பாடல்
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
ஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.
விளக்க உரை
- யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
- குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.