அமுதமொழி – சார்வரி – ஆனி – 30 (2020)


பாடல்

திங்கள்செஞ் சடையு மோர்பாற் றிருமுடி துலங்கக் கையிற்
கங்கண மிலங்கக் காலிற் கவின்சிலம் பலம்ப வன்பர்
சங்கரா வெனநின் றேத்தத் தாயெனக் கிருபை நல்கி
அங்கமொன் றான சோதி யணியணா மலையு ளானே

திருவண்ணாமலைப் பதிகம் – திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்

கருத்து – அண்ணாமலைத் தலத்து ஈசனை புகந்து கருணைக் கொண்டு தாயென அருள வேண்டும் என விளிம்பும்  பாடல்.

பதவுரை

தனது செஞ்சடையில் சந்திரனை சூடியும், கையில் ஒளி வீசக்கூடியதான கங்கணமும் அணிந்து, அழகு பொருந்தியதும் ஒலிக்கக்கூடியதுமான சிலம்பும் அணிந்து சோதி வடிவமாக திருஅண்ணாமலை திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! உனது அன்பர்கள் சங்கரா என நின்னை நினைந்து ஏத்தி புகழ் சொற்களை தாயேனக் கருதி உன்னுடைய கருணையினை அருள்வாய்.

விளக்க உரை

  • இலங்குதல் – ஒளிசெய்தல், விளக்கமாகத் தெரிதல்
  • கவின் – அழகு
  • அலம்புதல் – ஒலித்தல், ததும்புதல், தவறுதல், அலைதல், கழுவுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 29 (2020)


பாடல்

சொன்னந் தருங்குருவே சோணா சலத்தானே
இன்னம் பிறந்தாலு மிப்படிநின் – சன்னிதியை
நாடக் கிடைத்திடுமோ நன்னெஞ்சே நாமவரைக்
கூடக் கிடைத்திடுமோ கூறு

திருவருணைத் தனிவெண்பா – குகைநமசிவாய சுவாமிகள்

கருத்து – விலை மதிக்க இயலா புறப்பொருள்கள் கிடைத்தாலும் உன்னுடைய அருள் கிடைக்கப் பெறுமோ என்று நினைந்து உருகும்  பாடல்.

பதவுரை

சொன்னம் எனப்படும் தங்கத்தினை தரக்கூடிய குருவே, சோணாசலம் என்ற திருவண்ணாமலையில் வாழும் ஈசனே! இன்னமும் பிறப்பு என்று ஒன்று இருக்குமாயின் இவ்வாறே உன்னுடைய சன்னதியை நாடி இருக்குமாறு கிடைத்திடுமோ? நன்நெஞ்சே உன்னுடைய திருநாமத்தினை கூறும் படியான வாழ்வு மட்டுமாவது கிடைக்கப் பெறுமோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 28 (2020)


பாடல்

நங்காய் இதென்னதவம்
     நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
     காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
     காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
     தரித்தனன்காண் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அல்ல என்றும் அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதம் பொருட்டு ஈசன் திருமேனி எலும்பு மாலை கொண்டு விளக்கம் அளிக்கும் பாடல்.

பதவுரை

ஏ! தோழியே! நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்தும், எலும்புகளை விரும்பி தோளில் சுமந்தான், இது என்ன தவ வடிவம் என்று புதியவள் வினவினாள்; எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக கால, கால வேற்றுமையால் ஒவ்வொரு ஊழிக்கால முடிவிலும் திருமால்,பிரமன் ஆகிய இருவரது வாழ்நாளை முடிவு செய்து அவர்கள் எலும்பைத் தரித்தனன் என்பதை அறிக.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை
  • கங்காளம் – எலும்புக்கூடு
  • செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர் எனும் திருமுறை பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது

 

1

மனுஷ வருஷம்

1 தெய்வீக நாள்

360

தெய்வீக நாள்

1 தெய்வீக ஆண்டு

12000

தெய்வீக ஆண்டுகள்

1 சதுர் யுகம்

 

