கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங் கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும் அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய் முத்தியிலே நிற்கும் முறை
சிவஞானபோதம்
கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.
விளக்கஉரை
இந்தனம் – விறகு
அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.
கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.
விளக்கஉரை
உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியையாண்டுமென்ன சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்துமென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ! இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உந்தனிருபாதம் பிடித்தேன் யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக் கண்பார்வையது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
சிறுமணவை முனிசாமி
கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.
பதவுரை
ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.
நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம் கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின் ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல் வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே
திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்
கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.
பதவுரை
ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில் பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.
இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.
துக்கடா வல்லெழுத்து மிகா இடங்கள் அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின் அவை பெரியன யாவை போயின
கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.
பதவுரை
கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும் போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.
விளக்கஉரை
நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி – வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
ஆகின்ற – வளர்கின்ற
பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’ – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.
பதவுரை
ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும் மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.
விளக்கஉரை
கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
கேசரி – விண்ணில் உலவுபவன்
கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.
இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு இன்றே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – அளவிட முடியா சிவனின் அரும் பெரும் செயல்களைக் கூறி, அவனை மனதில் கொண்டு இரந்ததால் சிவன் கண்ணில் தோன்றினான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பல காலம் உன்னை நினைத்து அன்பு கொண்டு அதனால் உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே, இமையாதவர்களாகிய தேவர்களின் தலையில் பொலிவு உடைய தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பிரளத்திலும் அழிவே இல்லாத ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே! இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.
விளக்கஉரை
கரத்தல் – மறைத்தல்.
இரந்து இரந்து – உடலாலும் உள்ளத்தாலும் இரந்து எனும் பொருளும், நல்வினைகள் தீவினைகள் அழியுமாறு இரந்தும் என்பதற்காக இருமுறைகள் எனும் பொருளும் பெறப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
யோக முறையில் திருப்பெரும்துறை என்பது உடலில் இருக்கும் ஒர் இடம் என்றும் சிவனை அகக் கண்ணால் கண்டதையும் குறிப்பிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
திந்தோதிமி தீதத என்று பெரிய ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?
ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு) ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போதுதா னே
பதப்பிரிப்பு
ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்பு ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போது தானே
சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்
கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.
பதவுரை
உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.
உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர் உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள் உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில் உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.
பதவுரை
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே
பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்கால அம்மையார்
கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.
பதவுரை
அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.
விளக்கஉரை
புந்தி – புத்தி,
மதி – அறிவு
அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.
காயம் பலகை கவறைந்து கண் மூன்றா யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம் மேய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப் பறியேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.
கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்