அமுதமொழி – சார்வரி – ஆனி – 21 (2020)


பாடல்

கலங்காத சித்தமுஞ் செல்வமுஞ் ஞானமுங்
   கல்வியுங் கருணை விளைவுங்
கருதரிய வடிவமும் போகமுந் த்யாகமுங்
   கனரூப முள மங்கையும்
அலங்காத வீரமும் பொறுமையுந் தந்திரமு
   மாண்மையு மமுத மொழியு
மானவிச் செயலெலாஞ் சனனவா சனையினா
   லாகிவரு மன்றி நிலமேல்
நலஞ்சேரு மொருவரைப் பார்த்தது பெறக்கருதி
   னண்ணுமோர் ரஸ்தாளி தன்
னற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
   நாள்செயினும் வாராது காண்
அலங்கார மாகமலர் கொன்றைமா லிகைசூடு
   மண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
  ரறப்பளீ சுர தேவனே

சதுரகிரி அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – ஒருவருக்கு வரும் நற்செயல்கள், அழகு, ஞானம் ஆகியவை பிறவி வாசனயினல்  வரும் என்றும் அவை குறித்து மற்றவர்கள் பெற கருதக்கூடாது என்பதை உவமையுடம் கூறும் பாடல்.

பதவுரை

அலங்காரமாக மலர்களுடன் கொன்றை மாலையை சூடிடும் அண்ணலே, அழகும் வனப்பும் கொண்டவனே, உள்ளத்தில் அனுதினமும்  இன்பத்தைத் தரும் சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுர தேவனே! முன் செய்த வினைகளின் காரணமாக துயர் வரும்போது இருக்கும் கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும், கல்வியும், கருணை கொண்ட வடிவமும், அளவற்ற இன்பமும், தியாகமும், அழகிய வடிவமுடைய மணத்தலும், ஒளிவீசி புகழ் தரும்படியான வீரமும், பொறுமையும், தந்திரமும், சிறப்புகளும், சிறப்புகள் உடைய பேச்சும், மானம் கொண்டு செய்யப்படும் செயல்களும் பிறவி வாசனயினல் இந்த புவிதனில் வரும்; இவ்வாறு நலங்கள் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அதைப் பெறக்கருதுவது என்பது ரஸ்தாளி எனும் வாழைப்பழ சுவை தனக்கு வரவேண்டும் என வேம்பு நீண்ட நாட்கள் தவம் செய்தலுக்கு ஒப்பானது; (கிட்டாது என்பது முடிபு)

விளக்க உரை

  • அலங்குதல் – அசைதல், மனந்தத்தளித்தல், இரங்குதல், ஒளிசெய்தல்
  • மத – மடன், வலிமை, மிகுதி, வனப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 20 (2020)


பாடல்

பொற்புறு சபையின் மாதரார் நடனம்
     புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
     தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
     மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
     கற்குடி மாமலைப் பரனே

திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை

கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும்  பாடல்.

பதவுரை

கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ  எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?

விளக்க உரை

  • திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
  • தற்போதைய பெயர் உய்யக்கொண்டான்மலை
  • முசுக்கள் – கருங்குரங்குகள்
  • மற்பொரு – மல் பொரு – மல்யுத்தம், மதம் கொண்ட யானை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 19 (2020)


பாடல்

இருக்கெலாமள விட்டின்னு மினைத்தென வறியவெட்டாத்
திருக்குலாவிய பேரின்பச் செழுங்கட றிளைக்கலாமால்
மருக்கலாரங் கண்மொய்த்தவா விசூழ்காஞ்சி வாழ்வுற்
றிருக்குமானந் தருத்திரே சனையிறைஞ் சினோர்க்கே

கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம். – சிவஞான யோகிகள் அருளிய பிரபந்தத் திரட்டு – பாகம் 5

கருத்து – காஞ்சியில் வீற்றிருக்கும் ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறும்    பாடல்.

பதவுரை

மால் மருகன் என்று அழைக்கப்படுபவனாகிய குமரனின் கண்பார்வையில் இருக்கும்படியான காஞ்சி மாநகரில், சைவப்பிரிவுகளில் ஒன்றானதும், மந்திரமார்க்கக் கிளைநெறி ஆனதும், சிவனின் முதன்மை வடிவமாக கபாலீச பைரவரையும் அவர் தேவி, சண்டகபாலினியையும் போற்றி வணங்குவதுமான யாமளம வீட்டில் அறிய இயலாத சிறப்புடையதும், பெருமை உடையதும், நிலைபெற்று விளங்கக்கூடியதுமான இறைவன் ஆகிய ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள்.

விளக்க உரை

  • யாமளம் – கபாலீச வைரவரும் அகோரேசுவரியும் இவர்களது வழிபடு தெய்வங்கள். சில யாமள நூல்கள், அகோரேசுவரியை, சண்டகபாலினி என்று அழைக்கின்றன. பிரமயாமள தந்திரம்/ பாசுபத தந்திரம், பிங்களாமத தந்திரம் முதலானவை இவர்களுக்குரியவை.
  • யாமளர் – தம்மைத் தாமே அறிந்து சிவத்தை உணர்ந்ததன் மூலம், இவர்கள் தாமும் சிவரூபமாக மாறியவர்கள் .குருநாதர்கள் எண்மர் – சுவச்சண்டர், குரோதர், உன்மத்தர், உக்கிரர், கபாலி, சங்கரர், சேகரர், விஜயர் எனும் எட்டு வைரவர்கள், உருத்திரம், ஸ்கந்தம், பிரமம், விஷ்ணு, யமம், வாயு, குபேரம், இந்திரம் ஆகியவை எட்டு யாமள நூல்கள்
  • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், பூந்துகில், புகைகூடி, கொண்டாடுதல்
  • இறைஞ்சுதல் – தாழ்தல், கவிழ்தல், வளைதல், வணங்குதல்

மூலப்பாடலின் எழுத்துக்கள் சரியாக அறியப்படாமையாலும், சொற்பிரிப்பு சரியாக இல்லாததாலும் பாடலில் எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்கலாம். அதுபற்றி விளக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 18 (2020)


பாடல்

தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன்
தானே குடைவேந் தனித்து

திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்

கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும்  ஒருங்கே தியானிப்போம்.

விளக்க உரை

  • இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
  • வெண்மையும் தண்மையும் கங்கைக்கு உரித்தானவை
  • குடைவேம் – ஆடுவேம் – தியானிப்போம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 17 (2020)


பாடல்

தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும்; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே

மாயூர நாதர் அந்தாதி – வே. முத்துஸாமி ஐயர்

கருத்து – வினை அற மயூர நாதனை வேண்டாமல் புறத்தில் நிலையற்றவற்றை வேண்டி நிற்றலை பழிக்கும்  பாடல்.

பதவுரை

தன்னுடைய தேவைகளுக்காக தன்னுடை குமாரனிடம் பலப்பல நாளும் வேண்டி நிற்பார்கள்; அதற்கு தகுதியான நலத்தினை பெற மாட்டார்கள்; மனைவி, குடும்பம், பெருமை தக்கதான புகழ், முதன்மையான வாழ்வு ஆகியவற்றையும் வேண்டி நிற்பார்கள்; வேண்டியவற்றை ஈந்தளிக்கும் பாரியிடம் செல்வமும் வேண்டுவார்கள்; ஆனால் பிறவிக்காரணமான பிணி தீரவும், வினை அனைத்தும் கெடவும் மாயூர வள்ளல் எனப்படும் மயூர நாதரை வேண்ட மாட்டார்கள்

விளக்க உரை

  • தனையன் – குமாரன்
  • பவம் – பிறப்பு, உலக வாழ்க்கை, உலகம், கரணம் பதினொன்றனுள் ஒன்று
  • பனையன் – பாரி (பாரிக்கு நிகராக வழங்குபவர்கள்) எனவும் கொள்ளலாம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 16 (2020)


பாடல்

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
   திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
   தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
   துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
   தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
   மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
   வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
   காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை  ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை  உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக  திசைகளே ஆடையாக  அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.

விளக்க உரை

  • கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
  • கமுகம் – கூட்டம், திரட்சி
  • தெவிட்டல் – உமிழப்பட்டது
  • வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 12 (2020)


பாடல்

மூலம்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

பதப்பிரிப்பு

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே! சகலகலாவல்லியே

சகலகலாவல்லி மாலை  – குமரகுருபரர்

கருத்து – சகலகலாவல்லியிடம் பல்வேறு கவித் திறமை பெற்று மூலம் செல்வம் வேண்டி நிற்கும்  பாடல்.

பதவுரை

அழகிய ஆசனமான செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் அரியதானது என்றும், நமக்கு வாய்க்கப் பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாதவாறு காலத்தால் அழியாத கல்வி  என்றும் மெய் ஞானம் என்றும்  அழைக்கப் பெறுவதுமான பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! சொல்வன்மையாகிய சொற்களை கையாள்வதில் திறமையும், அட்டாவதானம் தசாவதானம் சோடசாவதானம்  சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும், சித்திரக்கவி, சக்கரக்கவி, வரகவி போன்ற சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத் தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக.

விளக்க உரை

  • அட்டாவதானம் – ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • தசாவதானம் – ஒரே சமயத்தில் பத்து காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சோடசாவதானம் – ஒரே சமயத்தில் பதினாறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சதாவதானம் – ஒரே சமயத்தில் நூறு காரியங்களில் கவனம் செலுத்துதல்
  • சித்திரக் கவி வகைகள் – கோமூத்திரி, கூடச் சதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாக பந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைப்பாட்டு, சக்கர பந்தம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 11 (2020)


பாடல்

கொள்ளாத பசுவுக்குப் பாலங்கேது
   குருடான கண்ணுக்கு வெளிச்சமேது
சொல்லாத பேச்சுக்குக் கேள்வியேது
   சோரஞ்செய் மங்கையர்க்கு வாழ்வுமேது
கல்லாத வீணருக்குக் கல்வியேது
   காணா பேர்களுக்கு காட்சியேது
விள்ளாத சிடனுக்குக் குருவுமேது
   வேடிக்கையாய்த் திரிந்தால் விழலாம்பாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துகிட்டாதவை என்பதை உதாரணங்களாக காட்டி மனித வாழ்வினில் வேடிக்கையாக பொழுதினை போக்கி திரிதல் கூடாது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பசு தயாராக இருந்தாலும் அதை ஏற்காத கன்றுக்கு பால் எங்கனம் கிடைக்கும்? பார்வை அற்ற கண்களை உடையவர்களுக்கு வெளிச்சம் என்பது எங்கனம் இருக்கும்? உச்சரித்து சொல்லப்படாத சொல் குறித்து கேள்வி என்பது எப்படி எழும்? தர்ம நெறி விலகிய கற்பு இல்லா மங்கையர்களுக்கு வாழ்வு என்பது எங்கனம் கிட்டும்? நூல்களைக் கல்லாதவருக்கு கல்வி எங்கனம் கிட்டும்? மெய்ஞானம் அடைதல் பொருட்டி விரும்பி அதன் பாதையில் செல்லாதவர்களுக்கு காட்சி எங்கனம் கிட்டும்? தெளிவு அடைதல் பொருட்டு வாய் திறக்காத சீடனுக்கு குருவானவர் எங்கனம் கிட்டுவார்? இவை போல பிறப்பின் நோக்கம் அறியாமல் வேடிக்கையாக திரிந்தால் மண்ணில் விழ மட்டுமே செய்யும்.

விளக்க உரை

  • விள்ளுதல் – மலர்தல், உடைதல், வெடித்தல், பிளத்தல், பகைத்தல், மாறுபடுதல், தெளிவாதல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், வாய் முதலியன திறத்தல், புதிர் முதலியன விடுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 10 (2020)


பாடல்

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துநிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.

பதவுரை

பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.

விளக்க உரை

  • ஓர்தல் – ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல்
  • இன்றுளார் – இன்றைக்கு இருப்பவர்
  • நாளை இல்லை – மறுநாள் இல்லாதவராவர்
  • உழி தரும் – திரியும்
  • பேசாத நாளெல்லாம் பிறவா நாளே‘ என்ற வாக்கிற்கு இணங்க பேசாதவர்களை ஊமை என்று அழைத்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 9 (2020)


பாடல்

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமண்டல பரத்தின் பெருமையும், அஃது ஈசனின் இருப்பிடன் எனவும், அங்கு உறையும் ஈசன் உயிர்கட்கு அருள் புரியும் தன்மையையும் கூறும் பாடல்.

பதவுரை

உச்சிக்குமேல்பன்னிரண்டுஅங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாதசாந்தத்தில் நிற்பதனால் ஏனைய கடவுளர்கள் எல்லோருக்கும் மேலான கடவுளாகவும்,  தனது மேம்பட்ட சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குபவனாக இருப்பவனாகவும், நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாகவும் இருக்கும் நந்திப்பெருமான் எனும் பரம்பொருள் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்து ஆட்கொண்டு அருளிய பின் குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

விளக்க உரை

  • மாபரம் ஆயது – ஏனைய தெய்வங்கள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நிலைபெற்று விளங்குபவர்கள்; ஈசன் `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்குபவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 2 (2020)


பாடல்

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம்

ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து –  சகளம், நிகளத் திரிமேனிகளாக் சிவன் இருப்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி எனப்படும் உருவமாகவும், நிட்களத் திருமேனி  எனப்படும் அருவமாகவும் ஒளியாகவும், ஆகாசமாகவும் இருள் எனும் மாயையாகவும் இருப்பது மட்டுமே சிவம் என்று இருக்காதே; மயக்கத்தினை விலக்கி மெய்யறிவில் கண்டால்  உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே சிவம் என்பதை அறியலாம்.

விளக்க உரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 23 (2020)


பாடல்

புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும்  பாடல்.

பதவுரை

சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல்  உரியவனாய் விளங்குவான்.

விளக்க உரை

  • அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
  • அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
  • பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 20 (2020)


பாடல்

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.

பதவுரை

சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும்  ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு  ‘நீ  விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய  அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன்  உனது திருவடியை அடைந்தேன்;  என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
  • சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
  • இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
  • சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , சடங்க மந்திரங்கள் எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 16 (2020)


பாடல்

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
   பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
   பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
   மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
   முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
   செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
   சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
   அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் வடிவழகையும், திருமேனியில் அணிந்திருக்கும் பல்வேறு ஆபரணங்களையும், அதில் பதிக்கபெற்று இருக்கும் நவரத்தினங்களையும் குறிப்பிட்டு தன் இயல்பு நிலையினால் விளக்க முடியாமையை கூறும் பாடல் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! உன்னுடைய பத்துவிரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்கள் எத்தனை பிரகாசமானது? கால்விரல்களில் அணிந்திருக்கும் பாடகமும், தண்டையும், கொலுசும், பாதங்களில் இருக்கும் பச்சை நிற வைடூரியங்களால் இழைத்திட்ட சிலம்பின் ஓசையும், முத்துகளால் பதிக்கப்பெற்ற மூக்குத்தியும், ரத்தினங்களால் பதிக்கப்பெற்ற பதக்கமும், மனதினை மயக்கும்படியாக அணிந்திருக்கும் மாலை அழகும், முழுவதும்  வைடூரியம் மற்றும் புஷ்பரா கத்தினால் செய்து முடிதிருக்கும் தாலி அழகும், , செம்மை உடைய கையில் பொன்னால் ஆன கங்கணமும், இந்த புவனத்தால் விலை மதிக்க முடிக்கமுடியா ஒளி பொருந்திய முகமும், அதில் தொடர்ச்சியாக இருக்கும் சிறு காதுகளில் வேறு நகைகள் அணியாத போதும் கும்மியாட்டம் போன்று ஒலி எழுப்பி கொண்டிருக்கும் கம்மலின் அழகும், அத்திவரதன் தங்கையும் ஆகிய சக்தியின் சிவரூபத்தை அடியேனால் சொல்ல இயலுமோ?

விளக்க உரை

  • கொப்பி – கும்மியாட்டம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 12 (2020)


பாடல்

திருவார் பெருந்துறை
   மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
   யா  வரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
  ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
  தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின்,  யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும்  நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.

விளக்க உரை

  • வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
  • தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
  • பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 7 (2020)


பாடல்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

கருத்து –   இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.

பதவுரை

போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.

விளக்க உரை

  • இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
  • போற்றுதல் – துதித்தல்
  • புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
  • நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
  • கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
  • என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

  • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 27 (2020)


பாடல்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்

கருத்துஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.

பதவுரை

வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

விளக்க உரை

  • பரவெளி
  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
  • செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
  • ஆங்குநின் தாள்கள் போற்றும்
    பேய்வடி வடியே னுக்குப்
    பாங்குற வேண்டும் என்று
    பரமர்தாள் பரவி நின்றார்

என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 24 (2020)


பாடல்

கூறுகிறேன் சதாசிவத்தி லிதழ்தான் ரண்டு
கொடியதொரு பரவெளி லிதழ்தானொன்று
தேறுகிறே னைம்பத்தோ ரிதழுமாச்சு
ஆறிதழாய்ப் பிறக்கின்ற கலைநான்கிற்கே
யரியமணி பூரகமா தாரமாச்சு
வேறுமினி நினையாம லாதாரத்தின்
விஞ்சையடா வைம்பத்தொன் றறிந்துகொள்ளே

அகத்தியர் யோக ஞானம் 500

கருத்துமுருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.

பதவுரை

ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
  • விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
  • தேறுதல் – ஆறுதல், முன்னேற்றம்
  • தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
    நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம் ||  செளந்தர்யலஹரி

அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 23 (2020)


பாடல்

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
   பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
   வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
   குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
   முனிவதென் முனிவு தீர்ந்தருளே

ஆறாம் திருமுறை –  திருஅருட்பா – வள்ளலார்

கருத்துவள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும்  நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி  ஆண்டருள்க.

விளக்க உரை

  • மன்றில் – வாயில்முற்றம்
  • கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
  • முனிவு – கோபம், வெறுப்பு
  • எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!