கிருத யுகம்

4800

தெய்வீக ஆண்டுகள்

17,28,000

மனித ஆண்டுகள்

திரேதா யுகம்

3600

தெய்வீக ஆண்டுகள்

12,96,000

மனித ஆண்டுகள்

துவாபர யுகம்

2400

தெய்வீக ஆண்டுகள்

8,64,000

மனித ஆண்டுகள்

கலி யுகம்

1200

தெய்வீக ஆண்டுகள்

4,32,000

மனித ஆண்டுகள்

சதுர் யுகம்

12000

தெய்வீக ஆண்டுகள்

43,20,000

மனித ஆண்டுகள்

 

71

சதுர் யுகம்

1 மநுவந்தரம்

                 8,52,000

தெய்வீக ஆண்டுகள்

1000

சதுர் யுகம்

1 கல்பம்

        432,00,00,000

மனித ஆண்டுகள்

2

கல்பம்

1 பிரம்ம நாள்

        864,00,00,000

மனித ஆண்டுகள்

360

பிரம்ம நாள்

1 பிரம்ம ஆண்டு

3,11,040,00,00,000

மனித ஆண்டுகள்

 

2,00,00,000 பிரம்மாவின் ஆயுள் – விஷ்ணுவின் ஒரு நாள்

1,00,00,000 விஷ்ணுவின்  ஆயுள் – சிவன் புன்னகைக்கும் நேரம் *

*நீட்சியும் குறுக்கமும் சிவம் மட்டுமே அறியும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 27 (2020)


பாடல்

எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்

சிவபோகசாரம்

கருத்துஉலக உயிர்களில் ஈசன் நிறைந்து இருப்பதால், ஈசன் நம்மைக் காப்பான் என்ற உறுதியான எண்ணம் கொள்ள செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உடல் பற்றியும் அதில் வரும் துன்பங்கள் பற்றியும் துயர் கொண்டு வாடும் நெஞ்சமே! எல்லா உயிர்களிடத்திலும் அவைகளின் வினைகளை நீக்கி அவைகளை காக்க ஈசன் இருக்கிறான் அல்லவா; அவ்வாறான உயிர் கூட்டத்தில் நாமும் ஒருவன் அல்லவா; ஈசன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதால் பிற உயிர்களை வெறுத்தல் முதலியன செய்தல் ஆகாது; எனவே வருகின்ற இன்ப துன்பங்கள் தானே வரும் என்று கொண்டு அவ்வாறு வாடுதலை விலக்க வேண்டும்.

விளக்க உரை

  • வவ்வுதல் – கவர்தல், பற்றிக்கொள்ளுதல், வாருதல்
  • புழுங்குதல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்
  • வருகுவதும், புழுங்குவதும் – வருவதும், போவதும் ஈசன் செயலால் நிகழ்த்தப்படுதலை கூறுபவை
  • வருகுவதும் தானே வரும், எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ என்ற வாக்கியங்களை இணைத்து வினைபற்றி வரும் துயர்கள் வரும் என்பதும் அவைகள் வராமல் காக்க ஈசன் இருக்கிறான் என்பதும் பொருள் பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 26 (2020)


பாடல்

சீர்கொண்ட வகிலந் தனில்வாழு மாந்தர் செய்கொடி தப்பிதத்தை
ஏர்கொண்ட வுன்றன் வாளா லறுத்து மிரட்சிக்கு முலகம்மை நீ
ஆர்கண்டு நின்சீடருரை செப்பவல்ல வனாதரட்சகி நீயலோ
வார்கொண்ட வுண்ணாமுலை நாமதேவி வரவேணு மென்றனருகே

உண்ணாமுலையம்மன் பதிகம்

கருத்து – உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல எவரால் இயலும் என்பதை பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை ஆகியவற்றைத் தரக்கூடிய இந்த உலகத்தில், மாந்தர்கள் எனப்படும் மக்கள் செய்யக்கூடிய கொடுமையான நெறி தவறும் குற்றம் ஆகிய தவறுகளை ஏற்றுக்கொண்டு உந்தன் வாள் கூர்மையான ஒளிபொருந்திய வாளால் அறுத்து ரட்சிக்கும் உலகத்திற்கு அன்னை நீ, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் உண்ணாமுலை எனும் பெயர் கொண்டவளே, உதவி எவரும் இல்லோரை ரட்சிக்கக் கூடியவள் நீ அல்லவா! எவர் உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல இயலும் (அஃது போலவே என்னைக் காப்பதன் பொருட்டு) என்னருகே வரவேண்டும்.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 25 (2020)


பாடல்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே

அகஸ்தியர் ஞானம்

கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.

