அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 8 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முழவு

ஒவியம் - tamillexion

பாடல்

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
     படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
     அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
     மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
     விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

தேவாரம் – ஏழாம் திருமுறை –  சுந்தரர்

பதவுரை

இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும்,  குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.

விளக்க உரை

  • தண்மை –  மனம் குளிர்தலைக் குறிக்கும்
  • முழவு
  1. முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
  2. இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
  3. வேறு பெயர் – மிழாவு (கேரளா)
  4. மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
  5. ‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 7 (2018)

பாடல்

சடத்தை எடுத்து மயல்நிகழ்த்திக்
      திகைப்பில் உயிரும் அகப்படவும்
   தேசா சார அதிமோகத்
      திருக்கில் மனமும் உருக்கமுடன்

கடந்தை எனதென் றபிமானக்
      கருமா மயிலா ருடன்ஆசைக்
   காத லதனில் உயிர்மறந்து
      கலங்கி தியங்கி அலைவேனோ

நடத்தை அறியாப் பரிபாக
      னாக்கி உன்றன் இருபதத்தை
   நம்ப மனத்தில் உறுதியொன்றாய்
      நாட்டி எனையோ ராளாக்கி

மடத்தை அரிய வலிந்தழைப்பாய்
      மதிவாள் நுதலே மலைமகளே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றியை உடைய மலைமகளே, மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சடலத்தை எடுக்கச் செய்து, அதில் மயக்கத்தை சேர்த்து, அதனால் ஏற்பட்ட திகைப்பினால் உயிர் அகப்படுமாறு செய்தும்,  இசையில் அடிப்படையில் பாடப்படுவதான் பண் சேருமாறு மோகிக்குமாறு செய்தும், அதில் மனதை கொட்டுவதும், பெரிதானதுமான குளவியில் ஒன்றானதுமானதும் ஆன கரந்தை போன்ற கருங்கூந்தலை உடைய பெண்களுடன் ஆசை கொண்டு காதலால் உயிர் மறந்து கலந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்து அலைவேனோ! நன்னடத்தை, தீய நடத்தை என பிரித்துப் பார்க்க இயலாத பக்குவம் உடையவனாக்கி, உன்னுடைய இரண்டு பதத்தை நம்பும்படியாக மனதில் உறுதியை நாட்டி என்னை ஒரு ஆளாக்கி, உன்னுடைய இருப்பிடத்தை அறிய வலிந்து என்னை அழைப்பாய்.

விளக்க உரை

  • பரிபாகம் – சமைக்கை, பக்குவம், முதிர்வு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 5 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : பம்பை

ஒவியம் – tamillexion

பாடல்

நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்

பெரிய புராணம் – சேக்கிழார் (திருநீலகண்ட நாயனார் புராணம்)

பதவுரை

நீண்ட சடையினில் ஒழுங்குபடுத்தப்பட்ட பம்பை எனும் வாத்திய கருவியுடன், வெண்ணிலவில் இருந்து வெளிப்படும் கதிரினை ஒத்தவாறு கூடிய புன்முறுவலுடன், கைகளில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி நடந்து திருநீல கண்டர் வீட்டிற்கு சென்றார்.

விளக்க உரை

  • கரத்தல் – மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 4 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : காளம்

புகைப்படம் - இணையம்

பாடல்

சங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கு, தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் போன்ற ஏனைய நாதம் மலர்கின்ற கருவிகளுடன் சேர்ந்து மேலெழுந்த ஒலியுடன் கூடி மறையவர்களது வேத ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.

விளக்க உரை

  • தாரை, சின்னம், காளம், தாளம் – இவை கணபதிக்கு இறைவர் அளித்தருளியவை;
  • பெருங்காளம் (உயிர்த்தூம்பு) உருவினாலும் ஒசையினாலும் பெரியதானது. யானை பிளிறுவது போல ஒலி தரும் கொம்பு
  • தனி – இறைவர் தந்து அருளியதால் ஒப்பற்ற தன்மை;
  • சங்கொடு – சங்கு – மங்கலம் தருவதும், சிறந்ததானதும், மனிதர்களால் மற்றைய கருவிகள் போல் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படாத ஒலி இல்லாமல் இயற்கையாகவே ஒலி உடையதும், பிரணவநாதம் நீங்காது ஒலிக்கும் சிறப்புடையதும், பிரணவ வடிவுடைதும் ஆனது.
  • வங்கியம் – குழல்; துளைக்கருவிகளும் முதன்மையானது
  • ஒலி – மங்கலஒலி. வேதங்களுடன் கூடியது.
  • திருமணம் எழுந்தது – திருமணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் வழக்கு (அப்பொழுதே திருமண நாள்)

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 3 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொக்கரை

புகைப்படம் :  முத்தமிழ் வலைக்காட்சி

பாடல்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து  கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர  ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன்  ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய  ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.

விளக்க உரை

  • கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாத்தியங்கள்.
  • ஒக்க ஆடல் உகந்து – ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி
  • அக்கு – சங்குமணி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 2 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முரசு

ஓவியம் : Wikipedia

பாடல்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம்  உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம்  மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய  தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன்  அடியார்கள்  முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும்  ஆவான்.

விளக்க உரை

  • பண் : காந்தாரம்
  • * நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • விச்சு, விச்சது – வித்து
  • சாத்தி – சார்த்தி
  • முரசு  – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
  1. வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
  2. தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
  3. நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 1 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : சிலம்பு

 

 

ஓவியம் : Wikipedia

பாடல்

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

‘எந்த உயிருக்கு ஆணவமாகிய குற்றம் நீங்கி மல பரிபாகம் எனும் பக்குவம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி சிவபெருமான் வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்ந்து, பொங்குதல் நிறைந்த குழலை உடையவளான  அருள் சத்தியாகிய தேவியும் சங்கினையும், வளையினையும், சிலம்பினையும் அணிந்து அவைகள் ஒலிக்குமாறு விரைவில் சென்று அங்கே மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்குவாள்.

விளக்க உரை

  • ஈசனின் வழிபற்றி அவன் தன்மையில் அம்மையும் அருளுதல் செய்தலை விளக்கும் பாடல்
  • ‘அங்கே’ – சிவன் அங்கே எப்பொழுதும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றியது
  • சிங்காசனத்தே சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள்.
  • சலேல் – ஒலிக் குறிப்பு; ஓடி வருதல்
  • நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்புவதும், நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பினை, சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் அணிந்தனர். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று அமைக்கப்பட்டு,  உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  (கழல் –  ஆண்கள் அணியும் சிலம்பு வகை)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 30 (2018)

பாடல்

 

பறந்த பறவை நாற்காலாய்ப்
      படரும் விலங்கும் ஊர்வனவும்
   பாணி தனில்வாழ் சீவர்களும்
      பாரில் நிலையாத் தாபரமும்

பிறந்த மனிதர் தேவரொடு
      பிசகா தெடுத்த செனனமதில்
   பெற்ற தாயார் எத்தனையோ
      பிறவி மனையார் புதல்வர்களும்

நிறைந்த கோடா கோடிஇதில்
      நிலையா னதுவும் ஒன்றறியேன்
   நீயே தாயென் றநுதினமும்
      நெறியே அருளிப் பிறவியினி

மறந்து விடவும் உனதுபய
      வனச மலர்த்தாள் ஈந்தருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, பறவைகள், நான்கு கால்கள் உடைய விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள், பூமியில் நிலைத்து வாழும் தன்மை கொண்ட சீவன் உடையவர்கள், மனிதர்கள், தேவர்கள் என தவறாமல் பலப்பல பிறப்பு எடுத்த பிறப்புகளில் பெற்ற தாய்களின் எண்ணிக்கை, மனைவிகள் மற்றும் புதல்வர்களின் எண்ணிக்கை கோடானு கோடிக்கு சமமாகும்; இவ்வாறன பிறவிகளில் நிலையானது என்று எதையும் அறியவில்லை; நீயே எனது தாய் என்ற நெறியை நித்தமும் எனக்கு அருளி, இனி பிறவாமை எனும் நிலையை அடைய உனது இரு தாமரை மலர் போன்ற திருவடிகளை தந்து அருள்வாய்.

விளக்க உரை

  • ‘முன்னம் எத்தனை சென்மமோ’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)

பாடல்

முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்
எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்
வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த
சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த  மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.

விளக்க உரை

  • எட்டுணை – எள்ளளவு
  • சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிண்கிணி

 

ஓவியம் : Wikipedia

பாடல்

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*,  வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

விளக்க உரை

  • *கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • தாட வுடுக்கையன்  – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)

பாடல்

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
     ஆவுடைய மாது தந்த …… குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
     ஆளுமுனை யேவ ணங்க …… அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
     பூரணசி வாக மங்க …… ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
     போகமுற வேவி ரும்பு …… மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
     நீதிநெறி யேவி ளங்க …… வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
     நீலமயி லேறி வந்த …… வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
     ஊழியுணர் வார்கள் தங்கள் …… வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
     ஊதிமலை மீது கந்த …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, புவி முதல் ஆகாயம் வரையிலான ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு நிலை இல்லாமல் அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான சைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்; அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே! அன்புடன் மனம் கசிந்து உருகி முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.

விளக்க உரை

  • ஆவுடையாள் –  பசு ஏறும் பிராட்டி – திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிணை

ஓவியம் : shaivam.org

பாடல்

தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது  நீர்,  ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’  ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.

விளக்க உரை

  • தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா – வாத்தியக் கருவிகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 25 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : இடக்கை

ஓவியம் : shaivam.org

பாடல்

கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே

தேவாரம் – மூன்றாம் திருமுறை –  திருஞானசம்பந்தர்

பதவுரை

கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, இடக்கை, படகம் முதலிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கூடியதும், தேவர்கள் துதிக்க, அதன் தாளத்திற்கேற்பத் திருத்தாளை ஊன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்து அருளக்கூடியதும், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்தர்களும் நெருங்கி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும் இடம் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • உலப்பு இல் – அளவற்ற.
  • எத்தனை கருவித்திரள் – எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள்.
  • இமையோர்கள் – தேவர்கள்.
  • பரச – துதிக்க.
  • உகளுதல் – துள்ளிக் குதித்தல்

இடக்கை

  • பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர்.
  • கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் இதுவும் ஒன்று.
  • இடக்கையின் இரு முகங்கள் –  ஒன்று ஜீவாத்மா, மற்றொன்று பரமாத்மா

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 24 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)

ஓவியம் : shaivam.org

பாடல்

வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.

