அமுதமொழி – பிலவ – வைகாசி – 10 (2021)


பாடல்

தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
     தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
     பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
     ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
     நல்லதிரு உளம் அறியேன் ஞானநடத் திறையே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து – நலம் புரியும் உலகில் உண்மையை அறியாது ஏன் பிறந்தேன் என்று எண்ணுதலைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

உண்மையில் தவம் செய்யாத யான், தவம் செய்யும் அறிஞர் போல நடித்துக் கொண்டிருக்கின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுநாள் வரையில்  இருந்து ஒழிந்தேன்; பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்து நல்ல பாத்திரத்தில் ஊற்றுவதற்கு உரிய பாலை நிலத்தில் ஊற்றும்  கடையவனாக ஆயினேன்;  பயன்படாததும்,  வஞ்சம் உரையதும், கற்பாறை போன்றதுமான   மனமாகிய சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு செய்தல் அவமானத்தைத் தரும் என்றுகூட  யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்;  ஞானத்தினை தரும் அன்பு செலுத்துதலையும் அறியேன்; மெய்யான அன்பு கொண்டு, திருநடம் புரியும் இறைவனாகிய உன்னுடைய திருவடித் தொண்டர்களுக்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுமையான இந்த உலகில் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த உன்னுடைய  திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று  தெரியேன்.

விளக்க உரை

  • தவம் – உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனைய உயிர்கட்குத் தீமை செய்யாமை
  • தருக்குதல் – பெருமிதம் கொள்ளுதல்
  • சடம் – அறிவில்லாத பொருள்
  • பவம் – பிறப்பு
  • பவம் புரிவேன் – பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பது பற்றியது
  • மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுயது.
  • மனப்பாறை – வஞ்ச நினைவால் உறைவு கொண்டு இரக்கமின்றி இருப்பது பற்றியது
  • அவம் – வீண், பயனில்லாத செயல்களைச் செய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 21 (2021)


பாடல்

அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே
அம்பலம் செய்து நின்றாடும் அழகர்
துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும்
சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே
உன்னைப் பார்த்து என்னைப் பாராதே
ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா
என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா

திருஅருட்பா – வள்ளலார்

கருத்துபுறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல்  அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)

விளக்கஉரை

  • அவ்வாறு அகமுகமாக காணும் போது  காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 14 (2020)


பாடல்

ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
   ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
   நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
   கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
   எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்துமயக்கம் அறுத்து மெய்யான இன்பம் தந்ததால் தன்னைக் காக்கவேண்டும் என முறையிடும்  பாடல்.

பதவுரை

அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய ஆண்டவரே, திருஅம்பலத்தில் இருந்து அருளக்கூடியவரே! உறக்கம் போன்ற மயக்க நிலையில் இருந்து எனை எழுப்பி மெய்யான இன்பம் தந்ததால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; அதோடு மட்டுமல்லாமல் நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இது உம் மேல் ஆணை; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணை எனப்படும் தூளியிருந்து எடுத்த கைப்பிள்ளை போல் இருக்கின்றேன் காண்; இது நாணத்தைத் துறந்து வாய்விட்டு உரைக்கின்ற முறையீடு இதுவாகும்.

விளக்கஉரை

  • நாண் – நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்படையாக உரைப்பது பற்றியது
  • கோணை உடல் பொருள் ஆவி – உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்வழியில் செல்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்புடையது என்பது பற்றியது.
  • ஏணை – குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில்
  • கைப்பிள்ளை – சிறுகுழந்தை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 23 (2020)


பாடல்

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
   பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
   வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
   குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
   முனிவதென் முனிவு தீர்ந்தருளே

ஆறாம் திருமுறை –  திருஅருட்பா – வள்ளலார்

கருத்துவள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும்  நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி  ஆண்டருள்க.

விளக்க உரை

  • மன்றில் – வாயில்முற்றம்
  • கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
  • முனிவு – கோபம், வெறுப்பு
  • எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 9 (2019)


பாடல்

பொழுது விடிந்த தினிச்சிறிதும்
     பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்தளும்பக்
     கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
     பட்ட திலையோ பலகாலும்
உழுது களைத்த மாடனையேன்
     துணைவே றறியேன் உடையானே.

வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு) 

கருத்துதுன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக  வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ;  நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.

விளக்க உரை

  • கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
  • பொழுது விடிந்தது –  இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
  • இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
  • பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 22 (2019)


பாடல்

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து

திருஅருப்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துசிவபெருமான் தன்னிடத்தில் விருப்பமுடன் வந்ததை கூறும் பாடல்.

