அமுதமொழி – விகாரி – ஆடி – 4 (2019)


பாடல்

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர்  திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை

திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்;  பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள்  நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.

விளக்க உரை

  • சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
  • செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
  • சிலையால் – இமயவில்லால்
  • மதில் – முப்புரங்கள்
  • அறுவிப்பார் – நீங்கச் செய்பவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)


பாடல்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.

பதவுரை

என்னை வழி நடத்துபவள் என்று  முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான  திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

விளக்க உரை

  • கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்
  • தையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வேலி


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருநெல்வேலி

  • பஞ்ச சபைகளில் தாமிர சபை
  • ஈசனாரின் நிவேதனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியத்தை வெள்ளம் அடித்துப்போகாமல் வேலிகட்டி காத்த தலம்
  • தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்
  • மண்டபங்கள் கொண்ட கோயில் – ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம்
  • வேதங்கள் மூங்கில் மரங்களாக இருக்க, ஈசனார் அவற்றின் அடியில் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம்
  • ஈசன், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • காந்திமதியம்மைக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு மறுநாள் காலை பூஜை வரை அதே கோலத்தில் திருக்காட்சி
  • வழிபாட்டு முறைகள் – காந்திமதி அம்மைக்கு காரண ஆகமம், நெல்லையப்பருக்கு காமீகஆகமம்
  • சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான இசை தரவல்ல இசைத்தூண்கள்
  • அபிஷேகத்தின்போது காணக் கூடியது – மிருத்யுஞ்சயமூர்த்தியாக திகழும் லிங்கத் திருமேனியின் மேற்புறம் வெட்டுப்பட்ட தழும்புடன் திருக்காட்சி. சிவனாரின் திருமேனியில் அம்பிகையின் திருவடிவம்.தற்போதுள்ள ஆவுடையார் 21 ஆவுடையார், மீதமுள்ளவை பூமியில் புதைந்திருக்கின்றன
  • மூலவர்கள் – மகாவிஷ்ணு வழிபட்ட சிவலிங்கத்திருமேனி, நெல்லையப்பர் சந்நிதி அருகில் சற்று தாழ்வான சந்நிதியில் அமைந்துள்ள ஆதி மூல சிவலிங்கத்திருமேனி
  • சிவனின் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி தனித்துவமாக மேற்கு நோக்கி
  • பஞ்ச தட்சிணாமூர்த்திகள்
  • சிவனாரின் சந்நிதி வலப்புறம் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை. பெருமாளின் வலது கை சிவலிங்க வழிபாடு செய்யும் அமைப்பு. மார்பில் சிவலிங்கம் அடையாளம் உள்ள உற்சவ பெருமாளின் கையில் தாரைப் பாத்திரத்துடன் காட்சி
  • கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
  • அனவரத லிங்கம் – இஸ்லாமியர் அன்வர்கான் என்பவரால் வழிபடப்பட்டது.
  • உச்சிகால பூஜையின் போது காந்திமதியம்மையே நேரில் வந்து சிவனாருக்கு அமுது பரிமாறி உபசரிப்பதும், பின் அந்த அமுதே அம்மைக்கும் நிவேதனமாக படைக்கப்படுவதும் இத்தலத்தில் தினமும் நடக்கும் சிறப்பான உற்சவம்..
  • அகத்தியர் சிவனாரின் திருமணக்கோல திருக்காட்சி தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
  • அகத்தியர் பிரதிஷ்டை செய்தது சால்வடீஸ்வரர் சிவனாரின் சந்நிதி
  • இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகரின் வலது கையில் மோதகம்; இடது கையில் தந்தம் என மாற்றி வைத்து அருள்பாலிப்பு
  • வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ள தாமிரச்சபையின் மேற்கூரை
  • தலமரமான மூங்கில் தாமிரச்சபைக்கு அருகில்
  • அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த, கீழே மரத்தாலும், மேலே தாமிரத்தாலும் செய்யப்பட்டு ஏழு அடுக்குகளுடன் திகழும் தாமிர சபை.
  • நடராஜர் தாமிர சபாபதி. சபையின் பின்னால் உள்ள நடராஜர் திருவடிவம் சந்தன சபாபதி. சபையின் உள்ளே ருத்ரவிஷ்ணு , பேதங்கள் , ரிஷிகளின் வடிவங்கள்.
  • இரு துர்க்கையம்மன் சந்நிதிகள். மான் , சிங்கம் மற்றும் தோழியுடன் கூடிய மகிஷாசுரமர்த்தினி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி மஞ்சன வடிவாம்பிகை என்ற பெயருடன் அம்பாள் சந்நிதியில் வடக்கு நோக்கியும் திருக்காட்சி
  • இருபத்தி ஐந்து மூர்த்தத்தில் ஒரு வடிவமான ஜ்வரஹரேஸ்வரருக்கு தனி சந்நிதி
  • பிள்ளைத்துண்ட விநாயகர் எனும் பொல்லாப்பிள்ளையாருக்கு தனி சந்நிதி
  • நாயன்மார்கள் சந்நிதி அருகில் தாமிரபரணி நதியின் பெண் வடிவம். சித்ரா பௌர்ணமி , ஆவணி மூலம் , தைப்பூசம் ஆகிய நாட்களில் திருமஞ்சனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது
  • சிவகாமியுடம் கூடிய அக்னி சபாபதி என்று போற்றப்படும் நடராஜர் சந்நிதி (மற்றொன்று)
  • நவக்கிரக சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சி தரும் புதன்.
  • வியாழன்தோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படும் காந்திமதியம்மை தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் திருக்காட்சி.
  • அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத்தூண்களான அமைப்பு.
  • அம்பாள் சந்நிதி முன்பு கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளான வடிவமைப்பு
  • வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின்(தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளித்தவர்) மகனும் சீடரும் ஆனவரும், பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் ஆன சுவேதகேது தனது எமபயம் நீங்கப்பெற்ற தலம்
  • ஆயர்குல ராமகோனாரும், முழுதும் கண்ட ராமபாண்டியனும் சிவனாரின் திருக்காட்சி பெற்ற தலம்
  • உலகமாந்தர் கடைபிடிக்கவேண்டிய 32 அறங்களை உலகுக்கு உணர்த்திய தலம்
  • சக்தி பீடங்களில் இத்தலம் காந்திசக்தி பீடம்
  • பிரதோஷத்தின் போது அபிஷேக ஆராதனைகள் ஈசன் மற்றும் அம்பாள் இருவரின் சந்நிதிகளின் முன்புள்ள நந்திகளுக்கும் செய்யப்படுவது தனி சிறப்பு

