • இல்லை என்று கூறாமல் தனது மனைவி ஆகிய சந்தனத்தாதியார் உடன் சீராளன் ஆகிய தனது பிள்ளையை பிள்ளைக்கறி ஆக்கி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.

 

சிறுதொண்டர் குரு பூசை – சித்திரை – பரணி (5-May-2019)

முக்தித் தலம் – திருசெங்காட்டான்குடி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 21 (2019)


பாடல்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.

விளக்க உரை

  • பக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்
  • அறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.
  • பதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்
  • அகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 20 (2019)


பாடல்

பெரியோர் எவரைப் பழித்தேனோ
      பிரம தவத்தை அழித்தேனோ
   பெற்ற தாயார் பசித்திருக்கப்
      பேணி வயிற்றை வளர்த்தேனோ

அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே
      அற்ப ரிடத்தில் சேர்ந்தேனோ
   அறியாமையினால் என்ன குற்றம்
      ஆர்க்குச் செய்தேனோஅறியேன்

கரிய வினைதான் எனதறிவைக்
      கலங்க வடித்து முடிச்சதையுங்
   கரைக்க வுன்றன் கருணையினால்
      கடாக்ஷம் பொருந்த அருள்புரிவாய்

வரிவில் புருவ மடமானே
      வதனாம் புயவாலாம்பிகையே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துமாயைக்கு உட்பட்டு அறியாமையால் செய்த தவறுகளை விலக்கி அருள் புரிய வேண்டி நின்ற பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, எண்ணங்களால் அறிவுள்ள பொருளாகிய புருட வடிவம் கொண்டும் மேனி வடிவில் வாலாம்பிகையாகவும் இருப்பவளே! பெரும் பாவங்களில் கூறப்படுவதான பெரியோர்களைப் பழித்து இருந்தேனோ? மிகக் கடுமையான தவம் செய்பவர்களை அழித்தேனோ? அன்னையைப் பசிக்க கண்டும் தான் மட்டும் உண்ணுதல் போன்ற மிகக் கொடுமையை செய்து இருந்தேனோ? அரிய தவம் உடையவர்களுக்கு இடைஞ்சல் செய்தேனோ? சிறுமை புத்தி உடைய்வர்களும், அற்பமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் இடத்தில் சேர்ந்து  இருந்தேனோ? வினைப்பயன் கூட்டுவித்து என் அறியாமையால் எவர்க்கு என்ன குற்றம் செய்தேனோ – இது பற்றி அறியவில்லை. ஆகையால் மாயைக்கு உட்பட்டு இருவினைகள் கொண்டு, பேரறிவை அறிய முடியாதபடி செய்து என்னைக் கலங்கும் படியான வாழ்வினை கரைக்க உன்னுடைய கருணையினால் கடைக்கண் காட்டி கிருபை செய்வாய்.

விளக்க உரை

  • நல்லோர் மனதை நடுங்கச் செய்தோனோ” எனும் மனு முறை கண்ட வாசகம் ஆன வள்ளலாரின் பாடல் வரிகளுடனும், “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” எனும் வள்ளுவர் குறளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • புருடன் எனும் இரு பொருள் கொண்டு இங்கு உரைக்கப்படுகிறது. சிவனைக் குறித்து கூறப்பட்டு சிவசக்தி ஐக்கியமாக காணுதலையும், மெய்யறவு கொண்டு சிவத்துடன் ஒன்றாகி தானும் சிவசக்தி ரூபமாக இருப்பவள் என்று உரை செய்யப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 19 (2019)


பாடல்

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே

பாம்பாட்டிச் சித்தர்

கருத்துநிலை இல்லா வாழ்வினை கண்டு வீண் பேச்சு பேசாமல் இருந்து இறைவனை நினைக்கும் நிலையை உரைத்தது.

பதவுரை

கானல் நீரைக் கண்டு மான் ஏமார்ந்து செல்வது போல, மூடர்கள், நிலை இல்லாத இந்த உலக வாழ்வினை கண்டு மகிழ்ந்து அதில் களித்து இருப்பார்கள். மெய்யான மேனிலையைக் கண்டவர்கள் வீணாக வீம்பாக பேசாமல் நிலைபெற்றதும், உண்மையானதுமான இறைவன் திருவடிகளை நாடுவார்கள் என்று ஆடுபாம்பே.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 17 (2019)


பாடல்

மூலம்

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே

பதப்பிரிப்பு

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய்
வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துஇரு வினைபட்டு திருவடி வணங்கா தன்மையும், அதனை தீர்த்து அருள் புரிய வேண்டியும் முருகனிடம் விண்ணப்பித்தது.

