பாடல்
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு …… மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி …… யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி …… நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி …… மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு …… புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு …… மதிரேகா
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தீமூள …… முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் …… பெருமாளே
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும் பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால் கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?