அமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)


பாடல்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துதிரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள்.  அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
  • கலை – கூறு
  • ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
  • ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
  • ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 30 (2019)


பாடல்

கருணையாங் காமாட்சி யிருந்த வீடு
   கடிதான நாற்பத்து மூன்று கோணம்
வருணையாம் ரிஷி தேவர் சித்தர் யோகி
   மகத்தான பஞ்சகர்த்தா ளக்கினி யாதித்தன்
அருணையாம் அகஸ்தியருங் கணேசன் கந்தன்
   ஆத்தாளைப் பூசித்து அதிகார மானார்
கருணையாம் பூசித்துச் சமாதியிலேநின்று
   தாயளிக்கச் சகல சித்துந் தரித்திட்டேனே

போகர் – கருக்கிடை நிகண்டு 500

கருத்துஸ்ரீ சக்ர பூசை செய்தவர்களையும், அவர்கள் வழியில் தானும் பூசை செய்ததையும் போகர் குறிப்பிட்டு உரை செய்த பாடல்.

பதவுரை

தாயாகியவளும், கருணையுள்ளம் கொண்டவளும் ஆன காமாட்சி  இருக்கும் வீடு அடைவதற்கு அரிதான நாற்பத்து முக்கோண சக்கரம் ஆகும். எக்காலத்திலும் அன்பை பொழிவதாக இருப்பவர்களானவர்களும், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து  மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆகிய ரிஷிகளும், தேவர்களும், சித்தத்தை அடக்கியவர்கள் ஆன சித்தர்களும், பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர் ஆன  யோகிகளும், பஞ்ச கர்த்தாக்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர்களும், அக்னி, ஆதித்யன், அருணை எனும் அருணாச்சலத்திற்கு நிகரான அகஸ்தியர், கணேசன், கந்தன்  போன்றவர்கள் இந்த சக்கரத்தை பூசித்தே சகல அதிகாரமும் பெற்றார்கள். கருணை வடிவம் ஆகிய  அவளை அவள் கருணையினால் நானும் மேலே குறிப்பிட்டவர்கள் பூசை செய்த முறையில் பூசித்து, சமாதியில் நின்று சகல சித்தையும் அறிந்து கொண்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 29 (2019)


பாடல்

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி  உனக்கு மெய்யடிமையைச் செய்ய,  அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.

விளக்க உரை

  • புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
  • மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும்  இறைபணியாகிய அடிமைத் திறம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 15 (2019)


பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்துசிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.

பதவுரை

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின்  குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

விளக்க உரை

  • நணுகுதல் – சார்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 14 (2019)


பாடல்

மூலம்

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்

பதப்பிரிப்பு

சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 12 (2019)


பாடல்

மூலம் – 19

பாடிக்கொண் டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண் டாடித் திரிந்திட வேஎனைத் தொண்டு கொள்வாய்
தேடிக்கொண் டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கை யெல்லாம்
சாடிக்கொண் டாடிய வாகாழி யாபதுத் தாரணனே.

பதப்பிரிப்பு – 19

பாடிக்கொண்டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண்டாடித் திரிந்திட வேயெனைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கையெல்லாம்
சாடிக் கொண்டாடியவாகாழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஉன்னை பணியும் அடியார்களின் பாதங்களை தன் தலைமேல் சூட்டவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

உன்னை தேடியும் கொண்டாடியும் கொண்டாடி வருவோர்களுடைய  தீர்க்க இயலாதது ஆகிய வலிமையான ஊழ்வினைகளை தடைகளை எல்லாம் அடித்தும் ஒடித்தும் செய்து அதைக் கொண்டாடிய காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! உன்னை எப்பொழுதும் நினைவில் கொண்டு பாடுவதைத் கொண்டாடி பணிந்திடும் அன்பர்களின் மலர் போன்ற பாதங்களை என் தலைமேல் சூடிக் கொண்டாடி திரியும் மாறு எனக்கு தொண்டு செய்ய அருள்வாய்.