பதவுரை

ஆறுகளும், தடாகங்களும் சூழ்ந்திருக்குமாறு அமையப்பெற்றதும், பரந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், பெருமைக்குரியதும் ஆன திருத்தணி மலைமீது எழுந்தருளி சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே! இரு வினைகளின் விளைவாக வெளிப்பட்டு பிறவிநோய்க்கு காரணமான  உயிருக்குக் கேடு உள்ளது என்பதை அறிந்த போதிலும் தேவரீருடைய அருளை வழங்கக் கூடியதான திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கவில்லை.  அவ்வாறான அடியேனுடைய வினைகளையும், அதன் விளைவையும் தீர்த்து அருள் புரிவீராக.

விளக்க உரை

  • வாவி – தடாகம்,  நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 16 (2019)


பாடல்

மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்துஆணவம் கொண்டு இருந்து இராவணுக்கு ஆணவம் விலகியப் பின் அருள் புரிந்த திறம் பற்றி உரைத்தது.

பதவுரை

மதச் செருக்கு கொண்டு பித்து பித்தவனாய் நந்தி எம்மானை சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுத்த இராவணனின் திரண்ட தோள்களும், முடிகளைக் கொண்ட தலைகள் பத்தும் இறும்படியாகத்  திருவிரலால் ஒற்றியவனும், தன் தவறு உணர்ந்து தன் நரம்புகளை யாழாகக்கொண்டு அவன் ஒரு மனதாக வணங்கிய பொழுது மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.

விளக்க உரை

  • ஒத்துதல் – தாளம் போடுதல், தாக்குதல், ஒற்றுதல், விலகுதல்
  • விரலால் ஒத்தினான் – கால்விரலை ஊன்றினான்
  • எத்தினான் – எற்றினான் என்பதன் திரிபு
  • இற – நெரிய

 

திருநாவுக்கரசர் குரு பூசை – சித்திரை – சதயம்

முக்தித் தலம் – திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 13 (2019)


பாடல்

மூலம் – 18

இலையென் றொருவர்க் கிதம்சொல்லி யென்றும்இரங்கிநில்லா
நிலையென்று நீஅளித் தாண்டருள் வாய்நித்த னேபுகலி
மலையொன் றியவடு கேச கங்காள வயிரவனே
தலையொன் றியகைய னேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு – 18

இலையென்று ஒருவர்க்கிதம் சொல்லியென்றும் இரங்கிநில்லா
நிலையென்று நீ அளித்தாண்டருள்வாய் நித்தனே புகலி
மலையொன்றிய வடு கேச கங்காளவயிரவனே
தலையொன்றியகையனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

*கருத்துயாசிக்கும் நிலை ஏற்படாமலும், யாசிப்பவர்க்கு இல்லை எனும் நிலை ஏற்படாமலும் காக்க வேண்டி வயிரவரைத் துதிக்கும் பாடல்*

பதவுரை

இறைவனாகவும்,  சிவனாகவும் இருப்பவனே, புகலி எனும் சீகாழி எனும் திருத்தலத்தில் இருக்கும் மலையில் ஒன்றி இருப்பவனே, எலும்புக் கூட்டினை கேசத்தில் அணிந்த வயிரவப் பெருமானே, ஈசனின் மனதில் இருந்து வெளிப்பட்டு கர்வம் கொண்ட பிரம்மனின் தலையைக் கொய்து அதனை கைகளில் கொண்டவனே, காழிப்பதி எனும் சீகாழியில் உறையும் ஆபதுத்தாரணனே! யாசித்து ஒருவர் வரும்போது அவரிடத்தில் இல்லை என்பதை இதமாய் சொல்லாமலும் எவரிடத்தும் எக்காலத்தும் பொருள் பற்றியும் மற்றைய எதன் பொருட்டும் இரங்கி நிற்கா நிலையை நீ எனக்கு அளித்து எனை ஆண்டு அருள்வாய்.

