பாடல்
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே
யோக ஞானம்
கருத்து – முருகப்பெருமான், அகத்திய மாமுனிக்கு பராசக்தியின் மூலத்தை காட்டி அருளி நிர்விகல்ப சமாதியில் நின்று ஆச்சரியத்தை காணும்படி செய்தது பற்றி விளக்கும் பாடல்.
பதவுரை
பராசக்தியின் மூலத்தை உனக்காக உரைத்து வைத்தேன் பார்ப்பாயாக, அகத்திய மாமுனியே, என்னைவிடுத்து உனக்கு யார் அந்த மூலத்தின் மகிமையை சொல்லமுடியும். கனவு நிலையில் (நிலையற்றது) இல்லாமல் மனதை ஒருநிலைபடுத்தி நிர்விகல்ப சமாதி எனும் காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலையினை தாண்டி மேலே செல்வாயாக. இதனை வெறும் பேச்சாக பேசிடாமல் உச்ச நிலைஆகிய வெட்ட வெளியினை நாடி அங்கு கிடைக்கப் பெறும் விந்தையான அனுபங்களைக் காண்பாயாக.