அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 19 (2022)


பாடல்

தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே

சித்தர் பாடல்கள் – பாம்பாட்டி சித்தர் –  அகப்பற்று நீக்கல்

கருத்துஉலகியலை விடுத்து சிவத்தினை நாட அறிவுறுத்தும்  பாடல்.

பதவுரை

பாம்பே! தாமரை இலையின் மேல் தண்ணீரானது இருப்பினும் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக் கூடிய தன்மையைப் போல் இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றினை நீக்கி,  முத்தினைப் போல் பிரகாசிக்கும் தன்மை உடைய சோதியின் பதத்தை தொழுது தொழுது ஆடுவாயாக.

விளக்க உரை

  • பாம்பு – மனம் எனக் கொள்ளலாம்.
  • தொழுது தொழுது – இருவினை ஆகிய நல்வினை தீவினை நீக்கம் பெறுதல் குறித்து இருமுறை உரைக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)


அமுதமொழி – பிலவ – கார்த்திகை – 19 (2021)

பாடல்

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – சித்தர்கள் செய்யக்கூடிய சில அரும் செயல்களைக் கூறும் பாடல்

பதவுரை

நாகமே! உரைக்கக் கூடியதாகிய மூன்று உலகங்களையும் சிறப்புடைய பொன்னால் உடையதாக ஆக்குவோம்; வெப்பம் தரும் சூரிய கதிர்களை குளிர்ச்சி தரக்கூடியதாகிய சந்திர ஒளியாக மாற்றிச் செய்வோம்; பரந்து பட்டதான இந்த உலகத்தினை இல்லாமல் மறைப்புச் செய்வோம்; இப்படிப்பட்ட செய்யக்கூடிய சித்தர்களாகிய எங்களில் வல்லமையையக் கண்டு நீ ஆடுவாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – கார்த்திகை- 9 (2021)


பாடல்

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
ஆனந்த வெள்ளங்கண்டு ஆடு பாம்பே!

அருளிய சித்தர் : பாம்பாட்டி சித்தர்

கருத்து – ஈசன் அனைத்தும் ஆகியும் அதில் இருந்து தனித்து இருக்கும் முறையை உரைக்கும் பாடல்.

பதவுரை

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்கள் ஆகியும் (84 லட்சம் வகை யோனி பிறப்புகள்), நாம் வாழும் பூலோகம் விடுத்து புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம்,   தபோலோகம், சத்யலோகம் ஆகிய மேல் உலகங்கள், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம்,  தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் ஆகிய கீழ் உலகங்கள் அனைத்தையும்  படைப்பவனாகவும் அதனில் இருந்து  தனித்து  நிற்பவனாகியும், அனைத்துக்கும் வெளியில் தனித்து நிற்பவனாகி திருவிளையாட்டினை நிகழ்த்துபவனாகவும், பின்னர் அவ்வாறான அந்த உயிர்களாகவும், அந்த உலகங்களாகவும் ஆதியாகவும் இருக்கும் பேரானந்தத்தைக் கண்டு பாம்பே ஆடுவாயாக

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 19 (2019)


பாடல்

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே

பாம்பாட்டிச் சித்தர்

கருத்துநிலை இல்லா வாழ்வினை கண்டு வீண் பேச்சு பேசாமல் இருந்து இறைவனை நினைக்கும் நிலையை உரைத்தது.

பதவுரை

கானல் நீரைக் கண்டு மான் ஏமார்ந்து செல்வது போல, மூடர்கள், நிலை இல்லாத இந்த உலக வாழ்வினை கண்டு மகிழ்ந்து அதில் களித்து இருப்பார்கள். மெய்யான மேனிலையைக் கண்டவர்கள் வீணாக வீம்பாக பேசாமல் நிலைபெற்றதும், உண்மையானதுமான இறைவன் திருவடிகளை நாடுவார்கள் என்று ஆடுபாம்பே.

சமூக ஊடகங்கள்