பதவுரை

அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது;  வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று  உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.

விளக்க உரை

  • அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
  • உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
  • ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி

சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Flash of light from colliding black holes


1. Flash of light from colliding black holes

2. Black holes aren’t supposed to make flashes of light. It’s right there in the name: black holes.

3. There’s a lot we can learn about these two merging black holes and the environment they were in based on this signal that they sort of inadvertently created.

4. These objects swarm like angry bees around the monstrous queen bee at the center

5. The force of the merger sends the now-a-little-larger black hole flying off, through the gas surrounding it in the supermassive black hole’s accretion disk. The gas, in turn, produces the flare after a delay of days or weeks.

Source: https://www.space.com/black-holes-collision-flash-of-light.html

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
வூட்ல, அடுப்பாங்கரையில ஒரு வெளக்கு எரியல, அத பார்க்க துப்பில்லை, Black holes மோதி வெளிச்சம் வர்றத பத்தி ஆராய்ச்சி செய்யறாரா,

2.
இது இன்னாப்பா, ஒன்னுமே பிரியல.

அதுக்குத்தான் என்னைய மாதிரி மூணாப்பு வரைக்குமாவது படிக்கனுங்கிறது. நீ நம்ம கணேசன்ட 1000 ரூபாய் கடன் வாங்கினேல்ல அதுக்கு வட்டி 500ரூ, அந்த சல்லிபயகிட்ட, அட அவன் தாப்பா, அவன்கிட்ட ஒரு 2000 வாங்கி இருக்க, அதுக்கு வட்டி 1500, ஆக மொத்தம் எவ்வளவு ஆச்சு, கணக்குபண்ணி சொல்லு. இப்ப உன் கண்ணுல ஒரு ஒளி தெரியுதா, அதான் இது.

3.
ஓவரா இருக்க, நாம சம்பாதிக்கிறதே இந்த EB பில்லு கட்டத்தானா, பேசாம ரெண்டு Black holes புடிச்சிகிட்டு வந்து ஒன்னு சேர்த்து வெளிச்சத்த பார்த்துக்க வேண்டியது தான்.

4.
Black holes அப்டீன்னாக்கா, ஒண்ணுமே இல்ல. அதாவது உள்ளுக்குள்ள ஏதுவும் போகாது, போனாலும் திரும்பி வராது. உங்கள மாதிரி பசங்க அப்டீன்னு வச்சிகீங்க. அவை ஒன்னு சேரும்போது…

சார், பெல் அடிச்சிடுச்சி சார், அடுத்த கிளாஸ்ல பார்ப்போம்.

5.

ஏம்மச்சான், அங்க என்ன ஒளி தெரியுது, ஏதாவது Black holes collection ஆகி இருக்குமோ?

அடச்சை, பீர் பாட்டில் மூடிய மோந்து பார்த்தாலே மயக்கம் ஆற பய நீ, உனக்கு போய் Hennessy Limited Edition வாங்கி குடுத்தனே.

ஒளி இருக்குன்னா சைட்டிஷ் இருக்கும்ல மச்சான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 23 (2020)


பாடல்

பொன்னை நாடி நாடி நொந்து
   புலர்ந்த துன்பம் போதும் போதும்
உன்னை நம்பிச் சித்தி எட்டும்
   உற்று வக்கும் உவகை ஈவாய்!
முன்னை வேத முடிவில் ஆடி
   மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்!
தென்னை போலும் வாழை நீடும்
   திருத்து றையூர்ச் சிவபி ரானே!

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம் – திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

கருத்து – பொன்னாசை விடுத்து உன்னை அடைந்ததால் அட்டமாசித்தி அருள திருத்துறையூர் சிவனிடத்தில் வேண்டும் பாடல்.

