அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 18 (2019)


பாடல்

அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் – சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – அந்தக்கரணங்கள் பற்றியும் அவற்றின் செயல்பற்றியும் உரைத்தது.

பதவுரை

அந்தக்கரணம் என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேள். அவைகளின் முறைகளையும் சொல்கிறேன் கேட்பாயாக. மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றுடன் சிந்தை சேர்ந்து அந்தக்கரணம் ஆகும்; பற்றிய பொருளினை நிச்சயித்து , பல காலம் அது பற்றி அறிந்து அதைப் பற்றி சிந்திக்கும் உணர்வினை மனம் என்றும், பற்றிய பொருளினை புத்தி எனவும், அதை நிச்சயித்து வரையறுப்பதை அகங்காரம் எனவும், அதுபற்றி பலமுறை அபிமானித்து எழுவதை சித்தம்  என்றும்  அதுவே சிந்திக்கும் என்றும் அறிவாயாக.

விளக்க உரை

  • கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, உள்ளே இருக்கும் அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாததே அந்தக்கரணம்
  • மனம் ஒன்றைப்பற்றி நிற்கும்; ஆங்காரம் ஒருமைப்படுத்தும், புத்தி நிச்சயிக்கும், சங்கற்பம் வேறுபடுத்தி காட்டும்; இவைகள் கோர்வையாக நிகழ்வதால் அனைத்தும் ஒன்றெனவே தோன்றும்; ஒன்றின் செயலை மற்றொன்று செய்ய அறியாததால் அந்தக் கரணங்கள் உயிர் ஆகாமையும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா எனும் அந்தக்கரணவாதிகளின் கொள்கையினை மறுத்து மறுதலித்து  மெய்கண்டார் கூறுவது ஒப்பு நோக்கி அறிந்து கொள்க.
  • அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
    அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே

           (சிவஞானபோதம் – நூற்பா-4)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *