அமுதமொழி – குரோதி – தை – 15 (2025)


பாடல்

வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
   விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
   வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
   சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
   ஒற்றி மேவிய உலகுடை யோனே

திரு அருட்பா –  இரண்டாம் திருமுறை – வள்ளலார்

கருத்து – பிறவி நீக்கம் வேண்டி திருவொற்றியூர் பெருமானிடன் விண்ணப்பம் செய்யும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரில் விரும்பி உறைந்து உலகினை தன்னுடையதாகக் கொண்டவனே, அச்சத்தினை உண்டாக்கும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை; ஆதலால் வினையை உடையனாகிய எனது உள்ளம் மயக்கம் க‌ண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னை அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் அருள் பெறுவேன்; அவ்வாறு உன்னுடை அருள் கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

விளக்க உரை

  • தெருட்சி – அறிவு, தெளிவு, கன்னி ருது
  • மேவுதல் – அடைதல், விரும்புதல், நேசித்தல், ஓதுதல், உண்ணுதல், நிரவிச் சமமாக்குதல், மேலிட்டுக் கொள்ளுதல், வேய்தல், அமர்தல், பொருந்துதல்
  • வெருட்சி – மருட்சி, மருளுகை, அச்சம்

#அந்தக்கரணம்  #அமுதமொழி  #இரங்கல்_விண்ணப்பம்  #திருஅருட்பா  #இரண்டாம்_திருமுறை  #வள்ளலார் #திருவொற்றியூர் #மயக்கம்  #பிறவி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 10 (2021)


பாடல்

தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
     தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
     பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
     ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
     நல்லதிரு உளம் அறியேன் ஞானநடத் திறையே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து – நலம் புரியும் உலகில் உண்மையை அறியாது ஏன் பிறந்தேன் என்று எண்ணுதலைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

உண்மையில் தவம் செய்யாத யான், தவம் செய்யும் அறிஞர் போல நடித்துக் கொண்டிருக்கின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுநாள் வரையில்  இருந்து ஒழிந்தேன்; பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்து நல்ல பாத்திரத்தில் ஊற்றுவதற்கு உரிய பாலை நிலத்தில் ஊற்றும்  கடையவனாக ஆயினேன்;  பயன்படாததும்,  வஞ்சம் உரையதும், கற்பாறை போன்றதுமான   மனமாகிய சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு செய்தல் அவமானத்தைத் தரும் என்றுகூட  யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்;  ஞானத்தினை தரும் அன்பு செலுத்துதலையும் அறியேன்; மெய்யான அன்பு கொண்டு, திருநடம் புரியும் இறைவனாகிய உன்னுடைய திருவடித் தொண்டர்களுக்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுமையான இந்த உலகில் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த உன்னுடைய  திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று  தெரியேன்.

விளக்க உரை

  • தவம் – உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனைய உயிர்கட்குத் தீமை செய்யாமை
  • தருக்குதல் – பெருமிதம் கொள்ளுதல்
  • சடம் – அறிவில்லாத பொருள்
  • பவம் – பிறப்பு
  • பவம் புரிவேன் – பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பது பற்றியது
  • மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுயது.
  • மனப்பாறை – வஞ்ச நினைவால் உறைவு கொண்டு இரக்கமின்றி இருப்பது பற்றியது
  • அவம் – வீண், பயனில்லாத செயல்களைச் செய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 21 (2021)


பாடல்

அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே
அம்பலம் செய்து நின்றாடும் அழகர்
துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும்
சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே
உன்னைப் பார்த்து என்னைப் பாராதே
ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா
என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா

திருஅருட்பா – வள்ளலார்

கருத்துபுறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல்  அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)

விளக்கஉரை

  • அவ்வாறு அகமுகமாக காணும் போது  காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 14 (2020)


பாடல்

ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
   ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
   நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
   கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
   எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்துமயக்கம் அறுத்து மெய்யான இன்பம் தந்ததால் தன்னைக் காக்கவேண்டும் என முறையிடும்  பாடல்.

பதவுரை

அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய ஆண்டவரே, திருஅம்பலத்தில் இருந்து அருளக்கூடியவரே! உறக்கம் போன்ற மயக்க நிலையில் இருந்து எனை எழுப்பி மெய்யான இன்பம் தந்ததால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; அதோடு மட்டுமல்லாமல் நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இது உம் மேல் ஆணை; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணை எனப்படும் தூளியிருந்து எடுத்த கைப்பிள்ளை போல் இருக்கின்றேன் காண்; இது நாணத்தைத் துறந்து வாய்விட்டு உரைக்கின்ற முறையீடு இதுவாகும்.

விளக்கஉரை

  • நாண் – நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்படையாக உரைப்பது பற்றியது
  • கோணை உடல் பொருள் ஆவி – உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்வழியில் செல்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்புடையது என்பது பற்றியது.
  • ஏணை – குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில்
  • கைப்பிள்ளை – சிறுகுழந்தை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 23 (2020)


பாடல்

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
   பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
   வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
   குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
   முனிவதென் முனிவு தீர்ந்தருளே

ஆறாம் திருமுறை –  திருஅருட்பா – வள்ளலார்

கருத்துவள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும்  நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி  ஆண்டருள்க.

விளக்க உரை

  • மன்றில் – வாயில்முற்றம்
  • கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
  • முனிவு – கோபம், வெறுப்பு
  • எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 9 (2019)


பாடல்

பொழுது விடிந்த தினிச்சிறிதும்
     பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்தளும்பக்
     கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
     பட்ட திலையோ பலகாலும்
உழுது களைத்த மாடனையேன்
     துணைவே றறியேன் உடையானே.

வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு) 

கருத்துதுன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக  வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ;  நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.

விளக்க உரை

  • கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
  • பொழுது விடிந்தது –  இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
  • இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
  • பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 22 (2019)


பாடல்

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து

திருஅருப்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துசிவபெருமான் தன்னிடத்தில் விருப்பமுடன் வந்ததை கூறும் பாடல்.

பதவுரை

செம்பவளம் போன்ற செம்மை கொண்டவரான சடையை உடையவனும், முக்கண் எனும் சிற்றம்பத்தினை உடையவனான சிவபெருமான் அவனுடைய தன்மைகள் கொண்டு அவனை உள்ளத்தில் உடையவனாகிய (என்) உள்ளத்தில் அப்பா என்று ஏதோ ஒரு காலத்தில் அழைக்கும் போது எனக்கு அன்பு செய்தலின் பொருட்டு  அந்த கணத்திலே அப்பா மகனே என்று என்னிடத்தில்  விருப்பமுடன் வந்தான்.

விளக்க உரை

  • துப்பார் – பயனர், உண்பவர், செம்பவளம் போன்ற செம்மை கொண்டவர்
  • உவத்தல் – மகிழ்தல், விரும்புதல், பிரியமாதல், அன்புசெய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 9 (2019)


பாடல்

செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
   திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே
   பொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
   எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே

திருஅருட்பா –  ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.

பதவுரை

மாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக்  கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே நன்கு அறிந்ததாகும்;  அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.

விளக்க உரை

  • இச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 11 (2019)


பாடல்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ

திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஅருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும்,  எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.

விளக்க உரை

  • தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
  • ஒத்துரிமை  – அனைத்தையும் ஒன்றாய் காணும் பாங்கு
  • சித்துரு – கடவுள்
  • வித்தகன் – வியத்தகு தன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்; ஞானவான்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 11 (2019)

பாடல்

புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
   புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
   கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
   மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
   நம்பினேன் கைவிடேல் எனையே

ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்

கருத்துகைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.

பதவுரை

எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில்  தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில்  காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்;  உன்னை மட்டும் நம்பியதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.