பதவுரை

நீர் குறைவான போதும் வளரும் தென்னை மரங்களும், நீர் அதிகமான இடத்திலே வளரும் வாழை மரங்களும் இருக்கப்பெற்றதான திருத்துறையில் உறைகின்ற சிவனே, வேதத்தின் முடிவுகள் உன்னைப் போற்றும்படி ஆடி ப்ரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மூவரும் போற்றும்படியாக அவர்களுக்கு முதல்வன் ஆனவனே! உலகியல் வாழ்வு சார்ந்து பொன்னைத் தேடித் தேடி அதன் காரணமாக துயரம் அடையப்பெற்று அதன் காரணமாக தளர்ந்து அடையப்பெற்ற துன்பம் போதும்; உன்னை நம்பி இருப்பதன் காரணமாக சித்தத்தன்மையினை கொடுக்கக்கூடிய  அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்துக்களையும், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய மனதால் எய்தும் சித்துக்களையும் மகிழ்வுடன் களிப்பு கொள்ளுமாறு அருள்வாய்.

விளக்க உரை

  • நடுநாட்டுத் தலம்
  • உவகை – உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு
  • அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  • மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
  • இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  • கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  • பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  • பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  • ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  • வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 22 (2020)


பாடல்

கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்
     சாதி இல்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு
     ஒருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்
     மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்
பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு
     இல்லை பேச்சுத் தானே

தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்

கருத்து – பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை எனும் பழமொழியினை உறுதி செய்ய திருத்தண்டலை இறைவனை முன்வைத்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு சாதி வேறுபாடுகள் இல்லை; வீடு பெறுதற்கு தவம் செய்பவர்கள் ஆகிய துறந்தவர்களுக்கு விருப்பம் என்பது இல்லை(வெறுப்பும் இல்லை என்பது மறை பொருள்); நன்மை செய்வதையே திடமாக் கொண்டு வாழும் நல்லவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் தரதக்கதான நரகம் என்பது இல்லை; நெறி முறைகளோடு கூடி சிறந்த முறையில் ஆட்சி செய்யும் கொற்றவன் எனும் அரசனுக்கு அடிமை என்பது இல்லை; யாசித்து உண்பவனுக்கு பேச்சு என்பதே இல்லை; மலர் போன்ற பாதங்களை உடைய தண்டலையார் பதம் பணிபவர்களுக்கு பிறப்பு என்பது இல்லை.

விளக்க உரை

  • தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீள்நெறி‘ என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்
  • சிறப்புடைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இதற்கு பழமொழி விளக்கம் எனும் பெயரும் உண்டு. (பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்)
  • தில்லையில் பொருள் இல்லாமல் தங்கி இருந்தபோது தில்லை சிவகாமி அம்மையைப் பாடிய போது,   அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகள் வீழ்ந்தன; காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது அன்றுமுதல் – படிக்காசுப் புலவர்
  • தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 21 (2020)


பாடல்

கலங்காத சித்தமுஞ் செல்வமுஞ் ஞானமுங்
   கல்வியுங் கருணை விளைவுங்
கருதரிய வடிவமும் போகமுந் த்யாகமுங்
   கனரூப முள மங்கையும்
அலங்காத வீரமும் பொறுமையுந் தந்திரமு
   மாண்மையு மமுத மொழியு
மானவிச் செயலெலாஞ் சனனவா சனையினா
   லாகிவரு மன்றி நிலமேல்
நலஞ்சேரு மொருவரைப் பார்த்தது பெறக்கருதி
   னண்ணுமோர் ரஸ்தாளி தன்
னற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
   நாள்செயினும் வாராது காண்
அலங்கார மாகமலர் கொன்றைமா லிகைசூடு
   மண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
  ரறப்பளீ சுர தேவனே

சதுரகிரி அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – ஒருவருக்கு வரும் நற்செயல்கள், அழகு, ஞானம் ஆகியவை பிறவி வாசனயினல்  வரும் என்றும் அவை குறித்து மற்றவர்கள் பெற கருதக்கூடாது என்பதை உவமையுடம் கூறும் பாடல்.

