அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 1 (2019)


பாடல்

தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
     தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
     மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
     திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
     என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  பூவுலகில் பெறும் சொந்தங்கள் நிலையானவை அல்ல எனவும் திருஐந்தெழுத்தே நிலையான விடு பேற்றினை அருளும் என்பதை விளக்கும் பாடல்

பதவுரை

ஒருவருடைய தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார்கள் யார்? மனைவி யார்? புத்திரர் யார்? இவர்கள் எல்லோரும் தமக்கு எவ்வாறு தொடர்புடையவர்கள்? பூலவுலகில் பிறந்த பின் அவர்களோடு தொடர்பு கூடியதா அல்லது அவர்கள் இறந்த பின் அவர்களோடு தொடர்பு பிரியாது கூடிநிற்க கூடுவோ? என்றெல்லாம் சிந்தை உடையவர்களே!  பொய்யானதும் மாயையானதும் ஆன இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா; உங்களுக்கு ஒன்று உறுதியாக சொல்வதை கேட்பீராக; சந்திர ஒளிவீசித் திகழ்வதும், கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் திருமுடியை உடைய எம்தந்தையும் தலைவனும் ஆன அவன் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயில் எழுபவர்களுக்கு  பெரியதானதும், நிலை பேறும் உடையதுமான வீடுபேறு கைகூடும். ஆகவே அதனைச் செய்யுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 31 (2019)


பாடல்

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறட்டு, அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாயநம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  திருவைந்தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறையும் அதன் பயன் வீடுபேறு என்றும் கூறும் பாடல்

பதவுரை

மேற்கூறியதான திருவம்பல சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்தான `ஸ்` என்பதுடன் ஆறாம் எழுத்தான `உ` என்பதையும் பதினான்காம் எழுத்தான `ஔ` என்பதையும் ஏறச்செய்து, `ஸு` எனும் எழுத்தை  `ஸௌ` என்றும் ஆக்கி, அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் (அஃதாவது ஓம் ஸும் ஸௌ: சிவாயநம) என உச்சரித்தல்) மூன்று மலங்களும் விலகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 30 (2019)


பாடல்

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

திசைக்கு ஒன்றாக நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் முறையே மேலுள்ள அண்டங்கள், கீழுள்ள அண்டங்கள் என முடி, அடி தேடி காணமுடியா வண்ணம், ஒன்றின் மேற்பட்டதாய் எழுந்து நிற்கும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்; அவர் சொக்கு எனப்படுவதான ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரர் ஆவார். அப்படிப்பட்டவராகிய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவர்கள் ஆவார்.

விளக்க உரை

  • திக்கு அமர் நான்முகன் – திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமன்
  • சொக்கம் – ஒரு கூத்து .
  • நக்கர் – ஆடையில்லாதவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 28 (2019)


பாடல்

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்

திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்

கருத்து –  வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்

பதவுரை

முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.

விளக்க உரை

  • தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
  • ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
  • வைநயிகர் – விநயம் உடையவர்
  • மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

  • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
  • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

  •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 25 (2019)


பாடல்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  சிவன் உயிர்கட்கு அருள் செய்யும் திறம் கூறும் பாடல்

பதவுரை

அடியவன் ஆகிய எனக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன் எப்படிப்பட்டவன் எனில் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கப் பெற்றார்க்கு அவைகள் நீக்கம் பெற்ற காலத்தில் தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்து கண்முன் நின்றே அருளை வழங்குவான்; வினையில்லாத நன்மை பொருந்திய அடியார்களுக்கு உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவான்;  யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அந்த அருள் நிலையினின்றும் நீங்கி வழுவாதவாறு பாதுகாப்பான்; அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

விளக்க உரை

  • முன்னின்று அருளுதல் – ஆகமங்கள் வரையறை செய்தபடி பிரளயாகலர், சகலர் ஆகியவர்க்கு அருளும் முறை (வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்); விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் ஆகிய மூவகை உயிர்களுக்கும் மூவகையாக அருளுதலை நியமாக ஆகமங்கள் கூறும்
  • உலகு – உயிர்தொகுதி
  • நடுவுயிர் – உள்ளுயிர்
  • நன்னின்ற – அருள் பெறுதலுக்கு வினைகள் தடைகள் இருத்தலின் பொருட்டு வினைகள் முடிவுறும் காலத்தில் நன்மை விளையும் என்பதை விளித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 23 (2019)


பாடல்

மூலம்

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே

பதப்பிரிப்பு

நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம்  இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான  குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது  திருஆலவாய் என்னும் திருத்தலம்.

விளக்க உரை

  • கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்)  கோவணம்  எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 22 (2019)


பாடல்

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து

திருஅருப்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துசிவபெருமான் தன்னிடத்தில் விருப்பமுடன் வந்ததை கூறும் பாடல்.

பதவுரை

செம்பவளம் போன்ற செம்மை கொண்டவரான சடையை உடையவனும், முக்கண் எனும் சிற்றம்பத்தினை உடையவனான சிவபெருமான் அவனுடைய தன்மைகள் கொண்டு அவனை உள்ளத்தில் உடையவனாகிய (என்) உள்ளத்தில் அப்பா என்று ஏதோ ஒரு காலத்தில் அழைக்கும் போது எனக்கு அன்பு செய்தலின் பொருட்டு  அந்த கணத்திலே அப்பா மகனே என்று என்னிடத்தில்  விருப்பமுடன் வந்தான்.

விளக்க உரை

  • துப்பார் – பயனர், உண்பவர், செம்பவளம் போன்ற செம்மை கொண்டவர்
  • உவத்தல் – மகிழ்தல், விரும்புதல், பிரியமாதல், அன்புசெய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 18 (2019)


பாடல்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

உள்ளத்தினில் அன்பு கொண்டு மனதால் நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

விளக்க உரை

  • காதல் – அன்பு
  • மல்கி – மிகுந்து
  • ஓதுதல் – சொல்லுதல், செபித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 16 (2019)


பாடல்

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே – அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்

பதினொன்றாம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – விநாயகர் இரட்டை மணிமாலை

கருத்துசிவனின் மகனான விநாயகர்  திருமேனி தன் சிறப்புக் கூறல்.

பதவுரை

சேற்றினை உடைய வயல்களை சார்ந்ததும், நிலை பெற்றதான நீர் நிலைகளில்  ஆரல் எனும் மீன் வகைகளை கொண்டதுமான திருநாரையூர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் திருநாரையூர்ச் சிவபெருமான் மகன் களிறு முகம் உடையவன் ஆனவனாகவும், அவனது காயம் ஆகிய திருமேனி செந்தீயைப்போல ஒளிவிடுகின்ற நிறத்தைக் கொண்டிருப்பது என்னே வியப்பு

விளக்க உரை

  • அளறு – சேறு
  • ஊர் ஆரலை – நாரை உண்கின்ற நீர் நிலை
  • ஆரல் – மீன் வகை
  • படுகர் – நீர் நிலை
  • மன் – நிலை பெற்ற

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 14 (2019)


பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.

விளக்க உரை

  • போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
  • நெஞ்சகம் – மனம்
  • நைந்து – உருகி
  • நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
  • வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 11 (2019)


பாடல்

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

விளக்க உரை

  • தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
  • நாமமாவது – திருவைந்தெழுத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 9 (2019)


பாடல்

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள  எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.

விளக்க உரை

  • திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
  • என்ன – எத்தகைய
  • வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
  • மன்னு – நிலைத்து விளங்குகின்ற .
  • நம்பால் – நம்மிடத்து
  • வைக – நிலையாக வந்து எழுந்தருள

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 8 (2019)


பாடல்

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும்  வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?

விளக்க உரை

  • திருஆரூர் திருத்தலம் பற்றிய தேவாரப் பாடல்
  • எந்த மாதவம் செய்தனை – வியப்புமொழி
  • பந்தம் – முடிச்சு, கட்டு, பாசம், ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம், உறவு, சம்பந்தம், பற்று, பாவின் தளை, முறைமை, கட்டுப்பாடு, மயிர்முடி, சொத்தைப் பராதீனப்படுத்துகை, மதில், அழகு, கைவிளக்கு, தீவட்டி, தீத் திரள், உருண்டை, பொன், நூலிழை, பெருந்துருத்தி
  • அந்தமில் புகழ் – முடிவில்லாத புகழ்
  • ஆரூர் அரநெறி -ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் அரநெறி, பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று
  • சிந்தை – உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 7 (2019)


பாடல்

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்

விளக்க உரை

  • ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
  • தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
  • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
  • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
  • அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
  • நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள்  கூறும் ` நான் ` குற்றமாகாது  எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 5 (2019)


பாடல்

மூலம்

ஈனம் தரும்இதென்றெண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்
கூனம் தரும்இந்தச் செல்வருக் கிச்சையுரை உரைத்தேன்
வானம்தரும்உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும்அண்ண லேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

ஈனம் தரும் இதென்று எண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்கு
ஊனம் தரும் இந்தச் செல்வருக்கிச்சையுரை உரைத்தேன்
வானம் தரும் உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும் அண்ணலே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஅசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்த நீ, குற்றம் கொண்ட என்னையும் காக்க வேண்டும் என்பதை குறிக்கும் பாடல்.

பதவுரை

வானில் இருந்து வேண்டியவற்றை வழங்கும் தேவர்களை காப்பதன்  பொருட்டு அசுரர்களை துன்பம் அடையச் செய்து அவர்களை துன்புறுத்தி தேவர்களுக்கு நல்ல சக்தியினையும், உறைவிடத்தையும் வழங்கும் இறைவனானவனும் காழிப் பதியில் உறைபவனும் ஆன  ஆபதுத்தாரணனே! இந்த உலக வாழ்வானது குறைவு பட்டது என்பதை அறியாமல் செருக்குள்ளவனாக திரிந்து, தர்மத்தின் வழி நில்லாமல் செல்வம் உடையவருக்கு அவர்கள் விரும்பிய உரைகளை உரைத்தேன்.

விளக்க உரை

  • என்னைக் காப்பாயாக என்பது மறைபொருள்.
  • ஈனம் – குறைபாடு, அங்கவீனம்; ஊனம், இழிவு, குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு, சரிவு
  • இடும்பன் – செருக்குள்ளவன்
  • உம்பர் – விண்ணவர், தேவர்கள், சொர்க்கம், மேற்கூறப்படவை, மேலுள்ளவை
  • அவுணர் – அசுரர்
  • மாட்டுதல் – இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்,
  • கற்றுவல்லனாதல், அடித்தல், விளக்கு முதலியன கொளுத்துதல், எரித்தல், கூடிய தாதல், வலிபெறுதல்
  • தானம் – இசைச்சுரம், சுரவிஸ்தார முறை, இடம், உறைவிடம், பதவி, கோயில், சுவர்க்கம், ஆசனம், எழுத்துப்பிறக்கும் இடம், எண்ணின் தானம், சாதகசக்கரத்திலுள்ள வீடு, ஆற்றலில் சமமாயிருக்கை, சக்தி, நன்கொடை, தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை, நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை, ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல், இல்லறம், யானைமதம், வேள்வி, மகரவாழை, ஸ்நானம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 4 (2019)


பாடல்

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான  காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ  எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.

விளக்க உரை

  • தரளம் – முத்து, உருட்சி, நடுக்கம்
  • வாயாரப் பன்னுதல் – பாடுதல் – வாக்கின் வினை
  • ஆதரித்தல் – மனத்தின் தொழில்
  • ஏத்துதல் – காயத்தின் செயல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 3 (2019)


பாடல்

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே

தேவாரம் – ஐந்தாம்  திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான  இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.

விளக்க உரை

  • எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • நொந்துதல் – அழிதல், தூண்டுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 2 (2019)


பாடல்

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும்,  வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான  எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.

விளக்க உரை

  • கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
  • மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
  • எம் இறை – எம் இறைவன்
  • நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 1 (2019)


பாடல்

மூலம்

இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே

பதப்பிரிப்பு

இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு
பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே

முதல் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.

விளக்க உரை

  • பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
  • இனமலர் – கூட்டமான மலர், அறுபதம் – வண்டு. ( மலரில் வண்டு ஒடுங்கும் ஒடுக்க முறை )
  • இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்