அமுதமொழி – சார்வரி – ஆடி – 21 (2020)


பாடல்

முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
     முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
     கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
     பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
     அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் எண்குணங்களின் பெருமைகளில் சிலவற்றை உரைத்தும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும் அருளிய திறம் குறித்தும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பிரமர்கள் இறந்த பிறகு அவர்களின்  தலைகளை மாலையாக அணிந்து பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினை உடையவனாகவும், சிருஷ்டி எனும்  உலகின் தோற்றம் நிலைபெறுதல் சங்காரம் என்றும் சம்ஹாரம் என்றும் வழங்கப்பெறும் இறுதி ஆகியவற்றை செய்பவனாகவும், கண்டத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவனாகவும், கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடும் படியான காட்சியினை வழங்குபவனாகவும், இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்கு அதன் தன்மை கொண்டு அதன் இயல்பாக உள்ளவனாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் எனும் ஐம்பெரும் பூதங்களாக ஆகி அண்டங்களுக்கு  புறமும் உள்ளும் இருக்கும் பெருமை உடைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.

விளக்க உரை

  • முதல் நடு முடிவு – உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை செய்பவர்களை அவர்கள் விரும்பிய வகையில் அருளுதல்
  • வெண் மருப்பு – திருமால் வராக அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட செருக்கினை நீங்குதல் பொருட்டு செருக்கினை அழித்து, அதன் அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டார்.(வரலாறு )
  • காறை – கம்பியாக அமைத்து அணியும் அணிகலம்
  • கதம் – கோபம்
  • பிண்டம் – உடம்பு
  • இயற்கை – உடலுக்கு முதல்களாய் உள்ள தத்துவங்களை
  • பெற்றி – சார்பாய் நிற்றல்
  • அப்பாலாய் இப்பாலாதல் – உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்றல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 12 (2020)


பாடல்

இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும்  சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி  பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.

விளக்க உரை

  • திருஅஞ்சைக்களம் –  சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
  • இரவம் – ஒலி
  • பரவுதல் – வாழ்த்துதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 31 (2020)


பாடல்

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
     கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
     பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
     திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
     நீதனேன் என்னேநான் நினையா வாறே

ஆறாம் திருமுறை – தேவாரம்- திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.

பதவுரை

திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும்  குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும்,  ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.

விளக்க உரை

  • கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
  • தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
  • நீசன் – அறிவில்லாதவன்
  • ‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 28 (2020)


பாடல்

நங்காய் இதென்னதவம்
     நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
     காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
     காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
     தரித்தனன்காண் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அல்ல என்றும் அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதம் பொருட்டு ஈசன் திருமேனி எலும்பு மாலை கொண்டு விளக்கம் அளிக்கும் பாடல்.

பதவுரை

ஏ! தோழியே! நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்தும், எலும்புகளை விரும்பி தோளில் சுமந்தான், இது என்ன தவ வடிவம் என்று புதியவள் வினவினாள்; எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக கால, கால வேற்றுமையால் ஒவ்வொரு ஊழிக்கால முடிவிலும் திருமால்,பிரமன் ஆகிய இருவரது வாழ்நாளை முடிவு செய்து அவர்கள் எலும்பைத் தரித்தனன் என்பதை அறிக.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை
  • கங்காளம் – எலும்புக்கூடு
  • செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர் எனும் திருமுறை பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது

 

1

மனுஷ வருஷம்

1 தெய்வீக நாள்

360

தெய்வீக நாள்

1 தெய்வீக ஆண்டு

12000

தெய்வீக ஆண்டுகள்

1 சதுர் யுகம்

 

கிருத யுகம்

4800

தெய்வீக ஆண்டுகள்

17,28,000

மனித ஆண்டுகள்

திரேதா யுகம்

3600

தெய்வீக ஆண்டுகள்

12,96,000

மனித ஆண்டுகள்

துவாபர யுகம்

2400

தெய்வீக ஆண்டுகள்

8,64,000

மனித ஆண்டுகள்

கலி யுகம்

1200

தெய்வீக ஆண்டுகள்

4,32,000

மனித ஆண்டுகள்

சதுர் யுகம்

12000

தெய்வீக ஆண்டுகள்

43,20,000

மனித ஆண்டுகள்

 

71

சதுர் யுகம்

1 மநுவந்தரம்

                 8,52,000

தெய்வீக ஆண்டுகள்

1000

சதுர் யுகம்

1 கல்பம்

        432,00,00,000

மனித ஆண்டுகள்

2

கல்பம்

1 பிரம்ம நாள்

        864,00,00,000

மனித ஆண்டுகள்

360

பிரம்ம நாள்

1 பிரம்ம ஆண்டு

3,11,040,00,00,000

மனித ஆண்டுகள்

 