விளக்க உரை

  • நித்தன் – அருகன், கடவுள், சிவன்
  • கங்காளம் – ஒரு பெரிய பாத்திர வகை, தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 12 (2019)


பாடல்

பதியான பதியதுதான் பரசொரூபம்
பசுவான வாசியடா காலுமாச்சு
விதியான பாகமாடா வீடதாச்சு
வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால்
கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து
மாசற்ற சோதியென வாழலாமே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்துவாசி வழி வினைகளை அறுத்தல் பற்றி அகத்தியர் கூறும் பாடல்

பதவுரை

பர சொரூபமாக இருக்கும் பதியே பிரபஞ்ச பிராண சக்தி; உடலில் இருந்து பிராண சக்தியினை தருவதை வாசி என்றும், கால் என்றும் அழைக்க பெறும் காற்றுத் தத்துவமே பசு; ஜீவனுக்கு உடலானதும்,  பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி ஆனதும் ஆனதும் பாசம் எனப்படுவதும்  ஆன வாசி எனும் வீட்டினுள் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் வாசியினை வாகனமாகக் கொண்டு விதி என்று உடலினுள் வருகிறது; இந்த உண்மையை அறிந்து கும்ப நிலையில் மூச்சுக் காற்றை நிறுத்தி இருக்க வேண்டும்; இவ்வாறு  பதி, பசு, பாசம் என்பதை அறிந்தும் உணர்ந்து வாசி யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கூடும் கேசரமாகிய உச்சியில் நின்று ஆடுவதான வெட்டவெளியை தரிசனம் காணலாம்; இந்த நிலையில் எண்ணங்கள் ஆகிய மதியில் இருக்கும் மயக்கங்கள் விலகி ஆதி நிலையாகிய மாசற்ற சோதியாக வாழலாம்.

விளக்க உரை

  • கேசரம் – க+ ஏ+சரம்;  க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி
  • அசி – பசு பதியை அடையும் வழி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 11 (2019)


பாடல்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ

திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஅருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும்,  எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.

விளக்க உரை

  • தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
  • ஒத்துரிமை  – அனைத்தையும் ஒன்றாய் காணும் பாங்கு
  • சித்துரு – கடவுள்
  • வித்தகன் – வியத்தகு தன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்; ஞானவான்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 10 (2019)


பாடல்

அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப்  பாடல்.

பதவுரை

தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு  கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.

விளக்க உரை

  • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
  • பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
  • அண்டர் – தேவர், இடையர், பகைவர்
  • அநந்தன் – கடவுள், ஆதிஷேஷன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 9 (2019)


பாடல்

மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து
ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள்
காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப்
பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

*கருத்துதிருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் வீரச் செயல்கள் செய்த இறைவனின் வடிவமானவர் என்பதை கூறும் பாடல்.*

பதவுரை

திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் முன்பு திருமால் விரும்பியதன் பேரில் அவருக்கு சக்கராயுதம் அளித்தவர்; தாமரை மலர் மேல் உறையும் பிரமன் ஐந்து தலைகளை பெற்று அதன் காரணமாக அகந்தை கொண்டிருந்த போது ஒன்றைக் கொய்தவர்; பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக படைத்த சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர்; தீயில் நடனமாடும் திருவடிகளை உடையவர்; தங்கத்தால் செய்யப்பட்ட கழலினை அணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர்; காமனை கண்களால் நோக்கி அவனைப் பொடிபட செய்தவர்; உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள் பல செய்ததலைவர் ஆவார்.

விளக்க உரை

  • திருப்பாம்புரம் –  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59 வது சிவத்தலமாகும்
  • வீரச் செயல் செய்த தலங்களான திருவீழிழலை(சக்கரம் ஈந்தது), தலை கொய்தது(திருக்கண்டியூர்), காலனை அழித்தது (திருக்கடையூர்), காமனை எரித்தது (திருக்குறுக்கை) ஆகியவை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
  • நால்வர் – சனகாதியர்.
  • அறம் – சிவாநுபவம் 
  • பாலன் – உபமன்யு

