அமுதமொழி – விகாரி – தை – 16 (2020)


பாடல்

சோம்பலா யிருந்தக்கால் காயசித்தியாமோ
சுணக்கணாய்த் திருந்தக்கால் வாதசித்தியாமோ
கூம்பலாய் மனம்போனால் யோகசித்தியாமோ
குளிகைக்குச் சாரணைதான் தீராயானால்
ஆம்பலா யாகாச கெவுனம்போமோ
அடியான வழலைவிட்டால் சித்தனாமோ
காம்பலாய்க் காமத்தின் வழியேசென்றால்
காலூன் றுஞ்சிவயோகக் கருத்துப்போச்சே

போகர் கற்பம் 300

கருத்து – குவிக்கப்படா மனத்தினால் எதையும் பெறமுடியாது என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

விதிக்கப்பட்ட மார்கங்கள் கொண்டு, மற்றும் உபதேசிக்கப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்யாமல் சோம்பல் கொண்டு இருந்தால் உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி ஆனதும், அணிமா மகிமா முதலிய சித்திகள் ஆனதுமான காயசித்தி அடையக் கூடுமோ? ஒன்றிலும் நிலை பெறாமலும் முழுமை பெறாமலும் நாய் போன்று அனைத்தையும் விரும்பி இருந்தால் ரச வாதம் எனப்படுவதான வாத சித்தி அடையக் கூடுமோ? மனமானது குவிக்கப்படாவிட்டால் யோக சித்தி என்றும், இறை நிலையை அடைதலை குறிப்பதானதுமான சமாதி நிலையை எய்த இயலுமோ? மந்திர சக்தி உடையதும், படர்ந்து செல்லும் வகையினதும் ஆன வெள்ளை நிறமுடையதுமான அல்லிப்பூ கொண்டு மிகப் பெரியதான ஆகாயத்தினை மூட இயலுமோ? மிகச் சிறியதாக இருப்பினும் காமத்தின் வழியே சென்றால் உயிர்கள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கும் சிவயோகம் அதன் நிறம் மாறி கருமை நிறம் கொள்ளும்.

விளக்க உரை

  • கூம்பல் – குமிழமரம்
  • ஆம்பல் – அல்லி, வெண்ணிறப் பூ, ஆம்பற்குழல், பண்வகை,  மூங்கில், ஊதுகொம்பு, யானை, ஆம்பன்முக வரக்கன், கள், துன்பம், அடைவு, சந்திரன்
  • கெவுனம் – மிக
  • வழலை என்பதை வாலை எனக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் இருப்பின் மன்னிக்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 27 (2019)


பாடல்

பாரென்று விந்துவிலே பாலாசத்தி
     பரையினுட வம்மென்ன பகரப்போறேன்
சேரென்ற மொழியாட்கு வயதோ பத்து
     சூரியனுஞ் சந்திரனு மகா திலதத் தோடு
கோரென்ற ஏவிகொடிகழேனிக்காந்தி
     கூறியதா அத்தத்தில் குறிப்பைக்கேளு
ஆரென்ற அபயமொடு வரதமாகும்
     அழகான திருமுறையுஞ் செபவடமுந்தானே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பாலாவின் திருவடிவம் பற்றி போகர் உரைத்தப்பாடல்

பதவுரை

சக்திதத்துவம் ஆனதும் புள்ளி வடிவில் உள்ளதும் ஆன பிந்துவில் உள்ள பாலா சத்தியை பற்றி கூறுகிறேன் கேள். சத்தி வடிவமான அவள் பத்து வயதை உடைய உருக்கொண்டவள், அவள் சூரிய சந்திரர்களை தோடாக அணிந்திருப்பவள்; அவளுடைய மேனி கோடி சூரிய ப்ராகசத்தினைக் கொண்டது; மனம்எனும் மாயைஜெயித்த கோதண்டம்ஏந்திய இராமனை போல் தூயநிலையில் அத்தன் சிவத்தை ஆராதாரத்தில் இருத்தி நேர்கொண்டநிலையில் ஆதியான நாயக நாயகி ஆனவளும் அழகான நெற்றிவகிட்டில் ஆன்மஜோதியான நெற்றிசுட்டியும் கொண்டு அனைத்து படைப்புக்கும் ஆதாரமானவளும் ஆதிமாதா எனப்படுபவளுமான அவள் கைகளில் திருமுறைகளும், செபமாலை ஆகியவற்றை கையில் ஏந்தியவளாகவும், அபய வரத முத்திரைக் கரங்களை உடையவளாகவும் இருப்பாள்; அவளை அவ்வண்ணமே சதா தியானிப்பவர்களுக்கு அவள் வடிவமே மந்திரமாய் காக்கும்.

