பாடல்
அடைத்திடவே சிலம்பொலியுங் கேட்டேன் யானும்
ஐயையா காதிரண்டும் அடைத்துப் போச்சு
படைத்திடவே ரோசமென்ற வெக்கம் போச்சு
பரிவான மயில் மீதில் பாய்ந்து சென்றேன்
வடைத்திடவே வாசியின் மேற் சொக்கிக் கொண்டேன்
வயிரமங்கே யிருக்கின்ற வகையுங் கண்டேன்
முடைத்திடவே மும்மூலங் கொண்டதாலே
முருகனென்று யெந்தனுக்குப் பேரு மாச்சே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – முருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.
பதவுரை
அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது; ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.
விளக்க உரை
- பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
- சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்
(இப் பாடலுக்கான விளக்கத்தின் ஒரு பகுதி சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் குருவான முருகனைப் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)
மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.