அமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)

பாடல்

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.

விளக்க உரை

  • யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
  • குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த  மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 15 (2019)

பாடல்

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

பதவுரை

குமரப் பெருமானே! அடர்ந்ததும்செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!

விளக்க உரை

  • பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
  • அடவி – காடு
  • ஆறு = கங்கை
  • பணி = பாம்பு
  • இதழி = கொன்றைப் பூ
  • தும்பை = தும்பைப் பூ
  • அம்புலியின் கீற்று = சந்திரனின் பிறை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 14 (2019)

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.

விளக்க உரை

  • நடலை – துன்பம்
  • சுடலை – இடுகாடு
  • ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 13 (2019)

பாடல்

படிக் குந்தண் டாயுத மென்பார்க்கு நோய்வினை பற்றறுப்பப்
பிடிக்கும்தண் டாயுத மெண்ணருங் கோடிப்ர மாண்டமெல்லாம்
முடிக்கும்தண் டாயுத மூதண்டந் தாண்டு முகுந்தன்சென்னி
தடிக்கும்தண்டாயுதனே காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

திருமாலின் உந்திக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மனின் தலையை கொய்து  தண்டித்த கைகளில் தண்டாயுத்தை உடைய ஆபதுத்தாரணனே! கைகளில் பிடித்திருக்கும் தண்டாயுதமானது எண்ண இயலாத கோடி கணக்காண செயல்களை முடிக்கும் தன்மை உடையது; உடம்பினையும்  காக்கும் தண்டாயுதம்  என்று கூறுபவர்களுக்கு நோயினையும், இருவினையாகிய நல்வினை மற்றும் தீவினை ஆகியவைகளையும் நீக்கி வினையற்று போக்கும்.

விளக்க உரை

  • படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
  • மூதண்டம் – பிரமாண்டம், உந்திக்கமலம் விரிந்தால் விரியும், பிரமாண்டத்தின் முகடு, அறுகு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 12 (2019)

பாடல்

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

நெல்லிக்காத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், ஒளி வீசும் வெண்மையான திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய நெருப்பினைப் போன்ற போலும் வண்ணனாய் விளங்குபவன்; தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டு அருளுபவன்; அந்த அறநெறிக்கு மாறாக நடந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் முன்று மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் எல்லோராலும் அறியப்பட்டவன்.

விளக்க உரை

  • அறத்தால் – தருமத்தை நிலை நிறுத்தவேண்டி
  • உயிர் காவல் – உயிர்களைக் காத்தல்
  • மறம் – அதர்மம்
  • மாண்பு – மாட்சி
  • தெரிவு – விளக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 11 (2019)

பாடல்

வெகுநாட் பழைய அடிமையென
      மிகவுங் கனிந்தே அருள்அளித்து
   வெளியைக் காட்டிக் களிப்புடனே
      விம்மி விழிநீர் சொரிந்தருளத்

தகுமெய்ஞ் ஞானச் சாரமெலாந்
      தந்தோம் தந்தோம் என்றுரைத்த
   தாய்தான் மறந்தால் உலகில் இனித்
      தான்ஆர் பகைஆர்என்செய்கேன்

புகழ்நாரணியே உன்னைவிடப்
      பொருளும் அருளும் வேறுண்டோ
   பொல்லா தவனே யானாலும்
      பிள்ளை இவனென் றருள்புரிவாய்

வகுத்த சேயைப் பால்கொடுத்து
      வளர்க்கா திருக்கும் தாய்உண்டோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! புகழ்ச்சியை உடைய  நாரணியே! உன்னை விட அடையத் தக்க பொருளும், உன்னிடத்தில் இருந்து பெறப்படும் அருளும் தாண்டி வேறு ஏதாகினும் உண்டோ? தான் வகுத்த பாதை பற்றி நின்று, பெற்ற குழந்தையைக்கு பால் கொடுத்து வளர்க்காது இருக்கும் அன்னை வேறு உண்டோ ?  வெகு நாட்களாக உன்னிடத்தில் இருக்கும் உனது பழைய அடிமை என என் மீது பரிவுகாட்டி, அருள் அமுதத்தினை அளித்து, ஞான வெளியாகிய சிதாகாசப் பெருவெளியை காட்டி,  மிகவும் மகிழ்வுடன்  ஆனந்தம் கொண்டதால் கண்களில் நீர் சொரிய அளிக்கத் தக்கதான மெய்ஞ்ஞானச் சாரம் எல்லாம் தந்தோம் என்று உரைத்த  தாயாகிய நீ, இதை மறந்து என்னை மறந்தால் எவர் பகைவர்களாக முடிய்ம்; நான் என்ன செய்ய இயலும்? நான் வினைபற்றி நின்று பொல்லாதவன் ஆக இருப்பினும் உன்பிள்ளை என்று எனக்கு அருள்புரிய வேண்டும்.

விளக்க உரை

  • தேசி – பெரிய குதிரை, இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்.
  • பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னே‘ எனும் திருவாசக வரிகளோடும், பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடு தொண்டாற்றும் திறம் உடையவர்கள் என்பது கண்டு ஒப்புநோக்கி அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 10 (2019)

பாடல்

பூசியே செவ்வரளிப் புஷ்பம்வாங்கிப்
பூரணியே யென்றுமன் துறுதியாகத்
தேசியே கேசரியே தாயேயென்று
தினந்தோறு மந்திரத்தை செபித்துமைந்தா
பேசியே திரியாமல் வாமம்வைத்துப்
பேரான மாமிசமும் வடைதேன்பாலு
வாசியே மனதடங்க அன்னம்வைத்து
மாங்கனியோ வற்கடலை பயிறும்வையே

யோகஞானம் – 500 (முருகப்பெருமான் அகத்தியருக்கு உபதேசம் செய்தது)

பதவுரை

முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே,  தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.

விளக்க உரை

  1. தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
  2. வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
  • மாமிசம் – மா-ம்-இ- சம்
  • மா – பெருமை மிக்க
  • ம்-இம் எனும் ஊமை மூலம்
  • இ-அருட்பிரணவம்
  • சம்- சுகம்
  • இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும்  எனவும் கொள்ளலாம்.

மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 27

உமை
உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?

சிவன்

பஞ்ச பூதத்தினால் ஆன பொருள்கள் அனைவருக்கும் பொதுவானது. கொடுப்பவன், வாங்குபவன், கொடுக்கப்படும் பொருள், கொடுக்கும் வகை, காலம், இடம் ஆகிய எல்லாம் சேர்ந்தே தானம் எனப்படுகிறது. மனம், வாக்கு, காயம் இவற்றால் பரிசுத்தனாக இருந்து சத்தியமே கொண்டிருப்பவனும், கோபம், லோபம், பொறாமை ஆகிய இவைகள் இல்லாதவனும், சிரத்தையும், நம்பிக்கை உடையவனும் சிறப்புக்கு உரியவன் ஆகிறான், அவன் தானம் செய்யத் தக்கவன்.  பரிசுத்தமானவனும், புலன்களையும், கோபத்தையும் அடக்கியவனும், ஏழையானவனும், கல்வி, ஒழுக்கம் உள்ளவனும், பெரியதான குடும்பம் உள்ளவனும், பஞ்ச மகா யக்யங்கள் ஆகியவற்றை தவறாமல் செய்பவனும், அங்கங்களில் குறைபாடு இல்லாதவனும் ஆக இருத்தல் தானம் பெறுபவனுக்கான தர்மமாகும்.

பித்ரு காரியத்திலும், தேவ காரியத்திலும் அக்னி பூசையிலும் தானம் செய்வதில் பலன் அதிகம். எவன் எவன் எதற்கு தகுதி உடையவன் ஆகிறானோ அதற்கு அவன் பாத்திரமாகிறான். ஆபத்தில் இருப்பவனை ஆபத்தில் இருந்து விடுவிப்பதால் அவன் பாத்திரன் ஆகிறான். பசித்தவனுக்கு அன்னமிடல், தாகம் கொண்டனுக்கு நீர் அளித்தல் என ஒவ்வொருவரும் பாத்திரர்களாக ஆகின்றனர்.

