யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.
காயம் பலகை கவறைந்து கண் மூன்றா யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம் மேய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப் பறியேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.
கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப் பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் திருவடிபற்றி சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையினை வேண்டி நிற்கும் பாடல்.
கருத்து – எத்தனை பெரியவனாக இருப்பினும் உயிர்கள் இடத்தில் கொண்ட கருணையினால் நம்மிடம் வந்து நம்மை ஆள்பவன், அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டாம், அவன் நம்முடையவன் என்பதையும், சிவபெருமானை அன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவளும், தலையில் சூடப்பட்ட மாலைகளையும் அணிந்தவளே கேட்பாயாக; திருமால், அயன், இந்திரன் முதலியோர் பல பிறவிக் காலம் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய், எக்காலத்திலும் சத்தியதின் வடிவமாகவும் இருந்து அதில் எப்பொழுதும் நிலை பெறுபவனாகவும், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதல் பொருளாகவும், எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய நம்முடைய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.
விளக்கஉரை
எப்பிறவியும் தேட – எல்லாப் பிறவிகளிலும் தேட
மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் – ஆன்மாவின் விளக்கமாக
எப்பொருட்கும் தானே ஆய் – எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடானவன்
மெய் – மெய்ம்மை,நிலைபேறு; வடமொழியில், `சத்து`
மைப்பொலியும் கண்ணிகேள் – மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவன் என்பது நேரடி பொருள்; குற்றம் எனும் பொருளும் உண்டு என்பது பற்றி குற்றம் கொண்டமையால் மெய்ப் பொருளை காணாது இருப்பவள் எனும் பொருளும் விளங்கப் பெறும்.
வீடு – பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
தோற்றமாய், தானேயாய் – காரணப் பொருளாய் நின்று, பின்னர் வந்த, ‘நிலைபேறாய்’ வீடாகும் என்றவற்றோடு முறையே முடிந்தன; பொய்யறிவின்கண் தோன்றாது, மெய்யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கு இயல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல்முழு பொருளாகி, யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்ற பொருள் பற்றியது. மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு எனும் பதிஞானம் விளங்கப் பெறும்
எப்பிறவியும் தேட – திருமால், அயன், இந்திரன் – பல பிறப்பெடுத்தும் தேடுதல் குறித்தது; தேடுதல் – தொழில் / செயல், தேடுபவன் – கர்த்தா, தேடப்படும் பொருள் ஆகிய முதன்மைப் பொருள்
ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும் தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே ஜெகசால சித்தகறை மவுனந்தானே
அகஸ்தியர் தண்டக சூஸ்திரம் 25
கருத்து – அகத்தியர் புலத்தியருக்கு மௌனம் பற்றி விளக்கி அதில் நிலைபெறுதலைக் குறித்து விளக்கம் அளிக்கும் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கக் கூடியதான மூலாதாரத்தில் நின்ற எனது மகனாகிய புலத்தியனே உரைக்கக்கூடிய இந்த விஷயங்களை மனம் ஒன்றி கேட்பாயக. மாறி மாறி இருக்கக் கூடியதான பின்னல் போன்றதான இரு நாடிகள் ஆகிய சூரிய நாடி சந்திர நாடி ஆகியவற்றின் வழியே செல்வதாகியதும், ஊமை மூலமானதும், ஜீவாத்மாவை குறிப்பதானதும், ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை குறிப்பதான மகாரமானது அருவம், உருவம் அருவுருவம் ஆகிய முப்பொருளாய் நின்ற நிலையில் அல்லாமல் வேறு எவ்வகையிலும் இல்லாமல் இருப்பதை மௌனத்தினைக் கொண்டு அறுதியிட்டு கூறப்பட்டதான சுழிமுனையில் விருப்பமுடன் நிற்பாயாக. இவ்வாறான கற்கக்கூடியதான மௌனத்தால் சித்தத்தில் இருக்கும் அனைத்துவிதமான குற்றங்களும் நீங்க மௌனம் மட்டும் நிலைபெற்று இருக்கும்.
விளக்கஉரை
மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறு மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் – மகாரத்தினை முதன்மையாகக் கொண்டு அதை நடுவில் வைத்து முன்னும் பின்னும் ஓங்கார எழுத்துக்களால் அடையப்படுபவளாகிய அன்னை எனவும் கொள்ளலாம். ஓங்காரத்தினை உணர்தல் என்றும் கூறலாம்.
