அமுதமொழி – விகாரி – மாசி – 1 (2020)


பாடல்

தத்துவந் தொண்ணுற் றாறில் தகவுறு வாயுப் பத்து
மெத்தென நாடி பத்து மெய்யுளே ஆறா தாரம்
சுத்தமாங் கரணம் நான்கும் தொன்றுமண் டலங்கள் மூன்று
மித்தனை நறிய வல்லா ரிறைவரா யிருப்பார் தாமே

அகத்தியர் முதுமொழி ஞானம் – 28

கருத்து – 96 வகையான தத்துவங்கள், தச வாயுக்கள், தச நாடிகள், அந்தக்கரணம், மண்டலங்கள் இவற்றைக்கண்டு அறுக்கவல்லவர்கள் இறை நிலையில் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

(சைவ சித்தாத்தன்படி விளக்கப்படுவதாகிய) தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும், அதில் வலிமையும் பெருமையும் உடையதாகிய தச வாயுக்கள் எனும் பத்து வாயுக்களையும், பத்து நாடிக்களையும் கொண்ட உடல்தனில் ஆறு ஆதாரங்களையும், புனிதத்துவம் வாய்ந்ததான அந்தக்கரணங்கள் நான்கையும், அநாதி காலம் தொட்டு இருக்கக்கூடியதான அக்னி, ஞாயிறு மற்றும் சந்திர மண்டலங்கள்  ஆகியவற்றை கண்டு அதனை அறுக்கவல்லவராக இருப்பவர்கள் இறைவனாக ( இறைவனுக்கு நிகரானவராக – சாயுச்சிய நிலையில் ) இருப்பார்கள்.

விளக்க உரை

  • தகவு – தகுதி, பெருமை, உவமை, குணம், அருள், நடுவுநிலை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம்
  • ஆன்ம தத்துவங்கள் -24, உடலின் வாசல்கள் -9, தாதுக்கள் -7, மண்டலங்கள் -3, குணங்கள் -3, மலங்கள் -3, வியாதிகள் -3, விகாரங்கள் -8, ஆதாரங்கள் -6, வாயுக்கள் -10, நாடிகள் -10, அவத்தைகள் -5, ஐவுடம்புகள் -5
  • ஆறு சக்கரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை
  • வாயுக்கள் 10 – உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று, இமைக்காற்று, தும்மல்காற்று, கொட்டாவிக்காற்று, வீங்கல்காற்று
  • நாடிகள் 10 – சந்திரநாடி அல்லது பெண்நாடி, சூரியநாடி அல்லது ஆண்நாடி, நடுமூச்சு நாடி, உள்நாக்கு நரம்புநாடி, வலக்கண் நரம்புநாடி, இடக்கண் நரம்புநாடி, வலச்செவி நரம்புநாடி, இடதுசெவி நரம்புநாடி,
  • கருவாய் நரம்புநாடி, மலவாய் நரம்புநாடி
  • அந்தக்கரணங்கள் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *