
தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருச்சுழியல்
- அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
- துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
- ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
- சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
- திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
- அஷ்டலிங்கங்கள் – வேல்லியம்பலனாதர், சோமசேகரர், கௌண்டின்ய லிங்கம், காலவ லிங்கம், கண்ணுவ லிங்கம், காமீஸ்வர லிங்கம், கிருதாந்தகேஸ்வர லிங்கம், தினகரேஸ்வர லிங்கம் அமையப் பெற்றத் திருத்தலம்
- ஸ்ரீ ரமண மகரிஷி அவதாரத் தலம்
- தனிக்கோயிலில் பிரளவிடங்கர்
- மலைநாட்டு மன்னன் ஏமரதன் மகளான மாலினி சிவனாரை வழிபட்டு வேதாள சங்கை நோய் நீங்கப்பெற்ற தலம்
- மாளவதேசத்து மன்னன் சோமசீதளன் சிவனாரை வழிபட்டு வெண்குஷ்ட ரோகம் நீங்கப்பெற்ற தலம்
- திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பு
- அம்பாள் சந்நிதி முன்பு கிணறு – அர்ஜூனன், சித்திராங்கதையுடன் இத்தலத்தை தரிசிக்க வந்தபோது காண்டீபத்தின் முனையால் உண்டாக்கிய கோடி தீர்த்தம்
- எல்லை தீர்த்தங்கள் – கிழக்கில் கண்ணுவ தீர்த்தம், மேற்கே பன்னக சைலம், வடக்கே காலவ தீர்த்தம், தெற்கே கோபிதார்வன தீர்த்தம்
துணைமாலையம்மை உடனாகிய திருமேனிநாதர்
புகைப்படங்கள் : இணையம்
தலம் |
திருச்சுழியல் |
பிற பெயர்கள் |
திருச்சுழி, பரிதிகுடி நாடு, வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி |
இறைவன் |
திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மனக்கோலநாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர், பூமிநாதர் |
இறைவி |
துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை |
தல விருட்சம் |
அரசமரம், புன்னைமரம் |
தீர்த்தம் |
பாகவரிநதி, கௌண்டின்ய ஆறு என்கின்ற குண்டாறு, கவ்வைக்கடல் ( ஒலிப்புணரி ), பூமி தீர்த்த , சூல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞானவாவி, கோடி தீர்த்தம் |
விழாக்கள் |
சித்திரை விஷூ, சித்ராபௌர்ணமி, ஆடித்தபசு, ஆவணிமூலம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம் |
மாவட்டம் |
விருதுநகர் |
முகவரி / திறந்திருக்கும் நேரம் |
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் காலை5.00 மணிமுதல்12.00மணிவரை, |
வழிபட்டவர்கள் |
திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அர்ஜுனன், சித்திராங்கதை, காலவமுனிவர், சதானந்தர், மன்மதன், கந்தர்வர்களான சித்ரத்வசன் மற்றும் சித்ரரூபன், கிருதாந்தகன் என்ற அசுரன், சேரமான் பெருமாள் நாயனார், பராக்கிரம வழுதி, இந்திரத்யும்ன பாண்டியன், சுந்தரசேன பாண்டியன் |
பாடியவர்கள் |
சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 82 வது பதிகம்) |
நிர்வாகம் |
இந்துஅறநிலையத்துறை |
இருப்பிடம் |
மதுரையில் இருந்து 48 கிமீ தொலைவு, அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு |
இதரகுறிப்புகள் |
தேவாரத்தலங்களில் 202 வதுதலம் பாண்டிய நாட்டுத் தலங்களில் இத்தலம் 12 வதுதலம் |
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 82
திருமுறைஎண் 2
பாடல்
தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே
பொருள்
தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 82
திருமுறைஎண் 7
பாடல்
சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே
பொருள்
சிவாகமங்களில் கூறப்பட்டவாறு வேடத்தையுடைய செம்மையான சிவந்த திருமேனியை உடையவனாய் திருநீற்றை அணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை உடையவனும், கையினில் ஒரு வில்லைக் கொண்டபோது கண்களாலேயே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோரும் அதற்கு நிகரானவர்களும் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவன் உறையும் திருத்தலமாகிய திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைப்பவர்களது வினைகள் நீங்குதல் எளிது.