கருத்து – சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை என்பது பற்றிக் கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
மெய்யை வழி பற்றி, அதன் தன்மையை உணர்ந்து, அவ்வாறு உணர்ந்த வழியிலே விளங்கி நிற்கக் கூடியவராகிய சிவன் எண்ணுபவர்களுக்கு உள் ஒளியாகி நிற்பவளும், மணம் வீசக்கூடியதும் மிக நீண்டதுமான கூந்தலை உடைய மங்கை ஆகிய சத்தியுடன் எல்லா இடத்தும், தானுமாய், பேதம் இல்லாமல் இயைந்தே நிற்பான். அவ்வாறு நிற்கும் பொழுதில் தம்மை தொழுது எண்ணுகின்றவர்களுக்கே திரிபுரை நற்கதி அளித்து வழங்குவாள்.
தத்துவந் தொண்ணுற் றாறில் தகவுறு வாயுப் பத்து மெத்தென நாடி பத்து மெய்யுளே ஆறா தாரம் சுத்தமாங் கரணம் நான்கும் தொன்றுமண் டலங்கள் மூன்று மித்தனை நறிய வல்லா ரிறைவரா யிருப்பார் தாமே
அகத்தியர் முதுமொழி ஞானம் – 28
கருத்து – 96 வகையான தத்துவங்கள், தச வாயுக்கள், தச நாடிகள், அந்தக்கரணம், மண்டலங்கள் இவற்றைக்கண்டு அறுக்கவல்லவர்கள் இறை நிலையில் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் பாடல்.
பதவுரை
(சைவ சித்தாத்தன்படி விளக்கப்படுவதாகிய) தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும், அதில் வலிமையும் பெருமையும் உடையதாகிய தச வாயுக்கள் எனும் பத்து வாயுக்களையும், பத்து நாடிக்களையும் கொண்ட உடல்தனில் ஆறு ஆதாரங்களையும், புனிதத்துவம் வாய்ந்ததான அந்தக்கரணங்கள் நான்கையும், அநாதி காலம் தொட்டு இருக்கக்கூடியதான அக்னி, ஞாயிறு மற்றும் சந்திர மண்டலங்கள் ஆகியவற்றை கண்டு அதனை அறுக்கவல்லவராக இருப்பவர்கள் இறைவனாக ( இறைவனுக்கு நிகரானவராக – சாயுச்சிய நிலையில் ) இருப்பார்கள்.
கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.
விளக்கஉரை
நாவியம் – காந்தள்மலர்
வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
சே – இடபம்
நா இயலும் மங்கை – சரஸ்வதி
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி
புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல் விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் அருள் தானாகவே வெளிப்பட்டு அருளும் திறத்தைக் கூறும் பாடல்.
பதவுரை
தன்னிச்சையாக செல்லும் மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்யுங்கள்; கோபத்தையும், வெறுப்பையும் அறவே விட்டு விடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; புறத்தில் அசைவற்று இருப்பது போலே அகத்தில் அசைவற்று இருங்கள்; இவ்வாறு செய்தால் மிகக் கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடைய தம்பியாகிய தாருகன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து அது துகளாகி பட்டு அழியும் படி கூர்மையான வேலினை விடுத்து ஏழு உலகங்களும் பிழைக்குமாறு அருளிய தனிப் பெருந்தலைவனாகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.
பண்ணாரும் காமம், பயிலும் வசனமும், விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும், புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நன்கு அமையப் பெற்ற உடலால் எழுகின்ற காமமும், அதன் காரணமாக பொருந்தி ஒலிக்கக் கூடியதான பேச்சுக்களும், மேலே செல்லும் போது ஆகாயம் வரை நீட்டிக்கச் செய்வதான மூச்சும், மூச்சினை தொடர்ந்து எழுகின்றன ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் இவை எல்லாம் எங்கு சென்றன என்று எண்ணும்படியாக உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்து ஒழியும்.
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும் – பிராணன் என்பதை முன்வைத்து அதன் முழுமையை உணர்த்துவதான தச தீட்சையினால் கிடைக்கப்பெறும் தச நாதங்கள் வாய்க்கப் பெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
முதல் தந்திரத்தில் `யாக்கை நிலையாமை` பற்றி கூறப்பட்டாலும், அதனை வலியுறுத்தி இங்கு ‘உடல் விடல்‘ எனும் தலைப்பில் வருவதாலும் காமம் முன்வைத்து எழுதப்பெற்று இருப்பதாலும் காமத்தின் இயல்புகளை எடுத்துரைத்து அதன் நிலையாமையை கூறி உடல் நிலையாமை கூறப்படுகிறது எனவும் கொள்ளலாம்.
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை
மூதுரை – ஔவையார்
கருத்து – கற்பக மரத்தின் கீழ் நின்றாலும் வினையின் காரணமாக விதிக்கப்பட்டதே கிடைக்கப் பெறும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
தாம் எண்ணிய செயல்கள் எண்ணியவாறு நடக்கவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் மூடத்தனமான நெஞ்சமே! நீ நீனைத்தபடி எல்லாச் செயலும் நடந்துவிடுமா? கருத்தில் ஒருமை கொண்டு, நினைத்தவற்றை எல்லாம் வழங்கத் தக்கதான கற்பக மரத்திடம் சென்று கேட்டாலும், விதியில் எழுதியுள்ளபடி நமக்குக் கிடைக்கக் கூடியதான எட்டிக்காயே கிடைக்கும் என்றால் அது நம் முன் வினைப் பயனே.
வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – தனது சாயல் தனக்கு உதவாது போல் செல்வம் உதவாது என்பதை உரைத்து முருகப்பெருமானை துதிக்கச் சொல்லும் பாடல்.
பதவுரை
இந்த உலகில் வெய்யில் காலத்தில் ஒதுங்கி நிற்கக் கூட உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல தனது இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருள் எனப்படுவதாகிய செல்வமும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே செல்வத்தின் நிலையாமைக் கண்டு கொண்டும் உணர்ந்து கொண்டும் கூர்மையானதும் ஒளி வீசும் படியாகவும் அழகானதுமான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து வினையின் காரணமாக தரித்திரனாக இருப்பவனுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள்.
விளக்கஉரை
வை – வைக்கோல், வைக்கவும், கூர்மை
வறிஞன் – தரித்திரன்
வடி – அழகு
வெறு நிழல் – பயன்படாத நிழல்
அரிசில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதான நொய்யுணவாக உண்பவராக இருந்தாலும் பகிர்ந்து உண்ணுங்கள். வறுமை இருப்பினும் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்துகிறது.
‘தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்‘ எனும் திருமந்திரப் பாடல் வரிகளுடனும் (செல்வம் நிலையாமை), ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே‘ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும் வரிசையுடன் ஆகம புராணந்தன்னை பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே
அகத்தியர் சௌமியசாகரரம்
கருத்து – அடியார்களை அணுகி அவர்கள் இடத்தில் இருந்து பூரணத்துவத்தை பெற வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனத்துடன் இருக்கும் வடிவமே சந்தோஷமாகும்; சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமம், அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றானதும், பழமையுடன் கூடியதான கதையைக் கூறுவதும் ஆன புராணம் ஆகியவற்றை செய்திகள் என்று எண்ணாமல் உண்மைத் தன்மைகளை பக்தியுடன் வேதத்தின் முடிவுகளாகிய வேதாந்தம் என்று எண்ணி, அனைத்தையும் முடிவாக அறிந்தவர்களானவர்களும், சாம்பல் எனப்படும் திருநீற்றினை மேனி முழுவதும் பூசி, காக்கும் திருவடிகள் மேல் மனம் வைத்தவர்களும், மூச்சுக் காற்றினை முறையாக அறிந்து அதன்படி நிற்பவர்களுமான அடியவர்களாகிய கருத்தினை கேட்பாயாக; அவர்கள் உரைக்கக் கூடியதான பூரணத்துவம் என்பது என அறிந்து பார்ப்பாயாக என அகத்தியர் புலத்தியருக்கு உரைக்கிறார்.
விளக்கஉரை
புராணம் – பழமை, பழங்கதை, அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
அத்திவுரித்து அடிமீது நின்று – அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறப்படும். அத்தி உரித்து என்பது வேழ முகத்தானுக்கு உரிய யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள்; பிராணன் எனும் குண்டலினியை அது இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து எழுப்பி பின் நிலையான இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது. குருமுகமாக அறியப்படவேண்டிய ரகசியம் இது.
அடியார் – அடியை உடையவர்கள், அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள். அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்றும் பொருள் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
நிரவ – நிரம்ப
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் : இணையம் செய்தி : விக்கிப்பீடியா
தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’
எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க ளின்பமாய் வாழ்ந் திருக்க, யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடியேன் தவிப்பதம்மா, உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதஞ் சாட்சியாக உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன் உலகந்தனி லெந்தனுக்கு பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை போக்கடித் தென்னை ரட்சி பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல் பிரியமாய்க் காத்திடம்மா அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க அட்டி செய்யா தேயம்மா, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – வேறு எந்த தெய்வத்தையும் துணையாக கொள்ளாமல் இருப்பதால் தன்னை பிள்ளையாகக் கருதி, வறுமையைப் போக்கி காக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! இந்த உலகம் முழுவதாலும் புகழப்படுபவரான மார்கண்டேயன் போல் என்னை பிரியமாக காத்திட வேண்டும் தாயே; உன்னுடைய திருவடிகளையே சாட்சியாக வைத்து நியே துணை என்று உறுதியாக நம்பினேன்; இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் துணையாகக் கொள்ளவில்லை; என்னைப்போலவே பிறவி எடுத்தவர்கள் இங்கே செல்வம், புகழ் என்று இன்பமாக வாழ்ந்திருக்க, உன்னுடைய அடியவன் ஆகிய யான் இத்தனை வறுமையில் தவிப்பது யான் செய்த பாவமா? நீ உன்னுடைய பிள்ளை என்று என்னை எண்ணி என்னிடம் எதுவும் உரையாமல் வறுமையை போக்கி என்னை ரட்சிக்க வேண்டும். தாயானவளே இன்னமும் உன்னுடைய அடியவன் ஆகிய என்னை ரட்சிக்காமல் தாமதம் செய்யாதே.
