
பாடல்
பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது
திருநெறி 4 -உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – பாராதியின் நிறங்களையும், அவை குறிக்கும் எழுத்துக்களையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பிருதிவி எனும் புவியானது பொன்னிறமாக இருக்கும்; அப்பு எனும் நீரானது வெண்மை நிறமாக இருக்கும்; தேயு எனும் பொங்கிவரும் தீயானது சிவப்பு மிகுதியான சிவந்த நிறத்தில் இருக்கும்; வாயுவானது கருமை நிறமாயிருக்கும்; புகை மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும் என்று பெரியோர்கள் உரைப்பார்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனும் பாராதியில் பிருதிவிக்கு ல எழுத்தும் (லகாரம்), அப்புவுக்கு வ எழுத்தும் (வகாரம்), தேயுவுக்கு ர எழுத்தும் (ரகாரம்), வாயுக்கு ய எழுத்தும் (யகாரம்), ஆகாயத்திற்கு அ எழுத்தும் (அகாரம்) அழுத்தமாகவும் பலம் பொருந்தியும் நிற்கும்.
விளக்க உரை
- தூமம் – புகை, நறும்புகை , தூபகலசம், மண்கலச்சூளை