கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல் காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார் மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே
பாம்பாட்டிச் சித்தர்
கருத்து – நிலை இல்லா வாழ்வினை கண்டு வீண் பேச்சு பேசாமல் இருந்து இறைவனை நினைக்கும் நிலையை உரைத்தது.
பதவுரை
கானல் நீரைக் கண்டு மான் ஏமார்ந்து செல்வது போல, மூடர்கள், நிலை இல்லாத இந்த உலக வாழ்வினை கண்டு மகிழ்ந்து அதில் களித்து இருப்பார்கள். மெய்யான மேனிலையைக் கண்டவர்கள் வீணாக வீம்பாக பேசாமல் நிலைபெற்றதும், உண்மையானதுமான இறைவன் திருவடிகளை நாடுவார்கள் என்று ஆடுபாம்பே.
ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய் வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – இரு வினைபட்டு திருவடி வணங்கா தன்மையும், அதனை தீர்த்து அருள் புரிய வேண்டியும் முருகனிடம் விண்ணப்பித்தது.
பதவுரை
ஆறுகளும், தடாகங்களும் சூழ்ந்திருக்குமாறு அமையப்பெற்றதும், பரந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், பெருமைக்குரியதும் ஆன திருத்தணி மலைமீது எழுந்தருளி சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே! இரு வினைகளின் விளைவாக வெளிப்பட்டு பிறவிநோய்க்கு காரணமான உயிருக்குக் கேடு உள்ளது என்பதை அறிந்த போதிலும் தேவரீருடைய அருளை வழங்கக் கூடியதான திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கவில்லை. அவ்வாறான அடியேனுடைய வினைகளையும், அதன் விளைவையும் தீர்த்து அருள் புரிவீராக.
கருத்து – ஆணவம் கொண்டு இருந்து இராவணுக்கு ஆணவம் விலகியப் பின் அருள் புரிந்த திறம் பற்றி உரைத்தது.
பதவுரை
மதச் செருக்கு கொண்டு பித்து பித்தவனாய் நந்தி எம்மானை சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுத்த இராவணனின் திரண்ட தோள்களும், முடிகளைக் கொண்ட தலைகள் பத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் தவறு உணர்ந்து தன் நரம்புகளை யாழாகக்கொண்டு அவன் ஒரு மனதாக வணங்கிய பொழுது மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
*கருத்து – யாசிக்கும் நிலை ஏற்படாமலும், யாசிப்பவர்க்கு இல்லை எனும் நிலை ஏற்படாமலும் காக்க வேண்டி வயிரவரைத் துதிக்கும் பாடல்*
பதவுரை
இறைவனாகவும், சிவனாகவும் இருப்பவனே, புகலி எனும் சீகாழி எனும் திருத்தலத்தில் இருக்கும் மலையில் ஒன்றி இருப்பவனே, எலும்புக் கூட்டினை கேசத்தில் அணிந்த வயிரவப் பெருமானே, ஈசனின் மனதில் இருந்து வெளிப்பட்டு கர்வம் கொண்ட பிரம்மனின் தலையைக் கொய்து அதனை கைகளில் கொண்டவனே, காழிப்பதி எனும் சீகாழியில் உறையும் ஆபதுத்தாரணனே! யாசித்து ஒருவர் வரும்போது அவரிடத்தில் இல்லை என்பதை இதமாய் சொல்லாமலும் எவரிடத்தும் எக்காலத்தும் பொருள் பற்றியும் மற்றைய எதன் பொருட்டும் இரங்கி நிற்கா நிலையை நீ எனக்கு அளித்து எனை ஆண்டு அருள்வாய்.
