அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 16 (2021)


பாடல்

அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்

கைவல்ய நவநீதம் – தத்துவ விளக்கப் படலம் – நன்னிலம் தாண்டவராயர் சுவாமிகள்

கருத்து – ஒன்றைக் கண்டு மகிழ்வு கொள்ளும் ஆன்மாவானது இறைவனோடு  முற்றிலும் ஒத்து ஆடும் ஆனால் ஆடும் சிவசத்தி ஆகாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும், இது மனிதன் அல்ல வினைக் கூடு ஆகிய கட்டைதான் என்று தெளிவது போலவும், குரு உபதேசிக்கப்பட்ட  உபதேசத்தின் தெளிவினாலும், அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட வேத,  வேதாந்த நூல்களின் சாரத்தைக் கொண்டும் இது உடல் அல்ல, இது உலகமும் அல்ல, இது பஞ்சபூதங்களும் அல்ல, இவை உண்மைப் பொருளும் அல்ல என்று உணர்ந்து மாறுபாடு இல்லாத ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்பதை மன வேற்றுமை இல்லாமல் ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே பழித்து உரைப்பதாகும் என்று அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

  • இந்த உலகை அவன் அவள் அது எனும் அவை என்று சுட்டறிவால் அறிவது, கயிற்றை பாம்பென உணர்வது போல ஓர் கற்பித அறிவு. ஒர் பிரம்மஞானியான குருவின் மகா வாக்கியப் பொருள் உபதேசத்தால் இந்த மாய மயக்கங்கள்  நீக்கி, அங்கே பரப்பிரம்மமே மெய்பொருளாக நிற்பதை அறிய இயலும்
  • அபவாதம் – அவதூறு, அவகீர்த்தி, பழி, பழி தூற்று, பழிதூற்றுரை, பழித்துரை, புறங்கூறுதல், கோள் சொல்தல்
  • குரவன் – ஆசாரியன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 14 (2021)


பாடல்

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
   கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
   பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
   மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
   விளையாட்டைப் பாரேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

கருத்து – குண்டலினி சிரசை அடையும் மார்க்கத்தைக் உரைக்கும் பாடல்

பதவுரை

உபதேசம் செய்யப்பட்ட முறைகளை அனுசரித்து தீட்சை முறைகளால் மலங்களை எரித்து, பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாதாரத்தில் இருந்து எழும் அக்கினியானது  மற்ற ஆதாரங்களாகிய  சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகியவற்றை கடந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்று அழைக்கப்படும்  சுழிமுனையினை நாடி வழியே மேலேறி, ஆக்ஞையைக் கடந்து  புருவ மத்தியில்  ஆத்ம சொரூபத்தை காண  சூழ்ந்துள்ள திரைகளை விலக்கி ஆத்மாவை விளக்கி மேலப்பதி எனும்  சகஸ்காரத்தில் அதன் அசைகின்ற விளையாட்டினை என் கண்ணால் பார்ப்பேனோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 30 (2021)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவன் சாராதவர்களுக்கு  அரியவன் என்பதும்,  சார்ந்தார்க்கு எளியன் என்பதையும் உணர்த்தி, அவனைச் சார்ந்து பயன் அடைக என்று கூறப்பட்ட பாடல்

பதவுரை

தேவர்களாலும், மூவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை இடைவெளி இன்றி உள்ளத்தால் பற்றுங்கள்; அவ்வாறு பற்றினால் பற்றிய அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்படுவான்.  அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்திலும், புறத்திலும் வழிபட்டால், உங்களது தன்மை சிவத்தன்மை ஆகிவிடும்.

விளக்க உரை

  • கண் – காலம் பற்றிய இடைவெளி என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ‘கண்ணற உள்ளே’ என்பதை முன்வைத்து ஆக்கினையில் நின்று தவம் செய்வதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்
  • காலை – காலம் `
  • இயற்றுதல், பண்ணுதல் – அகம், புறம் பற்றியது
  • பராபரன் – சிவனது தன்மையைக் குறித்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 28 (2021)


பாடல்

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்

நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்

குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்

நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

நெட்டெழுத்துக்கள் யாவும் முதலும் முடிவும் இல்லா வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு தோன்றி வருகின்றது; குற்றெழுத்துக்களாகிய ‘க முதல் ‘ன வரையில் அகார ஒலியில் ஒன்றி இருக்கும்; அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் அந்த வட்ட எழுத்துக்களின் ஒலி மாறும்.. இவ்வாறு எழுத்துக்கள் யாவும் வட்ட வடிவ ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து அவனை துதியுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 26 (2021)


பாடல்

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
     மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
     பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
     திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
     கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருக்கோடிகா திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனானவன் வண்டுகள் மொய்க்கும் பூக்கள் அணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாயும், திருமறைக் காட்டில் வாழும் அழகு கொண்டவனாகவும் ,  பன் நெடுங்காலமாய்  செய்த வினையான் வரும் பழைய வினையாகிய பிறவித் துன்பத்தைத் தீர்ப்பவனாயும், வீட்டுலக வழியை உணர்த்தும் பரமனாகவும், கூர்மை கொண்டு ஆடும் ஆட்டம் போல இயல்பாக எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாகவும், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குபனாகவும் ஆவான்.

விளக்க உரை

  • மணாளன் – அழகன்
  • பண்டு ஆடு – முற்பிறப்பில் செய்த பழவினை
  • பரலோகம் – எல்லா உலகங்களினும் மேலாய உலகம், வீட்டுலகம்; இறைவனது திருவருள்
  • பரமன் – யாவர்க்கும் மேலானவன்
  • பரலோக நெறி காட்டும் பரமன்  – பரலோகத்தை அடையும் பொழுது உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே கொண்டவனாகவும் , அவ்வுணர்வும் அவன் தந்தால் மட்டுமெ பெற முடியும் என்பதும் பெறப்படும்
  • செண்டாடி – செண்டாடுதல்போல உழற்றி
  • கொண்டாடும் – பாராட்டுகின்ற

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 25 (2021)


பாடல்

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமீயச்சூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகியும்,  பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டு வேறு வேறு  வேடத்தராகியும் அன்னையை தன்னுடை உடலின் பாகத்தில் கொண்டவனும் ஆனவன் அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலில் பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 24 (2021)


பாடல்

அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான்
சத்திசிவம் என்றறிந்தே – என் ஆத்தாளே
சச்சுபலங் கொண்டான்டி

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

திருநீற்றையும், வெண்மதி எனும் சந்திரனையும் சூடி ஆனந்த பேரொளி வடிவமாக இருப்பதே சக்தி சிவன் எனும் நிலையே. இவ்வாறான பூரண நிலையை முழுமையா அறியாவிட்டாலும்  சிறுமைகண்டும் எனக்கு அன்னை அருள் செய்தாள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 23 (2021)



பாடல்

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
     படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
     இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
     பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில்  உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும்  அழகி கோலம் கொண்டவராகவும்  காட்சி வழங்குகின்றார்.

விளக்க உரை

  • பசைந்த – விரும்பிய
  • பிசைந்த – வடித்த
  • அசைந்த – தங்கிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 22 (2021)


பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.

விளக்க உரை

  • அயில் – கூர்மை
  • குயில் வாய்மொழியம்மை – அம்பிகை திருநாமம்
  • பயில்வான் – கோயில்கொண்டு இருப்பவன்
  • பற்றி நிற்றல் – பற்று விடுமாறு பற்றி வழிபடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 20 (2021)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

தான் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்தும்  மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும்  கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது   எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.

விளக்க உரை

காஞ்சிரங்காய் – எட்டிக் காய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 19 (2021)


பாடல்

ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
   யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
   தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
   புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
   வாயிலோ தீயினுங் கொடிதே

தாயுமானவர்

கருத்து – பெருமானின் போற்றத்தக்க இயல்புகளைச் சொல்லி தன்னைக் கைவிடாமல் காத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தொடக்கம், நடு, முடிவு ஆகிய வகையில் இருந்தும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லாமல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து பேரின்ப சுகவடிவாகியும் பேரொளி சுடராகியும் நிற்கும் பெருமானே! உன்னுடைய அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தி அருளாமல் அடியேனைக் கைவிட்டு ஒதுக்குவது முறை ஆகுமோ?  இந்த எண்ணங்களால் எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாக தீயினைப் போன்று உள்ளன. தாழ்ச்சி உடையனாகிய யான் நீ கைவிட்டு விட்டால் என்ன செய்வேன்?  அதனால் எளியேனைக் கைவிடாதே.

விளக்க உரை

  • புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 18 (2021)


பாடல்

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது

திருநெறி 4 -உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பாராதியின் நிறங்களையும், அவை குறிக்கும் எழுத்துக்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பிருதிவி எனும் புவியானது பொன்னிறமாக இருக்கும்; அப்பு எனும் நீரானது வெண்மை  நிறமாக இருக்கும்; தேயு எனும் பொங்கிவரும் தீயானது சிவப்பு மிகுதியான சிவந்த நிறத்தில் இருக்கும்; வாயுவானது கருமை நிறமாயிருக்கும்; புகை மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும் என்று பெரியோர்கள் உரைப்பார்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனும் பாராதியில் பிருதிவிக்கு ல எழுத்தும் (லகாரம்),  அப்புவுக்கு வ எழுத்தும் (வகாரம்), தேயுவுக்கு ர எழுத்தும் (ரகாரம்),  வாயுக்கு ய எழுத்தும் (யகாரம்), ஆகாயத்திற்கு அ எழுத்தும் (அகாரம்)  அழுத்தமாகவும் பலம் பொருந்தியும் நிற்கும்.

விளக்க உரை

  • தூமம் – புகை, நறும்புகை , தூபகலசம், மண்கலச்சூளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 16 (2021)


பாடல்

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்;  சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட  பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.

விளக்க உரை

  • இடைதல் – பின்வாங்குதல்
  • எதிராவார் – இணையாவார்
  • உம்மை , ` உயர்வாவாரும் இல்லை
  • அன்றே – அமணரை விட்டு நீங்கிய அன்றே
  • உறுபிணி – மிக்கநோய்
  • செறல் – வருத்துதல்
  • பொன்றினார் – இறந்தவர்
  • நண்ணிய புண்ணியம் – அடைந்த புண்ணியப் பயன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 11 (2021)


பாடல்

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திருவடியினை அடையாது  உயிர்கள் ஏனைய பயன்களை  அடையாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் ஆருயிரானது சிவமாகிச் சிவனின் உண்மை பேரறிவின் நிலையினில் நிற்கும். அந்தநிலையில்  மலம்  மாயை கன்மம் மாயேயம் என்னும் ஆகிய இயல்புகளும் நீங்கி நிலைத் தன்னமையினை அடையப் பெறும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி, தானே குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்ட உள்ளத்திலே நிலைபெறச் செய்து, நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் எனும் சொரூப நிலையில்  சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்டான் என்பது உண்மையே.

விளக்க உரை

  • ஏனைய முத்திரை – முதன்மையான சின்முத்திரை
  • ஐம்மலங்கள் – திரோதாயி ஒழிந்தவை
  • சொரூபம் – இயற்கை.
  • முத்திரை – பொறி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 9 (2021)


பாடல்

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.

விளக்க உரை

  • அக்கு – உருத்தி ராக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 8 (2021)


பாடல்

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் !!!! மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே

சிவஞானசித்தியார் – அருணந்திசிவம்

கருத்து – எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வ வடிவில் வந்து அருளுபவன் சிவனே என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

மனத்தின் கண் நிறுத்தி எந்தத் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க அந்த தெய்வங்களால் இயலாது என்பதால் மாதொரு பாகனாகிய சிவனே வந்து அந்த தெய்வமாகி அருள்செய்வான். பிறதெய்வங்கள் யாவும் சிவனுக்கு உட்பட்டு தொழில் செய்வதால் அவைகள் வினைகள் கொண்டு வேதனைப்படும்; இன்ப துன்பம் அனுபவிக்கும்; இறக்கும்; பிறக்கும்; ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்க வல்லவன் அவனே ஆவான்.

விளக்க உரை

  • மாதொரு பாகனார் – சிவச்சக்தி ரூபம்

Loading

சமூக ஊடகங்கள்