அமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)

பாடல்

சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்

தாயுமானவர்

பதவுரை

நிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய  தோன்றி ஒடுங்கும் தொழிலுடையதுஇந்த  உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்)

விளக்க உரை

  • திகபரம் – இகம் மற்றும் பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 21 (2019)

பாடல்

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
   வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
   எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
   அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
   செவ்வான வண்ணரென் சிந்தை யாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அழகிய பவளம் போன்ற நிறமுடையவரும், செம்மை நிற குன்று போன்றவரும், செவ்வானம் போன்ற நிறமுடையவரும், நெருப்பில் நின்று ஆடியவரும்நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம்  என்று உலக பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாக இருப்பவரும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற உடல் பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாகவும் இருப்பவரும், அதில் ஆடுதலை விரும்பிச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தைக்கு உரியவர் ஆயினார்; ஆதலால் யாம் யாவர்க்கும் எளியோம் அல்லோம்; ஞாயிறு ஆகிய சூரியன் எங்கு எழுந்து எத்திசை உதித்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது யாது? வெம்மை கொடுத்து துன்பம் தரும் இறப்பாகிய மரணம் நம்மேல் நாம் வருந்தும்படி வராது; கொடியதும்  துன்பம் தரக்தக்கதான வினையாகிய பகையும் மெல்ல விலகும் பரிவினால் வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; துன்பம் இல்லாதவர்களாக ஆனோம்.

விளக்க உரை

  • இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
  • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
  • வெம்ப – நாம் வருந்தும்படி.
  • வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
  • கூற்றம் –  அஃறிணை சொல். அது பற்றி  `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
  • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற

 

செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.

 


 

மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.

Jataayu B’luru

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 20 (2019)

பாடல்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
   சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
   பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
   நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
   வெண்காடு மேவிய விகிர்த னாரே

தேவாரம்  – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தாம் மனத்தால் விரும்பியவாறு  நடக்கும் வெண்மை நிறக் காளையில் ஏறி, உலகியலுக்கு வேறுபட்ட பெருமானாக இருப்பவரும், தூண்டப்பட்ட விளக்கு போன்று ஒளி பொருந்திய பிரகாசம் உடைய திருமேனியில் திரு வெண்ணீறு அணிந்து, சூலத்தைக் கையில் ஏந்தி, நீண்டு சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொறிகளில் ஒன்றான காதிலும் பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொன் போன்ற சடைகள் நீண்டு தொங்குமாறு, பூணூல் அணிந்தவராய், நீண்டு நெடுஞ்சாண் கிடையாக விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி, வெண்காடு எனும் திருவெண்காட்டுத் தலத்தை விரும்பி அடைந்து, அதன் நீண்ட தெருக்களின் வழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

விளக்க உரை

  • பொற்சடைகள் – பொன்போலும் சடைகள்
  • வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
  • விகிர்தன் – உலகியலுக்கு வேறுபட்டவன்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்புக்கொளியூர்

தல வரலாறு (சுருக்கம்) /  சிறப்புகள் – திருப்புக்கொளியூர்

  • பழைய ஊரான புக்கொளியூர் நத்தம் அழிந்து வெட்ட வெளியான பின் உருவானதே தற்போது உள்ள அவிநாசி
  • விநாசம் இல்லாததால் அவிநாசி
  • வாராணஸிக் கொழுந்து – காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி
  • ஊர்த்துத் தாண்டவம் நடைபெற்றத் தலம்
  • 32 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
  • சிம்மவாகனத்துடன் கூடிய நர்த்தனகணபதி
  • தட்சிணாமூர்த்தி நடனக்கோலத்தில் (ராஜகோபுரத்தின் தென்திசையில்). கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி
  • அம்பாள் சந்நிதி கருவறை சுவற்றில் தேளின் வடிவம்
  • காசி பைரவரருக்கும் பழமையானவரும், வடை மாலை சார்த்தப் படுபவரும், உள்பிரகாரத்தில் அமைந்துள்ளதும் ஆன ஆகாச காசிகா புராதன பைரவர் சந்நிதி
  • வியாதவேடன் என்ற திருடன் முக்தி பெற்றத் தலம். (பைரவர் சந்நிதி அருகில் வடிவம்)
  • திருவாசகத்தில் ஆனந்தமாலையில் “அரிய பொருளே அவிநாசியப்பாண்டி வெள்ளமே” என்றும், திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் ‘அவிநாசி கண்டாய்’ என்றும் பாடப்பெற்றத் தலம்.
  • மாணிக்கவாசகர் மதுரையில் இருந்தபடியே இத்தலத்தைப் பற்றி பாடல் பாடிய திருத்தலம்
  • ‘புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று இறைவனுக்கு சுந்தரர் உத்தவிட்டு முதலையுண்ட பாலகனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும். (கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தல விருட்சமான பாதிரி மரம்
  • வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி
  • வசிஷ்டர் தனது சனிதோஷம் நீங்க வழிபட்ட தலம்
  • பதஞ்சலி, சக முனிவருக்கு காசிக்கு நிகரான தலம் என்று காட்டுவதற்காக தன் தண்டத்தை அவிநாசி காசிக் கிணற்றில் போட்டு, காசியில் கங்கையின் அலைகளால் தண்டத்தைப் பெற்றுக் காண்பித்த கிணறு.
  • கேரள நாட்டு அந்தணன் ஒருவன், தான செய்த பாவங்களால் பேய் வடிவம் பெற்று, அது விலக இங்கே வந்து வணங்கி தேவ வடிவம் பெற்று சிவலோகம் செல்லச் செய்த தலம்.
  • குருநாத பண்டாரம், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபாடு செய்ய, அரசாங்க அதிகாரிகள் அவர் மகிமை அறியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்த பின், பெரிய மீன் ஒன்றினால் அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டத் தலம்.
  • கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்ட போது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்த போது, அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசி, மந்திரக் கட்டு நீக்கி, தேரை நகரச் செய்தத் தலம்.
  • தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்று.
  • இத்தலத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளவை சேவூர், மொக்கணீஸ்வரம் ஆகிய தேவார வைப்புத்தலங்கள்
  • பிற நூல்கள் – கருணாம்பிகைசதகம், கரணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்