விளக்கஉரை
நித்தன் – அருகன், கடவுள், சிவன்
கங்காளம் – ஒரு பெரிய பாத்திர வகை, தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு
பதியான பதியதுதான் பரசொரூபம் பசுவான வாசியடா காலுமாச்சு விதியான பாகமாடா வீடதாச்சு வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால் கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால் மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து மாசற்ற சோதியென வாழலாமே
சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து –வாசிவழிவினைகளைஅறுத்தல்பற்றிஅகத்தியர்கூறும்பாடல்
பதவுரை
பர சொரூபமாக இருக்கும் பதியே பிரபஞ்ச பிராண சக்தி; உடலில் இருந்து பிராண சக்தியினை தருவதை வாசி என்றும், கால் என்றும் அழைக்க பெறும் காற்றுத் தத்துவமே பசு; ஜீவனுக்கு உடலானதும், பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி ஆனதும் ஆனதும் பாசம் எனப்படுவதும் ஆன வாசி எனும் வீட்டினுள் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் வாசியினை வாகனமாகக் கொண்டு விதி என்று உடலினுள் வருகிறது; இந்த உண்மையை அறிந்து கும்ப நிலையில் மூச்சுக் காற்றை நிறுத்தி இருக்க வேண்டும்; இவ்வாறு பதி, பசு, பாசம் என்பதை அறிந்தும் உணர்ந்து வாசி யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கூடும் கேசரமாகிய உச்சியில் நின்று ஆடுவதான வெட்டவெளியை தரிசனம் காணலாம்; இந்த நிலையில் எண்ணங்கள் ஆகிய மதியில் இருக்கும் மயக்கங்கள் விலகி ஆதி நிலையாகிய மாசற்ற சோதியாக வாழலாம்.
விளக்கஉரை
கேசரம் – க+ ஏ+சரம்; க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ
திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்
கருத்து – அருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.
பதவுரை
எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும், எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.
விளக்கஉரை
தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல் கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார் எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும் கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப் பாடல்.
பதவுரை
தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.
விளக்கஉரை
யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
*கருத்து – திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் வீரச் செயல்கள் செய்த இறைவனின் வடிவமானவர் என்பதை கூறும் பாடல்.*
பதவுரை
திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் முன்பு திருமால் விரும்பியதன் பேரில் அவருக்கு சக்கராயுதம் அளித்தவர்; தாமரை மலர் மேல் உறையும் பிரமன் ஐந்து தலைகளை பெற்று அதன் காரணமாக அகந்தை கொண்டிருந்த போது ஒன்றைக் கொய்தவர்; பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக படைத்த சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர்; தீயில் நடனமாடும் திருவடிகளை உடையவர்; தங்கத்தால் செய்யப்பட்ட கழலினை அணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர்; காமனை கண்களால் நோக்கி அவனைப் பொடிபட செய்தவர்; உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள் பல செய்ததலைவர் ஆவார்.
விளக்கஉரை
திருப்பாம்புரம் – தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59 வது சிவத்தலமாகும்
வீரச் செயல் செய்த தலங்களான திருவீழிழலை(சக்கரம் ஈந்தது), தலை கொய்தது(திருக்கண்டியூர்), காலனை அழித்தது (திருக்கடையூர்), காமனை எரித்தது (திருக்குறுக்கை) ஆகியவை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
பற்றிய பற்றற உள்ளே – தன்னைப் பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர
தாயுமானவர் திருப்பாடல்கள்
*கருத்து – தாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*
பதவுரை
வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.
விளக்கஉரை
ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே
எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.
*கருத்து – மாணிக்கவாசகர் தன் சிறுமை கண்டும் சிவன் அருளிய திறம் உரைத்தது பற்றியப் பாடல்*
பதவுரை
பவன் என்னும் திருப்பெயரால் போற்றப்படுபவனும், எம் தலைவன் ஆனவனும், குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த கங்கையை தலைமாலையாக அணிந்தவனும், விண்ணோர்கள் ஆன தேவர்களுக்கு பெருமான் ஆனவனும், சிவன் என்னும் பெயர் உடையவனும், வினை பற்றி நின்று யான் கொள்ளும் சிறுமையைக் கொண்டும், என்றைக்கும் முழுமையான பிரானான அவன் தன் அடியேன் என்று என்னை ஆண்டு கொண்டருளினன். இதைவிட வேறு என்ன வெகுமதி இருக்க இயலும்?
