யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன் தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம் மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவருளுக்கு உரித்தான நாள் எது என்று வருந்துவதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை உடைய கொன்றைப் பூக்களை அணிந்த சிவபெருமானே! ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகைப்பட்டு வரும் கர்மங்களை முன்வைத்து பற்றித் தொடரும் பிறவித் துன்பத்துக்கு யான் அஞ்ச மாட்டேன்; இறப்புக்கு என்ன கட்டுப்பாடு உடையவன்; வானில் ஆளும் தேவர் உலகத்தினையும் அங்கு நிலை பெறுவதினையும் வேண்டமாட்டேன்; மண்ணுலகத்தினை ஆளும் ஆள விரும்பமாட்டேன்; எம் தந்தையைப் போன்றவனும் என் இறையும் ஆனவனே! உன்னுடைய திருவருள் பெற்று உனக்கு உரியவன் ஆகும் காலம் எக்காலம் என்று மட்டுமே வருந்துவேன்; ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
விளக்கஉரை
எம்மான் – என் மகன், எம் ஆண்டவன், எம் தந்தை
என் கடவேன் – கடப்பாடு உடையேன் அல்லேன்; எனவே, இறப்பைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
வானேயும் – ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் இரண்டு இடைச் சொற்கள் ஒன்றாய் வந்தன
அருள்பெறுநாள் – இந்த உடம்பினை நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தல்
கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.
பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே அழுது விழிகள் நீர்தளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன் பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும் உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு)
கருத்து – துன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ; நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.
விளக்க உரை
கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
பொழுது விடிந்தது – இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது
உழை – இடம், பக்கம், அண்மை, மான், கலைமான் (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ், உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
(தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
தும்பை – ஒரு வகை மூலிகைச்செடி, தும்பை வெண்மையின் அடையாளம்
கருத்து – ஈசனால் படைக்கப்பட்டதே பிரபஞ்சமும் இயக்கமும் என்று கூறி அதை அளிப்பது பஞ்சாட்சரமே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
அண்ணல் என்று போற்றப்படும் கடவுளாகிய சிவனால் தோற்றுவிக்கப்பட்டதே இரகசியங்களை உள்ளடக்கியதும், மறை பொருள் ஆனதும் ஆன அருமறைகளும். காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும். இவைகள் அஞ்செழுத்தில் அடங்கும்; வேதாகமங்களும், ஆதி புராணங்கள் அனைத்தும் பரமேசுவரன் அருளிய அரிய பஞ்சாக்கரதில் அடங்கும்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமானதும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகின்றதுமான ஆனந்தத் தாண்டவமாகவும், முப்பத்து ஆறு தத்துவங்களைக் கடந்து மோனாந்தமாகவும், பரமுக்தியினை அளிப்பதும் பஞ்சாட்சரமே.
கருத்து – தன் வினைகளை நீக்கி அருள் புரியவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
உடையவனே! உன் அடியார்களில் சிலர் வினைநீக்கம் பெற்று உன்னிடத்தில் மிக்க அன்பு கொண்டு உன்னுடைய அருளைப் பெற்றார்கள்; உன்னுடைய அடியவனாகிய நானோ வீணாக வினை நீக்கம் கொள்ளாமல் துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று தொய்வடைந்து வயதுமுதிர்கின்றேன்; உன்னுடைய அருளை பெற்ற பின்னும் இளகாத மனமுடை அடியேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனது உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
எளிதாக விளங்கக் கூடியதான முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும். உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
கருத்து – அந்தக்கரணங்கள் பற்றியும் அவற்றின் செயல்பற்றியும் உரைத்தது.
பதவுரை
அந்தக்கரணம் என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேள். அவைகளின் முறைகளையும் சொல்கிறேன் கேட்பாயாக. மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றுடன் சிந்தை சேர்ந்து அந்தக்கரணம் ஆகும்; பற்றிய பொருளினை நிச்சயித்து , பல காலம் அது பற்றி அறிந்து அதைப் பற்றி சிந்திக்கும் உணர்வினை மனம் என்றும், பற்றிய பொருளினை புத்தி எனவும், அதை நிச்சயித்து வரையறுப்பதை அகங்காரம் எனவும், அதுபற்றி பலமுறை அபிமானித்து எழுவதை சித்தம் என்றும் அதுவே சிந்திக்கும் என்றும் அறிவாயாக.
விளக்க உரை
கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, உள்ளே இருக்கும் அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாததே அந்தக்கரணம்
மனம் ஒன்றைப்பற்றி நிற்கும்; ஆங்காரம் ஒருமைப்படுத்தும், புத்தி நிச்சயிக்கும், சங்கற்பம் வேறுபடுத்தி காட்டும்; இவைகள் கோர்வையாக நிகழ்வதால் அனைத்தும் ஒன்றெனவே தோன்றும்; ஒன்றின் செயலை மற்றொன்று செய்ய அறியாததால் அந்தக் கரணங்கள் உயிர் ஆகாமையும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா எனும் அந்தக்கரணவாதிகளின் கொள்கையினை மறுத்து மறுதலித்து மெய்கண்டார் கூறுவது ஒப்பு நோக்கி அறிந்து கொள்க.
அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே
கருத்து – மனதால் பற்றிய மார்க்கண்டேயருக்கு அருளுய திறம் போலவே தனக்கும் அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
எங்கும் நிறைந்தும் , செம்மை உடைய வீரம் கொண்டும் நின்றும், நன்மையை தரும் நடனம் ஆடுகின்றவரும், கருணை கொண்டவரும் ஆனவரே, மனதினால் உன்னை நினைத்து பற்றிக் கொண்டவராகிய மார்க்கண்டேயருக்கு அஞ்சேல் என்று அருளினை வழங்கிய ஐயனே! உன்னையே தஞ்சம் என்று சரண் அடைந்தேன்.
விளக்கஉரை
சேவுகம் – ஊழியம், வீரம்
வாரி – மடை, நீர், நீர்நிலை, வெள்ளம், கடல், நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம், நூல், கலைமகள், வீணைவகை, இசைக்குழல், யானையகப்படுத்துமிடம், யானைக்கட்டுங்கயிறு, யானைக்கொட்டம், வாயில், கதவு, வழி, தடை, மதில், திற்சுற்று, பகுதி, வருவாய், விளைவு, தானியம், செல்வம்
கருத்து – தேவர்களுக்கு அருள் புரிந்த தன்மை உரைத்து தனக்கும் அருள் புரிய வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே, என்னை நினக்கு அடிமையாக ஆக்கிக் கொண்டவனே! தேவர்கள் ஆகிய சிறு உயிர்களுக்கு மனம் இரங்கி அவர்கள் அமுது உண்ணுதல் பொருட்டு எதிர்படுவோரைக் கொல்லும் வேகத்தோடு எழுந்த அமுதத்தினை உண்டாய்; கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து வாழ்த்தினாலும் எனது குற்றத்தின் பொருட்டே என்று எண்ணி மனம் வாடி துக்கப்படுவேன்; அவ்வாறு துக்கம் கொள்ளும் என்னை விட்டுவிடுவாயோ!
விளக்கஉரை
ஏசினும் – உன்னை ஏசினாலும் உன்னிடம் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலும் சொல் அளவிலும் இன்றி மனதளவில் இல்லை என்பது உட்பொருள். ( ‘வெங்கரியின் உரிப்பிச்சன்’ என்பது முந்தைய பாடல்களில் பாடப்பெற்றமை காண்க)
வேசறு வேனை – நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இந்த உடலுடன் தங்கிவிட்ட தவற்றை நினைத்து மனக் குழைந்து வருந்துதல் (வேசறுதல் – வருந்துதல் )
அமுதை கடைய முற்பட்ட தேவர்கள் நஞ்சை கண்டு தவித்து நின்னை சரண் அடைந்த பொழுது அவர்களுக்கு மனம் இரங்கி அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாய், அவ்வாறான கருணைக் கடலான நீ என்னுடைய சிறு பழைய பிழைகளை நினைத்து வருந்துபவனாகிய என்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் உன்னுடைய கடமை அன்றோ
கடையவன் – சங்காரத்தில் உலகம் அழியும் போதும் அழியாது இருப்பவன் (தோன்றாப் பெருமையனே என்பது வெளிப்படை)
கருத்து – இராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.
பதவுரை
அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)
இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
துரக்கன் – துரத்தியவன்
உரக்கன் – வலிமையுள்ளோன்
உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப் பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.
கருத்து – உலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.
பதவுரை
கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும் விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.
விளக்கஉரை
இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண்
திருநெறி 6 – திருக்களிற்றுப் படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – வினைப்பட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதல் பொருட்டு சிவன் உருவம், அருவம், அரு உருவம் கொண்டிருந்து அருளும் முறை உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்கார காலத்திலே உயிர்கள் ஒடுக்கம் அடையும் போது அதற்கு காரணமாக இருந்து அதன் முடிவாக இருக்கிறான்; உலகம் படைக்கப்படும் காலத்தில் தான் முதல்வனாக இருந்தும் அதனில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறான்; எக்காலத்திலும் மாறாத எண்குணங்களான தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகியவை கொண்டும் இருக்கின்ற போதிலும் அவற்றில் இருந்து வேறுபட்டவனாக அதன் உடனாகவும், உருவம் கொண்டும் என்றும் வினைபட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதலை கடனாக உரியவனாகவும் இருக்கிறான்.
விளக்கஉரை
சிவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதலும், முதல்வனாகிய ஈசனிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தல் தெளிவாகும்; சங்கார காலத்திலே உருவமின்மை கொண்டும், சிருட்டி காலத்திலே உருவம் கொண்ட அட்டமூர்த்தியாயும், இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக் கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள் வடிவு கொண்டு கர்த்தாவாகி எக்காலமும் இவ்வாறு நிகழ்த்துதலை முறைமையாகக் கொண்டிருப்பான் எனும் விளக்கமும் பெறப்படும்.
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஈசன், பிற ஆன்மாக்களுக்கு அருளிய முறையில் தனக்கு அருளிய திறன் உரைத்தப் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு நல்வினை, தீவினை ஆகிய இருமைகள் நீங்கிய காலத்தில் அவ்வாறு நீங்கப் பெற்ற உயிர்களுக்கு வினையில்லாத நன்மை பொருந்தியவனாய் உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவனும், அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவனும், யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்வருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பனும் ஆனவனான சிவன் அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்து அருளினான்.
விளக்கஉரை
முன்னின்று அருளுதல் – பிரளயாகலர், சகலர் ஆகியோருக்கு அருளும் முறை (ஆகமங்கள் வரையரையின் படி) – இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்தல். (ஆகமங்கள் வரையறுத்து கூறியது போல் பரிபாக முதிர்ச்சி முன்வைத்து மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலருக்கும், மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் ஆகிய பிரளயாகலருக்கும், பாசப்பற்று நீங்காத மும்மலமுடைய ஆன்மாக்கள்ஆகிய சகலருக்கும் அருளிய திறம் போல் தனக்கும் அருளினான் என்று உரைத்தவாறு.
தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ள அஞ்சைக்களத்தபர்
அம்மன் தனி சன்னதி இல்லாமல் கருவரைக்குள் ஈசனுன் இணைந்து சதாசிவ வடிவம்
கேரள அமைப்பில் அமைந்த திருக்கோயில். (வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் உட்பட)
பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்
கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானை இங்கிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றத் தலம். (இறங்கிய இடம் வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை ஆகிய ‘யானைவந்த மேடை’)
கழறிற்றறிவார் என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலம் ( குருபூசை நாள் : ஆடி – சுவாதி)
சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் / விழா ( அன்று மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை)
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 1 : தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்த போது சிலம்போசை கேட்டார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்ட போது “அன்பனே வருந்த வேண்டாம்! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” என பதில் உரைத்தார். சிதம்பரத்தில் போற்றி பாடியது பொன் வண்ண திருவந்தாதி ; திருவாரூரில் பாடியது மும்மணிக் கோவை
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 2 : திருக்கயிலையில் இறைவனை அடைந்த சுந்தரர் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க எம்பிரான் தோழர் ஆகிய இறைவனும் அனுமதி அளித்தார்; சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கி ஆசு கவியாக ஓர் உலா (திருக்கயிலாய உலா) ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் முதன் முதலாக பாடப்பட்ட உலா
அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ள துவஜஸ்தம்பம்
வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ள் யானை சிற்பங்கள் (இடம் : கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் பக்க சுவர்)
‘திருவஞ்சைக் களத்து சபாபதி’ என்று எழுதப்பட்டுள்ள பஞ்சலோக நடராசர்
செப்புத் திருமேனிகளாக சுந்தரர், சேரமான் உருவங்கள்
தலம்
திருஅஞ்சைக்களம்
பிற பெயர்கள்
திருவஞ்சிக்குளம்
இறைவன்
அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்
இறைவி
உமையம்மை
தல விருட்சம்
சரக் கொன்றை
தீர்த்தம்
சிவகங்கை
விழாக்கள்
மாசி மகா சிவராத்திரி
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦5:௦௦ AM முதல் 11:0௦ AM வரை மாலை ௦5:௦௦ PM முதல் ௦8:0௦ PM வரை
ஸ்ரீ மஹாதேவ சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ வாஞ்சிகுளம் – அஞ்சல், (வழி) கொடுங்களூர் – 680 664. கேரளா – திருச்சூர் மாவட்டம்
0487-2331124
வழிபட்டவர்கள்
சேரமான், சுந்தரர், பரசுராமர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கேரளா சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவு; திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
மலை (சேர) நாட்டுத் தலம்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 1
பாடல்
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
பொருள்
கடின தன்மையால் மலைக்கு நிகராகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றியும் ஈர்த்து வந்தும் எறிந்தும் முழங்கி மோதுகின்றதும் ஆன கடலின் அழகிய கரையில் “மகோதை” என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, “திருவஞ்சைக்களம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ உன்னுடைய தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? திருச்சடையின்மேல் ‘கங்கை’ என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அந்த உடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?
விளக்க உரை
சிவன், தலைமாலையை மார்பில் மட்டுமின்றி உருத்திராக்கம் போல் தலையிலும் அணிந்துள்ளான் என்பது பற்றியது; தலைகள் – இறந்த பிரமன் முதலியோருடையவை
கதம் – சினம்
‘மகோதை’ என்பது நகரம்; ‘அஞ்சைக்களம்’ என்பது திருக்கோயில்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 8
ஒளி உடைய குழையை அணிந்த காதினை உடையவனும், வேதத்திலால் மட்டுமே அறியக்கூடியவனும், கடலின் அழகிய கரையில் இருக்கும் ‘மகோதை’ என்னும் நகரின்கண் உள்ளதும், அழகு நிறைந்த சோலைகளையுடையதும் ஆன ‘திருவஞ்சைக்களம்’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு கண்டம் கறுப்பு கொண்ட நிறத்தவன் ஆயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை அறுத்தாய்; அடியேன் மணவாழ்க்கையை மனத்தாலும் வெறுத்து உடம்பாலும் துறந்து விட்டேன்.
கருத்து – தன்னைக் கொடுத்த பின்னும் தொடரும் சில தருணங்களைக் குறிப்பிட்டு அவைகளை நீக்க வேண்டி விண்ணப்பித்தப் பாடல்.
