அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

  • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
  • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

  •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *