
பாடல்
மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ!
அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்
கருத்து – குண்டலினி சிரசை அடையும் மார்க்கத்தைக் உரைக்கும் பாடல்
பதவுரை
உபதேசம் செய்யப்பட்ட முறைகளை அனுசரித்து தீட்சை முறைகளால் மலங்களை எரித்து, பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாதாரத்தில் இருந்து எழும் அக்கினியானது மற்ற ஆதாரங்களாகிய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகியவற்றை கடந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்று அழைக்கப்படும் சுழிமுனையினை நாடி வழியே மேலேறி, ஆக்ஞையைக் கடந்து புருவ மத்தியில் ஆத்ம சொரூபத்தை காண சூழ்ந்துள்ள திரைகளை விலக்கி ஆத்மாவை விளக்கி மேலப்பதி எனும் சகஸ்காரத்தில் அதன் அசைகின்ற விளையாட்டினை என் கண்ணால் பார்ப்பேனோ?