பதவுரை
மலைகளுக்குள் தலையானதாக இருக்கும் திருச்சிராப்பள்ளி திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் தாயுமானத் தண்ணளிச் செல்வரே! மோன குருவாய்த் தாங்கள் எழுந்தருளி வந்துடன் உண்மையை உணர்த்தி நன்னெறி கொடுத்தபோது அடியேன் வினைகள் பற்றி எடுத்த இரவல் உடம்பும், பொருளும், ஆவியும் ஆகிய மூன்றும் நின்பால் ஒப்புவிக்கப்பட்டது அல்லவோ? அவ்வாறு உனக்கென்று கொடுத்தப் பின்னும் இன்னும் விலகாமல் இருக்கும் நானென்று உரிமையுடம் முதன்மையும் கொண்டு குளறிக் கூத்தாடுமாறும், மயக்கும் வகையிலான மாயையை கொடுத்த வண்ணமும், கட்டுக்கு அடங்காக் கண்ணீரும், ஒடுங்காத நடுக்கமும் நீக்கி, அடியேனின் வேட்கை வெள்ளத்தினைத் தடுக்குமாறு திருவாய் மலர்ந்து அருள்வாயாக.
விளக்கஉரை
உடல் பொருள் ஆவி மூன்றையும் தாயுமானவரிடம் ஒப்புவித்த நிலை
வாகை விரிந்துவெள் நெற்று ஒலிப்ப, மயங்குஇருள் கூர்நடு நாளை, ஆங்கே கூகையொ டுஆண்டலை பாட, ஆந்தை கோடுஅதன் மேல்குதித்து ஓட, வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்டு அகத்தே ஆகம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங் காடே
பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்காலம்மையார்
கருத்து – சுடுகாட்டின் காட்சியினை விளக்கி அதில் ஆடுகின்றவன் என் அப்பன் ஈசன் எனவும் அப்படிப்பட்டவனுக்கு உரித்தான இடம் திருவாலங்காடு எனும் திருத்தலம் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
காட்டில் இருக்கும் வாகை மரமானது விரிந்து தழைத்து அதன் வெண்மையான நெற்று ஒலிக்கக் கூடியதும், மயக்கம் தரும் இருளோடு பகலோடு வந்து பொருந்தியதான நள்ளிரவு நேரத்தில், கோட்டானுடன் ஆண்தலைப் போன்ற தலையுடைய ஒரு புள்ளினம் ஆடவும், ஆந்தையானது அவற்றை எல்லாம் விரட்டி ஓடவும், கொடிகள் படரந்துள்ளதும், கள்ளி மரத்தின் நிழலை உடையதும், பிணத்தைச் சுட்டு எரிக்கின்ற சுடுகாட்டிலே இருப்பதும், தனது திருமேனியானது குளிர்ந்த நிலையிலேயே அனலில் ஆடுகின்றவனுமான எங்களது அப்பனுக்கு உரித்தான இடமானது திருவாலங்காடு எனும் திருத்தலமாகும்.
விளக்கஉரை
ஆண்டலை – கோழி, ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள், பூவாது காய்க்கும் மரம்
ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்
மயங்கு இருள் – மாலைக் காலத்தில்
கோடு – மரக்கிளை
கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின்மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்ற காட்சி அமைப்பு
மட்டவிழ் தாமரை மாது நல்லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் ஆதி மூர்த்தமாகிய அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பூரண சுத்த சத்தனாக வடிவத்துடனும் யாதுடனும் ஒட்டி இராமலும் தனித்து நிற்கின்ற பரம்பொருள், எல்லா உயிர்களும் இன்பம் தூய்த்து மகிழும் பொருட்டு, தேன் சொரியும் தாமரை வடிவத்தில் உடனாகிய அம்மையுடன் எக்காலத்திலும் பிரிவின்றி ஒட்டி நிற்கின்ற வடிவமாகியதும் ஆதி மூர்த்தமாகியதுமான அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள்; அவ்வாறு அறிந்தவர்கள், பரநாதத்தின் விட்ட எழுத்தாகிய உகாரத்துடன் விடாத எழுத்தாகிய பரவிந்துவின் அகாரத்துடன் இணைத்து ஒன்றாகக் கட்டி அ-உ-ம் எனும் ஓங்காரத்தின் சொரூபம் காணவல்லவர்களாக இருந்து, உயிர் அற்பமாக பிறவிக்கடலில் வீழ்ந்து இறந்துவிடாது நெடுங்காலம் வாழும்படி காக்கவும் வல்லவராவர்.