2,00,00,000 பிரம்மாவின் ஆயுள் – விஷ்ணுவின் ஒரு நாள்

1,00,00,000 விஷ்ணுவின்  ஆயுள் – சிவன் புன்னகைக்கும் நேரம் *

*நீட்சியும் குறுக்கமும் சிவம் மட்டுமே அறியும்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருச்சுழியல்

தலவரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருச்சுழியல்

  • அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
  • துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
  • ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
  • சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
  • திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
  • அஷ்டலிங்கங்கள் – வேல்லியம்பலனாதர், சோமசேகரர், கௌண்டின்ய லிங்கம், காலவ லிங்கம், கண்ணுவ லிங்கம், காமீஸ்வர லிங்கம், கிருதாந்தகேஸ்வர லிங்கம், தினகரேஸ்வர லிங்கம் அமையப் பெற்றத் திருத்தலம்
  • ஸ்ரீ ரமண மகரிஷி அவதாரத் தலம்
  • தனிக்கோயிலில் பிரளவிடங்கர்
  • மலைநாட்டு மன்னன் ஏமரதன் மகளான மாலினி சிவனாரை வழிபட்டு வேதாள சங்கை நோய் நீங்கப்பெற்ற தலம்
  • மாளவதேசத்து மன்னன் சோமசீதளன் சிவனாரை வழிபட்டு வெண்குஷ்ட ரோகம் நீங்கப்பெற்ற தலம்
  • திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பு
  • அம்பாள் சந்நிதி முன்பு கிணறு – அர்ஜூனன், சித்திராங்கதையுடன் இத்தலத்தை தரிசிக்க வந்தபோது காண்டீபத்தின் முனையால் உண்டாக்கிய கோடி தீர்த்தம்
  • எல்லை தீர்த்தங்கள் – கிழக்கில் கண்ணுவ தீர்த்தம், மேற்கே பன்னக சைலம், வடக்கே காலவ தீர்த்தம், தெற்கே கோபிதார்வன தீர்த்தம்

துணைமாலையம்மை உடனாகிய திருமேனிநாதர்

புகைப்படங்கள் : இணையம்

தலம்

திருச்சுழியல்

பிற பெயர்கள்

திருச்சுழி, பரிதிகுடி நாடு, வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி

இறைவன்

திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மனக்கோலநாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர், பூமிநாதர்

இறைவி

துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை

தல விருட்சம்

அரசமரம், புன்னைமரம் 

தீர்த்தம்

பாகவரிநதி, கௌண்டின்ய ஆறு என்கின்ற குண்டாறு, கவ்வைக்கடல்          ( ஒலிப்புணரி ), பூமி தீர்த்த , சூல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞானவாவி, கோடி தீர்த்தம் 

விழாக்கள்

சித்திரை விஷூ, சித்ராபௌர்ணமி, ஆடித்தபசு, ஆவணிமூலம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம்

மாவட்டம்

விருதுநகர் 

முகவரி  / திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்
திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம்
விருதுநகர் மாவட்டம்
PIN – 626129. Ph. 04566 – 282 644

காலை5.00 மணிமுதல்12.00மணிவரை,
மாலை4.00 மணிமுதல்இரவு 8.00 மணிவரை

வழிபட்டவர்கள்

திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர், அர்ஜுனன், சித்திராங்கதை, காலவமுனிவர், சதானந்தர்,  மன்மதன், கந்தர்வர்களான சித்ரத்வசன் மற்றும் சித்ரரூபன், கிருதாந்தகன் என்ற அசுரன், சேரமான் பெருமாள் நாயனார், பராக்கிரம வழுதி, இந்திரத்யும்ன பாண்டியன், சுந்தரசேன பாண்டியன்

பாடியவர்கள்

சுந்தரர் 1 பதிகம் (7ம் திருமுறை – 82 வது பதிகம்)

நிர்வாகம்

இந்துஅறநிலையத்துறை

இருப்பிடம்

மதுரையில் இருந்து 48 கிமீ தொலைவு, அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு

இதரகுறிப்புகள்

தேவாரத்தலங்களில் 202 வதுதலம்

பாண்டிய நாட்டுத் தலங்களில் இத்தலம் 12 வதுதலம்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 2

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே

பொருள்

தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள்  இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்            82
திருமுறைஎண் 7

பாடல்

சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே

பொருள்

சிவாகமங்களில் கூறப்பட்டவாறு வேடத்தையுடைய செம்மையான சிவந்த திருமேனியை உடையவனாய் திருநீற்றை அணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை உடையவனும், கையினில் ஒரு வில்லைக் கொண்டபோது கண்களாலேயே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோரும் அதற்கு நிகரானவர்களும் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவன் உறையும் திருத்தலமாகிய திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைப்பவர்களது வினைகள் நீங்குதல் எளிது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 10 (2020)


பாடல்

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துநிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.

பதவுரை

பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.