காந்திமதியம்மை உடனாகிய நெல்லையப்பர்

தலம்

திருநெல்வேலி

பிற பெயர்கள்

தென்காஞ்சி, வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம்

இறைவன்

நெல்லையப்பர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேண்டவளர்ந்த நாதர், வேணுவனநாதர், வேணுவனேஸ்வரர், வேணுவனமகாலிங்கேஸ்வரர் )

இறைவி

காந்திமதியம்மை ( வடிவுடையம்மை )

தல விருட்சம்

மூங்கில் ( வேணு  வேய்)

தீர்த்தம்

பொற்றாமரைக்குளம் எனும் ஸ்வர்ண புஷ்கரணி, கருமாரித் தீர்த்தம், சிந்து பூந்துறை முதலான 32 தீர்த்தங்கள்

விழாக்கள்

ஐப்பசி – திருக்கல்யாணம், ஆனி – பிரம்மோற்சவம் மண்டலாபிஷேகத்துடன் 41 நாட்கள், அம்பாள் – ஆடிப்பூர உற்சவம் 1௦ நாட்கள் திருவிழா, மார்கழி திருவாதிரை, தைப்பூச உற்சவம் , பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம், மாசி மகம் – அப்பர் தெப்பத்திருவிழா, வைகாசி விசாகம் – சங்காபிஷேகம், மகா சிவராத்திரி , மார்கழித் திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் 

மாவட்டம்

திருநெல்வேலி

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்
திருநெல்வேலி. PIN – 627001

வழிபட்டவர்கள்

அகத்தியர், திருமால், பிரம்மன், ராமர், கருவூர் சித்தர் , நின்றசீர் நெடுமாறன்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம் (3ம் திருமுறை – 92 வது பதிகம்)

நிர்வாகம்

 

இருப்பிடம்

திருநெல்வெலி நகரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருப்பிடம்

இதர குறிப்புகள்

தேவாரத் தலங்களில் 204 வது தலம்
பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 14 வது தலம்

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           3
பதிக எண்           92
திருமுறை எண் 1

பாடல்

மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே

பொருள்

நல்லனவற்றை விரும்பும் நன்நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக; அந்த திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்;. மறுமையில் நற்கதி தரும்; மற்றும் உயிர்களின் துயர் கொடுமாறு  அதன் பயன்கள் யாவும் தரும்; போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும்; அப்படிப்பட்ட அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்கக்கூடியதும், நெருங்கியுள்ளதும், பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்றதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்து அருள்கிற அருட்செல்வர் ஆவார்.