கொடிய வஞ்சகத் தன்மை கொண்டவனும், திருட்டும், விபச்சாரம் செய்பவனும், ஆண் தன்மை அற்றவனும், பிற உயிர்களைக் கொல்பவனும், ஆசாரத்தை கெடுப்பவனும், உலகிற்கு கெடுதல் செய்பவனும் தானம் அளிப்பதில் இருந்து முற்றிலும் விலக்கத் தக்கவர்கள். பிறர் பொருளை திருடியும், தயை இல்லாதவன் இடத்தில் இருந்து வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும், தீய செயல்களை செய்தும், பொருள் ஆசையினால் பெரும்பாலானவர்களுக்கு தீங்கு இழைத்தும் மனிதர்கள் பெறும் தனம் மிகவும் இழிவானது. அப்படிப்பட்ட தனத்தில் செய்யப்படும் தர்மம் வீண் என்று அறிவாயாக. ஆகவே புண்ணியத்தை விருப்புகிறவன் நியாமாக ஈட்டிய பொருளை தானம் செய்ய வேண்டும். எது எக்காலத்திலும் தனக்கு பிரியமானதாக இருக்கிறதோ அதைத் தானம் செய்ய வேண்டும்.

இனி தானம் செய்யும் முறையைக் கூறுகிறேன் கேள்.

தகுதி உடையவனை நாடிச் சென்று அவனிடம் வேண்டி அவன் சந்தோஷம் கொள்ளுமாறு தானம் செய்ய வேண்டும். இதுவே சிறந்த முறை.  கேட்டப்பின் அளிப்பது என்பது இரண்டாம் தரமுடைய தானம் ஆகும். தானம் அளிக்கும் போது  அன்பு, அக்கறை, ஈடுபாடு கொண்டு செய்யவேண்டும். யாசிப்பவர்களை சரியான காலத்திலும், இடத்திலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைத்து தானம் செய்ய வேண்டும்.

தன் சக்திற்கு மேற்பட்ட தானம் மிகவும் உத்தமானது. தன் சக்திற்கு உட்பட்ட தானம் இரண்டாம் நிலை ஆகும். தன் சக்திற்கு மிக மிகக் குறைவாக செய்யப்படும் தானம் இழிவான தானம் ஆகும். வாக்கினால் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு தானம் செய்ய வேண்டும். புண்ணியத் தலங்களிலும், புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானம் மிகச்சிறந்ததானது.

உமை
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 9 (2019)

பாடல்

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே  எழுந்தருளும் அம்மானே! என் நெஞ்சத்தை உன்னிடத்திலேயே உறையுமாறு பண்படுத்தி வைத்துவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயையின் காரண காரியத்தை அறியாமல், அதனால் ஏற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன்; வயிற்றினோடு சேர்த்து மற்றைய ஏனைய உள்ளுறுப்புக்களையும்க் கட்டி அவை செயற்படாமல் மடக்கி இடுவதைப் போல வந்த விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ, செயற்பாடு இல்லாமல் மறைத்தோ,அஞ்சேல் என்று எனக்கு அருளியும் அபயம் அளித்திலீர்;  இதற்கு நிகரான வஞ்சகத்தினை யான் கண்டறியேன்.

விளக்க உரை

  • வல் + து + அம் = வஞ்சம் – பொய். நெஞ்சத்தினை இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல் இல்லாமல் மெய்யே என்றவாறு.
  • நஞ்சு ஆகி – நஞ்சின் இயல்புடையதாகி.
  • ஆகி – போன்று
  • என்னீர் – என்று சொல்லீர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)

பாடல்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமானை இகழ்ந்தமையால்அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டுஅழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும்  அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ!