விளக்க உரை

  • ஓர்தல் – ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்
  • இன்றுளார் – இன்றைக்கு இருப்பவர்
  • நாளை இல்லை – மறுநாள் இல்லாதவராவர்
  • உழி தரும் – திரியும்
  • பேசாத நாளெல்லாம் பிறவா நாளே‘ என்ற வாக்கிற்கு இணங்க பேசாதவர்களை ஊமை என்று அழைத்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 9 (2020)


பாடல்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமண்டல பரத்தின் பெருமையும், அஃது ஈசனின் இருப்பிடன் எனவும், அங்கு உறையும் ஈசன் உயிர்கட்கு அருள் புரியும் தன்மையையும் கூறும் பாடல்.

பதவுரை

உச்சிக்குமேல்பன்னிரண்டுஅங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாதசாந்தத்தில் நிற்பதனால் ஏனைய கடவுளர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளாகவும்,  தனது மேம்பட்ட சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குபவனாக இருப்பவனாகவும், நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாகவும் இருக்கும் நந்திப்பெருமான் எனும் பரம்பொருள் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்து ஆட்கொண்டு அருளிய பின் குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

விளக்க உரை

  • மாபரம் ஆயது – ஏனைய தெய்வங்கள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நிலைபெற்று விளங்குபவர்கள்; ஈசன் `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்குபவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 23 (2020)


பாடல்

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும்  பாடல்.

பதவுரை

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல்  உரியவனாய் விளங்குவான்.

விளக்க உரை

  • அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
  • அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
  • பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 20 (2020)


பாடல்

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.

பதவுரை

சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும்  ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு  ‘நீ  விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய  அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன்  உனது திருவடியை அடைந்தேன்;  என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
  • சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
  • இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
  • சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , சடங்க மந்திரங்கள் எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 12 (2020)


பாடல்

திருவார் பெருந்துறை
   மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
   யா  வரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
  ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
  தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின்,  யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும்  நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.

விளக்க உரை

  • வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
  • தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
  • பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 7 (2020)


பாடல்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

கருத்து –   இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.

பதவுரை

போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.

விளக்க உரை

  • இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
  • போற்றுதல் – துதித்தல்
  • புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
  • நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
  • கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
  • என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 27 (2020)


பாடல்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்

கருத்துஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.

பதவுரை

வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

விளக்க உரை

  • பரவெளி
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
  • செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
  • ஆங்குநின் தாள்கள் போற்றும்
    பேய்வடி வடியே னுக்குப்
    பாங்குற வேண்டும் என்று
    பரமர்தாள் பரவி நின்றார்

என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 16 (2020)


பாடல்

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.

விளக்க உரை

  • தலம்- தென்குரங்காடுதுறை
  • விண்டார் – பகைவர்
  • விமலன் – மலமில்லாதவன்.
  • இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
  • கொண்டான் – கொண்ட சிவபிரான்.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு

புகைப்படம் : தினகரன்

தோற்றமும் தன்மையும்

  • வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
  • சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
  • செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
  • காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
  • வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

மருத்துவ குணங்கள்

  • இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 14 (2020)


பாடல்

அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவடி சிறப்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து  இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.

விளக்க உரை

  • போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
  • முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
  • நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
  • ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
  • வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
  • முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
  • பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-2 (2020)


பாடல்

பாறு தாங்கிய காட ரோபடு
   தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
   காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
   பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் –  சுந்தரர்

கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.

பதவுரை

நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

விளக்க உரை

  • பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
  • ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
  • குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
  • தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 24 (2020)


பாடல்

அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – தன்னைச் சினந்தவர்களின் செருக்கினை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்த திறத்தினைக் கூறும் பாடல்.

பதவுரை

சினம் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுப்பேன் என்று வந்த இலங்கை வேந்தன் ஆகிய இராவணனின் இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனை போன்ற பலம் உடையவர்; சினந்த காலனை வருத்தம் கொள்ளுமாறு செய்து அவனை அழித்த ஆனை போன்ற பலம் உடையவர்; கடவூர்த் திருத்தலத்து இறைவர்; கொன்றை பூக்களை அணிந்த ஆனை போன்ற பலம் உடையவர் என்பதைக்  காண்பீர்களாக.

விளக்க உரை

  • காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்
  • அடுத்துவந்த – கயிலையை நெருங்கிவந்த
  • கடுத்த – சினந்துவந்த
  • கடுக்கை – கொன்றை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 22 (2020)


பாடல்

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.

பதவுரை

கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும்  போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.