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           3
பதிக எண்           92
திருமுறை எண் 8

பாடல்

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே

பொருள்

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்றதும், பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடையதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமையையுடைய  கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 25 (2019)


பாடல்

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே

ஒன்பதாம் திருமுறை  – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர் 

கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.

விளக்க உரை

  • மொட்டித்து – குவித்து
  • களைகணே – பற்றுக் கோடானவனே
  • சூழ் மொழுப்பு – பரவிய மேலிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 23 (2019)


பாடல்

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.

விளக்க உரை

  • இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
  • கையாறு – செயலறுகை, துன்பம்
  • கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
  • நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
  • அல்லல் – பிறவித்துன்பம்
  • நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 21 (2019)


பாடல்

இனிவார் சடையினில் கங்கையென்
     பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
     செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
     தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
     கோத்தஎம் சங்கரனே

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.

பதவுரை

கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க  கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை  என அழைக்கப்படும் உமாதேவியார்  காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?

விளக்க உரை

  • `காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்`  எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும்.  `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும்  சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
  • முனிவார் – கோபிப்பவர்
  • வார்கணை- நீண்ட அம்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 18 (2019)


பாடல்

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும்  நெறியைக் கூறும் பாடல்.

பதவுரை

பெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும்,  எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை  நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.

விளக்க உரை

  • சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 16 (2019)


பாடல்

உரியேன் அல்லேன் உனக்கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
     றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
     பொய்யோ எங்கள் பெருமானே

எட்டம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதிருவடி காட்டி அருளிய திறத்தையும், பிரிய மாட்டேன் என்று வாக்கு உரைத்ததையும் கூறி அருள் வேண்டி நிற்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

பெருமானே! சங்கரனே!  உனக்கு அடிமையாக இருப்பதற்கு கூட உரிய தகுதி உடையவன் அல்லேன்; இருப்பினும் உன்னை விட்டு நீங்கி ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்; நாயினேன் ஆகிய யான் அதன் தன்மை இன்னதென்றும் அறியமாட்டேன்; மா கருணையினால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?

விளக்க உரை

  • பொழுது – மிகச்சிறிய நொடிப்பொழுது
  • பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ – தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றல் குறித்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 11 (2019)


பாடல்

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துமூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.

பதவுரை

மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை  அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன  உலக விஷயங்களில்  மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட  அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 8 (2019)


பாடல்

வரையொன் றதெடுத் தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

*கருத்துகைலாயத்தில் உறையும் ஈசன் திருவையாறு தலத்திலும் உறைவன் என்பதை குறித்து பாடிய பாடல்.*

பதவுரை

எல்லைகள் அற்றதானதும், மலைச்சிகரம் ஆனதும் ஆன கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதையுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு பாயும் புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு எனும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • விரை – மணம்
  • வரை – கோடு, எல்லை, வரம்பு, வரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை, எழுத்து, மலை, மலைச்சிகரம்.
  • திரை – திரைச்சீலை, அலை, உடல் தோலின் சுருக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 7 (2019)


பாடல்

அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
   அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
   எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
   வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
   உடையாய் பெறநான் வேண்டுமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஉலகியல் பற்று ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

எம்பெருமானே! உடையவனே! பெரும் கடல் போன்றதும், அருள் அமுதம் போன்றவனும் ஆகியவனே! அவ்வாறான அமுதக் கடலின் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து இருந்து திளைத்திருக்க மெய் பற்றிய அறிவு இல்லாமையால் இருள் தருவதான அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன்; இவ்வாறான மயக்கம் பொருந்திய மனத்தை உடைய ஒரு பித்தன் வருகிறான் என்று இந்த உவுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாத வண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.

விளக்க உரை

  • உலகியல் தொடர்பு அறுந்த பின்னரே மெய்யறிவு விளங்கப் பெறும். மெய்யறிவு பெற்றப்பின் உலகியல் பற்று கொண்டோரை பித்தன் என்று கூறுவார்கள். அவ்வாறான நிலை ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கிறார்
  • உன்மத்தன்- பித்தன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 4 (2019)


பாடல்

ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி  பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.

விளக்க உரை

  • நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்
    தன்செயல் தானேயென் றுந்தீபற
    தன்னையே தந்தானென் றுந்தீபற

எனும் திருவுந்தியாரின் பாடலும் ஒப்பு நோக்கி உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 2 (2019)


பாடல்

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
   கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
   மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
   வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஅடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.