பதவுரை

அலங்காரமாக மலர்களுடன் கொன்றை மாலையை சூடிடும் அண்ணலே, அழகும் வனப்பும் கொண்டவனே, உள்ளத்தில் அனுதினமும்  இன்பத்தைத் தரும் சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுர தேவனே! முன் செய்த வினைகளின் காரணமாக துயர் வரும்போது இருக்கும் கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும், கல்வியும், கருணை கொண்ட வடிவமும், அளவற்ற இன்பமும், தியாகமும், அழகிய வடிவமுடைய மணத்தலும், ஒளிவீசி புகழ் தரும்படியான வீரமும், பொறுமையும், தந்திரமும், சிறப்புகளும், சிறப்புகள் உடைய பேச்சும், மானம் கொண்டு செய்யப்படும் செயல்களும் பிறவி வாசனயினல் இந்த புவிதனில் வரும்; இவ்வாறு நலங்கள் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அதைப் பெறக்கருதுவது என்பது ரஸ்தாளி எனும் வாழைப்பழ சுவை தனக்கு வரவேண்டும் என வேம்பு நீண்ட நாட்கள் தவம் செய்தலுக்கு ஒப்பானது; (கிட்டாது என்பது முடிபு)

விளக்க உரை

  • அலங்குதல் – அசைதல், மனந்தத்தளித்தல், இரங்குதல், ஒளிசெய்தல்
  • மத – மடன், வலிமை, மிகுதி, வனப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 20 (2020)


பாடல்

பொற்புறு சபையின் மாதரார் நடனம்
     புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
     தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
     மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
     கற்குடி மாமலைப் பரனே

திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும்  பாடல்.

பதவுரை

கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ  எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?

விளக்க உரை

  • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
  • தற்போதைய பெயர் உய்யக்கொண்டான்மலை
  • முசுக்கள் – கருங்குரங்குகள்
  • மற்பொரு – மல் பொரு – மல்யுத்தம், மதம் கொண்ட யானை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 19 (2020)


பாடல்

இருக்கெலாமள விட்டின்னு மினைத்தென வறியவெட்டாத்
திருக்குலாவிய பேரின்பச் செழுங்கட றிளைக்கலாமால்
மருக்கலாரங் கண்மொய்த்தவா விசூழ்காஞ்சி வாழ்வுற்
றிருக்குமானந் தருத்திரே சனையிறைஞ் சினோர்க்கே

கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம். – சிவஞான யோகிகள் அருளிய பிரபந்தத் திரட்டு – பாகம் 5

கருத்து – காஞ்சியில் வீற்றிருக்கும் ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறும்    பாடல்.

பதவுரை

மால் மருகன் என்று அழைக்கப்படுபவனாகிய குமரனின் கண்பார்வையில் இருக்கும்படியான காஞ்சி மாநகரில், சைவப்பிரிவுகளில் ஒன்றானதும், மந்திரமார்க்கக் கிளைநெறி ஆனதும், சிவனின் முதன்மை வடிவமாக கபாலீச பைரவரையும் அவர் தேவி, சண்டகபாலினியையும் போற்றி வணங்குவதுமான யாமளம வீட்டில் அறிய இயலாத சிறப்புடையதும், பெருமை உடையதும், நிலைபெற்று விளங்கக்கூடியதுமான இறைவன் ஆகிய ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள்.

விளக்க உரை

  • யாமளம் – கபாலீச வைரவரும் அகோரேசுவரியும் இவர்களது வழிபடு தெய்வங்கள். சில யாமள நூல்கள், அகோரேசுவரியை, சண்டகபாலினி என்று அழைக்கின்றன. பிரமயாமள தந்திரம்/ பாசுபத தந்திரம், பிங்களாமத தந்திரம் முதலானவை இவர்களுக்குரியவை.
  • யாமளர் – தம்மைத் தாமே அறிந்து சிவத்தை உணர்ந்ததன் மூலம், இவர்கள் தாமும் சிவரூபமாக மாறியவர்கள் .குருநாதர்கள் எண்மர் – சுவச்சண்டர், குரோதர், உன்மத்தர், உக்கிரர், கபாலி, சங்கரர், சேகரர், விஜயர் எனும் எட்டு வைரவர்கள், உருத்திரம், ஸ்கந்தம், பிரமம், விஷ்ணு, யமம், வாயு, குபேரம், இந்திரம் ஆகியவை எட்டு யாமள நூல்கள்
  • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், பூந்துகில், புகைகூடி, கொண்டாடுதல்
  • இறைஞ்சுதல் – தாழ்தல், கவிழ்தல், வளைதல், வணங்குதல்

மூலப்பாடலின் எழுத்துக்கள் சரியாக அறியப்படாமையாலும், சொற்பிரிப்பு சரியாக இல்லாததாலும் பாடலில் எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்கலாம். அதுபற்றி விளக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 18 (2020)


பாடல்

தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
தானே குடைவேந் தனித்து

திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்

கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும்  ஒருங்கே தியானிப்போம்.

விளக்க உரை

  • இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
  • வெண்மையும் தண்மையும் கங்கைக்கு உரித்தானவை
  • குடைவேம் – ஆடுவேம் – தியானிப்போம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 17 (2020)


பாடல்

தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும்; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே

மாயூர நாதர் அந்தாதி – வே. முத்துஸாமி ஐயர்

கருத்து – வினை அற மயூர நாதனை வேண்டாமல் புறத்தில் நிலையற்றவற்றை வேண்டி நிற்றலை பழிக்கும்  பாடல்.

பதவுரை

தன்னுடைய தேவைகளுக்காக தன்னுடை குமாரனிடம் பலப்பல நாளும் வேண்டி நிற்பார்கள்; அதற்கு தகுதியான நலத்தினை பெற மாட்டார்கள்; மனைவி, குடும்பம், பெருமை தக்கதான புகழ், முதன்மையான வாழ்வு ஆகியவற்றையும் வேண்டி நிற்பார்கள்; வேண்டியவற்றை ஈந்தளிக்கும் பாரியிடம் செல்வமும் வேண்டுவார்கள்; ஆனால் பிறவிக்காரணமான பிணி தீரவும், வினை அனைத்தும் கெடவும் மாயூர வள்ளல் எனப்படும் மயூர நாதரை வேண்ட மாட்டார்கள்

விளக்க உரை

  • தனையன் – குமாரன்
  • பவம் – பிறப்பு, உலக வாழ்க்கை, உலகம், கரணம் பதினொன்றனுள் ஒன்று
  • பனையன் – பாரி (பாரிக்கு நிகராக வழங்குபவர்கள்) எனவும் கொள்ளலாம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருச்சுழியல்

தலவரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருச்சுழியல்

  • அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
  • துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
  • ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
  • சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
  • திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
  • அஷ்டலிங்கங்கள் – வேல்லியம்பலனாதர், சோமசேகரர், கௌண்டின்ய லிங்கம், காலவ லிங்கம், கண்ணுவ லிங்கம், காமீஸ்வர லிங்கம், கிருதாந்தகேஸ்வர லிங்கம், தினகரேஸ்வர லிங்கம் அமையப் பெற்றத் திருத்தலம்
  • ஸ்ரீ ரமண மகரிஷி அவதாரத் தலம்
  • தனிக்கோயிலில் பிரளவிடங்கர்
  • மலைநாட்டு மன்னன் ஏமரதன் மகளான மாலினி சிவனாரை வழிபட்டு வேதாள சங்கை நோய் நீங்கப்பெற்ற தலம்
  • மாளவதேசத்து மன்னன் சோமசீதளன் சிவனாரை வழிபட்டு வெண்குஷ்ட ரோகம் நீங்கப்பெற்ற தலம்
  • திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பு
  • அம்பாள் சந்நிதி முன்பு கிணறு – அர்ஜூனன், சித்திராங்கதையுடன் இத்தலத்தை தரிசிக்க வந்தபோது காண்டீபத்தின் முனையால் உண்டாக்கிய கோடி தீர்த்தம்
  • எல்லை தீர்த்தங்கள் – கிழக்கில் கண்ணுவ தீர்த்தம், மேற்கே பன்னக சைலம், வடக்கே காலவ தீர்த்தம், தெற்கே கோபிதார்வன தீர்த்தம்

