
பாடல்
உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே
எட்டம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவடி காட்டி அருளிய திறத்தையும், பிரிய மாட்டேன் என்று வாக்கு உரைத்ததையும் கூறி அருள் வேண்டி நிற்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
பெருமானே! சங்கரனே! உனக்கு அடிமையாக இருப்பதற்கு கூட உரிய தகுதி உடையவன் அல்லேன்; இருப்பினும் உன்னை விட்டு நீங்கி ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்; நாயினேன் ஆகிய யான் அதன் தன்மை இன்னதென்றும் அறியமாட்டேன்; மா கருணையினால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?
விளக்க உரை
- பொழுது – மிகச்சிறிய நொடிப்பொழுது
- பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ – தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றல் குறித்தது