விளக்க உரை

  • வல்வினை – வலியதாகிய ஊழ், தீவினை, கொடுஞ்செயல், வலிதாகிய தொழில், வலிய வினைச்சொல்
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 11 (2019)


பாடல்

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபல்வேறு விதமாக இறைவனின் பெருமைகளை கூறி அவன் புகழைப் பேசுவோர் பெரியோர் என்று விளம்பும் பாடல்.

பதவுரை

எவரின் மனத்தாலும் எண்ணி அறியப்படாதவனும், தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகளுக்கு மூன்று கண்கள் உடையவனாக விளங்குபவனும் உயிர்கள் வாழ உதவி செய்யும் மண் வடிவாவனாகவும், சிறந்ததும், பெரியதுமான வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமை அம்மையோடு கூடியவனாய் விளங்கும் இறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.

விளக்க உரை

  • பெண்ணான் – மங்கைபங்கன், கங்கைச்சடையன்
  • எண்ணானை – யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை (அஃதாவது மனதால் எண்ணாமல் இருப்பவனுக்கு மும்மலத்தின் காரணமாக அறியப்படாதவன்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 10 (2019)


பாடல்

கிளியே அருண வொளிச்சுடரே
      கிருபானனமா முழுமதியே
   கெடியாம் உன்றன் இருபதங்கள் 
      கிடைக்கும் வகையும் பெறுவேனோ

ஒளியா யிருக்குங் கனகசபை
      ஒன்றே இரண்டே விபரிதமே
   உரைக்குங் கருணாநிதிமயிலே
      உதித்த பரமனுடன் ஆடும்

அளியா ரமுதே பரம்பரையே
      அணுவில் அணுவாய் அண்டபிண்டம்
   அமர்ந்த சிவமே ஞானவெளிக்(கு)
      அரசே வேதத் துட்பொருளே

வளியே சுழியில் நடமிடுகண்
      மணியேஎளியேற்கினியருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்பிகையின் அருளையும், அவள் தன்மைகளையும் வியந்து அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, கிளியைப் போன்றவளே, சூரியனைப் போன்ற பிரகாசம் உடைய சுடர் போன்றவளே, முழுமதி போன்று கருணையைப் பொழிபவளே, வல்லமை உடையதும், புகழ் உடையதும் ஆன சிறப்புமிக்க உன் பாதங்கள் கிடைக்க எளியவன் ஆகிய யான் பெறுவேனோ? ஒளிவடிவாக இருக்கும் கனக சபைதனில் ஒன்று எனவும், இரண்டு எனவும் அறிய முடியாதபடி சிவசக்தி ரூபமாக இருப்பவளே, அடியார்களுக்கு அருளை வழங்குவதில் கருணை நிதியாக இருப்பவளே, மயில் போன்ற அழகுடையவளே, தன்னில் ஒருபாதியாக மிகுந்து இருக்கும் பரமனுடன் ஆடியும், அருளும் இரக்கமும் கொண்ட அமுதமே, முழு முதல் தெய்வமாக ஆனவளே அணுவிற்கணுவாய், அண்டத்திலும் பிண்டத்திலும் அமர்ந்த சிவம் ஆனவளே, பரஞான வெளிக்கு அரசே, வேதத்தின் உட் பொருளாய் இருப்பவளே, மூச்சுக் காற்றாக இருந்து சுழி முனையில் நடனமிடும் கண்மணியே! எளியவன் ஆகிய எனக்கு மனம் இரங்கி அருள்புரிவாய்.

விளக்க உரை

  • மயில், குயில் போன்றவை சித்தர் பரிபாஷையுடன் தொடர்பு உடையவை. அம்பாள் உபாசனை செய்பவர் என்பதாலும், தமிழ், சம்ஸ்கிருதம் போன்றவை கற்ற பண்டிதர் என்பதாலும் அவரின் விளக்கங்களை குருமுகமாக பெறுக.
  • கெடி – நிறைவேறிவருஞ் செயல், அதிகாரம், மலைக்கோட்டை, ஊர், வல்லமை, புகழ்,அச்சம்
  • அளி – அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம், வண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

  • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 8 (2019)