 

தலம் திருப்புக்கொளியூர்
பிற பெயர்கள் திருப்புக்கொளியூர் அவிநாசி , திரு அவிநாசி, தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை
இறைவன் அவிநாசிலிங்கேஸ்வரர்,அவிநாசி ஈஸ்வரர் , அவிநாசிநாதர் , பெருங்கேடிலியப்பர், வாராணஸிக் கொழுந்து
இறைவி கருணாம்பிகை, பெருங்கருணைநாயகி
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் நாககன்னி தீர்த்தம் , காசிக்கிணறு , ஐராவதத் தீர்த்தம்
விழாக்கள் சித்திரையில்  பிரம்மோற்சவம், பங்குனி  உத்திரத்தில் முதலைவாய்ப் பிள்ளை உற்சவம் 3 நாட்கள், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா,  ஐந்தாம் நாள் உற்சவத்தின் போது ரிஷபாரூடராக  திருக்காட்சி
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 6:௦௦ முதல் 12:0 வரை

மாலை 4:௦௦ முதல் 8:௦௦ வரை

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்

அவிநாசி அஞ்சல், அவிநாசி வட்டம்

திருப்பூர் மாவட்டம் – 641654

04296-273113, 94431-39503

வழிபட்டவர்கள் வசிஷ்டர், பதஞ்சலி, பிரம்மா 100 ஆண்டுள், இந்திரனுடைய ஐராவதம் 12 ஆண்டுகள், தாடகை 3 ஆண்டுகள், நாகக் கன்னி 21 மாதங்கள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்1 பதிகம், ஹரிஹரதாரத்ம்யம்  என்ற வடமொழி  நூல் – ஹரதத்தாசாரிய ஸ்வாமிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்
நிர்வாகம்
இருப்பிடம் கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு, திருமுருகன்பூண்டியில் இருந்து 5 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

அருள்மிகு கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர்

 

புகைப்படம் : இணையம்

பாடியவர்         சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          92
திருமுறை எண் 1

பாடல்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே

பொருள்

புற்றில் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, மேலான இடமாகிய கைலாயத்தில் உள்ளவனே, அழிவற்றதாகிய திருப்புக்கொளியூரில் உள்ள, ‘அவனாசி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!

 

பாடியவர்         சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          92
திருமுறை எண் 4

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

பொருள்

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 19 (2019)

பாடல்

உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
     ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
     பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
     மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
     தனித்தவா இனித்தவாழ் வருளே

திருஅருட்பா  – ஆறாம் திருமுறை –  வள்ளலார்

பதவுரை

வலிமை பொருந்திய வானுலகில் மேன்மை குன்றாதவாறு இருந்து ஞான ஒளியினால் உயர்ந்தும், பெருவதும் ஆன ஒப்பற்ற சித்திபுரத்தை உடையவனே; சிறந்தவர்களாலும், ஞானிகளாலும் ஆன பெரியோர்களால் சூழப்பட்டு இருப்பவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, வரம் அளித்தவனே; உண்மை தன்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்கள் கொண்டும் வேதங்கள் கொண்டும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய் அறிவுக்கு ஆதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுபவனே! எனக்கு இனிமை பொருந்திய மெய் வாழ்வினை அருள்வாயாக.