விளக்கஉரை
பிரான் – தலைவன், தேவன், இறைவன்
பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான், புவனமாகிய எம்பிரான் – சிவன் தன்மைகளைக் குறிப்பது
*கருத்து – துயர வாழ்வு மனதில் தொடராமல் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விக்க வேண்டும் என்பது பற்றியப் பாடல் *
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக வும்இருப்பவளே, மாறுபாடு இல்லாமல் மனம் எனும் தடத்தில் ஒன்றாக வாழும் அமுதக் கனி போன்றவளே, உயர்ந்ததான தாமரையான கமலாசனத்தில் வீற்றிருப்பவளும், ஓங்கார வடிவத்தின் உப்பொருளாகிய மகாரப் பொருளாக இருப்பவளே, தங்கம் போன்ற திட சக்தி கொண்டவளே! மும் மலங்களில் ஒன்றானதும், எப்பொழுதும் தீமைத் தரத் தக்கதுமான மயக்கம் தொடராமல், வினை பற்றி நின்று செயலாற்றுவதான கவலைப் பிணிகள் தொடராமல், பொய்யான இந்த உலக வாழ்வினை மெய் என்று நம்பி அதனைத் தொடர்ந்தும் அலைந்தும், அதன் பொருட்டு விளையும் துயரங்களால் கண்ணீர் விட்டு அழுது மனமானது நிலைபெறாமல் துள்ளித் திரிவது போல் செய்வதும், மனதில் சலனத்தைக் கொடுத்து வருவதுமான மனதை அலையவிடாமல் செய்து உன்னிடத்தில் இயைத்து வைத்து சுகம் தருவதான உன்னுடைய மலர் போன்ற உன் திருப்பாதங்களை என் மனதில் நிலை கொள்ளுமாறு செய்விப்பாய்.
விளக்கஉரை
தொடுத்தல் – இயைத்தல், தொடங்குதல், கட்டுதல், பூட்டுதல், வளைத்தல், எய்தல், அணிதல், சேர்த்துவைத்தல், பா தொடுத்தல், உண்டாக்குதல்,வழக்குத் தொடர்தல், பூ முதலியன இணைத்தல்
தானென்ற வாலையிவள் ரூபங் காணச் சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா பராபரையாள் பலகோடி விதமு மாடித் தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாம் சிறுபிள்ளை பத்துவயது உள்ள தேவி ஊனென்ற உடலுக்குள் நடுவு மாகி உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே
கருவூரார் பூஜாவிதி
*கருத்து – வாலையின் தன்மைகளையும் இருப்பிடம் பற்றியும் உரைத்தப் பாடல்*
பதவுரை
பாலப் பருவத்திலுள்ளவளும், சக்தி பேதங்களில் ஒன்றும் ஆன வாலையின் ரூபம் காண யாருக்கு திறமை உள்ளது? சமர்த்தனும் வீரனும் ஆகிய ஆண்பிள்ளையாலும் அவளை அறிய முடியுமோ? அழகும், ஒளி பொருந்தியும் இருக்கக் கூடியவளும் அகப்புறச்சமயம் சார்ந்தவளும் இடப்பாகம் கொண்டவளுமான பராபரை ஆனவள் பல கோடிவிதமாய் வடிவம் கொள்ளக் கூடிய திறமை கொண்டவள்; தேன் போன்ற மொழிகளை உடையவள்; சித்தர் பெருமக்களால் பத்து வயது கொண்ட சிறு பிள்ளையாக வழிபடக் கூடியவள்; உத்தமி ஆன அவள் ஊன்னெற உடலுக்குள் உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலேஆன உயிர்ஸ்தானத்தின் நடுவில் வீற்றிருப்பவள் இது உண்மை தான்.
விளக்கஉரை
வலது கண் அகாரம்; இடதுகண் உகாரம், இரண்டும் உள்ளே சேரும் இடமே மகாரம் ஆகிய வாலையின் இருப்பிடம் என்று உரை பகர்வார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
வாலை பூசை செய்யாதவர்கள் சித்த தன்மை அடைவது இல்லை என்பதே உண்மை.
வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
மருவு இனிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப் பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவிடைமருதூர் பெருமானிடம் உன்னுடைய பரங்கருணை ஆகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம் அருள் செய்ய வேண்டுதல்
பதவுரை
திருவிடைமருதூரை ஊராகக் கொண்ட எம் தந்தையே! தழுவி இரண்டற கலத்தலுக்கு உரித்தான இனிய மலர் போன்ற திருவடியை உள்ளத்தில் வைத்து அது மலருமாறு செய்து உள்ளம் உருகி, வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று புகழ்ந்தும் துதித்தும் நுகர்ந்த மேலான கருணையை அறியாதவனாக இருப்பினும் உன் பரங்கருணை ஆகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப் பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால் இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்
பதப்பிரிப்பு
ஒற்று என முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன் தன்னைப் பற்றி இகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபு எனக் கொண்டிலேன் ஆல் இற்றை இப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன்
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – மாயை நீக்கம் பெற்ற பின் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை கண்டதை சூரபன்மன் உரைத்தது
பதவுரை
போர் புரிவதற்காக முன்வந்த தனி வேலவன் தன்னை உளவு செய்வதன் பொருட்டு வந்தவன் என்று எண்ணி இருந்தேன். வலிமை மாறாதவரும், அந்த வலிமையில் மாறுபாடு இல்லாதவரும், எவரோடும் வலிமையில் ஒப்பு நோக்க இயலாதவரும் நின்ற முழுமுதற்கவுளும், இறைவனும் ஆன பரம்பொருளும் ஆன முதல்வன் என்று உணர்வில் பதியுமாறு எவரும் உரைக்கவில்லை. அவ்வாறு அதற்கு நிகராக உரைக்கப்பட்ட சொற்களின் உண்மைத் தன்மை கொண்டு மன உறுதியும் யான் கொள்ளவில்லை. ஆனால் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை இந்தக் கணப்பொழுதில் யான் கண்டேன்.
*கருத்து – எம்மானிடம் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது என்பதைக் கூறும் பாடல்.*
பதவுரை
வினைப் பற்றி நின்று எனக்கு ஏற்படும் துன்பங்களை அவர் தீர்க்காவிட்டாலும், அவ்வாறு நான் படும் துன்பங்கள் கண்டு இரக்கம் கொள்ளாவிட்டாலும், உன்னை நினைத்தும், பாடுதலும் உன் மீது அன்பு கொண்டு உன்னைப் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும், எலும்பு மாலை அணிந்த கோலம் கொண்டு, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடர் வடிவம் கொண்டவராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது.
*கருத்து – சிவனின் வடிவத்தையும் தன்மைகளையும் உரை செய்து அவன் திருவையாறு தலத்தில் உறைகிறான் என உரைக்கும் பாடல்.*
பதவுரை
எண் குணங்களில் ஒன்றாகிய எங்கும் நிறைதல் ஆகி இருப்பவனும், பிறரால் அறிய இயலாத இயல்பு கொண்டவனும், உமையம்மையை ஒருபாகமாக தன் வலப்பக்கத்தில் கொண்டவனும், சந்திரனை மதியில் சூடிய சிறந்த வீர மிகு ஆண்மகனும், சிவபேத ஆகமங்கள் ஆகிய காமிக ஆகமம், யோகஜ ஆகமம், சிந்திய ஆகமம், காரண ஆகமம், அஜித ஆகமம், தீப்த ஆகமம், சூட்சும ஆகமம், சகஸ்ர ஆகமம், அஞ்சுமான் ஆகமம், சுப்ரபேத ஆகமம் (10) மற்றும் ருத்திரபேத ஆகமங்கள் ஆகிய விஜய ஆகமம், நிஸ்வாச ஆகமம், சுயம்பூத ஆகமம், ஆக்னேய ஆகமம், வீர ஆகமம், இரௌரவ ஆகமம், மகுட ஆகமம், விமல ஆகமம், சந்திரஞான ஆகமம்,முகவிம்ப ஆகமம், புரோற்கீத ஆகமம், லலித ஆகமம், சித்த ஆகமம், சந்தான ஆகமம், சர்வோத்த ஆகமம், பரமேசுவர ஆகமம், கிரண ஆகமம், வாதுள ஆகமம் (18) ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆன பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.
விளக்கஉரை
குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்கு உதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆனவன் என எண்ணிக்கை முன்வைத்து (28) சில இடங்களில் உரை செய்யப்பட்டுள்ளது. சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதால் சிவபேத மற்றும் ருத்ரபேத ஆகமங்கள் ஆகமங்கள் முன்வைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
எங்கும் ஆகி நின்றானும் இயல்புஅறி யப்படா – எங்கும் நிறைந்து இருந்தாலும், எளிதில் அறிய இயலாதவனாக இருக்கிறான். எதிர்மறை செயல்களை தானே முன்னின்று இயல்பாக நடத்துபவன் என ஒரு பொருளும் இயல்பு அறியப்படா உமையம்மையை தன் பாகமாக கொண்டவன் என மற்றொரு பொருளுமாக விரியும்.
