அமுதமொழி – விளம்பி – பங்குனி – 12 (2019)

பாடல்

அருவமும் உருவம் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
     பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
     உதித்தனன் உலகம் உய்ய

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துஅருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.

பதவுரை

நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.

விளக்க உரை

  • உதித்தல் – உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல்
  • ‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின்  கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

  • அமர்தல் – விரும்புதல்
  • இடி – மா.
  • கன்னல் – கரும்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)

பாடல்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துநந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.

பதவுரை

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை  நன்றாக ஆற்றியதே ஆகும்.  ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.

விளக்க உரை

  • அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
  • நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
  • நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
  • ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச்  தம் வரலாற்றையே கூறுகின்றார்.
  • சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
  • எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
  • தண் – அமைதி.
  • அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் (  நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 9 (2019)

பாடல்

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துவினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப்  வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.

விளக்க உரை

  • தெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்
  • உள்குதல் – உள்ளுதல், நினைத்தல், உள்ளழிதல், மடிதல்
  • வெள்குதல் – வெட்குதல், அஞ்சுதல், கூச்சப்படுதல், மனங்குலைதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 8 (2019)

பாடல்

மூலத் துதிக்கும் ஞாயிறுமாய்
      முளரி யிதழ்வாய்ச் சதுர்முகனாய்
   மூல வுந்தித் திருமாலாய்
      மூளுங் கால காலனுமாய்

மேலுற்றருளுஞ் சதாசிவனும்
      விரியும் இதழொன்றருள்பரையும்
   வித்தாரமுமாய் உலகனைத்தும்
      விரிவாய் நின்ற விரிசுடரே

ஞாலத் தமைந்த இருபதமும்
      நடனச் சிலம்பும் கிண்கிணியும்
   நணுகிப் பெருகும் இந்துநதி
      ஞான நதியாம் பரமந்தி

மாலற் றவர்க்கும் உதவிநிற்கும்
      மதுர வசனி நவசரணி
   மயிலா புரியில் வளர்சன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்மையின் வடிவங்களையும், அவள் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! அண்டத்தின் தொடக்கத்தில் தோன்றும் சூரியனுமாகவும், தாமரை இதழ்களில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், அதனை தாங்கி நிற்கும் கொப்பூழ் கொண்ட திருமாலாகவும், காலம் அறிந்தும், சினம் கொண்டும் உயிர்களை கவரும் கால காலனுமாகவும், ஐந்து கர்த்தாக்களுள் முதலாய் இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தமாகவும், உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தமும் ஆன சதாசிவமாகவும், சிவத்திடம் கூடியதான பராபரையாகவும், பரந்து விரிந்து உலகம் அனைத்திலும் விரிந்து விரிவாக நின்ற விரிந்த சுடராகவும், ஞால வடிவமாகியதும், அதைத் தருவதும் ஆன இரு பாதங்களும், நடனத்தில் ஒலிக்கும் சிலம்பும், கிங்கிணி ஓசைகளும் கொண்டு, கங்கையுடன் ஒன்றிக் கலக்கும் சிந்துநதி, ஞான நதியான பிரம்ம புத்ரா ஆகியவையும் ஆகி, முக்குணங்கள் நீங்கி மாசற்றவர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்து நிற்பவளும், இனிய மொழிகளை பேசுபவளும், ஒன்பது வகையான தேவதைகளாலும் வணங்கப்படுபவளும் ஆகி நிற்கிறாய்.

விளக்க உரை

  • நணுகுதல் – கிட்டுதல், சார்தல், ஒன்றிக் கலத்தல், அணுகுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 7 (2019)

பாடல்

அடைத்திடவே சிலம்பொலியுங் கேட்டேன் யானும்
     ஐயையா காதிரண்டும் அடைத்துப் போச்சு
படைத்திடவே ரோசமென்ற வெக்கம் போச்சு
     பரிவான மயில் மீதில் பாய்ந்து சென்றேன்
வடைத்திடவே வாசியின் மேற் சொக்கிக் கொண்டேன்
     வயிரமங்கே யிருக்கின்ற வகையுங் கண்டேன்
முடைத்திடவே மும்மூலங் கொண்டதாலே
     முருகனென்று யெந்தனுக்குப் பேரு மாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.

பதவுரை

அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது;  ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.

விளக்க உரை

  • பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
  • சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்

(இப் பாடலுக்கான விளக்கத்தின் ஒரு பகுதி சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் குருவான முருகனைப் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)

பாடல்

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல்  சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.

விளக்க உரை

  • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  • கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

மகேஸ்வரர்

தர்மகாரியங்கள் நித்தியமாகச் செய்யத்தக்கவை எனவும் காரணம் பற்றிச் செய்யத்தக்கவை என இரண்டு வகைப்படுகின்றன.

எந்தக்காலத்திலும் கொடுக்கப்படுவதினால் அது நித்தியம். இது எல்லா வர்ணங்களுக்கும் பொதுவானது.

நித்தியமான தர்மகாரியம்

அன்னம், இடம், தீபம், தண்ணீர், பசுக்களுக்குப்புல், விறகு, எண்ணெய், சந்தனம் முதலிய வாசனைகள் நிறைந்தவை, மருந்து, எள், உப்புமுதலிய திரவியங்களைக் கொடுப்பது  நித்ய தர்மம்.

அன்னதானம் 

  • மனிதர்களுக்கு அன்னமே பிராணன் ஆகையால் அன்னம் கொடுப்பவன் பிராணனைக் கொடுப்பவன் ஆகிறான். வித்வானான பிராம்மணனுக்குச் சுவையுள்ள அன்னத்தை கொடுக்க வேண்டும். வழி நடந்து களைத்து வீடு தேடி வந்த விருந்தினனை மனதில் மாறுபாடு இல்லாமல் வரவேற்க வேண்டும்.
  • மானிட ஜன்மமே அதிதிகளுக்காக உண்டாக்கப் பட்டிருப்பதால், மனைவியை வருத்தியாவது அதிதிகளை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
  • அது வரமளிக்கும் யாகத்திற்கு ஒப்பானது. பாவத்தைச் செய்தாலும் பசித்தவருக்கு அன்னமிடுகிறவன் தன்பாவத்தைப் போக்கிக் கொண்டவனாகிறான்.
  • எவ்வகைப்பட்ட மனிதர்களுக்கும் அன்னதானம் மறுக்கப்படுவதில்லை என்பதால் கோபத்தை விட்டு முழு முயற்சியோடு அன்னதானம் செய்யவேண்டும்.
  • அன்னதானம் செய்யும் மகாத்மாக்களுக்குக் தேவலோகத்தில் அநேக நூற்றுக்கணக்கான பெரியதான மாளிகைகள், உள்ளே தடாகங்கள், வனங்கள், ஒளியுள்ள வைடுரியக் கற்கள், பொன் வெள்ளியும் நிரம்பினவையும், பலவகை ரத்தின மயமானவையும், பல உருவங்களாகக் கட்டப்பட்ட கட்டங்கள் ஆகியவை இருக்கின்றன; நினைத்த பழங்களை எல்லாம் தரும் மரங்களும் அநேகருடைய கிணறுகளும் ஆயிரக்கணக்கான குளங்களும் வீடுகளும் இருக்கின்றன; ஸ்வர்க்கத்தில் பிணி துன்பங்கள் அற்றவையும் அழியாதவையும் ஆச்சரியப்படத்தக்கதுமான அனேக கிரகங்கள் இருக்கின்றன. அவர்கள் பிரம்ம லோகம் செல்கின்றனர்.
  • அதன்பிறகு மானிட லோகத்தில் எல்லாச் சிறப்புக்களும் பொருந்தினவர்களாக நல்ல உடல் பலமும், கட்டு உடையவர்களாகவும், நோயற்று நீண்டகாலம் ஜீவித்திருப்பவர்களாகவும் சிறந்த புத்தியுள்ளவர்களாகவும் பிறக்கின்றனர்.  
  • ஆதலால், நன்மையை விரும்புகிறவன் எந்தக் காலத்திலும் எவ்விடத்திலும் யாவருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்வது முக்கியம்.

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)

பாடல்

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன் யான்
மாலயன் றனக்கும்ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி யன்றோ?

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன் பரமேஸ்வரனும்  முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?

விளக்க உரை

  • மஞ்ஞை – மயில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)

பாடல்

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே

திருநெறி 7 – உமாபதி சிவம்

கருத்துமனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள்,  பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள்,  ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல்  அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில்  கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.

விளக்க உரை

  • கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
  • கேவலஞானம் – முக்கால் அறிவு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 3 (2019)

பாடல்

பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துசிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.

பதவுரை

தோழியே,  உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.

விளக்க உரை

  • மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
  • ஈசன் தலைமை கொண்டது  அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
  • ‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’  என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது  தடைக்கு விடை.
  • கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 2 (2019)

பாடல்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்துதிருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.

பதவுரை

அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.

விளக்க உரை

  • தலையாய அண்டம் – சிவலோகம்
  • சாதித்தல் – நிறைவேற்றுதல்; நிலைநாட்டுதல்; விடாதுபற்றுதல்; மந்திர சித்திபெறுதல்; தேய்த்தல்; கண்டித்தல்; அழித்தல்; அளித்தல்; பரிமாறுதல்; சொல்லுதல்; மறைத்தல்; அருள்புரிதல்; வெல்லுதல்
  • நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 30 (2019)

பாடல்

செம்மலை மீதினில் சாமள கஞ்சுகம் சேர்வடிவம்
அம்மலை போலும் நற்றண்டாயுதமும் கொண்டன்புடனே
எம்மலை வேதம் தவிர்த்தருள்வாய் கடுவேந்தி விண்ணோர்
தம்மலை வோட்டும் தமிழ்க்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஆபதுத்தாரணனின் வடிவமும் அவன் அருள வேண்டிய முறையும் குறித்து போற்றி புகழ்ந்த பாடல்.

பதவுரை

செம்மலை போன்ற மேனியில் கருமையும், பசுமையும் கலந்த நிறமொத்த சட்டைய ஆடையாக அணிந்தவனே, மலை போன்ற மேனியில் கூரியதும், நல்லவை அருளும் தண்டாயுதம் எனும் ஆயுதத்தையும் கைகளில் ஏந்தி, விண்ணில் இருப்பவர் ஆன பிரம்மனை பயமும் திகைப்பும் கொள்ளுமாறு அவனை அழித்து அவன் தலையை திருவோடாக ஏந்தி, தமிழ் மொழி கொண்டு விளங்கும் காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மலை போன்றதும், எழுதா மறை ஆகிய வேதத்தினை போன்றதுமான வார்த்தைகள் பிறர் எனக்கு உபதேசம் செய்யாமல் தவிர்த்து அருள்வாய்.

விளக்க உரை

  • சாமளம் – கருமை, பசுமை
  • கஞ்சுகம் –  அதிமதுரம் கஞ்சுகம் வாய்த்த கவளந்தன்கைக்கொண்ட குஞ்சரம், சிலந்திக்கோரை, சட்டை கஞ்சுகமுதல்வர், பாம்புச்சட்டை, முருக்கு
  • கடு – கடுக்காய்மரம், கசப்பு, நஞ்சு, முள், கார்ப்பு, துவர்ப்பு, முதலை, பாம்பு
  • மலை – அணி, அணிந்து கொள், திகைப்பு-பயம்

 

விளக்க உரைக்கு உதவி செய்த திரு. அனந்த சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.

 


இறை அன்பரின் குறிப்பு

இதில் கஞ்சுகம்வாயத்த என்பது கஞ்சி இஞ்சி – அதாவது கருணை பொங்கும் மனம் கொண்டவன். ஆனால்இஞ்சியைபோல் காரம் கொண்டவன் இறைஞ்சினால் கருணை வடிவானவன்  என பொருள்படும்.

குஞ்சரம் என்பது யானை – அதாவது இவ்வளவு பெரிய கருணை மனம் கொண்டவன் எனப் பொருள்படும்.

சிலந்திக்கோரை என்பது சிலந்தி பூச்சியானது தன்வலை பின்னி மற்ற பூச்சிகளை அதில் சிக்கவைக்து உணவாக்கும்; இப்படி மனிதன் உன்னைக் கட்டநினைந்தாலும் அதில் சிக்காது அவனையே சிக்க வைப்பாய் என பொருளாகும்

சட்டைக்கஞ்சுகமுதல்வர் எண்பது ஜீவன்கள் தன் உடலாகிய சட்டையை கழற்றவைத்து தன்னுடன் சேர்த்து கொள்பவர் என அர்த்தமாகும்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)

பாடல்

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துஅட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.

பதவுரை

கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை,  கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

விளக்க உரை

  • சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 28 (2019)

பாடல்

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
     தோடே வந்திட் …… டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
     டாமால் தந்திட் …… டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
     கோயா நின்றுட் …… குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
     கோடா தென்கைக் …… கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
     றோளா குன்றைத் …… தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் …… பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
     சேவே றெந்தைக் …… கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
    சேயே செந்திற் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்துசரீரம் விடும் நேரத்திலும் முருகனை புகழ்ந்து உரைக்கும் சொற்கள் உதவும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

போரில் தோல்வி என்பதையே அறியாது  எப்பொழுதும்  வெற்றியைப் பெறும் போர் வீரா, மணம் வீசும்படியான மாலைகள் அணிந்த தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் துளைத்தவனே, சூழ்ச்சியினால் எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சனை பொருந்தியவனான சூரன் மாமரமாக நின்ற போது அவன் அஞ்சுமாறு போரிட்ட வேலனே, சிறப்புகள் உடைய கொன்றை மாலை மார்பில் திகழுமாறு ரிஷபத்தில் ஏறும் தந்தை ஆகிய சிவனுக்கு இனியவனே, தேன் போன்றவனே, அன்பர்களுக்கு  என்றும்  இனிய சொற்கள் வழங்கும் சேயே, மலைபோன்றதும்,  செம்மையானதும்,  அழகியதும் ஆன தோளை உடையவனே, திருச்செந்தூரில் உறையும் செந்தில் பெருமாளே!  மெய்யானது எது என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அதில் பொருந்தி இருக்கும் உண்மையைப் பார்க்காமலும், உயிரானது சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது என்று எதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து திரிகின்ற பெண்களின் கூரியதான பொய்யான அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடியதான இந்த சரீரம் ஓய்ந்து உள்ளம் குலைந்து போன போதும்,  உன்னைப் பற்றி புகழ்ந்து உரைக்கும் சொற்கள் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க.

விளக்க உரை

  • ‘ஓர்தல் – ஆராய்தல், எண்ணுதல், உணர்தல், அறிதல், தெளிதல்
  • கோடுதல் – வளைதல், நெறிதவறுதல், நடுவுநிலைமை தவறுதல், வெறுப்புறுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 27 (2019)

 

பாடல்

பிறைகொள் வாள்நுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஈசனின் திருமேனி அழகினை விளம்பும் பாடல்.

பதவுரை

வாய்மொழியாக காலம் கடந்து வரும் வேத மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடைய வன்னியூர்த் தலத்து இறைவனானவர், பிறையின் வடிவத்தை உடைய ஒளி பொருந்திய நெற்றியினை உடையவர்; வளையல் அணிந்த கைகளை உடைய பெண்களின் கற்பினை மதித்து அவர்களை கொண்டாடுபவர்; நீறு எனும் திருநீறு அணிந்த திருமேனி கொண்டவர்; ஆலால விஷம் அருந்தியதால் திருநீல கண்டத்தர்; ஒளி வீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.

விளக்க உரை

  • ‘வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்’ என்று பெரும் மதிப்பு உரிய பதிப்புகளில் காணப்படுகிறது. கஜசம்காரமூர்த்தி வடிவம் என்று கொண்டாலும் ரிஷி பத்தினிகளின் கற்பினை அவர் கவரவில்லை என்பதால் இப் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கொள்ளுதல் – எடுத்துக்கொள்ளுதல், பெறுதல், விலைக்குவாங்குதல், உரிமையாகக்கொள்ளுதல், மணம் செய்துகொள்ளுதல், கவர்தல், உள்ளே கொள்ளுதல், முகத்தல், கற்றுக்கொள்ளுதல், கருதுதல், நன்குமதித்தல், கொண்டாடுதல், அங்கீகரித்தல், மேற்கொள்ளதல், மனம் பொறுத்தல், ஒத்தல், பொருந்துதல், உடலிற் காயம்படுதல், எதிர்மறை ஏவல் ஒருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர் அசை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 26 (2019)

பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துபொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.

பதவுரை

மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே  உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.

விளக்க உரை

  • பொய்யே உன்னைப் புகழ்வார் –  அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
  • சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
  1. பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
  2. செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 25 (2019)

பாடல்

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
   நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
   என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
   நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
   அதிசயங் கண்டாமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதுன்பம் மிகும்படியான வாழ்வில் இருந்து மீட்டு பழைய அடியார்களோடு தன்னையும் சேர்த்து அருளிய அதிசயத் திறம் பற்றி  உரைத்தப் பாடல்.

பதவுரை

உலகியலிலுக்கும், மெய் ஒழுக்கங்களுக்கும் பொதுவாய் இருக்கும் நீதிகளை இருப்பவனவற்றை நினையேன்; அவ்வாறு நினைப்பவர்களோடு இணக்கமாய் இருந்து ஒன்று சேரவும் மாட்டேன்; துன்பமே மிகும்படியாக ஆளாகிப் பிறந்து இறந்து நிலை கெடுமாறு சுற்றித் திரிவேன்; இப்படிப்பட்ட என்னையும்  என்றும் உள்ள பொருளாய் நிற்பவனும், அன்னையை தன் பாகத்தில் கொடுத்தவனும், கடவுளும் ஆன முதல்வன், தன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும்,  ஒழுக்கம் மிக்கவர்களும், காலத்தினால் பழமையானவர்கள் ஆன தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்து ஆண்டு அருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.

விளக்க உரை

  • உழலுதல் – அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
  • பரம்பரன் – முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 23 (2019)

பாடல்

ஆச்சப்பா உருவாகித் திருவு மாகி
     அண்டசரா சரங்கள் எல்லாம் நிறைந்து நின்றேன்
பூச்சப்பா மனமாகி ஒன்ற தாகிப்
     புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற் கூடி
வாச்சப்பா வாசியென்ற மயிலி னாலே
     வஸ்தான வஸ்தாகி மேலே நின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும் கண்டேன்
     முருகன் என்றும் எந்தனுக்குப் பேருமாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் தன் பெயர் காரணத்தை கூறி உருவம் உடையவராகவும், அண்டசராசங்களாகவும் நிறைந்து நின்றதை கூறிய பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், மதிப்பிற்குரியதும், மேன்மை உடையதும், சிறப்புடையதும், தெய்வத்தன்மை உடையதுமான திரு எனும் படியும், பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அனைத்தும் ஈசன் வடிவமாகவும் இருக்கும் அண்ட சராசரங்கள் எல்லாமும் நீக்கமற நிறைந்து நின்றேன்; அந்தக்கரணங்களில் முதன்மையான மனம் ஆகி, அதனால் குறிக்கப்பெறும் மெய்பொருளான ஒரு பொருளாகி இந்த புவிதனில் ஆணவ, மாயை, கன்மங்கள் ஆகிய இருள் மறைந்து, பேரொளி கூடியது போல், தயாவடிவாய் மோக மதங்கள், தத்துவங்கள் நஷ்டம் ஆகுமாறு, நாசம் செய்து,  அவற்றின் அக்கிரமம், அதிக்கிரமம் கெட்டு கிரம மாத்திரம் கொண்டு, பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடும் மயில் மீது ஏறி அசைய ஒட்டாது மத்தியில் வாசியினைப் பற்றி ஏறி, மூச்சற்ற இடம் கண்டதால் எனக்கு  இளமை உடையவன், அழகியோன், கடவுள் தன்மை உடையோன் எனும் முருகன்  என்று பெயரானது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 22 (2019)

பாடல்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயி ரத்தொருவர் – பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு

தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துமுனிவனாகும் வாய்ப்பு பற்றிய பாடல்.

பதவுரை

மின்னுதல் போன்று அறிவை வெளிப்படுத்தும் அவையில், நூறு பேரில் ஒருவர்  பேசக்கூடியவராகவும்,  ஆயிரம் பேரில் ஒருவர் புலவராகவும்,  பத்தாயிரம்  பேரில் ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும், நீர் தடாகங்களில் தாமரை மலர்கள் பூத்து தண்டை மறைப்பது போல் மதிப்பு உடையவராகவும், தெய்வத் தன்மை உடையவராகவும் கோடி பேரில் ஒருவர் மட்டுமே தாதா என்றைக்கப்படும் முனிவராகவும் இருப்பது உலகியல்பு என அறுதியிடலாம்.

விளக்க உரை

  • ஆர்த்தல் – மறைத்தல், மின்னுதல்
  • சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புலவர் பட்டம் பெற தோராயமாக 10000 பாடல் அறிந்திருக்க வேண்டும் எனில் ஔவையார் காலம் பற்றி அறிந்திருக்க வேண்டிய பாடல் எண்ணிக்கை அறிக.
  • கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான் எனும் சுப்ரமணியர் ஞானப்பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

 


ஆர்த்தசபை நூற்றொருவர் – இது இறுமாப்பு கொண்டதுரியோதன் சபையில் ஒருவர் சகுனி.
ஆயிரத்தொண்றாம்புலவர் – இது விதுரரைக் குறிப்பது
பூத்தமலர்த்தாண்டமறை- இது விஷ்ணு விஸ்வ ரகசியம்
ததாகோடிக்கொருவர்உண்டாயிண்உண்டெண்டெண்றுஅறு – இது சிவம் இது ஒங்காரம்.

என்று இறை அன்பர் தனித் தகவலில் அனுப்பி இருந்தார்.


 

Loading

சமூக ஊடகங்கள்