
பாடல்
சொல்லன்றிப் பொருளு மன்றிச் சூழ்ந்ததோ ருருவமன்றி
அல்லன்றிப் பகலு மன்றி அகண்டபூ ரணமதாகி
நல்லின்பச் சிவமதாகி நாட்டிரண் டற்று நிற்போர்
செல்லுநற் சிந்தை யோராஞ் சித்தராய் வாழுவாரே
முதுமொழி ஞானம் – அகத்தியர்
கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.
விளக்க உரை
- உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.