பாடல்

நாளார் வந்தணுகி நலி
   யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
   யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
   பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
   யாரை நினைக்கேனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்

பதவுரை

அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

  • திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
  • நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக  `நாளார்`

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 7 (2019)


பாடல்

மன்னுவார் சடையாரை முன்
   தொழுது மட்டிட்ட
என்னும் நற் பதிகத்தினில்
   போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு
   எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து
   உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்

பன்னிரண்டாம் திருமுறை –  பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துசாம்பலில் இருந்த அங்கம்பூம்பாவை உயித்தெழ செய்யப் பாடிய பாடல்

பதவுரை

பதிகம் தொடங்கும் முன் கங்கையும் பிறையும் நிலைபொருந்தியதும், நீண்டதும் நிலைபெற்றதும் ஆன நீண்ட சடையினையுடைய சிவபெருமானைத் தொழுது “மட்டிட்ட” என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தினிலே மரணத்தைப் போக்குவதான “போதியோ” என்று கூறும்  அமுதம் போன்ற அந்த மெய்த்திருவாக்கு உரைத்திட்ட போது அந்தக் குடத்தினுள்ளே அந்த எலும்பின் உள்ளே பொருந்தி வந்து உருவமாய்க் கூடியது.

விளக்க உரை

  • “வருக!” என உரைப்பாராகிய பிள்ளையாரது கருத்தினை ஆணையின் வைத்துச் செயற்படுத்தியது அப்பதிகத்தினுள் போதியோ? என்ற மூவெழுத்தோர் சொல்லாகிய சிவஞான விளைவாம் சிவ சிற்சத்தியேயாம் என்று காட்டி, அதன் செயலை விளக்கியது இத்திருப்பாட்டு. “சடையாரைமுன்றொழுது” என்றதும் இக்குறிப்புத் தருவதாம்.
  • இந்தப் பதிகம் முழுவதும் கபாலீசர் திருநாமமும் போற்றுமாறு அமைந்து இருக்கும்
  • திருஞானசம்பந்தர் திருவுருவம் முழுதும் சிவஞான மயமே ஆகி  சிவ நிறைவுள்ளதாதலின் அவரது வாக்கு இறைவர் திருவாக்கேயாயிற்று
  • மெய்த் திருவாக்கு –  என்றும் அழிவில்லாத நித்தப் பொருள் ஆகிய சிவம்
  • வாக்கு – சிவ சிற்சத்தி
  • பிரணவ சொரூபமாய் நின்ற மூன்றெழுத்து மகாமந்திரமாய் நின்றது பதிகத்துள் “போதியோ” என்ற சொல்
  • அதுவே வருக என்ற ஆணையாகிய சிவ சிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமை அறிக
  • உருவமாய்த் தொக்கது – படிப்படியாக வளர்ச்சி முறையில் கூடிற்று

இன்று குரு பூசை – வைகாசி மூலம்

திருஞானசம்பந்தர்  
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 6 (2019)


பாடல்

வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் – ஆனபொழு(து)
எய்த்தோம் இளைத்தோமென்(று) ஏமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று

ஔவையார் தனிப்பாடல்

கருத்துஉலகியல் வாழ்வின் நிறைவுகளைப் பற்றி சொல்லி துன்பம் கொண்டு இருக்கக் கூடாது என்பதை குறிக்கும் பாடல்

பதவுரை

அளவிட இயாலாத வானம் இருக்கிறது; உயிர்களைக் காக்க மழை இருக்கிறது; உயிர்களை வளர்க்கும்  இந்த மண் உலகில் பிறருக்கு உதவி செய்யக்கூடிய தானம் இருக்கிறது. பிறரிடத்தில் காட்டக்கூடிய அன்பு இருக்கிறது. இத்தனையும் இருக்கும்போது அடைதல் இல்லாமல் ஒன்றுமில்லாதவர் ஆயினோம், செல்வத்தால் இளைத்துப்போயிருக்கிறோம் என்று எடுப்பவர் பற்றி ஏமாந்திருப்பது எதற்காக?