மைந்தன் – மகன், இளைஞன், விலங்கு ஊர்வனவற்றின் குட்டி, மாணாக்கன், ஆண்மகன், வீரன், கணவன்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
இந்த வையகம் ஆகிய பூவுலகிலே அடியவர்கள் மேல் இரக்கப்பட்டு அவர்களுக்கு அருள் செய்கின்றவனும், திருப்புலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூரில் உறைபவனும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருப்பவனும், தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் வினைகளுக்கு உட்பட்டு மறுபிறவியில் மிகழும் இழிவான பிறவியாகிய புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.
சாரான அண்டமதில் நிறைந்த ஈசன் சகலகலை வல்லவனாய் இருந்த மூர்த்தி பேரான ஐம்பூதம் ஆன மூர்த்தி பேருலக மேலுலகம் படைத்த னாதன் கூரான சுடுகாடு குடியிருந்த மூர்த்தி கூறுகிற ஆசனத்தில் ஆன மூர்த்தி ஆரான ஆறுமுகம் ஆன மூர்த்தி அம்பலத்தில் ஆடுகின்ற ஐயர் தானே
தர்க்க சாஸ்திரம் – அகத்தியர்
கருத்து – அம்பலத்தில் ஆடும் ஈசனே ஆறுமுக மூர்த்தி ஆன முருகப்பெருமான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
அண்டங்களுக்கும் மையப் பொருளாகவும், கருப்பொருளாகவும் இருந்து அதில் நிறைந்து இருப்பவரும், அறுபத்து நான்கு கலைகள் அனைத்திலும் வல்லவனாக இருந்த மூர்த்தியாக இருப்பவரும், பெரியதானதும் ஐம்பூதங்கள் ஆனதும் ஆன நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு மூர்த்தி ஆக இருப்பவரும், தேவர்களுக்கு உரித்தான பேருலகம் படைத்த நாதனாக இருப்பவரும், நுட்பமானதும், சிறப்பு உடையதும் ஆன சுடுகாட்டில் குடியிருந்த மூர்த்தியாக இருப்பவரும், அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படியானதும், யோக நிலையில் அமர்ந்திருப்பவரும், ஆறு ஆதாரங்களுக்கும் காரணமான ஆறுமுகமாகவும் ஆன மூர்த்தியாகவும் ஆகி பொன்னம்பலத்தில் ஆடுகின்றவராகவும் இருந்து வியக்கதக்கவராகவும் இருப்பவர் ஈசன்.
விளக்கஉரை
ஈசனின் பல்வேறு மூர்த்தங்கள் சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம் போன்ற பல்வேறு ஆசனங்களில் இருக்கும் கோலங்களில் அமையப் பெறும். அவ்வாறு எல்லா இருக்கை நிலை கொண்டவர் எனவும் உரைக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – இறைவன் வடிவம் விவரித்து அதை வரித்துக் கொண்டதைக் கூறும் பாடல்.
பதவுரை
கங்கை ஆற்றினை சடையில் தாங்கியவனும், ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாகவும், உலர்ந்தும், இறந்து பட்டதுமான மண்டையோட்டில் யாசித்து ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் இருப்பவனும், திருநீறு அணிந்த திருமேனியை உடையவனாகவும், இயல்பில் தூயோனாய் இருப்பவனும், நீண்ட வாலினை உடைய காளையை உடைய பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
விளக்கஉரை
• திருக்கச்சியேகம்பம் எனும் தொண்டை மண்டலத் திருத்தலம் • பாறு – உலர்தல், வற்றுதல் •ஆயாயிரம்பே ரம்மானை – எண்ணிக்கை வைத்து கணக்கிட இயலாத அளவு உள்ளவர்களால் வணங்கப்பட்டவன் என்பது ஒரு பொருள். இந்திரன் ஆயிரம் கண் உடையவன். இந்திரனால் வணங்கப்பட்டவன் என்பதும் ஒரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.