விளக்க உரை

  • கோதண்டம் போல் நீ நின்றால் மந்திரம் மறைந்து அவள் திருநாமமே முக்தியளிக்கும் என்பது பொருள்

பதவுரை எழுத உதவி செய்த பெயர் வெளிட விரும்பாத சக்தி உபாசகருக்கு என நமஸ்காரங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 31 (2019)


பாடல்

ஆமென்ற துரைச்சியைத்தான் பூசை பண்ண
அநேக நாள் செய்த தவ பலத்தாற் கிட்டும்
வாமென்ற பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
மகேசனோடு சதாசிவனுங் கணேசன் கந்தன்
ஏமென்ற விந்திரனும் சந்திரா தித்தர்
எழிலான காமனொடு அங்கிநந்தி
கோமென்ற குபேரனொடு கும்பமுனியுங்
கூராகிய முனிரிஷிகள் பூசித்தாரே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் அன்னையை பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது என்பதையும், அவ்வாறு பூசை செய்தவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

ஆம் (ஒம் எனும் ஒலியின் மூல நாதம்) எனும் நாதத்தால் அறியப்படுபவள் ஆன தாயானவளை பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது. அழகும் ஒளி  பொருந்தியவனும் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன்,சதாசிவன், கணேசன், கந்தன், பாதுகாப்பினைத் தருபவனாகிய இந்திரன், சூரியன், சந்திரன், அழகிய வடிவம் கொண்டவனாகிய காமன், அங்கி, நந்தி, குபேரன், கும்ப முனியாகிய அகத்தியர் மற்றும் சிறந்தவர்களான முனிவர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் அன்னையை பூசனை செய்தார்கள்

விளக்க உரை

  • 96 தத்துவங்கள் என்பதை ஸ்தூலத்தை முன்வைத்து 36 மற்றும் 60 ஆக பகுக்கப்படும் என்றும் சிவ தத்துவங்களோடு கூடும் போது ப்ரிதிவி சார்ந்து இருப்பதும், சக்தி தத்துவங்களோடு கூடி ஆகாசம் எங்கும் நிறைந்திருத்தலை குறிக்கும் என்பதையும் சக்தி உபாசனை செய்பவர் அருளினார்.
  • துரைச்சி – தலைவி, ஐரோப்பியப் பெண், உலோகநிமிளை
  • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
  • ஏமம் – பாதுகாப்பு
  • கூர் – மிகுதி, கூர்மை, கூர்நுனி, குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு, இலையின்நடுநரம்பு, கதிர்க்கூர், காரம், குத்துப் பாடானபேச்சு, மிக்க, சிறந்த

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 30 (2019)


பாடல்

அன்னத்தின் பெயர்தனையே யறையக்கேளு
அஞ்சமாம் அஞ்சம்பா பீதமாகும்
நன்னமா மரத்தபர தோயமாகும்
ராசவங் கசமான தாத்திராஷ்டிரஞ்
சின்னமாஞ் சிறையன்னஞ் சிவலோகத்தன்னஞ்
செழுமுளரிப் பொகுட்டி லன்னமாகும்
புன்னப்பூ வன்னம் புனலிவன்னம்
புலம்புகின்ற வன்னமாம் அன்னப்பேரே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  போகர் அன்னத்தின் வெவ்வேறு பெயர்களைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னத்தின் பெயர்களை சொல்லுகிறேன் கேட்பாயாக. அஞ்சகம், அஞ்சம் பாபிதம், பல்லாற் கடித்தலை போன்ற மெல்லியதான மரத்த பரதோயம், தலையான மருந்தினைப் போன்றதுமான  தாத்திராஷ்டிரம், சிறையன்னம், சிவலோககற்றன்னம், செழுமுளரி, பொகுட்டிலன்னம், பூவன்னம், புனலிவன்னம் ஆகும். இவ்வாறாக அன்னத்தின் பெயர்களை சொன்னேன்.

விளக்க உரை

  • நன்னுதல் – பல்லாற் கடித்தல், நறுக்குதல்
  • வங்குசம் – கூகைநீறு, ஒரு மருந்து, காட்டெருமைப் பால்
  • அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல், ஒலித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)


பாடல்

தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார்
     செயகண்டி சங்கோசை காதில் கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஒசைகேட்கும்
     சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம்
     திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி
     பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே

போகர் சப்த காண்டம் -7000 – போகர்

கருத்து – தியான அனுபவங்களையும், அதன் சில பலன்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உரைத்த தீட்சை விதிகளின் படி மனோன்மணியான அன்னை மீது மனத்தைச் செலுத்தி  சுவாசம் உள்ளடக்கி  மனத்துள் அகபூசை செய்பவர்களுக்குக் கிட்டும் பல்வேறு அனுபவங்களை போக நாதர் இப்பாடல் மூலம் அறிவிக்கிறார். அவ்வித தியானம் கை கூடுகிறது என்பதற்கு அடையாளங்களாக  சங்க நாதம் ஓங்காரமாக காதில் ஒலிக்கும்.  நம்முள் அன்னை மனோன்மணியானவள் நடமிடுவதால் உருவாகும் சிலம்பொலி ஓசை கேட்க இயலும்.  அம்பரம், சிதம்பரம், ஆகாயம், அண்டவுச்சி, புருவ மத்தி,  சிற்றம்பலம் எனப் பல்வேறு குறிப்பிடூகளால்  உணர்த்தப் படும் மெய்ப்பொருளின் இருப்பிடத்தையும், அவ்விடத்தே அம்மெய்ப்பரம் பொருள் நிகழ்த்தும் திரு நடனத்தை உணரும் ஆற்றலும் கிட்டச்செய்யும். உண்மை, அறிவு, ஆனந்தம் எனப்படும் சச்சித்தானந்தம் என்ற பேரின்ப நிலை  இடையறாது கிடைக்கப்பெறும். இவ்வாறு அனுதினமும் தியானம் தொடருபவர்களுக்கு  அம்மையப்பர் அருளால் தச வாயுக்களில் பத்தாவதான உயர்ந்த தனஞ்செயன் எனும் உயிர் நிலைதனை தன் மனத்தால் அடக்கும் பேராற்றல் அதாவது சாகா நிலை கிட்டும் என போக நாதர் அருளுகிறார். இவ்வாறான பயிற்சி விதிகளுக்கு உட்பட்டு ஒரு தகுந்த  குரு மூலம் மட்டுமே அறியப் பட வேண்டியதாகும்.

விளக்க உரை

  • பத்ததி – வரிசை, ஒழுங்கு, ஆகமக் கிரியைகளுக்கு நெறி காட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி, வழி, சொற்பொருள்

 

பதவுரை எழுதித் தந்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 30 (2019)


பாடல்

கருணையாங் காமாட்சி யிருந்த வீடு
   கடிதான நாற்பத்து மூன்று கோணம்
வருணையாம் ரிஷி தேவர் சித்தர் யோகி
   மகத்தான பஞ்சகர்த்தா ளக்கினி யாதித்தன்
அருணையாம் அகஸ்தியருங் கணேசன் கந்தன்
   ஆத்தாளைப் பூசித்து அதிகார மானார்
கருணையாம் பூசித்துச் சமாதியிலேநின்று
   தாயளிக்கச் சகல சித்துந் தரித்திட்டேனே

போகர் – கருக்கிடை நிகண்டு 500

கருத்துஸ்ரீ சக்ர பூசை செய்தவர்களையும், அவர்கள் வழியில் தானும் பூசை செய்ததையும் போகர் குறிப்பிட்டு உரை செய்த பாடல்.

பதவுரை

தாயாகியவளும், கருணையுள்ளம் கொண்டவளும் ஆன காமாட்சி  இருக்கும் வீடு அடைவதற்கு அரிதான நாற்பத்து முக்கோண சக்கரம் ஆகும். எக்காலத்திலும் அன்பை பொழிவதாக இருப்பவர்களானவர்களும், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து  மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆகிய ரிஷிகளும், தேவர்களும், சித்தத்தை அடக்கியவர்கள் ஆன சித்தர்களும், பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர் ஆன  யோகிகளும், பஞ்ச கர்த்தாக்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர்களும், அக்னி, ஆதித்யன், அருணை எனும் அருணாச்சலத்திற்கு நிகரான அகஸ்தியர், கணேசன், கந்தன்  போன்றவர்கள் இந்த சக்கரத்தை பூசித்தே சகல அதிகாரமும் பெற்றார்கள். கருணை வடிவம் ஆகிய  அவளை அவள் கருணையினால் நானும் மேலே குறிப்பிட்டவர்கள் பூசை செய்த முறையில் பூசித்து, சமாதியில் நின்று சகல சித்தையும் அறிந்து கொண்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 9 (2019)

பாடல்

சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன்
     சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா
     முயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை
     சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து
     சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே

போகர் சப்த காண்டம் – போகர்

கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.

பதவுரை

இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய்,  ஞான வழி  அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.

விளக்க உரை

  • சித்து – அறிவு, அறிவுப்பொருள், ஆன்மா, அட்டமாசித்தி, கலம்பக உறுப்பு, வேள்வி, வெற்றி, ஒரு வரிக்கூத்து வகை, எழுத்தடிப்பு, கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்
  • வயனம் – வசனம், வேதம், பழிமொழி
  • ‘பெம்மான் முருகன், பிறவான், இறவான்’ எனும் அருணகிரிநாதரரின் கந்தர் அனுபூதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்