பதவுரை

செம்பவளம் போன்ற செம்மை கொண்டவரான சடையை உடையவனும், முக்கண் எனும் சிற்றம்பத்தினை உடையவனான சிவபெருமான் அவனுடைய தன்மைகள் கொண்டு அவனை உள்ளத்தில் உடையவனாகிய (என்) உள்ளத்தில் அப்பா என்று ஏதோ ஒரு காலத்தில் அழைக்கும் போது எனக்கு அன்பு செய்தலின் பொருட்டு  அந்த கணத்திலே அப்பா மகனே என்று என்னிடத்தில்  விருப்பமுடன் வந்தான்.

விளக்க உரை

  • துப்பார் – பயனர், உண்பவர், செம்பவளம் போன்ற செம்மை கொண்டவர்
  • உவத்தல் – மகிழ்தல், விரும்புதல், பிரியமாதல், அன்புசெய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 6 (2019)


பாடல்

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை –  வள்ளலார்

கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும்,  மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.

விளக்க உரை

  • பத்தர்-பக்தர்
  • மேவும்-வாழ்கின்ற
  • சித்-அறிவு
  • எற்கு-எனக்கு
  • நின்மலர்-தூயவர்
  • உன் மத்தர்-பித்தர், சிவப்பரம்பொருள்
  • வாமம்-இடப்பக்கம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 9 (2019)


பாடல்

செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
   திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே
   பொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
   எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே

திருஅருட்பா –  ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.

பதவுரை

மாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக்  கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே நன்கு அறிந்ததாகும்;  அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.

விளக்க உரை

  • இச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 11 (2019)


பாடல்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ

திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஅருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும்,  எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.

விளக்க உரை

  • தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
  • ஒத்துரிமை  – அனைத்தையும் ஒன்றாய் காணும் பாங்கு
  • சித்துரு – கடவுள்
  • வித்தகன் – வியத்தகு தன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்; ஞானவான்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 11 (2019)

பாடல்

புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
   புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
   கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
   மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
   நம்பினேன் கைவிடேல் எனையே

ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்

கருத்துகைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.

பதவுரை

எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில்  தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில்  காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்;  உன்னை மட்டும் நம்பியதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.

விளக்க உரை

  • கருத்தன் – செய்வோன், தலைவன், கடவுள்
  • வயங்குதல் – ஒளிசெய்தல், விளங்குதல், தெளிதல், தோன்றுதல், மிகுதல், நடத்தல்
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 19 (2019)

பாடல்

உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
     ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
     பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
     மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
     தனித்தவா இனித்தவாழ் வருளே

திருஅருட்பா  – ஆறாம் திருமுறை –  வள்ளலார்

பதவுரை

வலிமை பொருந்திய வானுலகில் மேன்மை குன்றாதவாறு இருந்து ஞான ஒளியினால் உயர்ந்தும், பெருவதும் ஆன ஒப்பற்ற சித்திபுரத்தை உடையவனே; சிறந்தவர்களாலும், ஞானிகளாலும் ஆன பெரியோர்களால் சூழப்பட்டு இருப்பவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, வரம் அளித்தவனே; உண்மை தன்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்கள் கொண்டும் வேதங்கள் கொண்டும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய் அறிவுக்கு ஆதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுபவனே! எனக்கு இனிமை பொருந்திய மெய் வாழ்வினை அருள்வாயாக.

விளக்க உரை

  • உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்திருப்பதால்  இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தார்
  • உரம் – வன்மை. உரத்தவா ஞானமாவது – மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம்
  • சித்திபுரம் – வடலூர்
  • பெரியோர் புரம் – ஞானவான்கள் உறையும் இடம்
  • தரம் – தன்மை
  • அறிவு ஆதரத்தவன் – மெய் உணர்வை விரும்புபவன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 30 (2019)

பாடல்

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
     விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
     அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
     கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
     கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா -வள்ளலார்

பதவுரை

அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின்  அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து,  மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு,  கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ?  நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.

விளக்க உரை

  • தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
  • கேவல நிலையில்  ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
  • ‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’  –   உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
  • கிளத்தல் – சொல்லுதல்

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 4 (2018)

பாடல்

 

எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
     என்னுயிர்க் கின்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
     சோதியுட் சோதியே என்கோ
தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
     தனிப்பெருந் தலைவனே என்கோ
இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
     கென்னைஆண் டருளிய நினையே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இந்தப் பிறப்பிலேயே பெறுதற்கு உரிய சாகாவரம் எனும் இறவா நிலையாகிய மெய்ப் பயனை எனக்கு அளித்து, என்னை ஆண்டு கொண்டு அருளிய பெருமானாகிய உன்னைத் தளர்ச்சி உற்ற பொழுதில் கிடைத்த செல்வம் என்பேனோ; என்னுயிர்க்கு உரித்தான இன்பம் என்பேனோ;  விரும்பியப் பொருளை நுகரும் பொழுது மனத்தில் தோன்றி நிறைகின்ற மிக்க பெரும் மகிழ்ச்சி என்பேனோ;  ஒளிப் பொருளுக்கெல்லாம் முதன்மை ஒளியாய் நிற்கும் சிவபர ஒளி  என்பேனோ; வினை பற்றி நின்று யாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் பொறுத்து அருளும் அருள் நிதி என்று சொல்வேனோ;  தனிப் பெரும் தலைவன் என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன்?