விளக்க உரை

  • உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்திருப்பதால்  இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தார்
  • உரம் – வன்மை. உரத்தவா ஞானமாவது – மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம்
  • சித்திபுரம் – வடலூர்
  • பெரியோர் புரம் – ஞானவான்கள் உறையும் இடம்
  • தரம் – தன்மை
  • அறிவு ஆதரத்தவன் – மெய் உணர்வை விரும்புபவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 17 (2019)

பாடல்

ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே

சிவவாக்கியர்

பதவுரை

தனவானகளாக காட்ட கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆடுகளையும், கணக்கற்ற எல்லைப்பகுதியாகிய நாடு என்பதை விரிவாக்கம் செய்தும், கணக்கற்றதான காட்டுப்பரப்பில் மான்களையும், சேனைப் படைகளையும் மிகுந்த முயற்சியுடன் செய்யப்படும் கணக்கற்றதான வாசி தேடினும் உடலை விட்டு உயிர் பிரிந்து போகும்போது உறுதுணையாக வந்து உதவுமோ? நிச்சயமாக உதவாது. தானே விரும்பிச் சென்று ஐந்து அறிவும் அதற்கு கீழான நிலையில் காணப்படும் உயிர்களுக்கு தரப்படுவதானான பிச்சையும், மனம் விரும்பி பிறர் உந்துதல் இல்லாமல் ஆறாம் அறிவுடைய உயிர்களுக்கு செய்யப்படுவதாகிய தர்மமும் மட்டுமே சவுக்குக்கு கட்டுப்படும் குதிரை போல் உறுதுணையாக வந்து நிற்கும்.

விளக்க உரை

  • ‘பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே’ எனும் பட்டினத்தார் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)

பாடல்

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.

விளக்க உரை

  • யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
  • குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த  மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 14 (2019)

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.

விளக்க உரை

  • நடலை – துன்பம்
  • சுடலை – இடுகாடு
  • ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 13 (2019)

பாடல்

படிக் குந்தண் டாயுத மென்பார்க்கு நோய்வினை பற்றறுப்பப்
பிடிக்கும்தண் டாயுத மெண்ணருங் கோடிப்ர மாண்டமெல்லாம்
முடிக்கும்தண் டாயுத மூதண்டந் தாண்டு முகுந்தன்சென்னி
தடிக்கும்தண்டாயுதனே காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

திருமாலின் உந்திக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மனின் தலையை கொய்து  தண்டித்த கைகளில் தண்டாயுத்தை உடைய ஆபதுத்தாரணனே! கைகளில் பிடித்திருக்கும் தண்டாயுதமானது எண்ண இயலாத கோடி கணக்காண செயல்களை முடிக்கும் தன்மை உடையது; உடம்பினையும்  காக்கும் தண்டாயுதம்  என்று கூறுபவர்களுக்கு நோயினையும், இருவினையாகிய நல்வினை மற்றும் தீவினை ஆகியவைகளையும் நீக்கி வினையற்று போக்கும்.

விளக்க உரை

  • படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
  • மூதண்டம் – பிரமாண்டம், உந்திக்கமலம் விரிந்தால் விரியும், பிரமாண்டத்தின் முகடு, அறுகு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 12 (2019)

பாடல்

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

நெல்லிக்காத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், ஒளி வீசும் வெண்மையான திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய நெருப்பினைப் போன்ற போலும் வண்ணனாய் விளங்குபவன்; தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டு அருளுபவன்; அந்த அறநெறிக்கு மாறாக நடந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் முன்று மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் எல்லோராலும் அறியப்பட்டவன்.

விளக்க உரை

  • அறத்தால் – தருமத்தை நிலை நிறுத்தவேண்டி
  • உயிர் காவல் – உயிர்களைக் காத்தல்
  • மறம் – அதர்மம்
  • மாண்பு – மாட்சி
  • தெரிவு – விளக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 9 (2019)

பாடல்

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே  எழுந்தருளும் அம்மானே! என் நெஞ்சத்தை உன்னிடத்திலேயே உறையுமாறு பண்படுத்தி வைத்துவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயையின் காரண காரியத்தை அறியாமல், அதனால் ஏற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன்; வயிற்றினோடு சேர்த்து மற்றைய ஏனைய உள்ளுறுப்புக்களையும்க் கட்டி அவை செயற்படாமல் மடக்கி இடுவதைப் போல வந்த விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ, செயற்பாடு இல்லாமல் மறைத்தோ,அஞ்சேல் என்று எனக்கு அருளியும் அபயம் அளித்திலீர்;  இதற்கு நிகரான வஞ்சகத்தினை யான் கண்டறியேன்.