விளக்க உரை

  • கருத்தன் – செய்வோன், தலைவன், கடவுள்
  • வயங்குதல் – ஒளிசெய்தல், விளங்குதல், தெளிதல், தோன்றுதல், மிகுதல், நடத்தல்
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 19 (2019)

பாடல்

உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
     ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
     பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
     மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
     தனித்தவா இனித்தவாழ் வருளே

திருஅருட்பா  – ஆறாம் திருமுறை –  வள்ளலார்

பதவுரை

வலிமை பொருந்திய வானுலகில் மேன்மை குன்றாதவாறு இருந்து ஞான ஒளியினால் உயர்ந்தும், பெருவதும் ஆன ஒப்பற்ற சித்திபுரத்தை உடையவனே; சிறந்தவர்களாலும், ஞானிகளாலும் ஆன பெரியோர்களால் சூழப்பட்டு இருப்பவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, வரம் அளித்தவனே; உண்மை தன்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்கள் கொண்டும் வேதங்கள் கொண்டும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய் அறிவுக்கு ஆதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுபவனே! எனக்கு இனிமை பொருந்திய மெய் வாழ்வினை அருள்வாயாக.

விளக்க உரை

  • உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்திருப்பதால்  இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தார்
  • உரம் – வன்மை. உரத்தவா ஞானமாவது – மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம்
  • சித்திபுரம் – வடலூர்
  • பெரியோர் புரம் – ஞானவான்கள் உறையும் இடம்
  • தரம் – தன்மை
  • அறிவு ஆதரத்தவன் – மெய் உணர்வை விரும்புபவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 30 (2019)

பாடல்

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
     விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
     அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
     கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
     கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா -வள்ளலார்

பதவுரை

அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின்  அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து,  மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு,  கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ?  நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.

விளக்க உரை

  • தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
  • கேவல நிலையில்  ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
  • ‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’  –   உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
  • கிளத்தல் – சொல்லுதல்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 4 (2018)

பாடல்

 

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
     என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
     சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
     தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
     கென்னைஆண் டருளிய நினையே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ;  விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ;  ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி  என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ;  தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?

விளக்க உரை

  • எய்ப்பு – தளர்ச்சி.
  • வைப்பு – செல்வம்
  • ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 18 (2018)

பாடல்

நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
     நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
வாய்க்கு வந்த படிபல பேசவே
     மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
     தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
     திகழக் கட்டினை என்னை நின் செய்கையே

திருவருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி  அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.

விளக்க உரை

  • ‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
  • தவள மாடம் – வெண்ணிறமான மாளிகை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 5 (2018)

பாடல்

பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
     எடுத்துரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
     ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
     அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
     சிறியேனால் ஆவ தென்னே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

திருநீற்றுப் பொடியை எடுத்து அணியச் சென்று, அந்தக் காரணத்தை மறந்து, பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து, இல்லாமையை உணர்ந்து அதற்காக இறங்கி, அவ்வாறு இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கடையனானவனும், சிலர் கையில் தடி எடுத்து வரக்கண்டு, அதனால் அச்சம் உண்டாகி , மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோனும் ஆகிய முடிவெடுக்க இயலாத யான், இவ்வுலகில் நினது திரு அருள் துணை இல்லையாயின் முடிவெடுப்பதும் தலை நிமிர வல்லவனும் ஆவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவன் ஆவேனோ?? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்?

விளக்க உரை

  • திருவருளின்றி ஒரு செயலும் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கும் பாடல்
  • பொடி – திருநீற்று வெண் பொடி.
  • மடி – அரையில் உடுத்த ஆடையின் மடித்த கூறு.
  • ‘பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்’ – கொண்ட சிந்தையில் நிலைத்தன்மையும், மன வலிமையும், வினையும் உடையவன் அல்ல என்பதை உரைத்தல்.
  • ‘உளம் கலங்கி யோடுவேன்’ –  தம் வழியில் செல்லும் சிலர் கையில் தடி ஏந்தி செல்வது கண்டால் தம்மை அடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி ஓடும் கீழ்மைப் பண்புடையவன்
  • சிறியேன் – குணம் அறிவு செயல்களில் சிறுமையுடையவன்.

சமூக ஊடகங்கள்