விளக்க உரை

  • எய்ப்பு – தளர்ச்சி.
  • வைப்பு – செல்வம்
  • ‘மெய்ப்பயன்’ – இந்த பிறப்பில் பெறுவன ஆகிய யாவும் நிலையின்றிக் கெடுவதால் இறவாமையாகிய நிலைத்த பயன் மெய்ப்பயன் எனும் பொருள் பெற்றது.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 18 (2018)

பாடல்

நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
     நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
வாய்க்கு வந்த படிபல பேசவே
     மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
     தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
     திகழக் கட்டினை என்னை நின் செய்கையே

திருவருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி  அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.

விளக்க உரை

  • ‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
  • தவள மாடம் – வெண்ணிறமான மாளிகை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)

பாடல்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை  மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.

விளக்க உரை

  • மணிமன்றம் * – குரு முகமாக அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 12 (2018)

பாடல்

தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே

திருஅருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

தணிகை மலையில் வீற்றிருப்பவனே, உன்னை நினைத்து புகழ்ந்து உன்னைக் காணவில்லை;  அருள் இல்லாமையால் சிறுமை கொண்டும், இழி செயல்கள் செய்து கொண்டும் காலங்களை கழிக்கின்றேன். நீ வந்து எனக்கு அருள்வாய் எனில் நாயினும் கடையவன் ஆகிய நான் அஞ்சவோ, நடுங்கவோ, ஒடுங்கவோ மாட்டேன்ஆதலின் பெருமை உடைய அன்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். ஆகவே எனக்கு நிலைப் பேற்றினை எனக்கு அருள் செய்வாயாக;

விளக்க உரை

  • தாணு – சிவன், குற்றி, தூண், நிலைபேறு, மலை, பற்றுக்கோடு, செவ்வழி யாழ்த்திறவகை,
  • தாவரம்
  • புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 5 (2018)

பாடல்

படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட்பதி ஆகிய இறை தத்துவமான சுத்த தத்துவ நிலை முதல் தத்துவாதீதப் பரவெளி நிலை கடந்து உரைப்பதற்கு இயலாத வெறுவெளி வரையிலான  படிகளைக் கடந்து அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருள் செய்தாய்; அவ்வாறு அடைந்தப்பின் எனக்கு, ஒளிர்கின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலையும், அவ்வருள் நிலையமாகிய திருக்கோயிலில் தலைவன் நடுவில் இருப்பதை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்து அருள் செய்தாய்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாக இருப்பதால் அதனைத் மீண்டும் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அவ்வாறு இன்றி தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்.

விளக்க உரை

  • தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, சாக்கிராதீதத்தில் யோகக் காட்சி கண்டு தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் பற்றி கூறியது.
  • படிகள் எலாம் – படிகளாகிய தத்துவங்கள்  – ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்து ஆறாய் விரிந்து நிற்பதை குறிப்பிடும் வரிகள்
  • ஏற்றுவித்தீர், அடைவித்தீர் – தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை சிவன் செயலாக உரைத்து அதை உடன் உணர்ந்து உரைக்கும் திறன் பற்றியது
  • செடிகள் இலாத் திருக்கதவம் – ஞானக் கோயிலுக்கு குற்றங்கள் எனும் கதவுகள் இல்லை என்பதை உரைத்தது. (செடி – குற்றம்)
  • விளங்குதல் – ஒளிர்தல், தெளிவாதல், விளக்கமாதல், பளபளப்பாதல், பெருகுதல், மிகுதல், அறிதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 22 (2018)

பாடல்

மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.

இரண்டாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

தோழி, கங்கை, சந்திரப் பிறை, ஊமத்தமலர்கள் ஆகியவை பொருந்திய சடையை உடையவரும், இயல்பிலேயே மலம் என்னும் குற்றம் இல்லாதவரும், தூண்டுதல் எவரும் இன்றி எரியும் தூங்காமணி விளக்கின் சுடர் போன்ற மேனியை உடையவரும் பிறருக்கு வருந்தம் தரும் ஒரு சொல்லும் சொல்லாமல் இனிமையான இனிமையான மொழி பேசுபவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவருமாகிய சிவபெருமான், அலை மோதி முழங்கும் கடற்கரையிலுள்ள திருவொற்றியூரில் எழுந்தருளி, என்னுள் வேட்கை மயக்கத்தை அளித்தார்; எனவே இனிமேல் யான் மயக்க நோயை பொறுக்க மாட்டேன்.