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 31


உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

பூமிதானம்

  • வீடுகள், நிலங்கள் சேர்ந்த பாகமாகிய பூமியை தானமாகக் கொடுக்க வேண்டும். எளிதில் பலனைக் கொடுக்கக் கூடியதும் விவாதமில்லாததுமான நிலத்தைக் குடியிருக்க இடத்தையும் அமைத்து வாங்குகிறவனுக்கு வஸ்திரத்தினாலும் புஷ்பத்தினாலும் சந்தனத்தினாலும் அலங்காரம் செய்து அவனுக்கும் அவன் வேலைக்காரருக்கும் அவன் சுற்றத்தாருக்கும் நல்ல போஜனமளித்து, ‘வாங்கிக்கொள்’ என்று மூன்றுமுறைசொல்லிப் புண்ணியகாலத்தில் தாரை வார்த்துத் பணமுடிப்போடு கொடுக்கவேண்டும்.
  • வெறுப்பில்லாமல் சிரத்தையோடு இவ்வாறு பூமிதானம் செய்தால் அந்தப்பூமி உள்ள வரையிலும் அந்தத் தானத்தின் பயன் இருக்கும் 
  • அசைவும் அழிவுமில்லாத பூமி விரும்பினவற்றை எல்லாம் தருவதால் பூமிதானம் செய்தவன் சுவர்க்கத்தில் நீண்டவருஷகாலம் மகிழ்ந்திருப்பான். 
  • ஜீவனத்திற்காகக் கஷ்டப்படும் மனிதன் ஏதாவது பாவம்செய்தால் பசுவின் காதளவாகிலும் பூமியைத்தானம் செய்தால் அந்தப் பாவத்தினின்று விடுபடுவான். பொன், வெள்ளி, வஸ்திரம், ரத்தினங்கள், முத்துக்கள், தனங்கள் இவையனைத்தும் பூமிதானத்தில் அடங்கினவை. 
  • தாய் தன் பாலினால் புத்திரனை எப்படி வளர்ப்பளோ அப்படியே பூமி எல்லாப் பலன்களினாலும் கொடுப்பவனை அபிவிருத்தி செய்யும்.

கன்னிகா தானம்

  • பரிசுத்தமான விரதமும் ஒழுக்கமுள்ளவளும், குலமும் உள்ள தன் பெண்ணை அவளிடத்தில் மிக்க விருப்பமுள்ளவனுக்கு அளிக்கவேண்டும்.  
  • வேலைக்காரிகள் வேலைக்காரர்கள் சிறப்புக்கள் வீட்டுப் பண்டங்கள் பசுக்கள் தானியங்கள் எல்லாவற்றுடனும் அவளுக்குத் தக்கவனும் அவளை விரும்புகிறவனுமானவனை, அக்னியின் முன்னிலையில் கொடுத்து விதிப்படி விவாகம் செய்விக்க வேண்டும். அவர்களுக்குரிய ஜீவனத்தை உண்டுபண்ணி அவர்களிருவரையும் நல்ல வீட்டில் வைக்கவேண்டும்.

வித்யாதானம்

  • யோக்கியனுக்கு வித்யாதானம் செய்யும் மனிதன் மறுஜன்மத்தில் புத்தி விருத்தியையும் தைரியத்தையும் ஞாபகசக்தியையும் அடைவான், தகுதியுள்ள சிஷ்யனுக்கு வித்யாதானம் செய்பவன் அந்தத் தானத்தின் பலனை அளவில்லாமல் அனுபவிப்பான்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)


பாடல்

பற்றிய பற்றற உள்ளே – தன்னைப்
பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர

தாயுமானவர் திருப்பாடல்கள்

*கருத்துதாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*

பதவுரை

வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு  உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு  உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.

விளக்க உரை

  • ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
  • பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே

எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 7 (2019)


பாடல்

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

*கருத்துமாணிக்கவாசகர் தன் சிறுமை கண்டும் சிவன் அருளிய திறம் உரைத்தது பற்றியப் பாடல்*

பதவுரை

பவன் என்னும் திருப்பெயரால் போற்றப்படுபவனும், எம் தலைவன் ஆனவனும், குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த கங்கையை தலைமாலையாக அணிந்தவனும், விண்ணோர்கள் ஆன தேவர்களுக்கு பெருமான் ஆனவனும், சிவன் என்னும் பெயர் உடையவனும், வினை பற்றி நின்று யான் கொள்ளும் சிறுமையைக் கொண்டும், என்றைக்கும்  முழுமையான பிரானான அவன் தன் அடியேன் என்று  என்னை ஆண்டு கொண்டருளினன். இதைவிட வேறு என்ன வெகுமதி இருக்க இயலும்?