விளக்க உரை

  • இறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.
  • அளிந்து – குழைந்து
  • சுளிந்து – வெகுண்டு
  • தூய் மொழியாள் : உமை.
  • தக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 7 (2019)

 

பாடல்

மூலம்

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

சொற் பிரிப்பு

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

பதவுரை

திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில்  குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும்  ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.

விளக்க உரை

  • அடல்-வீரம்.
  • திரு-திருமகள் விலாசம்
  • கடம்-மதம்.
  • தடம்-மதம் பிறக்கும் இடம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 6 (2019)

பாடல்

தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
     சுருதி கூறு வாராலு …… மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
     துரிய மாகி வேறாகி …… யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
     மெனவு நேர்மை நூல்கூறி …… நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
     நினைவொ டேகு மோர்நீதி …… மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
     யமர்செய் வீர ஈராறு …… புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
     அரியும் வாழ வானாளு …… மதிரேகா
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
     கருதி டார்கள் தீமூள …… முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
     கருணை மேரு வேதேவர் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும்  சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய  விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும்  பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு  நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால்  கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 3 (2019)

பாடல்

வீடென்ற வீடகத்தி னுண்மை காண
விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே
ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில்
அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர்
நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை
நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார்
சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே
சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே

சுப்ரமணியர் ஞானம்

பதவுரை

வீடு என்கின்ற உடம்பில் இருந்து முத்தியுலகத்தில் புகுவதாகிய அக வீட்டில் உண்மையாய் காணும் வழியையும், அகத்தினுள் புகுந்திடும் சூட்சமத்தை வெளிப்படையாக கூறுகிறேன். நடனத்தை பிரதானமாக உடைய சிவபெருமான் தன் தலை முடியில் கங்கையும், தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டு இருக்கிறார்; வினைகளை ஆராய்ந்து அதன் வழி உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை விருப்பமுடன் வைத்தே இந்த நானிலத்தை படைக்கிறார்; இளமை உடையவனானவனும், பெரியவனானவனும், கடவுளானவனும் ஆன விஷ்ணு தன் மார்பில் மகாலெட்சுமி ஆகிய வைத்திருக்கிறார்; இவர்கள் பெண் சக்தி துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள்; இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.

விளக்க உரை

  • சிவசக்தி ரூபகத்தை தன்னுள் காண வலியுறுத்துதல்.
  • சேடன் – ஆதிசேடன், நாகலோகவாசி,, நெசவுச்சாதியார், அடிமைக்காரன், கட்டிளமையோன், பெரியோன், தோழன், காதலுக்குத் துணைபுரிபவன், கடவுள்
  • சித்தர் பாடல் என்பதால், பல சூட்சங்கள் அடங்கியது என்பதாலும், ஆதார சக்கரங்கள் முன்வைத்து உரைக்கப்படுவதாலும், பாடலின் கருத்துக்கள் மறை பொருளாக உரைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய விருப்பம் உள்ளவர்கள் குரு முகமாக பெறுக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)

பாடல்

மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து  காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

  • தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
  • சேய – செம்மையான
  • கனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்
  • மாய விளக்கு  – இயற்கை ஒளி
  • தூய விளக்கு   – ஞான ஒளி
  • காய  விளக்கு  – உள் ஒளி
  • சேய விளக்கு  – சிவ ஒளி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 1 (2019)

பாடல்

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
     இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
     சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
     அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
     கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வலிமை மிகுந்ததும்,  மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும்,  இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன  ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!

விளக்க உரை

  • இரும்பு  –  அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
  • சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி;  ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 30 (2019)

பாடல்

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
     விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
     அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
     கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
     கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா -வள்ளலார்

பதவுரை

அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின்  அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து,  மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு,  கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ?  நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.

