கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும் பாடல்.
பதவுரை
வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.
கருத்து – திருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும்பாடல்.
பதவுரை
ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.
கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.
விளக்கஉரை
இடித்தல் – அழித்தல்
முடித்தல் – வகுத்தமைத்தல்
ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும் சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.
விளக்கஉரை
திருஅஞ்சைக்களம் – சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும் பாடல்.
பதவுரை
விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.
விளக்கஉரை
மேவு – மேன்மை
மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.
பதவுரை
திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும் குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும், ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.
விளக்கஉரை
கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
நீசன் – அறிவில்லாதவன்
‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
பொன்னை நாடி நாடி நொந்து புலர்ந்த துன்பம் போதும் போதும் உன்னை நம்பிச் சித்தி எட்டும் உற்று வக்கும் உவகை ஈவாய்! முன்னை வேத முடிவில் ஆடி மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்! தென்னை போலும் வாழை நீடும் திருத்து றையூர்ச் சிவபி ரானே!
திருத்துறையூர் சிவபெருமான் பதிகம் – திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கருத்து – பொன்னாசை விடுத்து உன்னை அடைந்ததால் அட்டமாசித்தி அருள திருத்துறையூர் சிவனிடத்தில் வேண்டும் பாடல்.
பதவுரை
நீர் குறைவான போதும் வளரும் தென்னை மரங்களும், நீர் அதிகமான இடத்திலே வளரும் வாழை மரங்களும் இருக்கப்பெற்றதான திருத்துறையில் உறைகின்ற சிவனே, வேதத்தின் முடிவுகள் உன்னைப் போற்றும்படி ஆடி ப்ரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மூவரும் போற்றும்படியாக அவர்களுக்கு முதல்வன் ஆனவனே! உலகியல் வாழ்வு சார்ந்து பொன்னைத் தேடித் தேடி அதன் காரணமாக துயரம் அடையப்பெற்று அதன் காரணமாக தளர்ந்து அடையப்பெற்ற துன்பம் போதும்; உன்னை நம்பி இருப்பதன் காரணமாக சித்தத்தன்மையினை கொடுக்கக்கூடிய அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்துக்களையும், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய மனதால் எய்தும் சித்துக்களையும் மகிழ்வுடன் களிப்பு கொள்ளுமாறு அருள்வாய்.
விளக்கஉரை
நடுநாட்டுத் தலம்
உவகை – உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச் சாதி இல்லை! கருணை கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு ஒருகாலும் நரகம் இல்லை! கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார் மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு இல்லை பேச்சுத் தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை எனும் பழமொழியினை உறுதி செய்ய திருத்தண்டலை இறைவனை முன்வைத்து எழுதப்பட்டப் பாடல்.
பதவுரை
மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு சாதி வேறுபாடுகள் இல்லை; வீடு பெறுதற்கு தவம் செய்பவர்கள் ஆகிய துறந்தவர்களுக்கு விருப்பம் என்பது இல்லை(வெறுப்பும் இல்லை என்பது மறை பொருள்); நன்மை செய்வதையே திடமாக் கொண்டு வாழும் நல்லவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் தரதக்கதான நரகம் என்பது இல்லை; நெறி முறைகளோடு கூடி சிறந்த முறையில் ஆட்சி செய்யும் கொற்றவன் எனும் அரசனுக்கு அடிமை என்பது இல்லை; யாசித்து உண்பவனுக்கு பேச்சு என்பதே இல்லை; மலர் போன்ற பாதங்களை உடைய தண்டலையார் பதம் பணிபவர்களுக்கு பிறப்பு என்பது இல்லை.
விளக்கஉரை
தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீள்நெறி‘ என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்
சிறப்புடைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இதற்கு பழமொழி விளக்கம் எனும் பெயரும் உண்டு. (பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்)
தில்லையில் பொருள் இல்லாமல் தங்கி இருந்தபோது தில்லை சிவகாமி அம்மையைப் பாடிய போது, அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகள் வீழ்ந்தன; காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது அன்றுமுதல் – படிக்காசுப் புலவர்
தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.
திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும் பாடல்.
பதவுரை
கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?
விளக்கஉரை
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர் செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன் தானே குடைவேந் தனித்து
திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்
கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும் ஒருங்கே தியானிப்போம்.
விளக்கஉரை
இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது
அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 82 திருமுறைஎண் 7
இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள் ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள் அன்று வானவர்க் காக விடமுண்ட கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – நிலையாமையை உரைத்து காட்டுப்பள்ளி ஈசனை கண்டு உய்யச் சொல்லும் பாடல்.
பதவுரை
பேச்சுத் திறம் அழிந்த ஊமையர்களே! இன்று உயிருடன் இருப்பவர்கள் நாளை இருக்கமாட்டார்கள் எனும் பொருளை ஆராயமலும் உணராமலும் அறியாது ஒழிதலைக் கொண்டு இருப்பவர்களே! முன்னொரு காலத்தில் தேவர்களின் பொருட்டு அவர்களின் நலனுக்காக விடத்தினை உண்ட கண்டத்தினை உடையவனாகிய ஈசன் உறையும் காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.
கருத்து – ஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும்பாடல்.
பதவுரை
தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.
விளக்கஉரை
தலம்- தென்குரங்காடுதுறை
விண்டார் – பகைவர்
விமலன் – மலமில்லாதவன்.
இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
கொண்டான் – கொண்ட சிவபிரான்.
திருமுறையில்குறிப்பிடப்பட்டுள்ளமலர்கள் – இண்டு
புகைப்படம் : தினகரன்
தோற்றமும் தன்மையும்
வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.
மருத்துவ குணங்கள்
இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்
கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர் திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
ஆகமம் – மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)
தலம்
திருக்குற்றாலம்
பிற பெயர்கள்
திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்
தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்
மாவட்டம்
திருநெல்வேலி
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 4 பதிக எண் 009 திருமுறை எண் 3
பாடல்
உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ
பொருள்
கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.
விளக்கஉரை
நாவியம் – காந்தள்மலர்
வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
சே – இடபம்
நா இயலும் மங்கை – சரஸ்வதி
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி
புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.
கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
நிரவ – நிரம்ப
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் : இணையம் செய்தி : விக்கிப்பீடியா
தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’
கருத்து – திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
எளிதாக விளங்கக் கூடியதான முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும். உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.