கருத்து – குவிக்கப்படா மனத்தினால் எதையும் பெறமுடியாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
விதிக்கப்பட்ட மார்கங்கள் கொண்டு, மற்றும் உபதேசிக்கப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்யாமல் சோம்பல் கொண்டு இருந்தால் உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி ஆனதும், அணிமா மகிமா முதலிய சித்திகள் ஆனதுமான காயசித்தி அடையக் கூடுமோ? ஒன்றிலும் நிலை பெறாமலும் முழுமை பெறாமலும் நாய் போன்று அனைத்தையும் விரும்பி இருந்தால் ரச வாதம் எனப்படுவதான வாத சித்தி அடையக் கூடுமோ? மனமானது குவிக்கப்படாவிட்டால் யோக சித்தி என்றும், இறை நிலையை அடைதலை குறிப்பதானதுமான சமாதி நிலையை எய்த இயலுமோ? மந்திர சக்தி உடையதும், படர்ந்து செல்லும் வகையினதும் ஆன வெள்ளை நிறமுடையதுமான அல்லிப்பூ கொண்டு மிகப் பெரியதான ஆகாயத்தினை மூட இயலுமோ? மிகச் சிறியதாக இருப்பினும் காமத்தின் வழியே சென்றால் உயிர்கள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கும் சிவயோகம் அதன் நிறம் மாறி கருமை நிறம் கொள்ளும்.
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே. சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய். சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய் ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திராது சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச் சிறிய கடனுன்னதம்மா. சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி சிரோன்மணி மனோன்மணியு நீ. அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி யனாத ரட்சகியும் நீயே, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – அன்னையில் சிறப்புகளை உரைத்து தான் அன்னையின் மைந்தன் என்பதால் தன்னை காக்கும் பொறுப்பு அன்னைக்கு இருக்கிறது என்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! ஈசனுக்கும் உமைக்கும் உரித்தான சிவசிவ எனும் ஒலி வடிவமாகவும், மகேஸ்வரனிடத்தில் நிலைபெறும் மகேஸ்வரியாகவும், பரமனிடத்தில் நிலை பெறும் பரமேஸ்வரியாகவும், சிரசில் அமையப் பெற்றதும், புருவ மத்தியில் ஒளிரக் கூடியதுமான சிரோன்மணியாவும், பார்வதி ஆகிய மனோன்மணி ஆகியவளும் நீயே ஆகி, வனப்புடன் கூடிய அழகிய வடிவம் கொண்டும், என்றும் அழிவில்லாவதலாகவும், அண்டங்கள் அனைத்தும் அதன் வழியில் நடைபெற பொறுப்பினை ஏற்றுக் கொண்டும், தோல்கருவியால் இசைக்கப்படும் ஒலியானவளாகவும், அந்த ஒலிக்கு காரணாமாகவும், நிரந்தரமானவளாகவும், பரம்பரையின் ஆதியாகவும், அனாத ரட்சகியாகவும் நீயே இருக்கிறாய்; இந்த ஜகம் எல்லாம் உன்னுடைய மாயத்தோற்றம் என்பதாலும் யான் சிறியவன் என்பதாலும் புகழ என்னால் முடியாது; (ஆனாலும்) உனக்குச் சொந்தமான உன்னுடைய மைந்தன் ஆனதால் என்னை இரட்சிக்க உனக்கு கடன் உள்ளதம்மா; வெள்ளிக்கிழமை உன்னை தரிசித்தவர்களின் துன்பங்களை நீக்கி விடுவாய்; மனத்தினால் உன்னுடைய பாதம் எனப்படுவதான திருவடிகளைத் தொழுபவர்களின் துயரத்தினை மாற்றி விடுவாய்.
துன்பத்தை நீக்கி விடுவாய், துயரத்தை மாற்றி விடுவாய் – இயலாமையால் வருவது துன்பம்; (இக லோகம் , குறுகிய கால அளவு), இல்லாமையால் வருவது துயரம்(பர லோகம், நீண்ட கால அளவு)
நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும் மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும் பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும் அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே
முதுமொழி ஞானம் – – அகத்தியர்
கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்; கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்; அந்த எண்ணங்களைத் தொடர்ந்து மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.
விளக்கஉரை
துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து