பதவுரை எழுத உதவி செய்த ஐயா. திரு. நாராயணசுவாமி (திருவாடுதுறை ஆதினம்) அவர்களுக்கு என் நன்றிகள்
கோ – பசு, கர்ணம் – காது. பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலத்திற்கு இப்பெயர்
லிங்கம் மிகச் சிறியதான அளவில் ஆவுடையாரில் அடங்கியிருக்கும்
சிறிய அளவுடைய மூலத்தானம்; நடுவிலுள்ள சதுரமேடையில் வட்டமான பீடம்; இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பினால் அறியப்படும் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம்; இதன் நடுவிலுள்ள பள்ளத்தின் நடுவில் தொட்டுப்பார்த்து உணரத்தக்க மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம்; பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி
விநாயகர் – யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்துடன் கூடிய “துவிபுஜ” விநாயகர் – இவர் திருமுடியில் யானைத் தலையில் இருப்பதுபோல் இருபுறமும் மேடும், நடுவில் இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமும் கூடிய விக்ரக அமைப்பு
கோயில் மதிலுக்கு வெளியே வடபகுதியில் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் திருக்காட்சி
இராவணன் இலங்கை அழியாதிருப்பதன் பொருட்டு கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அருள்புரிய வேண்டி நின்றதால் பெருமான் இராவணனுக்கு பிராண லிங்கத்தைக் கொடுத்து இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது எனவும் இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டியதால் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவி தாம் உரைத்தபடி மூன்றுமுறை, அழைத்தும் வராததால் சிவலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். இராவணன் அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டியதால், சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாயதால் இராவணன் பிழைபொறுக்க வேண்டினான்; இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தரவேண்டும் என விளம்ப இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம்
திருநாவுக்கரசர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ள திருத்தலம்
திருமேனியை மக்கள் தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடக் கூடிய தலம்
வழிபாட்டு முறை – கோடி தீர்த்தத்தில் நீராடல், கடலாடுதல், பிண்டதர்ப்பணம், மீண்டும் நீராடுதல் பின் மகாபலேஸ்வரர் தரிசனம்
முரட்டுத்தனமும், கரியதான இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் கால் பெருவிரலை ஊன்றி கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடம் எது எனில் முனிவர்களும், வேத வல்லுநர்களும் தங்களது வினைதீர, ஒலிக்கின்ற கழலினை அணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்விப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.
விளக்க உரை
வரைத்தலம் – கயிலை மலை
முருடு – கடின இயல்பையுடைய
இருள் நிறத்தவன் – இருண்ட நிறத்தையுடைய இராவணன்
உகிர் – நகம்
முனிவாணர் பொலிவாகி – முனிவர்கள் விளங்கி
குரைத்து அலை – ஒலித்து அசையும் கழல்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 49 திருமுறை எண் 2
உலகினைப் படைத்த பிரமனது மண்டையோட்டை கைகளில் ஏந்தியவனாய், எங்கும் சஞ்சரிப்பவனாய், தன்னை சார்ந்த அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய், என்றும் அழிவில்லாதவனாய் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய், திருநீறு பூசியவனாய், தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய், தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் விளங்குகின்றான்.
விளக்க உரை
தந்த அத்தன் – ( உலகத்தைப் ) பெற்ற தந்தை; பிரமன்
சாரணன் – எங்கும் சரிப்பவன்
கெந்தத்தன் – ( மலரில் ) மணம் போல்பவன்
வந்து ஒத்த நெடுமால் – தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)