விளக்க உரை

  • இறைவனிடத்தில் உண்டான காதல் உறவு கை கடந்து பெருகி ஆற்றேனாகின்றேன்; தூது சென்று உதவுக எனக் குறிப்பாய் வேண்டிக் கொண்டதை குறிப்பிடும் பாடல்.
  • மந்தாகினி – கங்கை  ஆறு.
  • வான்மதி – வானத்தில் ஒளிரும் சந்திரன் – பிறைத் திங்கள்
  • மத்தம் – ஊமத்தை மலர்.
  • நுந்துதல் – தூண்டுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 21 (2018)

பாடல்

இழைஎலாம் விளங்கும் அம்மை
     இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள
     மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன்
     பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி
     உயர்மணி மன்று ளானே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா –  வள்ளலார்

பதவுரை

நின்னுடைய கருணை என்னும் மழையை முற்றிலுமாக பொழிந்து, என் உள்ளத்தில் படிந்து இருக்கின்ற மயக்கம் எல்லாம் போக்கியனும்,  மிக நெருக்கமாக உமை அம்மையை இடப்பாகத்தே கொண்ட பெருமானானவனும், தான் இருக்கும் இடம் எல்லாம் ஒளிர்தலை உடைய உயர்ந்த மணிகள் இழைத்த தில்லையம்பலத்துள் எழுந்து அருளுகின்றவனும்  ஆன கூத்தப் பெருமானே, நான் செய்த எல்லாப் பிழையையும் பொறுத்து  அருளிய உன்னுடைய பெருந்தன்மைக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்!

விளக்க உரை

  • சிவபெருமானுடைய திருவருள் பெருமையை வியந்து கைம்மாறு செய்ய மாட்டாத தமது எளிமையை வெளிப்படுத்தியவாறு.
  • உழை – உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி, இடம், பக்கம், அண்மை, கலைமான், (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ்
  • ‘இழையெலாம் விளங்கும் அம்மை’ –  உயரிய அணிகல வகைகள் அனைத்தையும் குறைவற அணிந்தவள் ஆகிய உமாதேவியை என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. சிவ சக்தி சொரூபமான காட்சி என்பது பற்றி மேலே குறிப்பிட்டவாறு விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் கொண்டு உய்க.
  • என் புரிவேன் –  என்ன கைம்மாறு செய்வேன் என்னும் பொருளில்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அகோர மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
சங்காரம் எனும் அழித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 12 (2018)

பாடல்

ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
     அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
     குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
ஊனைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
     உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
     மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

நீ மனம் மகிழ்ந்து என்னிடம் வராமல் இருப்பின் என் உயிரையும் விட்டுவிடுவேன்; அரைக்கண நேரமும் நின்னைப் பிரிந்து  யான் (உடல்/உயிர்) தரித்திருக்க மாட்டேன்;  இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். தீய நெறியினை உடையவர்கள் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனியும் அவர்களுடைய பயனில்லாத துன்பம் தரும் சொற்களை அவர்கள் அருகினில் இருந்து கேட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்; உணவு மற்றும் உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீ, என்னுடைய மன இயல்பை நன்கு அறிந்ததால், மனத்தால் வரும் துன்பங்களையும், சொல்லால் வரும் துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து எவ்வாறு விரித்துரைப்பது? அவ்வாறு  உனக்கு வகுத்து உரைப்பது என்ன பயனைச் செய்யும்?

விளக்க உரை

  • அருள் வழங்க இறைவன் வராவிட்டால் உயிர் விடுதல் உறுதி என எடுத்து இயம்பியது
  • ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா – உன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா என்று மாற்றுக. சொற்றொடரை இருமுறைக்கு மேல் எழுதும் வழக்கம் தமிழ் மொழியில் இல்லாது இருப்பினும், தனது நிலையை அழுத்தமாக பதிவு செய்வதன் பொருட்டு மூன்று முறை  ‘உன்மேல் ஆணை’ என்று பாடியிருக்கிறார்.
  • அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன் – திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரிந்தாலும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கி மாற்று நெறியில் செலுத்தும்.
  • கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன் –  உயிர் புற உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு, மனம் மாயா மயக்கிற்கு உள்ளாகும் என்பது பற்றியது.
  • கோணை – கோணல், வளைவு, கொடுமை, தொல்லை, வலிமை, அழிவின்மை, பீடை
  • மாணை – மாண்பு

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்கு ஈசான மந்திரம் எந்த உறுப்பு?
சிரசு

சமூக ஊடகங்கள்