அமுதமொழி – விகாரி – மார்கழி – 14 (2019)


பாடல்

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான  ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்கள்  (நிலம் ,நீர், தீ, காற்று, ஆகாயம்); கன்மேந்திரியங்கள் (பேச்சு,கை, கால்,எருவாய், கருவாய்); ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி); தன்மாத்திரைகள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்); அந்தக்கரணங்கள் 4 (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்); வித்தியாதத்துவம் எனப்படும் அசுத்த மாயா தத்துவங்கள் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை-ஒருபகுதி) ; சிவதத்துவம் எனப்படும்  சுத்த மாயா தத்துவங்கள் (நாதம்-சிவம், விந்து-சக்தி, சதாக்கியம்-சதாசிவம், ஈஸ்வரம், சுத்தவித்தை)
  • ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும் –  ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு, உடம்பு நுகர்வதற்குரிய வித்தியா தத்துவம் ஏழு –  முப்பத்தொரு தத்துவங்கள்
  • மடல் – விரிவு
  • கேவல பாசம் – ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *