அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 20 (2021)


பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்

பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – திருஇரட்டைமணிமாலை

கருத்து – பஞ்சாக்கர மந்திரத்தினை அதன் பொருள் பற்றி உரைப்போர் அதன் பொருளைக் காண்பார் என உரைக்கும் பாடல்

பதவுரை

தலையாகிய அண்டமாகிய சிவலோகத்திற்கு உரியவனும், ஆதிரை நட்சத்திற்கு உரியவனும், ஆலகால விஷத்தை உண்டதால் கரிய கண்டத்தை உடையவனும், செம்மை உடைய பொன் போன்ற திருவடிகளை உடையவனும் ஆன சிவபெருமானுக்கு உரித்தானதான தலையான மந்திரமாகிய  பஞ்சாக்கர மந்திரத்தினை பற்றிக் கொண்டு அதன் பொருள் பற்றி தியானித்து தலை தாழ்த்தி வணங்குபவர் அந்த மந்திரத்தின் பொருளைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாயின – மேலான நூல்கள்
  • ஆதிரையான் – இறைவன்
  • தலையாய ஐந்தெழுத்து – மந்திரங்களுக்குள்ளே தலையான மந்திரம் பஞ்சாக்கர மந்திரம்
  • சாதித்தல் – பற்றிக் கொண்டு தியானித்தல்

தாழ்தல் – தலை தாழ்த்தி வணங்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 11 (2021)


பாடல்

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
   கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
   நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
   சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங்காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்

கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.

பதவுரை

கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி,  மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து  குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.

விளக்கஉரை

  • இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
  • கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
  • கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
  • மசித்தல் – மசிய அரைத்தல்.
  • விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
  • `வெடு, வெடு` –  சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
  • சுளித்தல் – கோபித்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 27 (2020)


பாடல்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்

கருத்துஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.

பதவுரை

வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

விளக்க உரை

  • பரவெளி
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
  • செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
  • ஆங்குநின் தாள்கள் போற்றும்
    பேய்வடி வடியே னுக்குப்
    பாங்குற வேண்டும் என்று
    பரமர்தாள் பரவி நின்றார்

என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 3 (2020)


பாடல்

புந்தி கலங்கி, மதிம யங்கி
   இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
   தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
   திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் –  காரைக்கால அம்மையார்

கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.

பதவுரை

அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.

விளக்க உரை

  • புந்தி – புத்தி,
  • மதி – அறிவு
  • அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி  என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சந்தி – உறவினர் நண்பர்களது கூட்டம்.
  • கடமை – , ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்
  • முழவு – மத்தளம்,
  • திசை கதுவ – திசைகளை உள்ளடக்கி நிகழ

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 18 (2019)


பாடல்

வாகை விரிந்துவெள் நெற்று ஒலிப்ப,
   மயங்குஇருள் கூர்நடு நாளை, ஆங்கே
கூகையொ டுஆண்டலை பாட, ஆந்தை
   கோடுஅதன் மேல்குதித்து ஓட, வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
   ஈமம் இடுசுடு காட்டு அகத்தே
ஆகம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
   அப்பன் இடம் திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்காலம்மையார்

கருத்துசுடுகாட்டின் காட்சியினை விளக்கி அதில் ஆடுகின்றவன் என் அப்பன் ஈசன் எனவும் அப்படிப்பட்டவனுக்கு உரித்தான இடம் திருவாலங்காடு எனும் திருத்தலம் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

காட்டில் இருக்கும் வாகை மரமானது விரிந்து தழைத்து அதன் வெண்மையான  நெற்று ஒலிக்கக் கூடியதும், மயக்கம் தரும் இருளோடு பகலோடு வந்து பொருந்தியதான நள்ளிரவு நேரத்தில், கோட்டானுடன் ஆண்தலைப் போன்ற தலையுடைய ஒரு புள்ளினம் ஆடவும், ஆந்தையானது அவற்றை எல்லாம் விரட்டி ஓடவும்,  கொடிகள் படரந்துள்ளதும், கள்ளி மரத்தின் நிழலை உடையதும், பிணத்தைச் சுட்டு எரிக்கின்ற சுடுகாட்டிலே இருப்பதும்,  தனது திருமேனியானது குளிர்ந்த நிலையிலேயே அனலில்  ஆடுகின்றவனுமான எங்களது அப்பனுக்கு உரித்தான இடமானது திருவாலங்காடு எனும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஆண்டலை – கோழி, ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள், பூவாது காய்க்கும் மரம்
  • ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
  • கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்
  • மயங்கு இருள் – மாலைக் காலத்தில்
  • கோடு – மரக்கிளை
  • கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின்மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்ற காட்சி அமைப்பு
  • வீசுதல் – எழுச்சியுறுதல்
  • ஈமம் – பிணஞ்சுடும் விறகு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 21 (2019)


பாடல்

இனிவார் சடையினில் கங்கையென்
     பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
     செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
     தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
     கோத்தஎம் சங்கரனே

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.

பதவுரை

கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க  கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை  என அழைக்கப்படும் உமாதேவியார்  காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?

விளக்க உரை

  • `காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்`  எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும்.  `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும்  சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
  • முனிவார் – கோபிப்பவர்
  • வார்கணை- நீண்ட அம்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 2 (2019)


பாடல்

மூலம்

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு

பதப்பிரிப்பு

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு

பதினொன்றாம் திருமுறை –  அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்

*கருத்துஎம்மானிடம் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது என்பதைக் கூறும் பாடல்.*

பதவுரை

வினைப் பற்றி நின்று எனக்கு ஏற்படும் துன்பங்களை அவர் தீர்க்காவிட்டாலும், அவ்வாறு நான் படும் துன்பங்கள் கண்டு இரக்கம் கொள்ளாவிட்டாலும், உன்னை நினைத்தும்,  பாடுதலும்  உன் மீது அன்பு கொண்டு உன்னைப் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும், எலும்பு மாலை அணிந்த கோலம் கொண்டு, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடர் வடிவம் கொண்டவராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது.

விளக்க உரை

  • படர்தல் – ஓடுதல், கிளைத்தோடுதல், பரவுதல், பெருகுதல், அகலுதல், விட்டு நீங்குதல், வருந்துதல், அடைதல், நினைத்தல், பாடுதல்
  • படரும் நெறி – செல்லும் கதி, நற்கதி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

  • அமர்தல் – விரும்புதல்
  • இடி – மா.
  • கன்னல் – கரும்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 2 (2019)

பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்துதிருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.

பதவுரை

அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாய அண்டம் – சிவலோகம்
  • சாதித்தல் – நிறைவேற்றுதல்; நிலைநாட்டுதல்; விடாதுபற்றுதல்; மந்திர சித்திபெறுதல்; தேய்த்தல்; கண்டித்தல்; அழித்தல்; அளித்தல்; பரிமாறுதல்; சொல்லுதல்; மறைத்தல்; அருள்புரிதல்; வெல்லுதல்
  • நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’

காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’

சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.

இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo – Shivam

சமூக ஊடகங்கள்