யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்கஉரை
நடலை – துன்பம்
சுடலை – இடுகாடு
ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்
படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! புகழ்ச்சியை உடைய நாரணியே! உன்னை விட அடையத் தக்க பொருளும், உன்னிடத்தில் இருந்து பெறப்படும் அருளும் தாண்டி வேறு ஏதாகினும் உண்டோ? தான் வகுத்த பாதை பற்றி நின்று, பெற்ற குழந்தையைக்கு பால் கொடுத்து வளர்க்காது இருக்கும் அன்னை வேறு உண்டோ ? வெகு நாட்களாக உன்னிடத்தில் இருக்கும் உனது பழைய அடிமை என என் மீது பரிவுகாட்டி, அருள் அமுதத்தினை அளித்து, ஞான வெளியாகிய சிதாகாசப் பெருவெளியை காட்டி, மிகவும் மகிழ்வுடன் ஆனந்தம் கொண்டதால் கண்களில் நீர் சொரிய அளிக்கத் தக்கதான மெய்ஞ்ஞானச் சாரம் எல்லாம் தந்தோம் என்று உரைத்த தாயாகிய நீ, இதை மறந்து என்னை மறந்தால் எவர் பகைவர்களாக முடிய்ம்; நான் என்ன செய்ய இயலும்? நான் வினைபற்றி நின்று பொல்லாதவன் ஆக இருப்பினும் உன்பிள்ளை என்று எனக்கு அருள்புரிய வேண்டும்.
விளக்கஉரை
தேசி – பெரிய குதிரை, இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்.
‘பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னே‘ எனும் திருவாசக வரிகளோடும், பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடு தொண்டாற்றும் திறம் உடையவர்கள் என்பது கண்டு ஒப்புநோக்கி அறிக.
முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே, தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.
விளக்கஉரை
தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
மாமிசம் – மா-ம்-இ- சம்
மா – பெருமை மிக்க
ம்-இம் எனும் ஊமை மூலம்
இ-அருட்பிரணவம்
சம்- சுகம்
இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும் எனவும் கொள்ளலாம்.
மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில் தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
பதவுரை
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும் பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால் கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?
வீடென்ற வீடகத்தி னுண்மை காண விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில் அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர் நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார் சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே
சுப்ரமணியர் ஞானம்
பதவுரை
வீடு என்கின்ற உடம்பில் இருந்து முத்தியுலகத்தில் புகுவதாகிய அக வீட்டில் உண்மையாய் காணும் வழியையும், அகத்தினுள் புகுந்திடும் சூட்சமத்தை வெளிப்படையாக கூறுகிறேன். நடனத்தை பிரதானமாக உடைய சிவபெருமான் தன் தலை முடியில் கங்கையும், தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டு இருக்கிறார்; வினைகளை ஆராய்ந்து அதன் வழி உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை விருப்பமுடன் வைத்தே இந்த நானிலத்தை படைக்கிறார்; இளமை உடையவனானவனும், பெரியவனானவனும், கடவுளானவனும் ஆன விஷ்ணு தன் மார்பில் மகாலெட்சுமி ஆகிய வைத்திருக்கிறார்; இவர்கள் பெண் சக்தி துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள்; இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.
சித்தர் பாடல் என்பதால், பல சூட்சங்கள் அடங்கியது என்பதாலும், ஆதார சக்கரங்கள் முன்வைத்து உரைக்கப்படுவதாலும், பாடலின் கருத்துக்கள் மறை பொருளாக உரைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய விருப்பம் உள்ளவர்கள் குரு முகமாக பெறுக.
மாய விளக்கது நின்று மறைந்திடுந் தூய விளக்கது நின்று சுடர்விடுங் காய விளக்கது நின்று கனன்றிடுஞ் சேய விளக்கினைத் தேடுகின்றேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
விளக்கஉரை
தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்கஉரை
இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.
அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, விளக்கொளி இல்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையில் கவிழ்ந்து கிடந்து அமுது அழுது மயங்குகின்ற சிறு குழந்தையின் அறிவினை விட மிக்க சிறுமையை உடைய யான், அளக்க இயலாத துன்பமாகிய கடலில் விழுந்து, பன்னெடுங் காலமாக அதில் அலைந்து அலைந்து, மென்மையான துரும்பினை விடவும் மிக மெலிந்த துரும்பு போன்று, கிளைகளுடன் கூடிய பழுத்த மரம் துன்பம் அனுபவிப்பது போல் வாயாற் சொல்ல முடியாத கொடுமைகள் அனைத்தனையும் அனுபவித்து, ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் ஆகி தீமை தரும் எண்ணங்களும் கொண்டு, கடுமை செயல் உடையவனாக, கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேனாகவும், கேலி பேசித் திரியும் வீணனாகவும் ஆயினேன்; இவ்வாறான யான் குற்றமறியாத இந்த உலகில் ஏன் பிறந்தேனோ? நினது திருவுள்ளத்தை அறிகிலேன்.
விளக்கஉரை
தன் பிறப்பின் நோக்கம் அறியாதற்காக வருந்தியது.
கேவல நிலையில் ஆணவ மல இருளில் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியல் அறிவொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் உட் பொருள்.
‘அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து’ – உலகியல் துன்பங்கள் கடலலை போல் பெருகி வருவதை குறிப்பது.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
வளமை வாய்ந்த தமிழ் மொழியை கொண்டவர்களான தமிழர்கள் தொழும்படியாக தண்டாயுதத்தைக் கொண்டவனே! பொலியும் முகம் கொண்டவனே! அழகிய வடிவம் கொண்டவனே! பச்சை நிறமுடைய ஆடை அணிந்தவனே! சந்திரனை அணிந்த வட்ட வடிவமான சடையை கொண்டவவனே! குன்று போல் கண்களை உடையவவனே* உனது இரு பாதங்களையும் எப்பொழும் மறவேன்.
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! எனது மைந்தனே என்று என்னை அழைத்து அமுதளித்த வகையினை நீ மறந்து விட்டாயா! விரும்பியது அனைத்தும் கொடுக்கவல்ல தெய்வமணி ஆகிய சிந்தாமணி மந்திரம் கொண்டு பூசை செய்தால் இந்த செகத்தில் எவர்க்கும் குறைவருமோ? செல்வம், கல்வி, அருள் ஆகியவை விளைந்தன; முதல்வி ஆகிய உன் அருள் உலகில் காலத்தால் அறிவிக்கப் பெறும் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற காலங்கள் இல்லை; அவ்வாறான காலங்களில் கனமாக சூழ்ந்து இருக்கும் வினை இருளும் விலகியது; இவ்வாறு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் உன் இயல்பான கொடுக்கும் தன்மையினால் கிடைக்கப் பெற்றவை; அவ்வாறான இயல்பாக கொடுக்கும் தன்மை இல்லாத மானிடர்களை ஏற்பதும், அவர்களோடு சேருவதும், சேர்ந்து சொல்லுதலும் ஏதாவது உண்டா? இதை உரைப்பாய்.
விளக்கஉரை
இந்தா எனவே நீகொடுத்த இயல்பே – எதையும் எதிர்பாராமல் இயல்பாக கொடுக்கும் குணம் அன்னைக்கு உரியது என்பதை வலியுறுத்தியே இவ்வரிகள்.
மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில் தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு, தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்