விளக்க உரை

  • பிரான் – தலைவன், தேவன், இறைவன்
  • பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான், புவனமாகிய எம்பிரான் – சிவன் தன்மைகளைக் குறிப்பது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 6 (2019)


பாடல்

கள்ள மயக்கந் தொடராமல்
      கவலைப் பிணிகள் அடராமல்
   கனவை நனவாய்த் தொடர்ந்தடர்ந்து
      கரைய விழியின் புனலாறாய்த்

துள்ளி மனந்தான் மிகச்சலனம்
      தொடுத்துத் தொடுத்தே அலையாமல்
   சுகமாய் உன்றன் இருபதத்தைத்
      தொண்டன்மனத்துட்கொண்டருள்வாய்

உள்ள படியே மனத்தடத்தில்
      ஒன்றாய் வாழுங் கனியமுதே
   ஓங்காரத்துக் குள்ளிருந்தே
      உயர்ந்த கமலா சனத்தரசே

வள்ளல் இடத்தி அருள்மயத்தி
      வனச முகத்தி கனகசத்தி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

*கருத்துதுயர வாழ்வு மனதில் தொடராமல் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விக்க வேண்டும் என்பது பற்றியப் பாடல் *

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக வும்இருப்பவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக இருப்பவளே, தங்கம் போன்ற திட சக்தி கொண்டவளே! மும் மலங்களில் ஒன்றானதும், எப்பொழுதும் தீமைத் தரத் தக்கதுமான மயக்கம் தொடராமல், வினை பற்றி நின்று செயலாற்றுவதான கவலைப் பிணிகள் தொடராமல், பொய்யான இந்த உலக வாழ்வினை மெய் என்று நம்பி அதனைத் தொடர்ந்தும் அலைந்தும், அதன் பொருட்டு விளையும் துயரங்களால் கண்ணீர் விட்டு அழுது மனமானது நிலைபெறாமல் துள்ளித் திரிவது போல் செய்வதும், மனதில் சலனத்தைக் கொடுத்து வருவதுமான மனதை அலையவிடாமல் செய்து உன்னிடத்தில் இயைத்து வைத்து சுகம் தருவதான உன்னுடைய மலர் போன்ற உன் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விப்பாய்.

விளக்க உரை

  • தொடுத்தல் – இயைத்தல், தொடங்குதல், கட்டுதல், பூட்டுதல், வளைத்தல், எய்தல், அணிதல், சேர்த்துவைத்தல், பா தொடுத்தல், உண்டாக்குதல்,வழக்குத் தொடர்தல், பூ முதலியன இணைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 5 (2019)


பாடல்

தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
     சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
     பராபரையாள் பலகோடி விதமு மாடித்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாம்
     சிறுபிள்ளை பத்துவயது உள்ள தேவி
ஊனென்ற உடலுக்குள் நடுவு மாகி
     உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே

கருவூரார் பூஜாவிதி

*கருத்துவாலையின் தன்மைகளையும் இருப்பிடம் பற்றியும் உரைத்தப் பாடல்*

பதவுரை

பாலப் பருவத்திலுள்ளவளும், சக்தி பேதங்களில் ஒன்றும் ஆன வாலையின் ரூபம் காண யாருக்கு திறமை உள்ளது? சமர்த்தனும் வீரனும் ஆகிய ஆண்பிள்ளையாலும் அவளை அறிய முடியுமோ? அழகும், ஒளி பொருந்தியும் இருக்கக் கூடியவளும் அகப்புறச்சமயம் சார்ந்தவளும் இடப்பாகம் கொண்டவளுமான பராபரை ஆனவள் பல கோடிவிதமாய் வடிவம் கொள்ளக் கூடிய திறமை கொண்டவள்; தேன் போன்ற மொழிகளை உடையவள்;  சித்தர் பெருமக்களால் பத்து வயது கொண்ட சிறு பிள்ளையாக வழிபடக் கூடியவள்; உத்தமி ஆன அவள் ஊன்னெற உடலுக்குள் உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலேஆன உயிர்ஸ்தானத்தின்  நடுவில் வீற்றிருப்பவள் இது உண்மை தான்.

விளக்க உரை

  • வலது கண் அகாரம்; இடதுகண் உகாரம், இரண்டும் உள்ளே சேரும் இடமே மகாரம் ஆகிய வாலையின் இருப்பிடம் என்று உரை பகர்வார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • வாலை பூசை செய்யாதவர்கள் சித்த தன்மை அடைவது இல்லை என்பதே உண்மை.
  • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்