விளக்க உரை

  • ஓர் அரசன் மகள் கல்வி அறிவில்லாதவன் ஒருவனை காதலித்து வஞ்சகம் கொண்ட கல்வி அறிவுள்ளவன் மற்றொருவனை மணந்து  தற்கொலை செய்துகொண்டு இறந்து, வருகிறவர்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தவள், ஔவையைத் துன்பம் செய்யத் தொடங்கியபோது நான்கு சாமத்திலும் பாடிய பாடல்.
  • எய்தல் – அடைதல், சேர்தல், அம்பைச் செலுத்தல், நிகழ்தல், சம்பவித்தல், பெறுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 5 (2019)


பாடல்

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துதிருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்

பதவுரை

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள்,  பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.

விளக்க உரை

  • பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை
  • பணிந்தவர் – பணியப்பட்டவர்
  • விருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 3 (2019)


பாடல்

கனத்த மலையை எடுத்தணுவாய்க்
      காலால் ஊன்றிமீதுவைத்தால்
   கால்தான் தாங்க வசமாமோ
      கருணாநிதியே இனிஉனது

சினத்தை மகன்மேற்பொருத்தநின்றால்
      சிறியேன் பொறுத்து நிலைப்பேனோ
   சிவையே உனது தயவுவரச்
      செய்வாய் இனிஅஞ்சுகஇனமே

தொனித்தமறையின் முடிவிளக்கே
      சோதி வதனச் சுடரொளியே
   சுத்த வியோம் மண்டலத்தில்
      சுகமாய் வளரும் துரந்தரியே

மனத்துள் அழுக்கை அகற்றிஉன்றன்
      மலர்ப்பா தமதில் சேர்த்தருள்வாய்
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துகுற்றங்களை நீக்கி திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுதல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அஞ்சுகம் ஆகிய கிளிக்கூட்டதை ஒத்து இருப்பவளே! ஒலித்தலை உடைய வேதமாகிய மறையின் முடிவான பொருளாக இருப்பவளே! சோதி போன்ற சுடரொளியை முகத்தில் கொண்டவளே! சுத்த பரவெளி ஆகிய மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்பவளே! பெரும் கருணை உடைய தாயே! உனது திருவடி ஊன்றி கனமாகிய மலையை எடுத்து அதன் ஒரு பகுதி ஆகிய ஒரு மூலக்கூறாகியதும் அளவில் சிறியதும் ஆன அணு அளவில் ஆக்கி என் மீது வைத்தால் அந்த பேரின்ப அனுபவத்தை எனது சுவாசத்தால் தாங்க இயலுமோ? (இயலாது). இவ்வாறான பேரனுபவத்தை தருபவளாகிய நீ, சினம் கொண்டு உன் மகன் ஆகிய என் மேல் சினத்தை பொருத்தி நின்றால் சிறியவன் ஆகிய யான் அதை பொறுத்து நிலை பெற இயலுமோ?(இயலாது என்பதே முடிவு) அன்னை ஆகிய பார்வதி தேவியே! என்மனத்துள் உள்ள அழுக்குகள் ஆகிய காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களை நீக்கி,  உன்னிடத்தில் அருள், அன்பு, பக்தி ஆகியவை வரும்படி செய்து உன் திருவடித் தாமரை சேர அருள்வாய்!

விளக்க உரை

  • “கனமாகிய மலையை எடுத்துப் பேரணுக்களாக நெருக்கி என் மீது வைத்தால் என் கால்கள்தான் தாங்க முடியுமோ” என்று சில இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கால் என்பது மூச்சுக்காற்றுடன் தொடர்புடையது எனும் சித்தர் பெருமக்களின் வாக்காலும், பேரனுபவத்தை விவரிக்க இயலா நிலை ஏற்படுகிறது என்பதை முன்நிறுத்தியும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சிவை – பார்வதி, காளி, நரி, வேர், உலைமூக்கு, நெல்லிக்காய்
  • தொனித்தல் – ஒலித்தல், சொல்லுதல், குறிப்புப் பொருள் தோன்றுதல்
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 25 (2019)


பாடல்

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநிலை அற்ற உடல் குறித்து குறிப்பிட்டு நிலையானதான சிவானுபவம் வேண்டுதல்.