விளக்க உரை

  • நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து  உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
  • அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி –  வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
  • புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
  • வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
  • பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
  • பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
  • ஆகின்ற – வளர்கின்ற
  • பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’  – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
  • ஐவர் – ஐம்பொறிகள்
  • கூரை – குடில்; தூல உடம்பு.
  • விருத்தி – பிழைப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 19 (2020)


பாடல்

இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே
   எழுகின்ற சோதியே இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்
   திருப்பெருந்துறை உறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால்
   ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக்
   கண் உறக் கண்டுகொண்டு இன்றே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – அளவிட முடியா சிவனின் அரும் பெரும் செயல்களைக் கூறி, அவனை மனதில் கொண்டு இரந்ததால் சிவன் கண்ணில் தோன்றினான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

பல காலம் உன்னை நினைத்து அன்பு கொண்டு அதனால் உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே, இமையாதவர்களாகிய தேவர்களின் தலையில் பொலிவு உடைய தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பிரளத்திலும் அழிவே இல்லாத ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே! இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.

விளக்க உரை

  • கரத்தல் – மறைத்தல்.
  • இரந்து இரந்து – உடலாலும் உள்ளத்தாலும் இரந்து எனும் பொருளும், நல்வினைகள் தீவினைகள் அழியுமாறு இரந்தும் என்பதற்காக இருமுறைகள் எனும் பொருளும் பெறப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • யோக முறையில் திருப்பெரும்துறை என்பது உடலில் இருக்கும் ஒர் இடம் என்றும் சிவனை அகக் கண்ணால் கண்டதையும் குறிப்பிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்குற்றாலம்


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்குற்றாலம்

  • பஞ்சசபைத் தலங்களில் இத்தலம் சித்திரசபைத் தலம்
  • கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
  • திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
  • அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர்  திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
  • அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
  • ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
  • அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
  • மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
  • அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
  • நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
  • உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
  • முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
  • பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
  • பிற சன்னதிகள் – அறுபத்து மூவர், நன்னகரப்பெருமாள், உலகாம்பாள் சமேத பாபவிநாசர், காந்திமதியம்மை சமேத நெல்லையப்பர், நாறும்புநாதர், சங்கரலிங்கநாதர், ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாதர், சொக்கலிங்கர், அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதேஸ்வரர், ஐயனார், சோழலிங்கம், அகத்தியர், வாசுகி, மகாலிங்கம், சகஸ்ரலிங்கம்
  • தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
  • பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
  • குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
  • அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
  • சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
  • சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
  • சித்திரசபையின் வெளிச்சுவற்றில் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகர், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி முதலானோரின் உருவங்கள்
  • முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
  • சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
  • பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
  • தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
  • லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
  • நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
  • தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
  • ஆகமம் –  மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
  • குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)

 

தலம்

திருக்குற்றாலம்

பிற பெயர்கள்

திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்

இறைவன்

குற்றாலநாதர் குறும்பலாநாதர், திரிகூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர்

இறைவி

குழல்வாய்மொழி, வேணுவாக்குவாகினி

தல விருட்சம்

குறும்பலாமரம் , குத்தால மரம் 

தீர்த்தம்

வட அருவி, சிவமது கங்கை , சித்ராநதி

விழாக்கள்

தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்

மாவட்டம்

திருநெல்வேலி

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்
குற்றாலம் – அஞ்சல் – 627 802
04633-283138, 04633-210138
வழிபட்டவர்கள் பட்டினத்தார்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம் (1ம் திருமுறை – 99 வது பதிகம்),  அருணகிரிநாதர், திருக்குற்றாலத் தலபுராணம் மற்றும் குறவஞ்சி – மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்

நிர்வாகம்

இந்து அறநிலையத்துறை

இருப்பிடம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 6௦ கிமீ தொலைவு, தென்காசியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவு

இதர குறிப்புகள்

தேவாரத் தலங்களில் 227  வது தலம்

பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 13 வது தலம்

குழல்வாய்மொழி உடனாகிய குற்றாலநாதர்

புகைப்படங்கள் : இணையம்

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           1
பதிக எண்           99
திருமுறை எண் 3

பாடல்

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்

பொருள்

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை  ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய  குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.

 

பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 009
திருமுறை எண் 3

பாடல்

உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம் போழுது
குற்றாலத்துறை கூத்தனல் லானமக்
குற்றா ராருளரோ

பொருள்

கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

 

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 3 (2020)


பாடல்

புந்தி கலங்கி, மதிம யங்கி
   இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
   தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
   திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் –  காரைக்கால அம்மையார்

கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.

பதவுரை

அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.

விளக்க உரை

  • புந்தி – புத்தி,
  • மதி – அறிவு
  • அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி  என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சந்தி – உறவினர் நண்பர்களது கூட்டம்.
  • கடமை – , ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்
  • முழவு – மத்தளம்,
  • திசை கதுவ – திசைகளை உள்ளடக்கி நிகழ

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!