பதவுரை

இறைவரை உமக்கு ஏற்றவாறு  போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின்  யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ?  சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
  • கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
  • நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)


பாடல்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துதிரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள்.  அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
  • கலை – கூறு
  • ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
  • ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
  • ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 29 (2019)


பாடல்

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி  உனக்கு மெய்யடிமையைச் செய்ய,  அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.

விளக்க உரை

  • புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
  • மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும்  இறைபணியாகிய அடிமைத் திறம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 15 (2019)


பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்துசிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.

பதவுரை

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின்  குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

விளக்க உரை

  • நணுகுதல் – சார்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 11 (2019)


பாடல்

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபல்வேறு விதமாக இறைவனின் பெருமைகளை கூறி அவன் புகழைப் பேசுவோர் பெரியோர் என்று விளம்பும் பாடல்.

பதவுரை

எவரின் மனத்தாலும் எண்ணி அறியப்படாதவனும், தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகளுக்கு மூன்று கண்கள் உடையவனாக விளங்குபவனும் உயிர்கள் வாழ உதவி செய்யும் மண் வடிவாவனாகவும், சிறந்ததும், பெரியதுமான வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமை அம்மையோடு கூடியவனாய் விளங்கும் இறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.

விளக்க உரை

  • பெண்ணான் – மங்கைபங்கன், கங்கைச்சடையன்
  • எண்ணானை – யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை (அஃதாவது மனதால் எண்ணாமல் இருப்பவனுக்கு மும்மலத்தின் காரணமாக அறியப்படாதவன்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 8 (2019)


பாடல்

நாளார் வந்தணுகி நலி
   யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
   யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
   பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
   யாரை நினைக்கேனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்

பதவுரை

அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

  • திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
  • நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக  `நாளார்`

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 7 (2019)


பாடல்

மன்னுவார் சடையாரை முன்
   தொழுது மட்டிட்ட
என்னும் நற் பதிகத்தினில்
   போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு
   எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து
   உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்

பன்னிரண்டாம் திருமுறை –  பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துசாம்பலில் இருந்த அங்கம்பூம்பாவை உயித்தெழ செய்யப் பாடிய பாடல்

பதவுரை

பதிகம் தொடங்கும் முன் கங்கையும் பிறையும் நிலைபொருந்தியதும், நீண்டதும் நிலைபெற்றதும் ஆன நீண்ட சடையினையுடைய சிவபெருமானைத் தொழுது “மட்டிட்ட” என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தினிலே மரணத்தைப் போக்குவதான “போதியோ” என்று கூறும்  அமுதம் போன்ற அந்த மெய்த்திருவாக்கு உரைத்திட்ட போது அந்தக் குடத்தினுள்ளே அந்த எலும்பின் உள்ளே பொருந்தி வந்து உருவமாய்க் கூடியது.

விளக்க உரை

  • “வருக!” என உரைப்பாராகிய பிள்ளையாரது கருத்தினை ஆணையின் வைத்துச் செயற்படுத்தியது அப்பதிகத்தினுள் போதியோ? என்ற மூவெழுத்தோர் சொல்லாகிய சிவஞான விளைவாம் சிவ சிற்சத்தியேயாம் என்று காட்டி, அதன் செயலை விளக்கியது இத்திருப்பாட்டு. “சடையாரைமுன்றொழுது” என்றதும் இக்குறிப்புத் தருவதாம்.
  • இந்தப் பதிகம் முழுவதும் கபாலீசர் திருநாமமும் போற்றுமாறு அமைந்து இருக்கும்
  • திருஞானசம்பந்தர் திருவுருவம் முழுதும் சிவஞான மயமே ஆகி  சிவ நிறைவுள்ளதாதலின் அவரது வாக்கு இறைவர் திருவாக்கேயாயிற்று
  • மெய்த் திருவாக்கு –  என்றும் அழிவில்லாத நித்தப் பொருள் ஆகிய சிவம்
  • வாக்கு – சிவ சிற்சத்தி
  • பிரணவ சொரூபமாய் நின்ற மூன்றெழுத்து மகாமந்திரமாய் நின்றது பதிகத்துள் “போதியோ” என்ற சொல்
  • அதுவே வருக என்ற ஆணையாகிய சிவ சிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமை அறிக
  • உருவமாய்த் தொக்கது – படிப்படியாக வளர்ச்சி முறையில் கூடிற்று

இன்று குரு பூசை – வைகாசி மூலம்

திருஞானசம்பந்தர்  
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 5 (2019)


பாடல்

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துதிருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்

பதவுரை

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள்,  பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.

விளக்க உரை

  • பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை
  • பணிந்தவர் – பணியப்பட்டவர்
  • விருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!