துணைமாலையம்மை உடனாகிய திருமேனிநாதர்

புகைப்படங்கள் : இணையம்

தலம்

திருச்சுழியல்

பிற பெயர்கள்

திருச்சுழி, பரிதிகுடி நாடு, வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி

இறைவன்

திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மனக்கோலநாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர், பூமிநாதர்

இறைவி

துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை

தல விருட்சம்

அரசமரம், புன்னைமரம் 

தீர்த்தம்

பாகவரிநதி, கௌண்டின்ய ஆறு என்கின்ற குண்டாறு, கவ்வைக்கடல்          ( ஒலிப்புணரி ), பூமி தீர்த்த , சூல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞானவாவி, கோடி தீர்த்தம் 

விழாக்கள்

சித்திரை விஷூ, சித்ராபௌர்ணமி, ஆடித்தபசு, ஆவணிமூலம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம்

மாவட்டம்

விருதுநகர் 

முகவரி  / திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்
திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம்
PIN – 626129. Ph. 04566 – 282 644

காலை5.00 மணிமுதல்12.00மணிவரை,
மாலை4.00 மணிமுதல்இரவு 8.00 மணிவரை

வழிபட்டவர்கள்

திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அர்ஜுனன், சித்திராங்கதை, காலவமுனிவர், சதானந்தர்,  மன்மதன், கந்தர்வர்களான சித்ரத்வசன் மற்றும் சித்ரரூபன், கிருதாந்தகன் என்ற அசுரன், சேரமான் பெருமாள் நாயனார், பராக்கிரம வழுதி, இந்திரத்யும்ன பாண்டியன், சுந்தரசேன பாண்டியன்

பாடியவர்கள்

சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 82 வது பதிகம்)

நிர்வாகம்

இந்துஅறநிலையத்துறை

இருப்பிடம்

மதுரையில் இருந்து 48 கிமீ தொலைவு, அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு

இதரகுறிப்புகள்

தேவாரத்தலங்களில் 202 வதுதலம்

பாண்டிய நாட்டுத் தலங்களில் இத்தலம் 12 வதுதலம்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 2

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே

பொருள்

தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள்  இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 7

பாடல்

சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே

பொருள்

சிவாகமங்களில் கூறப்பட்டவாறு வேடத்தையுடைய செம்மையான சிவந்த திருமேனியை உடையவனாய் திருநீற்றை அணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை உடையவனும், கையினில் ஒரு வில்லைக் கொண்டபோது கண்களாலேயே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோரும் அதற்கு நிகரானவர்களும் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவன் உறையும் திருத்தலமாகிய திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைப்பவர்களது வினைகள் நீங்குதல் எளிது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 16 (2020)


பாடல்

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
   திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
   தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
   துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
   தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
   மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
   வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
   காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை  ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை  உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக  திசைகளே ஆடையாக  அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.

விளக்க உரை

  • கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
  • கமுகம் – கூட்டம், திரட்சி
  • தெவிட்டல் – உமிழப்பட்டது
  • வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 12 (2020)


பாடல்

மூலம்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

பதப்பிரிப்பு

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே! சகலகலாவல்லியே

சகலகலாவல்லி மாலை  – குமரகுருபரர்

கருத்து – சகலகலாவல்லியிடம் பல்வேறு கவித் திறமை பெற்று மூலம் செல்வம் வேண்டி நிற்கும்  பாடல்.

பதவுரை

அழகிய ஆசனமான செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் அரியதானது என்றும், நமக்கு வாய்க்கப் பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாதவாறு காலத்தால் அழியாத கல்வி  என்றும் மெய் ஞானம் என்றும்  அழைக்கப் பெறுவதுமான பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! சொல்வன்மையாகிய சொற்களை கையாள்வதில் திறமையும், அட்டாவதானம் தசாவதானம் சோடசாவதானம்  சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும், சித்திரக்கவி, சக்கரக்கவி, வரகவி போன்ற சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத் தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக.