பதவுரை

உலகத்துக்குத் தலைவனே! பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; இழிவு தன்மை உடையவனும், கைவிடப்பட்டவனும் , குணமில்லாதவனும், நிரந்தர வடிவம் ஒன்றும் இல்லாததும்  இருந்து வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் இருக்கும் இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவானுபவத்தை அருளுவாயாக.

விளக்க உரை

  • பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்ப்பது போல் உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும்.
  • மோத்தை – வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ; முற்றுத்தேங்காய்; ஆட்டுக்கடா; வெள்ளாட்டுக்கடா; பொருந்த வாழ்வு
  • சீத்தை – குணமின்மை, கைவிடப்பட்டவன், கீழ் மகன், பதனழிவு, சீட்டுச்சீலை; சீ என்று வெறுத்தற்குரியது
  • சிதம்பு – பதனழிவு, இழிவு, தன்மையின் அழிவு

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 24 (2019)


பாடல்

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துமங்கையர்கரசியாரின் பெருமைகளை போற்றி புகழும் பாடல்.

பதவுரை

மங்கையர்கள் எல்லாருக்கும் ஒப்பில்லாத பேரரசி ஆக விளங்குபவரும், எங்கள் தெய்வம் ஆனவரும், சோழ வம்சத்தின் குலக்கொழுந்தாக விளங்குபவரும்,கைகளில் வளையல்களை  அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், தென்னாடு ஆகிய பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய உடையவரும், எங்களுக்கு தலைவனாகவும், தேவனாகவும் இருக்கும் சீகாழித் தலைவரின் அருளால் பெரியதான தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கியவரும், பொங்கி வருவது போன்று மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத் தகுந்தாகும்.

விளக்க உரை

  • மானி எனும் இயற்பெயருடன் சோழ மன்னனுக்கு மகளாகப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். திருஞானசம்பந்தரை பாண்டி நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றியவர்.
  • வளவர் – சோழர்

மங்கையர்கரசியார் குரு பூசை – சித்திரை – ரோகிணி (7-May-2019)

முக்தித் தலம் – திருஆலவாய் எனும் மதுரை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 23 (2019)


பாடல்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே

ஒன்பதாம் திருமுறை –  திருவிசைப்பா – கருவூர்த் தேவர்

கருத்துஉன் திருவடி அடைந்த பிறகும் அருள் செய்யாது இருப்பாயா என்று வினவும் பாடல்.

பதவுரை

நீண்டதும், உயரமானதும் ஆன அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரவு நேரங்களில் இருளைப்போக்குவதற்காக இருப்பதும், அணையாதும்  ஆன விளக்குகள் சாளரங்களுக்கு வெளியே வந்து ஒளியை வீசுகின்றதும் ஆன கடைத் தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து, ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி, உன் திருவடிகள் இரண்டனையும் குருவால் சொல்லப்பட்ட நெறியில் நிற்கும் முறையை அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

விளக்க உரை

  • அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் – அருள் செய்வாய், அருள் செய்யாது ஒழிவாயா(நிச்சயம் மாட்டாய் என்பது மற்றொரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • அடையுமாறு அடைதல் – நூலில் சொல்லப்பட்ட நெறி வழி நின்று அந்த  முறையில் அடைதல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது. குரு காட்டிய வழியில் அடைதல் என்பது பொருத்தமான பொருளாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட விளக்கம் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐவர் கள்ளர் – ஐம்பொறிகள்
  • மெள்ள – இனிமையாக விதித்த வழியில் சென்று நீக்கினமை பற்றி; சிறிது சிறிதாக நீக்கி என்று பொருள் பகர்வாரும் உளர்
  • துரந்து – ஓட்டி.
  • நிலை விளக்கு – அணையாது உள்ள விளக்கு.
  • சாலேகப் புடை – சாளரங்களுக்கு வெளியே
  • இலங்கும் – ஒளியை வீசுகின்ற

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 22 (2019)


பாடல்

ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துவைரவர் கோலம் கொண்ட ஈசன் கறி உணவாக சமைக்கப்பட்ட சிறுதொண்டரின் மைந்தனை உணவு உண்ண அழைத்த போது கூறியது.