விளக்க உரை

  • வல் + து + அம் = வஞ்சம் – பொய். நெஞ்சத்தினை இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல் இல்லாமல் மெய்யே என்றவாறு.
  • நஞ்சு ஆகி – நஞ்சின் இயல்புடையதாகி.
  • ஆகி – போன்று
  • என்னீர் – என்று சொல்லீர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)

பாடல்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமானை இகழ்ந்தமையால்அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டுஅழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும்  அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ!

விளக்க உரை

  • இறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.
  • அளிந்து – குழைந்து
  • சுளிந்து – வெகுண்டு
  • தூய் மொழியாள் : உமை.
  • தக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)

பாடல்

மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து  காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

  • தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
  • சேய – செம்மையான
  • கனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்
  • மாய விளக்கு  – இயற்கை ஒளி
  • தூய விளக்கு   – ஞான ஒளி
  • காய  விளக்கு  – உள் ஒளி
  • சேய விளக்கு  – சிவ ஒளி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 1 (2019)

பாடல்

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
     இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
     சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
     அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
     கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வலிமை மிகுந்ததும்,  மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும்,  இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன  ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!

விளக்க உரை

  • இரும்பு  –  அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
  • சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி;  ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 30 (2019)

பாடல்

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
     விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
     அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
     கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
     கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா -வள்ளலார்

பதவுரை

அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின்  அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து,  மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு,  கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ?  நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.

விளக்க உரை

  • தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
  • கேவல நிலையில்  ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
  • ‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’  –   உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
  • கிளத்தல் – சொல்லுதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 29 (2019)

பாடல்

செந்தமிழோர் தொழும் தண்டாயுதமும் திருவழகும்
சுந்தரமும் பச்சைக் கஞ்சுகம் தானும் கருதரிய
இந்தணி வட்டச் சடையும் கண்குன்றும் இருபதங்களும்
சந்ததமும் மறவேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வளமை வாய்ந்த தமிழ் மொழியை கொண்டவர்களான தமிழர்கள் தொழும்படியாக தண்டாயுதத்தைக் கொண்டவனே! பொலியும் முகம் கொண்டவனே! அழகிய வடிவம் கொண்டவனே! பச்சை நிறமுடைய ஆடை அணிந்தவனே! சந்திரனை அணிந்த வட்ட வடிவமான சடையை கொண்டவவனே! குன்று போல் கண்களை உடையவவனே* உனது இரு பாதங்களையும் எப்பொழும் மறவேன்.

விளக்க உரை

  • * அழகியலுக்காக உரைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 28 (2019)

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே!  நோய்களிடம் இருந்து  நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன்,  செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக்  கொண்டு, அந்த வினைகளை  அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய்,  அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

விளக்க உரை

  • பெற்றம் – விடை
  • பணி – கருமம்
  • பாசனம் – சுற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 25 (2019)

பாடல்

திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
     திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
     மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
     அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
     பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி,  தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே  தொழிலாகி இறக்கின்றார்.

விளக்க உரை

  • இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
  • அளி அற்றார் –  தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 24 (2019)

பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
     தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
     திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

இனிய ஓலியை தரும் வீணையை உடையவர்களும்,  யாழினை வாசிப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்து ஒலி எழுப்பவும், மற்றொரு பக்கத்தில் இருந்து மறையாகிய ரிக் முதலிய வேதங்களோடு, நினது புகழை பாடக்கூடியதான தோத்திர பாடல்களை துதித்தும் நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் கொண்டவர்கள் மற்றொரு புறத்திலும், உன்னை ஆராதனை செய்பவர்கள், பேரன்பின் காரணமாக அழுகை கொண்டவர்கள், உள்ளம் அன்பில் நைந்து உருகுவதாலும், திருவருள் இன்பத்தை ஆராமையால் மிக்கத் துய்ப்பதனால் நிகழும் மெய்ப்பாடு ஆகிய துவள்கை கொண்டும் ஒரு பக்கத்திலும், தலையின் மீது இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்திலும் இருக்கப் பெற்றவனே! இவர்களோடு சேர்த்து என்னையும் ஆண்டு இன்னருள் புரிய பள்ளி எழுந்தருளாயே.

விளக்க உரை

  • விதிக்கப்பட்டவாறு உன்னைத் தொழுகிறார்கள்; யாம் வணங்கும் மற்றும் தொழும் வகை அற்று இருக்கிறோம்; அவர்களுக்கு அருளுதலை செய்தல் போலவே  எனக்கும் அருளவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ என்னையும்’ எனும் சொற்றொடர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)

பாடல்

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன,  நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன,  கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

விளக்க உரை

  • தோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு
  • அசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்