விளக்க உரை

  • தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
  • கேவல நிலையில்  ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
  • ‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’  –   உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
  • கிளத்தல் – சொல்லுதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 29 (2019)

பாடல்

செந்தமிழோர் தொழும் தண்டாயுதமும் திருவழகும்
சுந்தரமும் பச்சைக் கஞ்சுகம் தானும் கருதரிய
இந்தணி வட்டச் சடையும் கண்குன்றும் இருபதங்களும்
சந்ததமும் மறவேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வளமை வாய்ந்த தமிழ் மொழியை கொண்டவர்களான தமிழர்கள் தொழும்படியாக தண்டாயுதத்தைக் கொண்டவனே! பொலியும் முகம் கொண்டவனே! அழகிய வடிவம் கொண்டவனே! பச்சை நிறமுடைய ஆடை அணிந்தவனே! சந்திரனை அணிந்த வட்ட வடிவமான சடையை கொண்டவவனே! குன்று போல் கண்களை உடையவவனே* உனது இரு பாதங்களையும் எப்பொழும் மறவேன்.

விளக்க உரை

  • * அழகியலுக்காக உரைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 28 (2019)

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே!  நோய்களிடம் இருந்து  நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன்,  செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக்  கொண்டு, அந்த வினைகளை  அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய்,  அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

விளக்க உரை

  • பெற்றம் – விடை
  • பணி – கருமம்
  • பாசனம் – சுற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 27 (2019)

பாடல்

சிந்தா மணியின் பூசைசெய்தால்
      செகத்தில் எவர்க்கும் குறைவருமோ
   செல்வ முடனே கல்விஅருள்
      திரளாய் விளையும் என்பவெல்லாம்

முன்றா னான போதிலையே
      முதல்வி உன்றன் அருளுலகில்
   மூழ்கிக் கனமாய் வினையிருளும்
      முறியப் படர்ந்து மறைந்ததுபோல்

இந்தா எனவே நீகொடுத்த
      இயல்பே யல்லால் மானிடரோ(டு)
   ஏற்கை சேர்க்கை அவர்உரைத்த(து)
      ஏதா கினுமுண் கோஉரையாய்

மைந்தா எனவே அமுதளித்த
      வகையும் நீயும் மறந்தாயோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! எனது மைந்தனே என்று என்னை அழைத்து அமுதளித்த வகையினை நீ மறந்து விட்டாயா! விரும்பியது அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி ஆகிய சிந்தாமணி மந்திரம் கொண்டு பூசை செய்தால் இந்த செகத்தில் எவர்க்கும் குறைவருமோ? செல்வம், கல்வி, அருள் ஆகியவை விளைந்தன; முதல்வி ஆகிய உன் அருள் உலகில் காலத்தால் அறிவிக்கப் பெறும் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற காலங்கள் இல்லை; அவ்வாறான காலங்களில் கனமாக சூழ்ந்து இருக்கும் வினை இருளும் விலகியது; இவ்வாறு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் உன் இயல்பான கொடுக்கும் தன்மையினால் கிடைக்கப் பெற்றவை; அவ்வாறான இயல்பாக  கொடுக்கும் தன்மை இல்லாத மானிடர்களை ஏற்பதும், அவர்களோடு சேருவதும், சேர்ந்து சொல்லுதலும் ஏதாவது உண்டா? இதை உரைப்பாய்.

விளக்க உரை

  • இந்தா எனவே நீகொடுத்த இயல்பே – எதையும் எதிர்பாராமல் இயல்பாக கொடுக்கும் குணம் அன்னைக்கு உரியது என்பதை வலியுறுத்தியே இவ்வரிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 26 (2019)

பாடல்

நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
     நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
     நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
     மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
     சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே

அகத்தியர் சௌமிய சாகரம்

பதவுரை

மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை  வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில்  தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு,  தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.

விளக்க உரை

  • நலங்குதல் – நொந்துபோதல்; வருந்துதல்; நுடங்குதல்; கசங்குதல்
  • மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒன்றுபட்ட நிலையில்  ஆத்ம ஜோதியை நாடுவது எளியதும், சாத்தியமாகவும் ஆகிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்