பதவுரை

ஆறு திங்கள் கழிந்த பிறகு நாம் ஒருமுறை உண்போம்; உண்ணும் அளவு தெரியாமல் நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! நாம் உண்பதற்கு முன் நீவிர் உணவு உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்று இருக்கிறீர். ஆதலால் அவனையும் இப்போது அழையும்!  என்று கூறினார். அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், “அவன் இப்போது இங்கு உதவான்” என்று விடையளித்தனர்.

விளக்க உரை

  • இல்லை என்று கூறாமல் தனது மனைவி ஆகிய சந்தனத்தாதியார் உடன் சீராளன் ஆகிய தனது பிள்ளையை பிள்ளைக்கறி ஆக்கி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.

 

சிறுதொண்டர் குரு பூசை – சித்திரை – பரணி (5-May-2019)

முக்தித் தலம் – திருசெங்காட்டான்குடி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 21 (2019)


பாடல்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.

விளக்க உரை

  • பக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்
  • அறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.
  • பதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்
  • அகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 20 (2019)


பாடல்

பெரியோர் எவரைப் பழித்தேனோ
      பிரம தவத்தை அழித்தேனோ
   பெற்ற தாயார் பசித்திருக்கப்
      பேணி வயிற்றை வளர்த்தேனோ

அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே
      அற்ப ரிடத்தில் சேர்ந்தேனோ
   அறியாமையினால் என்ன குற்றம்
      ஆர்க்குச் செய்தேனோஅறியேன்

கரிய வினைதான் எனதறிவைக்
      கலங்க வடித்து முடிச்சதையுங்
   கரைக்க வுன்றன் கருணையினால்
      கடாக்ஷம் பொருந்த அருள்புரிவாய்

வரிவில் புருவ மடமானே
      வதனாம் புயவாலாம்பிகையே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துமாயைக்கு உட்பட்டு அறியாமையால் செய்த தவறுகளை விலக்கி அருள் புரிய வேண்டி நின்ற பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, எண்ணங்களால் அறிவுள்ள பொருளாகிய புருட வடிவம் கொண்டும் மேனி வடிவில் வாலாம்பிகையாகவும் இருப்பவளே! பெரும் பாவங்களில் கூறப்படுவதான பெரியோர்களைப் பழித்து இருந்தேனோ? மிகக் கடுமையான தவம் செய்பவர்களை அழித்தேனோ? அன்னையைப் பசிக்க கண்டும் தான் மட்டும் உண்ணுதல் போன்ற மிகக் கொடுமையை செய்து இருந்தேனோ? அரிய தவம் உடையவர்களுக்கு இடைஞ்சல் செய்தேனோ? சிறுமை புத்தி உடைய்வர்களும், அற்பமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் இடத்தில் சேர்ந்து  இருந்தேனோ? வினைப்பயன் கூட்டுவித்து என் அறியாமையால் எவர்க்கு என்ன குற்றம் செய்தேனோ – இது பற்றி அறியவில்லை. ஆகையால் மாயைக்கு உட்பட்டு இருவினைகள் கொண்டு, பேரறிவை அறிய முடியாதபடி செய்து என்னைக் கலங்கும் படியான வாழ்வினை கரைக்க உன்னுடைய கருணையினால் கடைக்கண் காட்டி கிருபை செய்வாய்.

விளக்க உரை

  • நல்லோர் மனதை நடுங்கச் செய்தோனோ” எனும் மனு முறை கண்ட வாசகம் ஆன வள்ளலாரின் பாடல் வரிகளுடனும், “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” எனும் வள்ளுவர் குறளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • புருடன் எனும் இரு பொருள் கொண்டு இங்கு உரைக்கப்படுகிறது. சிவனைக் குறித்து கூறப்பட்டு சிவசக்தி ஐக்கியமாக காணுதலையும், மெய்யறவு கொண்டு சிவத்துடன் ஒன்றாகி தானும் சிவசக்தி ரூபமாக இருப்பவள் என்று உரை செய்யப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!