விளக்க உரை

  • அட்டாவதானம் – ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • தசாவதானம் – ஒரே சமயத்தில் பத்து காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சோடசாவதானம் – ஒரே சமயத்தில் பதினாறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சதாவதானம் – ஒரே சமயத்தில் நூறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சித்திரக் கவி வகைகள் – கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாக பந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைப்பாட்டு, சக்கர பந்தம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 11 (2020)


பாடல்

கொள்ளாத பசுவுக்குப் பாலங்கேது
   குருடான கண்ணுக்கு வெளிச்சமேது
சொல்லாத பேச்சுக்குக் கேள்வியேது
   சோரஞ்செய் மங்கையர்க்கு வாழ்வுமேது
கல்லாத வீணருக்குக் கல்வியேது
   காணா பேர்களுக்கு காட்சியேது
விள்ளாத சிடனுக்குக் குருவுமேது
   வேடிக்கையாய்த் திரிந்தால் விழலாம்பாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துகிட்டாதவை என்பதை உதாரணங்களாக காட்டி மனித வாழ்வினில் வேடிக்கையாக பொழுதினை போக்கி திரிதல் கூடாது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பசு தயாராக இருந்தாலும் அதை ஏற்காத கன்றுக்கு பால் எங்கனம் கிடைக்கும்? பார்வை அற்ற கண்களை உடையவர்களுக்கு வெளிச்சம் என்பது எங்கனம் இருக்கும்? உச்சரித்து சொல்லப்படாத சொல் குறித்து கேள்வி என்பது எப்படி எழும்? தர்ம நெறி விலகிய கற்பு இல்லா மங்கையர்களுக்கு வாழ்வு என்பது எங்கனம் கிட்டும்? நூல்களைக் கல்லாதவருக்கு கல்வி எங்கனம் கிட்டும்? மெய்ஞானம் அடைதல் பொருட்டி விரும்பி அதன் பாதையில் செல்லாதவர்களுக்கு காட்சி எங்கனம் கிட்டும்? தெளிவு அடைதல் பொருட்டு வாய் திறக்காத சீடனுக்கு குருவானவர் எங்கனம் கிட்டுவார்? இவை போல பிறப்பின் நோக்கம் அறியாமல் வேடிக்கையாக திரிந்தால் மண்ணில் விழ மட்டுமே செய்யும்.

விளக்க உரை

  • விள்ளுதல் – மலர்தல், உடைதல், வெடித்தல், பிளத்தல், பகைத்தல், மாறுபடுதல், தெளிவாதல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், வாய் முதலியன திறத்தல், புதிர் முதலியன விடுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 10 (2020)


பாடல்

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துநிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.

பதவுரை

பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.

விளக்க உரை

  • ஓர்தல் – ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்
  • இன்றுளார் – இன்றைக்கு இருப்பவர்
  • நாளை இல்லை – மறுநாள் இல்லாதவராவர்
  • உழி தரும் – திரியும்
  • பேசாத நாளெல்லாம் பிறவா நாளே‘ என்ற வாக்கிற்கு இணங்க பேசாதவர்களை ஊமை என்று அழைத்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 9 (2020)


பாடல்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமண்டல பரத்தின் பெருமையும், அஃது ஈசனின் இருப்பிடன் எனவும், அங்கு உறையும் ஈசன் உயிர்கட்கு அருள் புரியும் தன்மையையும் கூறும் பாடல்.

பதவுரை

உச்சிக்குமேல்பன்னிரண்டுஅங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாதசாந்தத்தில் நிற்பதனால் ஏனைய கடவுளர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளாகவும்,  தனது மேம்பட்ட சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குபவனாக இருப்பவனாகவும், நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாகவும் இருக்கும் நந்திப்பெருமான் எனும் பரம்பொருள் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்து ஆட்கொண்டு அருளிய பின் குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

விளக்க உரை

  • மாபரம் ஆயது – ஏனைய தெய்வங்கள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நிலைபெற்று விளங்குபவர்கள்; ஈசன் `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்குபவன்

Loading

சமூக ஊடகங்கள்