விளக்க உரை

  • துடி – கொம்பு – ஆகுளி – இவை குறிஞ்சித் திணைக்குரிய பறை வாத்தியங்கள்
  • வேடரது மன மொழி மெய் என்ற மூன்று காரணங்களின் கொடுமைத் தொழில் குறித்தபடி.
  • சில்லரி – சிலம்பின் பருக்கைக் கற்கள்
  • சில் அரி துடி – சில உருக்குப்பரல் உள்ளே இடப்பட்ட வெண்டயம் சுற்றப்பட்ட துடி; துடியினுள் இடப்பட்ட பரல்
  • கொம்பு – வாய்வைத்து ஊதி முழக்கும் வாத்தியம்
  • ஆகுளி – சிறுபறை (தாளவிசைக்கருவி முழவுக்கு இணை கருவியாகவும், துணை கருவியாகவும் அமையும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 23 (2018)

 

பாடல்

எண்ண அடங்கா தெனதுசென்மம்
      ஏட்டில் எழுதி முடியாது
   இடிப்பார் நீண்ட மரம்போலும்
      எமனார் பதியில் அடைந்துடைந்து

பெண்ணின் மயக்கம் வினைமயக்கம்
      பிறவி மயக்கம் தொலையாது
   பித்தர் சாலப் புலையருடன்
      பேய்கொண் டடிமை அலைவேனோ

வண்ணக் கலையே கதிமுதலே
      வனசப் பதியே அதிமதுர
   வனமே கனமே யோகியர்கள்
      மனமேய் குடியே வாரிதியே

மண்ணிற் ககன முடிநடுவுள்
      வாதா டியபே ரொளிவிளக்கே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே,  ஒளிரும் வண்ணங்கள் உடைய முழு நிலவைப் போன்றவளே,  அனாதி காலம் தொட்டு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பவளே, இனிமை நிறைந்த முக்கனிகளில் பலா போன்றவளே, அழகிய மணம் பொருந்திய சோலை போன்றவளே, போற்றுதலுக்கு உரியவளே, கடல் போன்று பரந்து யோகியர்கள் உள்ளத்தில் குடியிருப்பவளே, ஈசனிடம் வாதாடி வாதாடிய பேரொளி விளக்கே, வினைகள் பற்றி எடுத்த எனது பிறவிகள் எண்ணில் அடங்காது; அவைகளை ஏட்டிலும் எழுத முடியாத அளவு மிக நீண்டதானது.; நீண்ட மரம் போல வெட்டப்பட்டு எமனுடைய உலகமாகிய எமலோகத்தை அடைந்து பெண்ணிடத்தில் மயக்கம், வினை பற்றி நின்றதனால் அது பற்றி விளைந்ததாகிய வினைமயக்கம், இப்பிறவி பற்றியதால் ஏற்பட்ட பிறவி மயக்கம் ஆகியவைகள் தொலையாது, பித்தர்களுடனும்,  சண்டாளன் எனப்படும் புலையருடனும் பேய் பிடித்தவர்களை அலைவது போல் அலைவேனோ?

விளக்க உரை

  • வாரிதி – கடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 22 (2018)

 

பாடல்

தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே

இடைக்காடர்

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.

விளக்க உரை

  • தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்

 

மதனா அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 21 (2018)

இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)

 

புகைப்படம் : விக்கிப்பீடியா

பாடல்

துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • துடி – உடுக்கை
  • புறங்காடு – சுடுகாடு
  • பாணி – தாளம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 20 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : உடுக்கை ( பிற பெயர்கள் – இடை சுருங்கு பறை, துடி)

புகைப்படம் : விக்கிபீடியா

பாடல்

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் டீரநல்கும் பல்லவ னீச்சரமே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம்  சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு  நடனம் புரிபவராகவும், அடியவர்களின்  துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.

விளக்க உரை

  • உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 19 (2018)

பாடல்

ஆனை உரித்தபகை அடி
     யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
     யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
     செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
     தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

யான்,  புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில்  வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து  வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து  அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.

விளக்க உரை

  • வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
  • ஒள்ளி – செம்பொன், சுக்கிரன், வெள்ளி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 18 (2018)

பாடல்

நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
     நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
வாய்க்கு வந்த படிபல பேசவே
     மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
     தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
     திகழக் கட்டினை என்னை நின் செய்கையே

திருவருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி  அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.

விளக்க உரை

  • ‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
  • தவள மாடம் – வெண்ணிறமான மாளிகை

Loading

சமூக ஊடகங்கள்